கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய மேவலர் முப்புரம் தீயெழு வித்தவர் ஓரம்பினால் ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நாவல னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
1
|
தன்மையி னால்அடி யேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன் வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார் புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப்போ கம்புணர்த்த நன்மையி னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
2
|
வேகங்கொண் டோடிய வெள்விடை ஏறியோர் மெல்லியலை ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார் போகங்கொண் டார்கடற் கோடியின் மோடியைப் பூண்பதாக நாகங்கொண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
3
|
அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் சேவினை ஆட்சிகொண்டார் தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார் நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு நஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
4
|
உம்பரார் கோனைத்திண் தோள்முரித் தார்உரித் தார்களிற்றைச் செம்பொனார் தீவண்ணர் தூவண்ண நீற்றர்ஓர் ஆவணத்தால் எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நம்பிரா னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
5
|
Go to top |
கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் கோவலுங் கோத்திட்டையும் வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார் ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம் பலத்தே அருக்கனைமுன் நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
6
|
தாயவ ளாய்த்தந்தை ஆகிச் சாதல் பிறத்தலின்றிப் போயக லாமைத்தன் பொன்னடிக் கென்னைப் பொருந்தவைத்த வேயவ னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நாயக னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
7
|
வாயாடி மாமறை ஓதிஓர் வேதிய னாகிவந்து தீயாடி யார்சினக் கேழலின் பின்சென்றோர் வேடுவனாய் வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நாயாடி யார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
8
|
படமாடு பாம்பணை யானுக்கும் பாவைநல் லாள்தனக்கும் வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்தொருநாள் இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நடமாடி யார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
9
|
மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் தான்வலி யைநெரித்தார் அடக்கங்கொண் டாவணங் காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார் தடுக்கஒண் ணாததோர் வேழத் தினையுரித் திட்டுமையை நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
|
10
|
Go to top |
நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன் ஆதரித் தீசனுக் காட்செயும் ஊர்அணி நாவலூர்என் றோதநற் றக்கவன் றொண்டன்ஆ ரூரன் உரைத்ததமிழ் காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினை கட்டறுமே.
|
11
|