திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,
வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்
அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!
|
1
|
கடலலைகள் அடித்துவரும் பவளங்களும் , சிறப்புடைய வைரமும் , கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும் , கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில் , மேருமலையாகிய வில்லால் , அக்கினிக் கணையாகிய அம்பை எய்து முப்புரங்களை எரியும்படி செய்த , இடையில் பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக . | |
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,
வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!
|
2
|
மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும் , அழகிய மாளிகைகளும் , நீர்முள்ளியும் , தாழையும் , தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் , வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக நடைபயிலும் இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின் , உயிர்களை நன்னெறியில் செலுத்தும் திருவடிகளை வணங்குவீர்களாக . | |
கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும்,
தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும்,
மாங் கரும்பும், வயல் மயேந்திரப்பள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே!
|
3
|
கோங்கு , வேங்கை , செழுமையான மலர்களையுடைய புன்னை , தேன் துளிகளையுடைய கொன்றை , சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும் , மாமரங்களும் , கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக . | |
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும்
மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப்பள்
எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே!
|
4
|
வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும் , அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப் பள்ளியுள் , உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக . | |
நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச்
சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன்,
மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப்பள்
கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே!
|
5
|
இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி வருதல் போல , பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கத் திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் இறைவனும் , மை போன்று கருநிறம் கொண்ட கழுத்தையுடையவனும் , கையில் மழு என்னும் ஆயுதத்தை ஏந்தியவனுமான சிவபெருமானைத் தரிசித்து அவன் திருவடிகளை வணங்குவீர்களாக . | |
| Go to top |
சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,
இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-
மந்திரமறை வளர் மயேந்திரப்பள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!
|
6
|
சந்திரன் , சூரியன் , மிகுபுகழ்ப் பிரமன் , இந்திரன் முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய் , வேதமந்திரங்கள் சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக . | |
சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு
படர்சடை மதியினன், மயேந்திரப்பள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே!
|
7
|
சடைமுடியுடைய முனிவர்கள் பூசைத்திரவியங்களைச் சேகரித்து வழிபட , திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளுபவனும் , திருநடனம் செய்பவனும் , தேன் துளிக்கும் வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில் சந்திரனைச் சூடியவனும் , வலிமையுடைய எருதினை வாகனமாக உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக ! | |
சிரம் ஒருபதும் உடைச் செரு வலி அரக்கனைக்
கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன்,
மரவு அமர் பூம்பொழில் மயேந்திரப்பள்
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே!
|
8
|
பத்துத் தலைகளையுடைய , போர் செய்யும் வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும் கெடுமாறு , கனத்த கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய் , வெண்கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் பாம்பணிந்த சடைமுடியுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடையுங்கள் . | |
நாக(அ)ணைத் துயில்பவன், நலம் மிகு மலரவன்,
ஆக(அ)ணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்;
மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப்பள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே!
|
9
|
ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயில்பவனான திருமாலும் , அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேட முற்பட்டு , பன்றி உருவெடுத்த திருமால் சிவனின் திருவடிகளை நெருங்கவும் இயலாதவரானார் . ( அன்ன உருவெடுத்த பிரமன் திருமுடியை நெருங்க இயலாதவரானார் என்பதும் குறிப்பு .) ஆகாயமளாவிய பூஞ்சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோகமூர்த்தியாய் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உணர்ந்து தியானித்து நன்மை அடைவீர்களாக ! | |
உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும்,
படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்
இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே!
|
10
|
ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும் , மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக . மடையின் மூலம் நீர் பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய மயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக . | |
| Go to top |
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,
நம் பரம் இது என, நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.
|
11
|
நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப்பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ` இது நம்முடைய கடமை ` என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை அடைவார்கள் . | |