விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை; அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா, மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர், சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே!
|
1
|
இடபத்தின்மேல் ஏறி வருபவனும் , வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , தன்னை அடைந்தால் , அங்ஙனம் அடைந் தார்மாட்டு , அன்புடையனாகின்றவனும் ஆகிய , நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , யாவராலும் அறியவொண்ணாத , சடைமுடி யின்கண் கங்கையைத் தாங்கியுள்ள பெருமானை அடையாதவரது அடைவுதான் என்னே ! | |
அறையும் பைங்கழல் ஆர்ப்ப, அரவு ஆட, அனல் ஏந்தி, பிறையும் கங்கையும் சூடி, பெயர்ந்து, ஆடும் பெருமானார்; பறையும் சங்கு ஒலி ஓவாப் படிறன்; தன் பனங்காட்டூர் உறையும் எங்கள் பிரானை; உணராதார் உணர்வு என்னே!
|
2
|
ஒலிக்கின்ற , பசிய பொன்னாலாகிய கழல்கள் கலிப்பவும் , அணியப்பட்ட பாம்புகள் சுழன்று ஆடவும் , கையில் நெருப்பை ஏந்தி , தலையில் பிறையையும் கங்கையையும் அணிந்து கொண்டு , அடிபெயர்ந்து நின்று நடனம் ஆடுகின்ற பெருமானாகிய , யாவராலும் அறியவொண்ணாமையிற் கள்வனாய் , முழங்குகின்ற பறைகளும் , சங்குகளும் ஒலித்தல் ஒழியாத , தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனை உணரா தாரது உணர்வுதான் என்னே ! | |
தண் ஆர் மா மதி சூடி, தழல் போலும் திருமேனிக்கு எண் ஆர் நாள்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் பண் ஆர் பாடல் அறாத படிறன்; தன் பனங்காட்டூர் பெண் ஆண் ஆய பிரானை; பேசாதார் பேச்சு என்னே!
|
3
|
குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனை முடிமேற் சூடி , கள்வனாய் , நெருப்புப்போலும் தனது திருமேனிக்கு உரியனவாக எண்ணுதல் பொருந்திய , அன்று மலர்ந்த மலர்களைக்கொண்டு , மனம் பொருந்தித் துதித்து வழிபடும் அடியார்களது பண்ணிறைந்த பாடலின் ஒலி நீங்காத , தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளி யிருக்கின்ற , பெண்ணும் ஆணும் ஆய உருவத்தினனாகிய பெரு மானைச் சொல்லாதவரது சொல்தான் என்னே ! | |
நெற்றிக்கண் உடையானை, நீறு ஏறும் திருமேனிக் குற்றம் இல் குணத்தானை, கோணாதார் மனத்தானை பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்ப் பெற்றொன்று ஏறும் பிரானை, பேசாதார் பேச்சு என்னே!
|
4
|
நெற்றியில் கண்ணை யுடையவனும் , திருநீறு பொருந்திய திருமேனியை உடையவனும் , குற்றம் இல்லாத இயல்பை யுடையவனும் , கோடுதல் இல்லாதவரது மனத்தில் உள்ளவனும் , பாம்பைப் பிடித்து அரையிற் கட்டிய கள்வனும் ஆகிய , தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , எருது ஒன்றின்மேல் ஏறுகின்ற கடவுளைச் சொல்லாதவரது சொல்தான் என்னே ! | |
உரம் என்னும் பொருளானை, உருகில் உள் உறைவானை, சிரம் என்னும் கலனானை, செங்கண் மால்விடையானை, வரம் முன்னம் அருள் செய்வான், வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பரமன், எங்கள் பிரானை, பரவாதார் பரவு என்னே!
|
5
|
` ஞானம் ` என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும் , உள்ளம் அன்பால் உருகினால் , அதன் கண் நீங்காது தங்குகின்றவனும் , தலை ஓடாகிய உண்கலத்தை உடையவனும் , சிவந்த கண்களை யுடைய பெரிய இடப வாகனத்தை உடையவனும் , தன்னை வழிபடுவார் விரும்பும் வரத்தை விரைந்து அருளுபவனும் , மேலானவனும் ஆகிய , திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளி யிருக்கின்ற எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே ! | |
| Go to top |
எயிலார் பொக்கம்(ம்) எரித்த எண்தோள் முக்கண்(ண்) இறைவன்; வெயில் ஆய், காற்று என் வீசி, மின் ஆய், தீ என நின்றான்; மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பயில்வானுக்கு, அடிமைக் கண் பயிலாதார் பயில்வு என்னே!
|
6
|
பொலிவு நிறைந்த சில மதில்களை எரித்தவனும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடைய கடவுளும் , வெயிலாய்க் காய்ந்து , காற்றாய் வீசி , மின்னாய் மின்னி , தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய , மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் நீங்காதிருக்கும் பெருமானுக்குச் செய்யும் தொண்டிற் பயிலாதவரது பயிற்சிதான் என்னே ! | |
மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன், வேத(ம்) முதல்வன், கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம்(ம்) அறுத்தான், பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர் ஐயன், எங்கள் பிரானை, அறியாதார் அறிவு என்னே!
|
7
|
மெய்ப்பொருளாய் உள்ளவனும் , வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற , வேறுபட்ட இயல்பினனும் , வேதத்திற்குத் தலை வனும் , கையில் மான் மழுக்களை ஏந்துபவனும் , காலனது காலத்தை இடைமுரிவித்தவனும் , படத்தைக் கொண்ட பாம்பினை அரையின் கண் கட்டியுள்ள கள்வனும் , யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே ! | |
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு இலியை, பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை, மஞ்சு உற்ற மணி மாட வன் பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்சத்து எங்கள் பிரானை, நினையாதார் நினைவு என்னே!
|
8
|
வஞ்சனையற்ற தூய மனம் உடையவரை என்றும் மறவாதவனும் , பிறப்பில்லாதவனும் , செம்பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை யுடையாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய , மேகங்கள் பொருந்திய , மணிகள் இழைத்த மாடங்களையுடைய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரிலும் , எங்கள் நெஞ்சத்திலும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நினையாதவரது நினைவுதான் என்னே ! | |
மழையானும், திகழ்கின்ற மலரோன், என்று இருவர் தாம் உழையா நின்றவர் உள்க உயர்வானத்து உயர்வானை, பழையானை; பனங்காட்டூர் பதி ஆகத் திகழ்கின்ற குழை(க்)காதற்கு அடிமைக் கண் குழையாதார் குழைவு என்னே!
|
9
|
மேகம்போலும் நிறத்தினனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய பிரமனும் என்ற இருவரும் பணி செய்கின்ற வராய் நினைந்து நிற்க , உயர்ந்த வானத்தினும் உயர்ந்து நிற்பவனும் , எல்லாரினும் பழையவனும் ஆகிய , திரு வன்பார்த்தான் பனங் காட்டூரைத் தனது ஊராகக் கொண்டு விளங்குகின்ற , குழையணிந்த காதினையுடைய பெருமானுக்குத் தொண்டுபடுதலில் மனம் நெகிழாத வரது மனநெகிழ்ச்சிதான் என்னே ! | |
பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை, சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல், ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே.
|
10
|
தனது பெயர் நிலம் முழுதும் பரவிய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற பவளம் போலும் உருவத்தையுடைய பெருமானை , புகழ்மிக்க திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள , அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும் அடியவ னாகிய , அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை , அவரவர் ஊரின்கண் உரைசெய்வாரும் சிவ லோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர் . | |
| Go to top |