சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

பஞ்ச புராணம்

பஞ்ச புராணத்தில் தேவாரம், திருவாசகம் திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர்புராணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்தும் ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது.
தேவாரம் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார்
திருவாசகம், திருக்கோவையாரர் - மாணிக்கவாசகர்
திருவிசைப்பா - திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது சைவ அடியார்கள்
திருப்பல்லாண்டு - சேந்தனார்
திருத்தொண்டர்புராணம் - சேக்கிழார்

நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி


வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி

சமய குரவர் துதி
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.001   பண் - நட்டபாடை   (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[1]
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.010   பண் - நட்டபாடை   (திருத்தலம் திருவண்ணாமலை ; அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.

[1]
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.066   பண் - காந்தாரம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

[1]
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.085   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[1]
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.024   பண் - கொல்லி   (திருத்தலம் திருக்கழுமலம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

[1]
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.120   பண் - புறநீர்மை   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

[1]
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.001   பண் - கொல்லி   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!
உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[6]
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.011   பண் - காந்தாரம்   (திருத்தலம் பொது - நமசிவாயத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!

[1]
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.011   பண் - காந்தாரம்   (திருத்தலம் பொது - நமசிவாயத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!

[8]
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.090   பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -தனித் திருக்குறுந்தொகை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

[1]
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.032   பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
சங்கரனே, நின் பாதம் போற்றி போற்றி!
சதாசிவனே, நின் பாதம் போற்றி போற்றி!
பொங்கு அரவா, நின் பாதம் போற்றி போற்றி!
புண்ணியனே, நின் பாதம் போற்றி போற்றி!
அம் கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா, நின் பாதம் போற்றி போற்றி!
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[6]
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.001   பண் - இந்தளம்.   (திருத்தலம் திருவெண்ணெய்நல்லூர் ; அருள்தரு வேற்கண்மங்கையம்மை உடனுறை அருள்மிகு தடுத்தாட்கொண்டவீசுவரர் திருவடிகள் போற்றி )
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[1]
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.039   பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்;
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்;
திரு ஆரூர்ப் பிறந்தார்கள்  எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[10]
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.107   பண் -   (திருத்தலம் திருவண்ணாமலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண்
மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்?
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து,
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன்
ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே!
ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

[1]
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.122   பண் - அக்ஷரமணமாலை   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!

[10]
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.128   பண் - அக்ஷரமணமாலை   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால்,
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள் புரியாயே.

[1]
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.138   பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்?
தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!

[10]
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.151   பண் - முல்லைத் தீம்பாணி   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,
பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[1]
திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
9.001   பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
   உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
   சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
   அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
   தொண்டனேன் விளம்புமா விளம்பே.

[1]
திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
9.001   பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தற்பரம் பொருளே சசிகண்ட சிகண்டா
   சாமகண் டா அண்ட வாணா
நற்பெரும் பொருளாய் உரைகலந் துன்னை
   என்னுடைய நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத்
   தந்தபொன் னம்பலத் தரசே
கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்
   தொண்டனேன் கருதுமா கருதே.

[3]
திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
9.001   பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தனதன்நற் றோழா சங்கரா சூல
   பாணியே தாணுவே சிவனே
கனகநற் றூணே கற்பகக் கொழுந்தே
   கண்கள்மூன் றுடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக
   அம்பலத் தமரர்சே கரனே
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
   தொண்டனேன் நுகருமா நுகரே.

[7]
சேந்தனார்   திருப்பல்லாண்டு  
9.029   பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
   வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
   புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
   யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
   பல்லாண்டு கூறுதுமே. 

[1]
சேந்தனார்   திருப்பல்லாண்டு  
9.029   பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
   பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
   மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
   பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே. 

[9]
சேந்தனார்   திருப்பல்லாண்டு  
9.029   பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
   எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
   மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
   மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே. 

[11]
Back to Top

பன்னிரண்டாம் திருமுறை - சேக்கிழார் பெரியபுராணம்
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி

வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்

சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும் இனிஎதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால் எற்றைக்குந் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்

திருநாவுக்கு அரசர்வளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்
Back to Top

வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.

அம்மை துதி
கலையாத கல்வியும், குறையாத வயதும்,ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!
அருள் வாமி! அபிராமியே!

முருகன் துதி
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
Back to Top


This page was last modified on Thu, 13 Jun 2024 04:58:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

panchapuraanam