வரம் அதே கொளா, உரம் அதே செயும் புரம்
எரித்தவன்-பிரமநல்புரத்து
அரன்-நன்நாமமே பரவுவார்கள் சீர் விரவும், நீள் புவியே.
|
1
|
தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது , தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான் . திருப்பிரமபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்றபூமி முழுவதும் பரவும் . | |
சேண் உலாம் மதில் வேணு மண் உளோர் காண மன்றில்
ஆர் வேணுநல்புரத்
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே.
|
2
|
ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர் காணும்படி அமைந்த , நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று சிறந்தவர்கள் ஆவர் . | |
அகலம் ஆர் தரைப் புகலும் நால்மறைக்கு இகல் இலோர்கள்
வாழ் புகலி மா நகர்,
பகல் செய்வோன் எதிர்ச் சகல சேகரன் அகில நாயகனே.
|
3
|
விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும் , சூரியனுக்கு எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில் அணிந்தவருமான சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர் ஆவார் . | |
துங்க மாகரி பங்கமா அடும் செங் கையான் நிகழ்
வெங்குருத் திகழ்
அங்கணான் அடி தம் கையால்-தொழ, தங்குமோ, வினையே?
|
4
|
உயர்ந்ததும் , பெரியதுமான யானை துன்புறும்படி கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும் , புகழுடன் விளங்கும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம் வினைகள் தங்கா . | |
காணி, ஒண் பொருள், கற்றவர்க்கு ஈகை உடைமையோர்
அவர் காதல் செய்யும் நல்-
தோணிவண் புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே.
|
5
|
நிலங்களையும் , அறவழியில் ஈட்டிய பொருள்களையும் கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க நகரில் வீற்றிருந்தருளுகின்ற ஆணிப்பொன் போன்று அரிய பொருளாய் விளங்கும் சிவபெருமானைத் துதிப்பவர்கள் தூய சிவஞானம் பெறுவர் . | |
| Go to top |
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடைப் பூந் தண் ஓதியாள்
சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழும் மாந்தர் மேனிமேல் சேர்ந்து இரா,
வினையே.
|
6
|
படம் விரிக்கும் பாம்பிற்கு ஒப்பான நுண்ணிய இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைத் தொழும் மக்கள்மேல் பிணி முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும் . | |
சுரபுரத்தினைத் துயர் செய் தாருகன் துஞ்ச, வெஞ்சினக் காளியைத் தரும்
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே.
|
7
|
தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக் கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர் . | |
உறவும் ஆகி, அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து, நீள் புவி இலங்கு சீர்ப்
புறவ மா நகர்க்கு இறைவனே! என, தெறகிலா, வினையே.
|
8
|
வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற , இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா . | |
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்,
சண்பை ஆதியைத் தொழுமவர்களைச் சாதியா, வினையே.
|
9
|
பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த , திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத் தொழுபவர்களை வினைகள் துன்புறுத்தா . வலியிழந்துபோம் . | |
ஆழி அங்கையில் கொண்ட மால், அயன், அறிவு ஒணாதது
ஓர் வடிவு கொண்டவன்-
காழி மா நகர்க் கடவுள் நாமமே கற்றல் நல்-தவமே.
|
10
|
சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட திருமாலும் , பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு வடிவாய் நின்றவனும் , சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும் . | |
| Go to top |
விச்சை ஒன்று இலாச் சமணர் சாக்கியப் பிச்சர் தங்களைக் கரிசு அறுத்தவன்
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள்
கூறுமினே!
|
11
|
மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர் , புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள் . | |
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன்தமிழ்
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும், முக்கண் எம் இறையே.
|
12
|
திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும் தந்தருள்வான் . | |
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|