பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றிவெண் கொம்பொன்று பூண்டு செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச் செய்தொழில் பேணியோர் செல்வர் அம்மா னோக்கிய வந்தளிர் மேனி யரிவை யோர் பாக மமர்ந்த பெம்மா னல்கிய தொல்புக ழாளர் பேணுபெ ருந்துறை யாரே.
|
1
|
மூவரு மாகி யிருவரு மாகி முதல்வனு மாய்நின்ற மூர்த்தி பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கண நின்று பணியச் சாவம தாகிய மால்வரை கொண்டு தண்மதிண் மூன்றுமெ ரித்த தேவர்கள் தேவ ரெம்பெரு மானார் தீதில்பெ ருந்துறை யாரே.
|
2
|
செய்பூங் கொன்றை கூவிள மாலை சென்னியுட் சேர்புனல் சேர்த்திக் கொய்பூங் கோதை மாதுமை பாகங் கூடியோர் பீடுடை வேடர் கைபோ னான்ற கனிகுலை வாழை காய்குலை யிற்கமு கீனப் பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல் பில்குபெ ருந்துறை யாரே.
|
3
|
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவு மாகியோ ரைந்து புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி நலனொடு தீங்குந் தானல தின்றி நன்கெழு சிந்தைய ராகி மலனொடு மாசு மில்லவர் வாழும் மல்குபெ ருந்துறை யாரே.
|
4
|
பணிவா யுள்ள நன்கெழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்யத் துணியார் தங்க ளுள்ளமி லாத சுமடர்கள் சோதிப் பரியார் அணியார் நீல மாகிய கண்டர் அரிசிலு ரிஞ்சுக ரைமேல் மணிவாய் நீலம் வாய்கமழ் தேறன் மல்குபெ ருந்துறை யாரே.
|
5
|
Go to top |
எண்ணார் தங்கள் மும்மதிள் வேவ ஏவலங் காட்டிய வெந்தை விண்ணோர் சாரத் தன்னருள் செய்த வித்தகர் வேத முதல்வர் பண்ணார் பாட லாட லறாத பசுபதி யீசனோர் பாகம் பெண்ணா ணாய வார்சடை யண்ணல் பேணுபெ ருந்துறை யாரே.
|
6
|
விழையா ருள்ள நன்கெழு நாவில் வினை கெடவேதமா றங்கம் பிழையா வண்ணம் பண்ணிய வாற்றாற் பெரியோ ரேத்தும் பெருமான் தழையார் மாவின் றாழ்கனி யுந்தித் தண்ணரி சில்புடை சூழ்ந்து குழையார் சோலை மென்னடை யன்னங் கூடுபெ ருந்துறையாரே.
|
7
|
பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த பொருகடல் வேலி யிலங்கை மன்ன னொல்க மால்வரை யூன்றி மாமுர ணாகமுந் தோளும் முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த மூவிலை வேலுடை மூர்த்தி அன்னங் கன்னிப் பேடை யொடாடி யணவுபெ ருந்துறை யாரே.
|
8
|
புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட பொருகடல் வண்ணனும் பூவின் உள்வா யல்லி மேலுறை வானு முணர்வரி யானுமை கேள்வன் முள்வாய் தாளின் தாமரை மொட்டின் முகமலரக் கயல் பாயக் கள்வாய் நீலங் கண்மல ரேய்க்குங் காமர்பெ ருந்துறை யாரே.
|
9
|
குண்டுந் தேருங் கூறைக ளைந்துங் கூப்பிலர் செப்பில ராகி மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு மிண்டு செயாது விரும்பும் தண்டும் பாம்பும் வெண்டலை சூலந் தாங்கிய தேவர் தலைவர் வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை மல்குபெ ருந்துறை யாரே.
|
10
|
Go to top |
கடையார் மாட நன்கெழு வீதிக் கழுமல வூரன் கலந்து நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் நல்லபெ ருந்துறை மேய படையார் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்திவை வல்லார் உடையா ராகி உள்ளமு மொன்றி உலகினின் மன்னுவர் தாமே.
|
11
|