பொடிகொண் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை கொடிகொ ளேற்றினர் மணிகிணி னெனவரு குரைகழல் சிலம்பார்க்கக் கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம் முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.
|
1
|
விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும் மண்க ளார்துதித் தன்பரா யின்புறும் வள்ளலை மருவித்தம் கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப் பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.
|
2
|
பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது புலியத ளழனாகம் தங்க மங்கையைப் பாகம துடையவர் தழல்புரை திருமேனிக் கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் துறைதரு கற்பகத்தை எங்கு மேத்திநின் றின்புறு மடியரை யிடும்பைவந் தடையாவே.
|
3
|
நீர்கொ ணீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப் பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும் கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகந்தன்னைச் சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.
|
4
|
சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு துன்னிய தழனாகம் அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கொண்டடி யவர்போற்றக் கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் துறைதரு கற்பகத்தை விரும்பு வேட்கையொ டுளமகிழ்ந் துரைப்பவர் விதியுடை யவர்தாமே.
|
5
|
Go to top |
மாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுன லழனாகம் போதி லங்கிய கொன்றையு மத்தமும் புரிசடைக் கழகாகக் காதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின் பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே.
|
6
|
குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை புலவு புள்ளின மன்னங்க ளாலிடும் பூவைசே ருங்கூந்தல் கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் துறையுங்கற் பகத்தைச்சீர் நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே.
|
7
|
மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேன் மதியிலா மையிலோடி எடுத்த லும்முடி தோள்கர நெரிந்திற விறையவன் விரலூன்றக் கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் கடிக்குளந் தனின்மேவிக் கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் குணமுடை யவர்தாமே.
|
8
|
நீரினார் கடற் றுயின்றவ னயனொடு நிகழடி முடிகாணார் பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக் காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தின்றன் சீரினார்கழ லேத்தவல் லார்களைத் தீவினை யடையாவே.
|
9
|
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் குறியினி னெறிநில்லா மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்ட கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் துறைதரு மெம்மீசர் தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி யெளிதாமே.
|
10
|
Go to top |
தனமலி புகழ் தயங்குபூந் தராயவர் மன்னன்நற் சம்பந்தன் மனமலி புகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடும் கனமலி கட லோதம் வந்துலவிய கடிக்குளத் தமர்வானை இனம லிந்திசை பாடவல் லார்கள்போ யிறைவனோ டுறைவாரே.
|
11
|