கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக் கமலத்தோன் தலையரிந்த காபா லிய்யை உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை உணர்வெலா மானானை ஓசை யாகி வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை மறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய திருவானைத் தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
1
|
உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக வுடையானை யுடைபுலியி னதளே யாகத் தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத் தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம் பரித்தானைப் பவளமால் வரையன் னானைப் பாம்பணையான் தனக்கன்றங் காழி நல்கிச் சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
2
|
உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளால் கருவீன்ற வெங்களவை யறிவான் தன்னைக் காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக் கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை யள்ளூறி யெம்பெருமான் என்பார்க் கென்றுந் திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
3
|
பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம் பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத் தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை வாட்போக்கி யம்மானை யெம்மா னென்று வாரமதாம் அடியார்க்கு வார மாகி வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ் சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
4
|
வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும் புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப் பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத் திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
5
|
Go to top |
விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் தன்னை அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப் பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலைமலைநாண் ஏற்றி யம்பு தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
6
|
பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை எல்லாருந் தன்னை யிகழ அந்நாள் இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச் சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத் தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச் செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
7
|
ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ டயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப் பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப் பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னைப் பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப் பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச் சிந்திய வெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
8
|
கையிலுண் டுழல்வாருஞ் சாக்கியருங் கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப் பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப் பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக் கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக் கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
|
9
|