முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும்
வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
|
1
|
முத்து , மணி , பொன் , சிறந்த பவளக்கொத்து , வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய் , தேவர்கள் வழிபடும் வித்து , வேதவேள்வி , வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை , நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே ! | |
முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும்
இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச
வன் பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
|
2
|
வலியனாய் , உலகுக்கெல்லாம் தலைவனாய் , முனிவர்கள் துதிக்கும் இன்பனாய் , ஞான ஒளி வீசும் தலைவனாய் உள்ள , பார்வதி அஞ்சுமாறு தாருகவன முனிவர் யாகத்தில் புறப்பட்ட வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத்தோலை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே . | |
கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதியானை,
இருங்கடல் அமுதம் தன்னை, இறப்பொடு பிறப்பு இலானை,
பெரும் பொருள் கிளவியானை, பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
|
3
|
கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய் , சூரியன் போன்ற ஒளி உடையவனாய் , கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய் , பிறப்பு , இறப்பு இல்லாதவனாய் , மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள , பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே . | |
செருத்தனை அருத்தி செய்து செஞ் சரம் செலுத்தி ஊர்மேல்
கருத்தனை, கனகமேனிக் கடவுளை, கருதும் வானோர்க்கு
ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!
|
4
|
போரிடுவதில் விருப்பம் கொண்டு , நேராக அம்பைச் செலுத்தி முப்புரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அழித்தவனாய் , பொன்மேனி அம்மானாய் , தன்னைத் தியானிக்கும் தேவர்களுக்கு ஒப்பற்ற தலைவனாய் , பார்வதிபாகமாகியும் அவளிடத்து ஆசை நீங்காத கூத்தனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேரிதாகவே நினைந்தவாறு என்னே ! | |
கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள் ஏறு
ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக
நீற்றனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!
|
5
|
கூற்றுவனை உதைத்த பாதங்களை உடைய இளையவனாய் , இளைய வெண்ணிறக் காளையை ஊர்பவனாய் , தேவர்கள் போற்றப் பெரிய சடைக் கற்றையில் கங்கையைச் சூடியவனாய் , அடியார்கள் போற்றும் அமுதமாய் , சிவாமுதம் நல்கும் திருநீற்று மேனியனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே . | |
| Go to top |
கருப் பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்,
விருப்பனை, விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும்
பொருப்பனை, பொருப்பன் மங்கை பங்கனை, அங்கை ஏற்ற
நெருப்பனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!
|
6
|
கரிய , பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனாய் , நீலகண்டனாய் , எல்லா ஆன்மாக்களையும் விரும்புபவனாய் , சோதி வடிவினனாய் , கயிலை மலையினனாய் , பார்வதி பாகனாய் , உள்ளங்கையில் நெருப்பை ஏற்பவனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே . | |
நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை,
சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர்
சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா
ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
|
7
|
விதிப்படி தியானிக்கப்படுபவனாய் , சாதி மாணிக்கமாய் , சங்கைப்போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய் , வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய் , தூண்டா விளக்காய் உள்ள , ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே . | |
பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும்
மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த
குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
|
8
|
உலகத்தாருக்கெல்லாம் பழகுதற்கு இனியவனாய் , பெருவடிவுடையவனாய் , மலையை ஒத்த இளைய மதயானையின் தோலைப் பார்வதி நடுங்குமாறு போர்த்த இளையனாய் , பிறையைக் குளிர்ந்த சடையிலே சூடிய அழகனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே . | |
விண் இடை மின் ஒப்பானை, மெய்ப் பெரும் பொருள் ஒப்பானை,
கண் இடை மணி ஒப்பானை, கடு இருள் சுடர் ஒப்பானை,
எண் இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
|
9
|
வானில் தோன்றும் மின்னலை ஒப்பவனாய் , தனக்குத் தானே ஒப்பாகும் பெரிய மெய்ப்பொருளாய் , கண்ணில் மணி போலவும் , செறிந்த இருளில் சுடர்போலவும் ஒளிதருபவனாய் , திருமாலும் , பிரமனும் தம் மனத்தில் எண்ணமுடியாத வகையில் அவர்கள் அஞ்சுமாறு நீண்ட தீத்தம்பமாகிய தலைமையுடைய பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே . | |
உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர்
நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள்
குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்-
அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
|
10
|
ஞான வடிவினனாய் , திரண்ட வலிய தோள்களை உடைய இராவணனை நசுக்கியவனாய் , மும்மதில்களையும் அழித்தவனாய் , மிக்க ஒளியும் , நீண்ட கிரீடமும் உடைய தேவர்களுக்குக் குருவாய் , குளிர்ந்த பிறையைச் சடையில் கொண்டவனாய் உள்ள , ஐந்தலைப் பாம்பை ஆட்டும் பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே . | |
| Go to top |