தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மா மடம் மன்னினையே.
|
1
|
தொழும் வகையிலும், பிறவித்துயர்தீர நினைந்தெழும் வகையிலும், பிறர் இசைபாட விம்மி அழும் வகையிலும் வல்லவராய மறையவர் வழிபாடு செய்ய, `பெருமானே நீ அழுந்தையில் சிறந்துள்ள மடம் எனப்பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்`. | |
கடல் ஏறிய நஞ்சு அமுதுஉண்டவனே!
உடலே! உயிரே! உணர்வே! எழிலே!
அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர்
விடலே! தொழ, மா மடம் மேவினையே.
|
2
|
`கடலின்கண் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே! உடல், உயிர், உணர்வாக இருப்பவனே! அழகனே! வலிமை பொருந்திய ஆனேற்றை உடையவனே! அழுந்தையில் வாழும் மறையவர் தலைவனே`! எனத்தொழ, `பெருமானே! நீ சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்`. | |
கழிகாடலனே! கனல் ஆடலினாய்!
பழிபாடு இலனே! அவையே பயிலும்
அழிபாடு இலராய், அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே.
|
3
|
`பலரும் வெறுக்கும் சுடுகாட்டில் உறைபவனே! கனலில் நின்று ஆடுபவனே! பிறரால் பழிக்கப்படும் இயல்புகள் இல்லாதவனே`! எனப்பலவாறு உன்புகழையே பலகாலும் சொல்லும் அழிவுபாடற்ற அந்தணர் வழிபாடு செய்யும் அழுந்தை என்னும் தலத்தில், பெருமானே! நீ எழுந்தருளியுள்ளாய். | |
வானே! மலையே! என மன் உயிரே!
தானே தொழுவார் தொழு தாள் மணியே!
ஆனே! சிவனே! அழுந்தையவர், எம்
மானே! என, மா மடம் மன்னினையே.
|
4
|
அன்பர்கள் `வானே! மலையே!` என்று கூற மன்னிய உயிரே! தாமே வணங்குவார் வணங்குதற்குரிய திருவடிகளை உடைய மணியே! ஆன் (பசு) வடிவாக விளங்குபவனே! சிவனே! அழுந்தை என்னும் பதியில் வாழும் மறையவர் எம் தலைவனே` எனப்போற்றப், `பெருமானே! நீ மடம் எனப் பெயரிய கோயிலுள் விளங்குகின்றாய்`. | |
அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்!
நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும்,
இலைஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ!
நிலையா அது கொள்க என, நீ நினையே!
|
5
|
அலைகள் வீசும் ஆறுகள் சூழ்ந்த அழுந்தைப் பதியில் உறையும் பெருமானை அவன் கையில் ஏந்திய நிலையான மான், கையில் ஏந்திய வெண்மையான மழு, இலைவடிவமான சூலம் ஆகியவற்றோடு, உள்ளத்தில் ஏந்துதலே நிலையான செல்வம் எனக் கொள்க. அவனையே நீ நினைக. | |
| Go to top |
நறவு ஆர் தலையின் நயவா! உலகில்
பிறவாதவனே! பிணி இல்லவனே!
அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர்
மறவாது எழ, மா மடம் மன்னினையே.
|
6
|
அடியவர் கட்டிய மலர்களால் தலையில் தேன் பொருந்திய நயம் உடையவனே! உலகில் பிறவாதவனே! நோயற்றவனே! ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவனே! அழுந்தையில் வாழும் மறையவர் மறவாது எழுந்து தொழ, அங்குள்ள சிறந்த மடம் எனப்பெயரிய கோயிலில் உள்ளாய். | |
தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம்
சுடும் ஆறு வல்லாய்! சுடர் ஆர் சடையில்
அடும் ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர்
நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.
|
7
|
உன்னை உணர்வதில் தடுமாற்றத்தை விளைப்பவனே! தலைவனே! காதல் வயப்பட்ட மகளிரை நீ சூடிய மதியால் சுடும்படி செய்பவனே! ஒளிபொருந்திய சடையின்மேல் உலகை அட வந்த கங்கையாற்றைச் சூடியவனே! அழுந்தையில் மறையவர் கைகளால் தொழ நீண்டுயர்ந்த பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய். | |
பெரியாய்! சிறியாய்! பிறையாய்! மிடறும்
கரியாய்! கரிகாடு உயர்வீடு உடையாய்!
அரியாய்! எளிவாய்! அழுந்தை மறையோர்
வெரியார் தொழ, மா மடம் மேவினையே.
|
8
|
பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே! கண்டம் கரியவனே! சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே! அறிதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில் பழிபாவங்கட்கு அஞ்சும் மறையவர் வணங்க நீ சிறந்த மடம் என்னும் கோயிலில் விளங்குகின்றாய். | |
மணி நீள் முடியால் மலையை அரக்கன்
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த
அணி ஆர் விரலாய்! அழுந்தை மறையோர்
மணி மா மடம் மன்னி இருந்தனையே.
|
9
|
மணிகள் இழைத்த நீண்ட மகுடம் சூடியமுடியனாகிய இராவணன் கயிலைமலையைப் பொறுமையின்றி எடுத்தபோது, அவனது உடலை நெரித்த அழகிய கால் விரலை உடையவனே! அழுந்தைப் பதியில் மறையவர் போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக எழுந்தருளியுள்ளாய். | |
முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர்
நெடியான், மலரான் நிகழ்வால் இவர்கள்
அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர்
படியால் தொழ, மா மடம் பற்றினையே.
|
10
|
சடைமுடியை உடையவனே! முற்காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் தம்முள் செருக்கி உன் அடிமுடிகளை அறிய முற்பட்டு அறியாதவர் ஆயினர். அழுந்தைப்பதியுள் மறையவர் விதிமுறைப்படி வழிபட வணங்கிப் போற்ற, சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் நீ விளங்குகின்றாய். | |
| Go to top |
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத்
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்,
உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.
|
11
|
எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும் பெரிய ஞானமே வடிவாக உடைய பெருமானை, திருஞானசம்பந்தன் போற்றிப் பாடியதான இத்திருப்பதிகத்தை ஓதி உணர்ந்தவர்க்கு உண்மை உணர்வு உண்டாகும். | |