தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப் பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத கண்ணார் கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம் நண்ணாவாகுந் நல்வினையாய நணுகும்மே.
|
1
|
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும் வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயன்மண்டிக் கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே.
|
2
|
பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின் எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் னிடமென்பர் கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக் கல்லியலிஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.
|
3
|
தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம் மருவளர்கோதை யஞ்சவுரித்து மறைநால்வர்க் குருவளரால நீழலமர்ந்தீங் குரைசெய்தார் கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே.
|
4
|
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச் செறுமாவலிபாற் சென்றுலகெல்லா மளவிட்ட குறுமாணுருவன் றற்குறியாகக் கொண்டாடும் கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.
|
5
|
Go to top |
விண்ணவருக்காய் வேலையுணஞ்சம் விருப்பாக உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும் கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே.
|
6
|
முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம் பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித் தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர் கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.
|
7
|
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால் நெருக்குண்ணாத்தன் னீள்கழனெஞ்சில் நினைந்தேத்த முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே.
|
8
|
செங்கமலப்போ திற்றிகழ்செல்வன் றிருமாலும் அங்கமலக்கண் ணோக்கரும்வண்ணத் தழலானான் தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளம் அங்கமலத்தோ டேத்திடவண்டத் தமர்வாரே.
|
9
|
தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணும் சோறுடையார்சொற்றேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன் ஏறுடையன்பர னென்பணிவானீள் சடைமேலோர் ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.
|
10
|
Go to top |
காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த பூமருசோலைப் பொன்னியன்மாடப் புகலிக்கோன் நாமருதொன்மைத் தன்மையுண்ஞான சம்பந்தன் பாமருபாடல் பத்தும்வல்லார்மேற் பழிபோமே.
|
11
|