கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே முலைகடந் தருளுந் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் மலைகுடைந் தனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறையோத் தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
|
1
|
சந்தன களபம் துதைந்தநன் மேனித் தவளவெண் பொடிமுழு தாடும் செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய திருநுத லவர்க்கிடம் போலும் இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட் டெரிவதொத் தெழுநிலை மாடம் அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
|
2
|
கரியரே இடந்தான் செய்யரே யொருபால் கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி முரிவரே முனிவர் தம்மொடால் நிழற்கீழ் முறைதெரிந் தோருடம் பினராம் இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள் இறைவரே மறைகளுந் தேட அரியரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
|
3
|
பழையராந் தொண்டர்க் கெளியரே மிண்டர்க் கரியரே பாவியேன் செய்யும் பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப் பிச்சரே நச்சரா மிளிருங் குழையராய் வந்தென் குடிமுழு தாளுங் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
|
4
|
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம் பதனில் தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல்ஆ டரவந் துவளுமே கலையும் துகிலுமே யொருபால் துடியிடை இடமருங் கொருத்தி அவளுமே ஆகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
|
5
|
Go to top |
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்திலங் கினவே போலுமே முறுவல் நிறையஆ னந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர் கோலமே அச்சோ அழகிதே யென்று குழைவரே கண்டவர் உண்ட தாலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
|
6
|
திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந் திறத்தவர் புறத்திருந் தலச மைக்கடா அனைய என்னையாள் விரும்பி மற்றொரு பிறவியிற் பிறந்து பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே புரியவும் வல்லரே எல்லே அக்கடா வாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
|
7
|
மெய்யரே மெய்யர்க் கிடுதிரு வான விளக்கரே எழுதுகோல் வளையாள் மையரே வையம் பலிதிரிந் துறையும் மயானரே உளங்கலந் திருந்தும் பொய்யரே பொய்யர்க் கடுத்தவான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித் தெழுந்த ஐயரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
|
8
|
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே யிருசெவி ஒருபால் விமலமே கலையும் உடையரே சடைமேல் மிளிருமே பொறிவரி நாகம் கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர் அமலமே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
|
9
|
நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து நாரணன் பரவுந் திருவடி நிலைமேல் நலமலி கலைபயில் கருவூர் ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம்ஊ றியதமிழ் மாலை ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர் இருள்கிழித் தெழுந்த சிந்தையரே.
|
10
|
Go to top |