சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர் அந்தி வான்நிறத் தானணி யார்மதி முந்திச் சூடிய முக்கண்ணி னானடி வந்திப் பாரவர் வானுல காள்வரே.
|
1
|
அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர் உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் கண்டிங் காரறி வாரறி வாரெலாம் வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே.
|
2
|
ஆதி யாயவ னாரு மிலாதவன் போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன் பாதிப் பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச் சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே.
|
3
|
இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர் பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர் கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர் அட்ட மூர்த்திய ருளென் றடைவரே.
|
4
|
ஈறில் கூறைய னாகி யெரிந்தவெண் நீறு பூசி நிலாமதி சூடிலும் வீறி லாதன செய்யினும் விண்ணவர் ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.
|
5
|
| Go to top |
உச்சி வெண்மதி சூடிலும் ஊன்அறாப் பச்சை வெண்தலை யேந்திப் பலவில்லம் பிச்சை யேபுகு மாகிலும் வானவர் அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே.
|
6
|
ஊரி லாயென்றொன் றாக உரைப்பதோர் பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா காரு லாங்கண்ட னேயுன் கழலடி சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.
|
7
|
எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச் சிந்திப் பாரவர் தீவினை தீருமால் வெந்த நீறுமெய் பூசிய வேதியன் அந்த மாவளப் பாரடைந் தார்களே.
|
8
|
ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில் ஆனை யீருரி போர்த்தன லாடிலும் தான வண்ணத்த னாகிலுந் தன்னையே வான நாடர் வணங்குவர் வைகலே.
|
9
|
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம் மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான் பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.
|
10
|
| Go to top |
ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம் இருவ ராகிநின் றார்கட் கறிகிலான் அருவ ராஅரை ஆர்த்தவ னார்கழல் பரவு வாரவர் பாவம் பறையுமே.
|
11
|
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும் நாத னேயரு ளாயென்று நாடொறும் காதல் செய்து கருதப் படுமவர் பாத மேத்தப் பறையும்நம் பாவமே.
|
12
|
ஔவ தன்மை யவரவ ராக்கையான் வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே.
|
13
|
அக்கு மாமையும் பூண்டன லேந்தியில் புக்குப் பல்பலி தேரும் புராணனை நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ தொக்க வானவ ராற்றொழு வானையே.
|
14
|
கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந் திங்கள் சூடிய தீநிற வண்ணனார் இங்க ணாரெழில் வானம் வணங்கவே அங்க ணாற்கது வாலவன் தன்மையே.
|
15
|
| Go to top |
ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில் மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன் புகரில் சேவடி யேபுக லாகுமே.
|
16
|
சரண மாம்படி யார்பிற ரியாவரோ கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின் மரண மெய்திய பின்னவை நீக்குவான் அரண மூஎயில் எய்தவ னல்லனே.
|
17
|
ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாம் சிவனென் பான்செழு மான்மறிக் கையினான் கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான் தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.
|
18
|
இடப மேறியு மில்பலி யேற்பவர் அடவி காதலித் தாடுவ ரைந்தலைப் படவம் பாம்பரை யார்த்த பரமனைக் கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே.
|
19
|
இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும் புணர்ந்த வாளர வம்மதி யோடுடன் அணைந்த அஞ்சடை யானவன் பாதமே உணர்ந்த வுள்ளத் தவருணர் வார்களே.
|
20
|
| Go to top |
தருமந் தான்தவந் தான்தவத் தால்வரும் கருமந் தான்கரு மான்மறிக் கையினான் அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.
|
21
|
நமச்சி வாயவென் பாருள ரேலவர் தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே.
|
22
|
பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச் சொற்பல் காலநின் றேத்துமின் தொல்வினை வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப் புற்ப னிக்கெடு மாறது போலுமே.
|
23
|
மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான் கணிசெய் வேடத்த ராயவர் காப்பினால் பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம் பிணிசெ யாக்கையை நீக்குவர் பேயரே.
|
24
|
இயக்கர் கின்னர ரிந்திரன் தானவர் நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான் மயக்க மெய்தவன் மாலெரி யாயினான் வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே.
|
25
|
| Go to top |
அரவ மார்த்தன லாடிய அண்ணலைப் பரவு வாரவர் பாவம் பறைதற்குக் குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல் கரவில் நான்முக னுங்கரி யல்லரே.
|
26
|
அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின் றுழலும் மூவெயி லொள்ளழ லூட்டினான் தழலுந் தாமரை யானொடு தாவினான் கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.
|
27
|
இளமை கைவிட் டகறலு மூப்பினார் வளமை போய்ப்பிணி யோடு வருதலால் உளமெ லாமொளி யாய்மதி யாயினான் கிளமை யேகிளை யாக நினைப்பனே.
|
28
|
தன்னிற் றன்னை யறியுந் தலைமகன் தன்னிற் றன்னை யறியில் தலைப்படும் தன்னிற் றன்னை யறிவில னாயிடில் தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.
|
29
|
இலங்கை மன்னனை யீரைந்து பத்துமன் றலங்க லோடுட னேசெல வூன்றிய நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும் வலங்கொண் டேத்துவார் வானுல காள்வரே.
|
30
|
| Go to top |