சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

8.106   மாணிக்க வாசகர்    திருவாசகம்

உத்தரகோசமங்கை - அயிகிரி நந்தினி
கட்டளைக்கலித்துறை
https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3  https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3   Add audio link Add Audio
கடையவ னேனைக் கருணையி னாற்கலந்
தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்
வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத்
தாங்கிக்கொள்ளே. 


1


கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர்
கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின்
விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங்
கைக்கரசே
கள்ளேன் ஒழியவுங் கண்டுகொண் டாண்டதெக்
காரணமே.


2


காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்
கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங்
குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை
வளர்ப்பவனே.


3


வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும்
நீங்கிஇப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண்
மதிக்கொழுந்தொன்
றொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங்
கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச்
செழுஞ்சுடரே.


4


செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி
யாரிற்பன்னாள்
விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி
வாய்அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தர கோசமங்
கைக்கரசே
வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட
மறுத்தனனே.


5


Go to top
மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையின்
என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை
யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம்
பொய்யினையே. 


6


பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று
பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட
முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந்
தீர்ப்பவனே. 


7


தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரருள்
என்கொல்என்று
வேர்க்கின்ற என்னை விடுதிகண் டாய்விர
வார்வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தர கோசமங்
கைக்கரசே
ஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினை யேனை
இருதலையே. 


8


இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து
நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன்
மூவுலகுக்
கொருதலை வா மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப்
பொலிபவனே. 


9


பொலிகின்ற நின்தாள் புகுதப்பெற் றாக்கையைப்
போக்கப்பெற்று
மெலிகின்ற என்னை விடுதிகண் டாய்அளி
தேர்விளரி
ஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங்
கைக்கரசே
வலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புரம்
மாறுபட்டே. 


10


Go to top
மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன்
மணிமலர்த்தாள்
வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை
யேன்மனத்தே
ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
நீறுபட் டேஒளி காட்டும்பொன் மேனி
நெடுந்தகையே. 


11


நெடுந்தகை நீஎன்னை ஆட்கொள்ள யான்ஐம்
புலன்கள்கொண்டு
விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர
வார்வெருவ
அடுந்தகை வேல்வல்ல உத்தர கோசமங்
கைக்கரசே
கடுந்தகை யேன்உண்ணுந் தெண்ணீர் அமுதப்
பெருங்கடலே. 


12


கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக்
கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட
லில்லடியார்
உடலில மேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேயென்
மதுவெள்ளமே.


13


வெள்ளத்துள் நாவற் றியாங்குன் அருள்பெற்றுத்
துன்பத்தின்றும்
விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும்
பும்அடியார்
உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத
களியெனக்கே. 


14


களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங்
கலந்தருள
வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச்
சுடருக்கெல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங்
கைக்கரசே
எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய
என்னப்பனே. 


15


Go to top
என்னைஅப் பாஅஞ்சல் என்பவர் இன்றிநின்
றெய்த்தலைந்தேன்
மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ
மிக்கின்மெய்யே
உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அன்னையொப் பாய்எனக் கத்தன்ஒப் பாய்என்
அரும்பொருளே. 


16


பொருளே தமியேன் புகலிட மேநின்
புகழ்இகழ்வார்
வெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்ம்மை
யார்விழுங்கும்
அருளே அணிபொழில் உத்தர கோசமங்
கைக்கரசே
இருளே வெளியே இகபர மாகி
யிருந்தவனே. 


17


இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை
என்னினல்லால்
விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க
நஞ்சமுதா
அருந்தின னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு
மடங்கினர்க்கே. 


18


மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்னருள்
தீக்கொளுவும்
விடங்க என்றன்னை விடுதிகண் டாய்என்
பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக்
கொம்பினையே. 


19


கொம்பரில் லாக்கொடி போல்அல மந்தனன்
கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர்
நண்ணுகில்லா
உம்பருள் ளாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அம்பர மேநில னேஅனல் காலொடப்
பானவனே. 


20


Go to top
ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல
னால்அலைப்புண்
டேனையெந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை
யேன்மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலை யும்அமு
தத்தையும்ஓத்
தூனையும் என்பி னையும்உருக் காநின்ற
ஒண்மையனே. 


21


ஒண்மைய னேதிரு நீற்றைஉத் தூளித்
தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய்
யடியவர்கட்
கண்மைய னேஎன்றுஞ் சேயாய் பிறற்கறி
தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை ஆண்மைய னேஅலிப் பெற்றியனே.


22


பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச்
சுருக்குமன்பின்
வெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி
லோகெடுவேன்
மற்றடி யேன்றன்னைத் தாங்குநர் இல்லைஎன்
வாழ்முதலே
உற்றடி யேன்மிகத் தேறிநின் றேன்எனக்
குள்ளவனே. 


23


உள்ளன வேநிற்க இல்லன செய்யும்மை
யற்றுழனி
வெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன்
மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத் துரியாய் புலன்நின்கட்
போதலொட்டா
மெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை
எறும்பெனவே. 


24


எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால்அரிப்
புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய
கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேஉணர் வுற்றவர்
உம்பரும்பர்
பெறும்பத மேஅடி யார்பெய ராத
பெருமையனே.


25


Go to top
பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு
நினைப்பிரிந்து
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன்
கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி
வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக்
கொழுமணியே.


26


கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச்
சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம்
முழுதுங்கம்பித்
தழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண்
டருளிஎன்னைக்
கழுமணி யேஇன்னுங் காட்டுகண் டாய்நின்
புலன்கழலே. 


27


புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர்
பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணும்
மண்ணுமெல்லாங்
கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு
ணாகரனே
துலங்குகின் றேன்அடி யேன்உடை யாய்என்
தொழுகுலமே. 


28


குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற்
றச்சிலையாம்
விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின்
மின்னுகொன்றை
அலங்கலந் தாமரை மேனிஅப் பாஒப்
பிலாதவனே
மலங்களைந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு
மத்துறவே. 


29


மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது
வக்கலங்கி
வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண்
டலைமிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர்நெடு
மாலைசுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச்செஞ் சாந்தணி
சச்சையனே. 


30


Go to top
சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால்
நிலம்நெருப்பாம்
விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி
யாய்கரியாய்
பச்சைய னேசெய்ய மேனிய னேயொண்
படஅரவக்
கச்சைய னேகடந் தாய்தடந் தாள
அடற்கரியே. 


31


அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி
அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத்
தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு
தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்குங்
கறைக்கண்டனே. 


32


கண்டது செய்து கருணைமட் டுப்பரு
கிக்களித்து
மிண்டுகின் றேனை விடுதிகண் டாய்நின்
விரைமலர்த்தாள்
பண்டுதந் தாற்போற் பணித்துப் பணிசெயக்
கூவித்தென்னைக்
கொண்டென்எந் தாய்களை யாய்களை யாய்
குதுகுதுப்பே. 


33


குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து
நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை
யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின்
மனங்கனிவித்
தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப்
பரம்பரனே. 


34


பரம்பர னேநின் பழஅடி யாரொடும்
என்படிறு
விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென்
முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ
வாயரவம்
பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப்
பொதும்புறவே. 


35


Go to top
பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன்
தீக்கதுவ
வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை
யார்நறவந்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந்
தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வார்யி
தடலரைசே.


36


அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச
லென்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண்
நகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற்
பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்
தடர்வனவே. 


37


அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல்
லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந்
தேயெரியுஞ்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும்
பர்க்கமுதே
தொடர்வரி யாய்தமி யேன்தனி நீக்குந்
தனித்துணையே. 


38


தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை
யால்நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை
யேனுடைய
மனத்துணை யேஎன் றன் வாழ்முத லேஎனக்
கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும்பொ றேன்துய ராக்கையின்
திண்வலையே. 


39


வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின்
வலையிற்பட்டு
மிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண்
மதியின்ஒற்றைக்
கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி
லாயமென்னும்
மலைத்தலை வாமலை யாள்மண வாளஎன்
வாழ்முதலே. 


40


Go to top
முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற்
கடிப்பமூழ்கி
விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக்
கூன்மிடைந்த
சிதலைச்செய் காயம் பொ றேன்சிவ னேமுறை
யோமுறையோ
திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன்
சிவகதியே. 


41


கதியடி யேற்குன் கழல்தந் தருளவும்
ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண் டாய்வெண்
டலைமுழையிற்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச்
சுருங்கஅஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை
மன்னவனே. 


42


மன்னவ னேஒன்று மாறறி யாச்சிறி
யேன்மகிழ்ச்சி
மின்னவ னேவிட் டிடுதிகண் டாய்மிக்க
வேதமெய்ந்நூல்
சொன்னவ னேசொற் கழிந்தவ னேகழி
யாத்தொழும்பர்
முன்னவ னேபின்னும் ஆனவ னேஇம்
முழுதையுமே. 


43


முழுதயில் வேற்கண் ணியரெனும் மூரித்
தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின்
வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வான்நற் றொழும்பரிற் கூட்டிடு
சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனைவி டேல்உடை யாய்உன்னைப்
பாடுவனே. 


44


பாடிற்றி லேன்பணி யேன்மணி நீஒளித்
தாய்க்குப்பச்சூன்
வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந்
தாங்கலறித்
தேடிற்றி லேன்சிவன் எவ்விடத் தான்எவர்
கண்டனர்என்
றோடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேன்நின்
றுழைத்தனனே.


45


Go to top
உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்
தீயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின்
வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன்
தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென் றறைவன்
பழிப்பினையே. 


46


பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி
விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண்
மணிப்பணிலங்
கொழித்துமந் தாரம்மந் தாகினி நுந்தும்பந்
தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு
தாரவனே. 


47


தாரகை போலுந் தலைத்தலை மாலைத்
தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடில்
என்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங்
கைக்கரசின்
சீரடி யாரடி யான்என்று நின்னைச்
சிரிப்பிப்பனே. 


48


சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும்
ஈசற்கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின்
வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ் சூண்பிச்சன்
ஊர்ச்சுடுகாட்
டெரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்பிச் சன்என்
றேசுவனே. 


49


ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக்
கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம்
பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற்
றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக்
கடையவனே. 


50


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: உத்தரகோசமங்கை
8.106   மாணிக்க வாசகர்    திருவாசகம்   நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்
Tune - அயிகிரி நந்தினி   (உத்தரகோசமங்கை )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 8.106