பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும் மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான் நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.
|
1
|
சூடும் பிறைச்சென்னிச் சூழ்கா டிடமாக ஆடும் பறைசங் கொலியோ டழகாக நாடுஞ் சிறப்போவா நாலூர் மயானத்தைப் பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.
|
2
|
கல்லா னிழன்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன் றெல்லா வறனுரையும் இன்னருளால் சொல்லினான் நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச் சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.
|
3
|
கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான் நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான் ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில் சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.
|
4
|
கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன் பிறையார் வளர்சடையான் பெண்பாக னண்பாய நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம் இறையானென் றேத்துவார்க் கெய்துமா மின்பமே.
|
5
|
Go to top |
கண்ணார் நுதலான் கனலா டிடமாகப் பண்ணார் மறைபாடி ஆடும் பரஞ்சோதி நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.
|
6
|
கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான் பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான் நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை எண்பாவு சிந்தையார்க் கேலா விடர்தானே.
|
7
|
பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால் வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான் நத்தி னொலியோவா நாலூர் மயானத்தென் அத்த னடிநினைவார்க் கல்ல லடையாவே.
|
8
|
மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய் மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள் நாலோடு மாறங்கம் நாலூர் மயானத்தெம் பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.
|
9
|
துன்பாய மாசார் துவராய போர்வையார் புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள் நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.
|
10
|
Go to top |
ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான் நாலு மறையோதும் நாலூர் மயானத்தைச் சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக் கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.
|
11
|