குருகாம் வயிரமாங் கூறு நாளாம் கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம் பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம் ஒருகால் உமையாளோர் பாக னுமாம் உள்நின்ற நாவிற் குரையாடியாம் கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
1
|
வித்தாம் முளையாகும் வேரே தானாம் வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம் பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம் தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத் தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
2
|
பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் கொண்ட சமயத்தார் தேவ னாகி ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று காத்தானாங் காலன் அடையா வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
3
|
இரவனாம் எல்லி நடமாடியாம் எண்திசைக்குந் தேவனாம் என்னு ளானாம் அரவனாம் அல்ல லறுப்பானுமாம் ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறும் குரவனாங் கூற்றை யுதைத்தான் தானாங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும் கரவனாங் காட்சிக் கெளியா னுமாங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
4
|
படைத்தானாம் பாரை யிடந்தா னாகும் பரிசொன் றறியாமை நின்றான் தானாம் உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும் கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
5
|
Go to top |
மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம் மூவாத மேனிமுக் கண்ணி னானாம் சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ் செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம் மாலனாம் மங்கையோர் பங்க னாகும் மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாம் காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
6
|
அரைசே ரரவனாம் ஆலத் தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர் திரைசேர் திருமுடித் திங்க ளானாந் தீவினை நாசனென் சிந்தை யானாம் உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம் உமையாளோர் பாகனாம் ஓத வேலிக் கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
7
|
துடியாந் துடியின் முழக்கந் தானாஞ் சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம் படிதானாம் பாவ மறுப்பா னாகும் பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாம் கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும் கடியானாங் காட்சிக் கரியா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
8
|
விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம் விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம் பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம் பலபலவும் பாணி பயின்றான் தானாம் எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம் என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம் கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
9
|
பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய் செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச் சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம் அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக் கறுத்திருந்த கண்ட முடையான் போலுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
10
|
Go to top |
ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும் அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே ஆகாய மந்திரமு மானா னாகும் கறுத்தானாங் காலனைக் காலால் வீழக் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
|
11
|