தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான் மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான் நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளிசேர் கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.
|
1
|
விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான் படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான் நடமல்கு மாடலினான் நான்மறையோர் பாடலினான் கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.
|
2
|
பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடும் சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும் ஆடலா னங்கை யனலேந்தி யாடரவக் காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.
|
3
|
பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ் சுண்டபிரா னென்றிறைஞ்சி யும்பர் தொழுதேத்த விண்டவர்கள் தொன்னகர மூன்றுடனே வெந்தவியக் கண்டபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.
|
4
|
தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினான் வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான் சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடனஞ்சுண்டநங்கைக் காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.
|
5
|
Go to top |
மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான் அங்கையோர் வெண்டலையா னாடரவம் பூண்டுகந்தான் திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேல் கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.
|
6
|
வரியரவே நாணாக மால்வரையே வில்லாக எரிகணையான் முப்புரங்க ளெய்துகந்த வெம்பெருமான் பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர் கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.
|
7
|
போதுலவு கொன்றை புனைந்தான் றிருமுடிமேல் மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன் நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடும் காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே .
|
8
|
மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும் எண்ணறியா வண்ண மெரியுருவ மாயபிரான் பண்ணிசையா லேத்தப் படுவான்றன் னெற்றியின்மேல் கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.
|
9
|
தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன் கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப் பண்ணிசையா லேத்திப் பயின்ற விவைவல்லார் விண்ணவரா யோங்கி வியனுலகம் ஆள்வாரே.
|
11
|