பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி நட்டம் நள்ளிரு ளாடும் நாதன் நவின்றுறை கோயில் புட்டன் பேடையொ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.
|
1
|
முயல்வ ளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை இயல்வ ளாவிய துடைய வின்னமு தெந்தையெம் பெருமான் கயல்வ ளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும் வயல்வ ளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.
|
2
|
தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும் கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம் கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார் வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.
|
3
|
பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாடல றாத விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரொர் பாகம் பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.
|
4
|
ஈச னேறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான் பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில் மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல் வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.
|
5
|
Go to top |
தளிரி ளங்கொடி வளரத் தண்கய மிரியவண் டேறிக் கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில் உளரி ளஞ்சுனை மலரு மொளிதரு சடைமுடி யதன்மேல் வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.
|
6
|
தென்சொல் விஞ்சமர் வடசொற் றிசைமொழி யெழினரம் பெடுத்துத் துஞ்சு நெஞ்சிரு ணீங்கத் தொழுதெழு தொல்புக லூரில் அஞ்ச னம்பிதிர்ந் தனைய வலைகடல் கடையவன் றெழுந்த வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே
|
7
|
சாம வேதமொர் கீத மோதியத் தசமுகன் பரவும் நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக் காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார் வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.
|
8
|
சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர் ஆர ணங்குறு முமையை யஞ்சுவித் தருளுதல் பொருட்டால் வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.
|
9
|
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னால்தம் மெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யென விரும்பேல் செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.
|
10
|
Go to top |
பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற்புக லூரில் மங்குன் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத் தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் றண்டமிழ் பத்தும் எங்கு மேத்தவல் லார்கள் எய்துவ ரிமையவ ருலகே.
|
11
|