வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவம் கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள் தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம் தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.
|
1
|
பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்கும் காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல் போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார் தீயெரிகை மகிழ்ந்தாருந் திருவேட்டக் குடியாரே.
|
2
|
தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியவா னிரையிற்பால் பாத்திரமா வாட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.
|
3
|
கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும் அலவஞ்சே ரணைவாரிக் கொணர்ந்தெறியு மகன்றுறைவாய் நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடும் திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே.
|
4
|
பங்கமார் கடலலறப் பருவரையோ டரவுழலச் செங்ண்மால் கடையவெழு நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி அங்கநான் மறைநால்வர்க் கறம்பொருளின் பயனளித்த திங்கள்சேர் சடையாருந் திருவேட்டக் குடியாரே.
|
5
|
Go to top |
நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பி கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல் ஏவாரும் வெஞ்சிலையா லெயின்மூன்று மெரிசெய்த தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.
|
6
|
பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு கானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல் மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார் தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே.
|
7
|
துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய் நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும் இறைபயிலு மிராவணன்றன் றலைபத்து மிருபதுதோள் திறலழிய வடர்த்தாருந் திருவேட்டக் குடியாரே.
|
8
|
அருமறைநான் முகத்தானு மகலிடநீ ரேற்றானும் இருவருமா யளப்பரிய வெரியுருவாய் நீண்டபிரான் வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத் திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.
|
9
|
இகழ்ந்துரைக்குஞ் சமணர்களு மிடும்போர்வைச் சாக்கியரும் புகழ்ந்துரையாப் பாவிகள்சொற் கொள்ளேன்மின் பொருளென்ன நிகழ்ந்திலங்கு வெண்மணலி ணிறைத்துண்டப் பிறைக்கற்றை திகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே.
|
10
|
Go to top |
தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத் தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன் ஒண்டமிழ்நூ லிவைபத்து முணர்ந்தேத்த வல்லார்போய் உண்டுடுப்பில் வானவரோ டுயர்வானத் திருப்பாரே.
|
11
|