கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும் ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா ரிடமென விரும்பினாரே.
|
1
|
மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பினல்ல சந்தமா ரகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி உந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை எந்தையா ரிணையடி யிமையவர் தொழுதெழு மியல்பினாரே.
|
2
|
முத்துமா மணியொடு முழைவள ராரமு முகந்துநுந்தி எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகடம்மேல் சித்தமா மடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே.
|
3
|
கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்தி எறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை மறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக் குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே.
|
4
|
கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர் காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்தி ஓடுடைக் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை பீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே.
|
5
|
Go to top |
கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.
|
6
|
நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில் ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே.
|
8
|
பொருந்திறற் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கிப் பெருந்திறத்தநங்கனை யநங்கமா விழித்ததும் பெருமைபோலும் வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை அருந்திறத் திருவரை யல்லல்கண் டோங்கிய வடிகளாரே.
|
9
|
கட்டமண் டேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப் பிட்டர்தம் மறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்தி எட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைச் சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே.
|
10
|
Go to top |
தாழிளங் காவிரி வடகரை யடைகுரங்காடுதுறைப் போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக் காழியா னருமறை ஞானசம் பந்தன கருதுபாடல் கோழையா வழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே.
|
11
|