கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்குமிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.
|
1
|
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமைசொல்லிக் கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளுமிடம் முல்லைத் தாது மணங்க மழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
|
2
|
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார் உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும் கூறை கொள்ளுமிடம் முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
|
3
|
பீறற் கூறை உடுத்தொர் பத்திரங் கட்டி வெட்டினராய்ச் சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங் கூறை கொள்ளுமிடம் மோறை வேடுவர் கூடி வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
|
4
|
தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறியீர் முயங்கு பூண்முலை மங்கை யாளொடு முருகன்பூண்டி மாநகர்வாய் இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
|
5
|
| Go to top |
விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்தளகம் கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர்மகிழ்வீர் மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
|
6
|
வேத மோதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே ஓத மேவிய ஒற்றி யூரையும் உத்திர நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளு முருகன்பூண்டி மாநகர்வாய் ஏது காரண மேது காவல்கொண் டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
|
7
|
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங்கண் மடவ ரல்லுமை நங்கை தன்னையொர் பாகம் வைத்துகந்தீர் முடவ ரல்லீர் இடரி லீர்முருகன் பூண்டி மாநகர்வாய் இடவ மேறியும் போவ தாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
|
8
|
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைகலனா வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர் பாகம் வைத்துகந்தீர் மோந்தை யோடு முழக்க றாமுரு கன்பூண்டி மாநகர்வாய் ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
|
9
|
முந்தி வானவர் தாந்தொ ழும்முரு கன்பூண்டி மாநகர்வாய்ப் பந்த ணைவிரற் பாவை தன்னையொர் பாகம் வைத்தவனைச் சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் உரைத்தன பத்துங்கொண் டெந்தம் மடிகளை ஏத்து வார்இட ரொன்றுந் தாமிலரே.
|
10
|
| Go to top |