திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக் குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப் பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.
|
1
|
ஏலமா ரிலவமோ டினமலர்த் தொகுதியா யெங்குநுந்திக் கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டா றாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும் நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே யஞ்சனீயே.
|
2
|
பொன்னுமா மணிகொழித்தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக் கன்னிமார் முலைநலங் கவரவந் தேறுகோட் டாறுசூழ மன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவினாளும் முன்னைநோய் தொடருமா றில்லைகா ணெஞ்சமே யஞ்சனீயே.
|
3
|
கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடே வந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக் கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேய எந்தையா ரடிநினைந் துய்யலாம் நெஞ்சமே யஞ்சனீயே.
|
4
|
மறைகொளும் திறலினா ராகுதிப் புகைகள்வா னண்டமிண்டிச் சிறைகொளும் புனலணிசெழும்பதி திகழ்மதிற் கொச்சை தன்பால் உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்த இறைவன தடியிணை யிறைஞ்சிவாழ் நெஞ்சமே யஞ்சனீயே
|
5
|
Go to top |
சுற்றமு மக்களுந் தொக்கவத் தக்கனைச் சாடியன்றே உற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா வுள்கினானோர் குற்றமில்லடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவி நற்றவ மருள்புரி நம்பனை நம்பிடாய் நாளுநெஞ்சே.
|
6
|
கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி கண்டவார் கழைபிடித் தேறிமா முகிறனைக் கதுவுகொச்சை அண்டவா னவர்களு மமரரு முனிவரும் பணியவாலம் உண்டமா கண்டனார் தம்மையே யுள்குநீ யஞ்சனெஞ்சே.
|
7
|
அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்தவாய்கள் உடல்கெடத் திருவிர லூன்றினா ருறைவிட மொளிகொள்வெள்ளி மடலிடைப் பவளமு முத்தமுந் தொத்துவண் புன்னைமாடே பெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே.
|
8
|
அரவினிற் றுயிறரு மரியுநற் பிரமனு மன்றயர்ந்து குரைகழ றிருமுடி யளவிட வரியவர் கொங்குசெம்பொன் விரிபொழி லிடைமிகு மலைமகண் மகிழ்தர வீற்றிருந்த கரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே.
|
9
|
கடுமலி யுடலுடை யமணருங் கஞ்சியுண் சாக்கியரும் இடுமற வுரைதனை யிகழ்பவர் கருதுநம் மீசர்வானோர் நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணிந் தேத்தஞாலம் உடையவன் கொச்சையே யுள்கிவாழ் நெஞ்சமே யஞ்சனீயே.
|
10
|
Go to top |
காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சை ஆய்ந்துகொண் டிடமென விருந்தநல் லடிகளை யாதரித்தே ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழின்மறை ஞானசம் பந்தன்சொன்ன வாய்ந்தவிம் மாலைகள் வல்லவர் நல்லர்வா னுலகின்மேலே.
|
11
|