சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஆலவாய் (மதுரை) - புறநீர்மை ஹரிகாம்போஜி பூபாளம் காமாஜ் ராகத்தில் திருமுறை அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://sivaya.org/audio/3.120 Mangayarkarasi.mp3  https://sivaya.org/audio/3.120 mangayarkarasi.mp3  https://www.youtube.com/watch?v=z2C_j--RpY8   Add audio link Add Audio

மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

1
மங்கையர்க்கரசியார் சோழ மன்னரின் புதல்வி . கைகளில் வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர் . பெண்மைக்குரிய மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர் . தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர் . பாண்டிய மன்னனின் பட்டத்தரசி . சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபடும் தன்மையுடையவர் . அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடைய தூய உருவினர் . உயிர்கட்கெல்லாம் தலைவர் . நான்கு வேதங்களையும் , அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர் . அப்பெருமான் அங்கயற் கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும் .

வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன், வெள்ளைநீறு அணியும்
கொற்றவன்தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும்
ஒற்றை வெள்விடையன், உம்பரார்தலைவன், உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன், உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

2
பற்றற்ற உள்ளத்தோடு , சிவனடியார்களைக் காணும்போது கீழே விழுந்து அவர் திருவடிகளை வணங்கும் பக்தியுடையவரும் , திருவெண்ணீறு திருஞானசம்பந்தரால் பூசப்பெறும் புண்ணியப் பேறுடையவனாகிய பாண்டிய மன்னனுக்கு அமைச்சருமாகிய குலச்சிறை நாயனார் மகிழ்வோடு வணங்கித் துதிக்கும் சிவபெருமான் ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர் . தேவர்களின் தலைவர் . உலகியல்புகளை வெறுத்து அகப்பற்று , புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும் அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர் . அப்பெருமான் வீற்றிருந் தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும் .

செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய, பார் இடை நிலவும்
சந்தம் ஆர் தரளம், பாம்பு, நீர், மத்தம், தண் எருக்கம்மலர், வன்னி,
அந்தி வான்மதி, சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

3
மங்கையர்க்கரசியார் சிவந்த பவளம் போன்ற வாயையுடையவர் . சேல் மீன் போன்ற கண்களை உடையவர் . சிவபெருமானது திருநீற்றின் பெருமையை வளர்ப்பவர் . விரல்நுனி பந்து போன்று திரட்சியுடைய பாண்டிமா தேவியார் சிவத்தொண்டு செய்ய , உலகில் சிறந்த நகராக விளங்குவதும் , அழகிய முத்துக்கள் , பாம்பு , கங்கை , ஊமத்தை , குளிர்ச்சி பொருந்திய எருக்க மலர் , வன்னிமலர் , மாலைநேரத்தில் தோன்றும் பிறைச்சந்திரன் இவற்றை சடைமுடியில் அணிந்துள்ள தலைவரான சிவபெருமான் வீற்றிருந் தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும் .

கணங்கள் ஆய் வரினும், தமியராய் வரினும், அடியவர் தங்களைக் கண்டால்,
குணம்கொடு பணியும் குலச்சிறை குலாவுங் கோபுரம் சூழ் மணிக் கோயில்
மணம் கமழ் கொன்றை, வாள் அரா, மதியம், வன்னி, வண் கூவிளமாலை,
அணங்கு, வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

4
சிவனடியார்கள் கூட்டமாக வந்தாலும் , தனியராக வந்தாலும் , அவர்களைக் காணும்போது அவர்களின் குணச்சிறப்புக்களைக் கூறி , வழிபடும் தன்மையுடைய குலச்சிறையார் வழிபாடு செய்யும் , கோபுரங்கள் சூழ்ந்த அழகிய கோயிலைக் கொண்டதும் , மணம் கமழும் கொன்றை , பாம்பு , சந்திரன் , வன்னி , வில்வம் , கங்கை இவை விளங்கும் சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும் .

செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல் செல்வி,
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த,
வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரி கதிர் மழு உடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

5
சிவந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் இலக்குமி போன்று அழகுடையவரும் , சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ள வரும் , அழகிய நெற்றியையும் , பாம்பின் படம் போன்ற அல்குலையும் உடையவருமான பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் நாள்தோறும் மனமகிழ்வோடு வழிபாடு செய்து போற்ற , வேல் , சூலம் , பாசம் , அங்குசம் , மான் , மழு ஆகியவற்றைத் தாங்கியுள்ள சிவ பெருமான் உமாதேவியோடு இன்புற்று வீற்றிருந்தருளுகின்ற திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .
Go to top

நலம் இலர் ஆக, நலம் அது உண்டு ஆக, நாடவர் நாடு அறிகின்ற
குலம் இலர் ஆக, குலம் அது உண்டு ஆக, தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன், மூஇலைவேலன், கரிஉரி மூடிய கண்டன்,
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல், ஆலவாய் ஆவதும் இதுவே.

6
நல்ல குணங்களை உடையவராயினும் , அவை இல்லாதவராயினும் , எந்த நாட்டவராயினும் , நாடறிந்த உயர்குடியிற் பிறந்தவராயினும் , பிறவாதாராயினும் அடியவர்களைக் காணும்போது அவர்களை வணங்கி வழிபடுதலையே தவமாகக் கொண்டவர் குலச்சிறையார் . அத்தகைய குலச்சிறையார் வழிபடுகின்ற , மான் ஏந்திய கையினரும் , மூவிலைச் சூலத்தவரும் , வேலரும் , யானைத் தோலைப் போர்த்த நீலகண்டரும் , கங்கையைத் தாங்கிய சடை முடியை உடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திரு ஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க,
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய, நின்ற
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்,
அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

7
முத்துமாலையும் , சந்தனக் குழம்பும் , திருநீறும் தம் மார்பில் விளங்கப் பக்தியோடு பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியார் வழிபடுகின்ற , தூய பளிங்குமலை போன்ற சிவபெருமானும் , சுடர்விடு மரகதக் கொடி போன்ற உமாதேவியும் மகிழ்ந்து வீற்றிருந் தருளும் திரு ஆலவாய் இதுவே .

நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சு எழுத்து ஓதி, நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்-தொழுது எழு குலச்சிறை போற்ற,
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி,
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

8
நாவிற்கு அழகு செய்யும் இயல்பினதாகிய திருவைந்தெழுத்தை ஓதி , நல்லவராய் , நல்லியல்புகளை அளிக்கும் கோவணம் , விபூதி , உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவர் குலச்சிறை நாயனார் . அவர் வழிபாடு செய்கின்ற , பகைவரது அம்புகள் பணிந்து அப்பாற் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன் தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ,
விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

9
உலகம் முழுவதும் தனது செங்கோல் ஆட்சி நிகழ் மன்னனாய் விளங்கிய மணிமுடிச் சோழனின் மகளார் , மங்கையர்க்கரசியார் . பண்ணிசை போன்ற மொழியுடையவர் . பாண்டிய மன்னனின் பட்டத்தரசியார் . அத்தேவியார் அன்போடு வழிபாடு செய்து போற்றுகின்ற , விண்ணிலுள்ள திருமாலும் , பிரமனும் கீழும் மேலுமாய்ச் சென்று இறைவனின் அடிமுடி தேட முயன்று காண முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன் குணத்தினைக் குலாவக்
கண்டு, நாள்தோறும் இன்பு உறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த,
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண் நெறி இடை வாரா
அண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

10
சிவத்தொண்டர்கள் எல்லாத் திசைகளிலும் சிவபெருமானைத் தொழுது , அவர் அருட்குணத்தைப் போற்றி , அருட் செயல்களை மகிழ்ந்து கூறக்கேட்டு இன்புறும் தன்மையுடையவர் குலச்சிறையார் . அவர் பக்தியுடன் வழிபடுகின்ற , புத்த , சமணத்தைப் பின்பற்றுபவர் கொள்ளும் குறியின்கண் அடங்காத நெறியுடைய , இவ்வண்டத்துக்கெல்லாம் நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருத்தலம் இதுவேயாகும் .
Go to top

பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும்
அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி,
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே.

11
பலவகைச் செல்வ நலன்களும் வாய்க்கப் பெற்ற பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் , குலச்சிறையார் என்னும் மந்திரியாரும் வழிபட்டுப் போற்ற அவ்விருவர் பணிகளையும் ஏற்றருளும் சிறப்புடைய திருஆலவாய் இறைவன் திருவடிகளைப் போற்றி , கருப்பங் கழனிகளையுடைய பெருநகரான சீகாழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப் பதிகத்தை இன்னிசையோடு ஓதவல்லவர்கள் தேவர்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருப்பர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
2.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
2.070   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) )
3.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.047   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.052   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) )
3.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி   (திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
3.108   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
4.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
6.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000