அட்டுமின், இல் பலி! என்று என்று அகம் கடைதோறும் வந்து,
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?-
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும்
நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே.
|
1
|
ஒலிக்கப்பட்ட தாளங்களுக்கு ஏற்பக் கூத்து நிகழ்த்திய திருவடிகளும் கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பும் உடையவராய் , நிலையாக நடனமாடும் தலைவராய் , நல்லூரில் உகந்தருளியிருக்கும் பெருமான் ` உணவுக்குரிய பிச்சையிடுமின் ` என்று வீடுகளின் வாசல்தோறும் வந்து தேன் ஒழுகும் கூந்தலை உடைய மகளிருடைய வளைகளைக் கைப்பற்றும் செயல் யாது காரணம் பற்றியதோ ? | |
பெண் இட்டம் பண்டையது அன்று; இவை பெய் பலிக்கு என்று உழல்வார்
நண்ணிட்டு, வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே
பண் இட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி, நோக்கி நின்று,
கண்ணிட்டு, போயிற்றுக் காரணம் உண்டு-கறைக்கண்டரே.
|
2
|
நீலகண்டப் பெருமானார் , பெண்கள் ஆசைப்படும்படி கொண்ட இவ்வடிவம் பண்டு கொண்ட வடிவமன்று ; பிறர் வழங்கும் பிச்சைக்காகத் திரிபவராய் வீடுகளை அணுகிப் புகுந்தவராய் நல்லூரில் பண்ணோடு கூடிய பாடல்களைப்பாடுபவரும் ஆடுபவருமாக வந்து எங்களை நோக்கிநின்று கண்ணால் சாடை காட்டிப் போயினதற்கு ஒரு காரணம் உண்டு . | |
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர்! பகலே ஒருவர்
இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து, இல் புகுந்து,
நடவார்; அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்கொலோ?
வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ் பதியே.
|
3
|
படம் எடுக்கின்ற அழகிய பாம்பு போன்ற அல் குலை உடைய பெண்களாகிய நல்லவர்களே ! பகல் நேரத்தில் ஒப்பற்ற பெருமானார் பிச்சை வழங்குபவர்களிடம் பிச்சை பெறுபவரைப்போல வந்து எங்கள் வீடுகளில் புகுந்து வீட்டை விட்டு நீங்காதவராக உள்ளார் . அவர் வடக்கே கயிலைமலையையும் தெற்கே நல்லூரையும் தம் உறைவிடமாகக் கொண்டு கூத்தினை விரும்பி ஆடிய கூத்தர் போலும் . | |
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய,
நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால்
துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான்
நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே.
|
4
|
சிவந்த சூரியன் போன்ற ஒளியுடையவனாய்ப் பவளத்திரளிலே விளங்கும் முத்துப்போல நீறணிந்து விடத்தை அழகாகச் சூடிய நீலகண்டனாய் நல்லூரில் உறையும் , நம்மால் விரும்பப்படும் பெருமானை அடியேன் ஒரு முறை உறக்கத்தினிடையே கனவில் கண்டு தொழுதேனாக அவன் தான் என் நெஞ்சினைவிட்டு அகலானாய்ப் பல காலமாக நெஞ்சில் நிலை பெற்றுள்ளான் . | |
வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள் தொழ;
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொடு நின்றான்; திரி புரம் மூன்று எரித்தான்;
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள, கழல்சேவடியே.
|
5
|
வெண்பிறை சூடி உலகு விளங்க நிற்பவனாய்த் தேவர்கள் தொழுமாறு கூத்தாடும் காட்சி நீங்காத நல்லூரை உறுதியான இருப்பிடமாகக் கொண்டு நிற்கும் திரிபுர சங்காரியினுடைய வீரக்கழல்கள் அணிந்த சேவடிகள் அடியேனுடைய கண்கள்முன்னும் நெஞ்சினகத்தும் உள்ளன . | |
| Go to top |
தேற்றப்படத் திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்;
ஆற்றில் கெடுத்துக் குளத்தினில்-தேடிய ஆதரைப் போல்
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், காண்பதற்கே.
|
6
|
எல்லார் உள்ளத்தும் தெளிவு ஏற்படச் சிவ பெருமான் திருநல்லூரிலே நிலையாக உறைந்திருந்தால் தங்களுக்கு அவன் காட்சி வழங்குமாறு அடியவர்கள் அக்கோயிலுக்குச் சென்று அவனைக் கண்டு கொண்டு நெஞ்சு நிறைவுபெறாதவராய் , தம் பொருத்தமல்லாத புத்தியினால் , ஆற்றில் இழந்த பொருளைக் குளத்தில் சென்று தேடும் அறிவிலிகளைப்போல , எம்பெருமானைத் தரிசிப்பதற்குக் காற்றை விட வேகமாக உலகமெங்கும் சுற்றித் திரிவர் . | |
நாள் கொண்ட தாமரைப்பூத் தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள் கொண்ட கோவணம் கா! என்று சொல்லிக் கிறிபடத் தான்
வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ, இவ் அகலிடமே?
|
7
|
காலையிலே மலர்கின்ற தாமரைப் பூக்களை உடைய குளங்கள் ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் நல்லூரிலே கீளோடு கூடிய இக்கோவணத்தைப் பத்திரமாக வைத்திருந்து பின்னர் யான் வேண்டும் போது கொடுப்பாயாக என்று சொல்லி வஞ்சனையாக அதனை மறைத்து , ஒளி பொருந்திய கண்களை உடைய அவன் மனைவியோடு அமர் நீதி என்ற வாணிகனை அடியவனாகக் கொண்ட புகழ்ச்செய்தியை இப்பரந்த உலகத்திலுள்ளவர்கள் சிறப்பாகப் பேசுகிறார்கள் . | |
அறை மல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான்; அணி ஆர் சடைமேல்
நறை மல்கு கொன்றை அம்தார் உடையானும்; நல்லூர் அகத்தே
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசு அழித்தான்-
பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே.
|
8
|
பிறை ஒளி வீசும் சிவந்த சடைகள் தொங்குமாறு காலை ஊன்றி நின்று ஆடிய , தலைக்கோலத்தை உடைய பெருமான் , ஓசைமிக்க பசிய பொன்னாலாகிய கழல்கள் ஆரவாரிக்க நின்று , அழகிய சடை மீது தேன் நிரம்பிய கொன்றைப் பூமாலையை உடையவனாய் நல்லூரிலே பறை ஓசைக்கு ஏற்பப் பாடுதலையும் ஆடுதலையும் செய்தவனாகி அடியேனுடைய தன்மையை அழித்தவனாவான் . | |
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த, மருவி என்றும்
துன்னிய தொண்டர்கள் இன் இசை பாடித் தொழுது, நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவு இடை உன்னிய காதலரை,
அன்னியர் அற்றவர், அங்கணனே, அருள் நல்கு! என்பரே.
|
9
|
நிலைபெற்ற மேம்பட்ட வேதங்களை ஓதும் வேதியர்கள் மகிழ்ந்து துதிக்க , எங்கும் கலந்து பொருந்திய தொண்டர்கள் இனிய இசையைப் பாடித்தொழ , நல்லூரில் உள்ள திருமணம் ஆகாத மகளிர் கனவிலே தாம் விரும்பிய காதலராகிய நல்லூர்ப் பெருமானைக் கண்டு , பிறருக்குத் தொடர்பற்றவர் அல்லராக உள்ள அழகிய கருணையை உடைய அப்பெருமானைத் தமக்கு அருள் நல்குமாறு வேண்டுவர் . | |
திரு அமர் தாமரை, சீர் வளர் செங்கழுநீர், கொள் நெய்தல்,
குரு அமர் கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி,
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர்
உரு அமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே.
|
10
|
திருமகள் தங்கும் தாமரை , சிறப்பு வளரும் செங்கழுநீர் , பறித்துச் சூடும் நெய்தல் , நிறம் பொருந்திய கோங்கம் , குரா , மகிழ் , சண்பகம் , கொன்றை , வன்னி , நறுமணம் கமழும் நீண்ட கொடிகள் இவற்றால் சூழப்பட்ட மறையோர்களுடைய மாடவீடுகள் நிறைந்த நல்லூரில் அழகு நிறைந்தவளாய் உள்ள பார்வதி பாகனை நாம் தியானிப்போமாக . | |
| Go to top |
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன், புகவும்; மதில் சூழ் இலங்கையர் காவலனைக்
கல் ஆர் முடியொடு தோள் இறச் செற்ற கழல் அடியான்,
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ, நம்மை ஆள்பவனே?
|
11
|
இடியை ஒத்து ஒலிக்கும் காளை வடிவு எழுதப்பட்ட கொடியை உடைய சிவபெருமானுடைய சிவபுரக் கோயிலகத்தும் புக வல்லேன் அடியேன் . மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகர மக்களின் தலைவனான இராவணனுடைய மலையை ஒத்த உறுதி யுடைய முடிகளோடு தோள்கள் நெரியுமாறு துன்புறுத்திய திருவடிகளை உடையவனாய் நல்லூரில் உறையும் பெருமானே நம்மை அடிமையாக ஆள்பவன் ஆவான் . | |