பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புன றங்குசடைமேல் வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடம் கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபட ரள்ளல்வயல்வாய் மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே.
|
1
|
சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே மாதர்மனை தோறுமிசை பாடிவசி பேசுமர னார்மகிழ்விடம் தாதுமலி தாமரை மணங்கமழ வண்டுமுர றண்பழனமிக் கோதமலி வேலைபுடை சூழுலகி னீடுதவி மாணிகுழியே.
|
2
|
அம்பனைய கண்ணுமை மடந்தையவ ளஞ்சிவெரு வச்சினமுடைக் கம்பமத யானையுரி செய்தவர னார்கருதி மேயவிடமாம் வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடி யழகார் உம்பரவர் கோனகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே.
|
3
|
நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும் சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம் கொத்தலர் மலர்ப்பொழிலி னீடுகுல மஞ்ஞைநட மாடலதுகண் டொத்தவரி வண்டுக ளுலாவியிசை பாடுதவி மாணிகுழியே.
|
4
|
மாசின்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன் நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம் வாசமலி மென்குழன் மடந்தையர்கண் மாளிகையின் மன்னியழகார் ஊசன்மிசை யேறியினி தாகவிசை பாடுதவி மாணிகுழியே.
|
5
|
Go to top |
மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய் வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம் சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம் உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.
|
6
|
எண் பெரிய வானவர்க ணின்றுதுதி செய்யவிறை யேகருணையாய் உண்பரிய நஞ்சுதனை யுண்டுலக முய்யவரு ளுத்தமனிடம் பண்பயிலும் வண்டுபல கெண்டிமது வுண்டுநிறை பைம் பொழிலின்வாய் ஒண்பலவி னின்கனி சொரிந்துமண நாறுதவி மாணிகுழியே.
|
7
|
எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார் திண்ணிய வரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம் பண்ணமரு மென்மொழியி னார்பணை முலைப்பவள வாயழகதார் ஒண்ணுதன் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.
|
8
|
நேடுமய னோடுதிரு மாலுமுண ராவகை நிமிர்ந்துமுடிமேல் ஏடுலவு திங்கண்மத மத்தமித ழிச்சடையெம் மீசனிடமாம் மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவி னூடுலவு புன்னைவிரை தாதுமலி சேருதவி மாணிகுழியே.
|
9
|
மொட்டையம ணாதர்முது தேரர்மதி யில்லிகண் முயன்றனபடும் முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம் மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தவதரில் ஒட்டமலி பூகநிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.
|
10
|
Go to top |
உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல் அந்திமதி சூடியவெம் மானையடி சேருமணி காழிநகரான் சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல் முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கணெடு வானநிலனே.
|
11
|