மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார் விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர் கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார் பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
1
|
துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோள்கள் மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கைக் கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
2
|
கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக வேந்தித் துள்ள மிதித்துநின் றாடுந் தொழில ரெழின்மிகு செல்வர் வெள்ள நகுதலை மாலை விரிசடை மேன்மிளிர் கின்ற பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
3
|
ஆட லிலைய முடையார் அருமறை தாங்கியா றங்கம் பாட லிலைய முடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும் ஊட லிலைய முடையார் யோகெனும் பேரொளி தாங்கிப் பீட லிலைய முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
4
|
தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக் காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
5
|
Go to top |
கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண் முற்றி தறிதுமென் பார்கண் முதலியர் வேதபு ராணர் மற்றி தறிதுமென் பார்கண் மனத்திடை யார்பணி செய்யப் பெற்றி பெரிது முகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
6
|
மறையுடை யாரொலி பாடன் மாமலர்ச் சேவடி சேர்வார் குறையுடை யார்குறை தீர்ப்பார் குழக ரழகர்நஞ் செல்வர் கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார் பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
7
|
உறவியு மின்புறு சீரு மோங்குதல் வீடெளி தாகித் துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமு மின்பமுந் தோற்றி மறவியஞ் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும் பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
8
|
சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும் நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத் தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
9
|
உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட் கருமை யுடையன காட்டி யருள்செயு மாதி முதல்வர் கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப் பெருமை யுடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
|
10
|
Go to top |
பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.
|
11
|