குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவப் பொருவெங்கரி படவென்றதன் உரிவையுட லணிவோன் அரவும்மலை புனலும்மிள மதியும்நகு தலையும் விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.
|
1
|
ஏறார்தரு மொருவன்பல வுருவன்னிலை யானான் ஆறார்தரு சடையன்அனல் உருவன்புரி வுடையான் மாறார்புர மெரியச்சிலை வளைவித்தவன் மடவாள் வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.
|
2
|
செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் பெய்ம்மின்பலி யெனநின்றிசை பகர்வாரவ ரிடமாம் உம்மென்றெழு மருவித்திரள் வரைபற்றிட வுரைமேல் விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.
|
3
|
அடைவாகிய வடியார்தொழ வலரோன்றலை யதனில் மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாம் கடையார்தர வகிலார்கழை முத்தம்நிரை சிந்தி மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.
|
4
|
எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப் பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க் கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிட மெனலாம் விண்ணோரொடு மண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.
|
5
|
Go to top |
வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான் திசையுற்றவர் காணச்செரு மலைவானிலை யவனை அசையப்பொரு தசையாவண மவனுக்குயர் படைகள் விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.
|
6
|
மானார்அர வுடையானிர வுடையான்பகல் நட்டம் ஊனார்தரு முயிரானுயர் விசையான்விளை பொருள்கள் தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம் மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.
|
7
|
பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன் கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீண்முடி நெரிந்து சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின் விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.
|
8
|
வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால் அளம்பட்டறி வொண்ணாவகை யழலாகிய வண்ணல் உளம்பட்டெழு தழற்றூணதன் நடுவேயொரு வுருவம் விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.
|
9
|
தடுக்காலுடன் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப் பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர் கடல்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த விடைசேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.
|
10
|
Go to top |
விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத் தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன் துளங்கில்தமிழ் பரவித்தொழு மடியாரவ ரென்றும் விளங்கும்புக ழதனோடுயர் விண்ணும்முடை யாரே.
|
11
|