கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற் குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில் இருந்த எம்பெரு மானை யுள்கி இணைய டிதொழு தேத்தும் மாந்தர்கள் வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே.
|
1
|
நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை குன்றி னேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள் என்றும் மன்னிய எம்பி ரான்கழல் ஏத்தி வானர சாள வல்லவர் பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.
|
2
|
விரவி நாளும் விழா விடைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக் குரவ மாரு நீழற்பொழின்மல்கு கோட்டாற்றில் அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடி பரவு மாறுவல் லார்பழிபற் றறுப்பாரே.
|
3
|
அம்பி னேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக் கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில் நம் பனேநட னேந லந்திகழ் நாதனே யென்று காதல் செய்தவர் தம்பி னேர்ந்தறி யார்தடுமாற் றவல்வினையே.
|
4
|
பழைய தம்மடி யார்து திசெயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக் குழலு மொந்தை விழாவொலி செய்யுங்கோட்டாற்றில் கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் கானி டைக்கண மேத்த வாடிய அழக னென்றெழுவார் அணியாவர் வானவர்க்கே.
|
5
|
Go to top |
பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் கொஞ்சி யின்மொழியால் தொழின்மல்கு கோட்டாற்றில் மஞ்ச னேமணி யேம ணிமிடற் றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர் துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே.
|
6
|
கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் நிலவு மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர் உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.
|
7
|
வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில் தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.
|
8
|
கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் றேடவானையின் குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில் விருதி னான்மட மாது நீயும்வி யப்பொ டுமுயர் கோயில் மேவிவெள் எருதுகந் தவனே யிரங்காயுன தின்னருளே.
|
9
|
உடையி லாதுழல் கின்ற குண்டரும் ஊண ருந்தவத் தாய சாக்கியர் கொடையி லாமனத்தார் குறையாருங் கோட்டாற்றில் படையி லார்மழு வேந்தி யாடிய பண்ப னேயிவ ரென்கொ லோநுனை அடைகி லாதவண்ணம் அருளாயுன் னடியவர்க்கே.
|
10
|
Go to top |
கால னைக்கழ லாலு தைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய் கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில் மூல னைமுடி வொன்றி லாதவெம் முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய மாலை பத்தும்வல்லார்க் கெளிதாகும் வானகமே.
|
11
|