திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி திருத்துருத்தியை அடைந்த சுந்தரர் திருக்கோயிலுக்குட் சென்று வழிபட்டு, அடியேன் உடம்பின்மேல் உள்ள பிணியை ஒழித்தருளவேண்டுமென்று வேண்டித் துதித்தார். சிவபிரான், இக் கோயிலுக்கு வடபால் உள்ள குளத்தில் நீராடில் இந்நோய் நீங்கும் என்று திருவருள் புரிந்தார். அவ்வண்ணமே சுந்தரர் திருக்குளத்தை யடைந்து நீராடினார் நீராடி எழும்போது, உடல்நோய் நீங்கப்பெற்று ஒளிவீசும் திருமேனியைப் பெற்றார். எழுந்து கரையேறித் திருக்கோயிலுக்குச் சென்று. மின்னுமா மேகங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார். சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை .
மின்னலை உண்டாக்குகின்ற கரிய மேகங்கள் மழையைப் பொழிந்தபின் , அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற , அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது , அகன்ற கரையின்கண் பலவிடத்தும் எழுந்தருளியிருப்பவரும் , திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் , வீற்றிருப்பவராகிய தலைவரும் , தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும் , என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது !
கூடும் ஆறு உள்ளன கூடியும், கோத்தும், கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி, மாடு மா கோங்கமே மருதமே பொருது, மலை எனக் குலைகளை மறிக்கும் ஆறு உந்தி, ஓடு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் பாடும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, பழவினை உள்ளன பற்று அறுத்தானை.
கூடத் தக்கனவாய் உள்ள யாறுகளோடு கூடியும் , அவை வேறு காணப்படாதவாறு கோத்தும் , கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும் , மலைநெற் கதிர்களை யும் சிதறியும் , இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முரித்தும் , கரைகளை மலை தகர்ந்தாற் போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தி யிலும் , திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும் , எனது பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமானை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , பாடும் வகையை அறிகின்றிலேன் !
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழுங் கனிச் செழும் பயன் கொண்டு, கூட்டு எய்தி, புல்கியும், தாழ்ந்தும், போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் சொல்லும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, தொடர்ந்து அடும் கடும் பிணித் தொடர்வு அறுத்தானை .
கொல்லுகின்ற பெரிய யானையின் தந்தங்களை யும் , மணம் பொருந்திய கொழுமையான கனிகளாகிய வளவிய பயனையும் வாரிக்கொண்டு , அவற்றின் தொகுதியைப் பொருந்தி வந்து வலம் செய்தும் , வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாளரும் , வீட்டுநெறியாளரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைத் தொடர்ந்து வருத்திய மிக்க பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலுங் கடை யேனும் ஆகிய யான் புகழுமாற்றை அறிகின்றிலேன் !
பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்து, இழிந்து, அருவிகள் புன்புலம் கவர,
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி, கடல் உற விளைப்பதே கருதி, தன் கை போய்
எறியும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
அறியும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அருவினை உள்ளன ஆசு அறுத்தானை .
அருவிகள் , பொரிந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள , பின்பு , கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும் , வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு , தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன் !
பொழிந்து இழி மும்மதக் களிற்றின மருப்பும், பொன்மலர் வேங்கையின் நல் மலர் உந்தி, இழிந்து இழிந்து, அருவிகள் கடும் புனல் ஈண்டி, எண் திசையோர்களும் ஆட வந்து இங்கே சுழிந்து இழி காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் ஒழிந்திலேன், பிதற்றும் ஆறு; எம்பெருமானை, உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை .
பொழியப்பட்டுப் பாய்கின்ற மும்மதங்களை யுடைய யானையது தந்தங்களையும் , பொன்னைப்போல மலர்கின்ற , வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் தள்ளிக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி , எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு , இவ்விடத்தில் சுழித்துக்கொண்டு பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைப் பற்றிய நோயை இன்றே முற்றும் நீக்கியவரும் ஆகிய எம் பெரு மானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன் .
புகழப்படுகின்ற சிறந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் , பொன்னும் மணியுமாகிய இவைகளையும் வாரிக்கொண்டும் , நல்ல மலர்களைத் தள்ளிக்கொண்டும் , தன்னால் அகழப்படுகின்ற , பெரிய , அரிய கரைகள் செல்வம்படுமாறு பெருகி , முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி , கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றம் உடை யேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , இகழுமாற்றை நினையமாட்டேன் !
அணியவான ஊர்களில் உள்ளவர்களும் , பெரிதாகிய நாடு முழுதும் உள்ளவர்களும் , மனம் விரும்பி நினைக்கு மாறு , பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து , அழகிய கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் திரிய , நீர் நிறைந்த , பெரிய , கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக்கொண்டு கவரி மானினது சிறந்த மயிரைச் சுமந்து , ஒளியையுடைய பளிங்குக் கற்களை உடைத்து , நானிலங்களில் உள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற , பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனக்கு வரும் பிறப்பில் வரக் கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே களைந் தொழித்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் , துய்க்குமாற்றை அறிகின்றிலேன் !
புலங்களை வளம்படப் போக்கு அறப் பெருகி, பொன்களே சுமந்து, எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப, இலங்கும் ஆர் முத்தினோடு இனமணி இடறி, இருகரைப் பெரு மரம் பீழந்து கொண்டு எற்றி, கலங்கு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் விலங்கும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, மேலை நோய் இம்மையே வீடு வித்தானை .