சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பனந்தாள் - பஞ்சமம் ஹனுமத்தோடி ஆபோகி ஆகிரி ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சடையப்பஈசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=3JbxFHtr2P8   Add audio link Add Audio

கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,
பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான்,
விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே.

1
சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன் . தூய வெண்மழுவினைக் கையிலேந்தியவன் . உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன் . மிக்க பெருமையுடைய திருமாலை இடப வாகனமாகக் கொண்டவன் . விண்ணிலே விளங்குகின்ற பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையினையுடைய , வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானுடைய உறைவிடம் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன், முப்புரங்கள்(ள்); இயல் ஏழ் உலகில் உயிரும்
பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர் ஒலி வெள்ளம்
தன்னைத்
தரித்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

2
சிவபெருமான் நான்கு வேதங்களின் பொருளை விரித்து ஓதியவன் . தேவர்களெல்லாம் வந்து வேண்ட முப்புரங்களை எரித்தவன் . ஏழுலகங்களிலுமுள்ள உயிர்களைச் சங்கார காலத்தில் பிரித்தவன் . சிவந்த சடையின்மேல் நிறைந்த பேரொலியோடு பெருக்கெடுத்து வந்த கங்கையைத் தாங்கியவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

உடுத்தவன், மான் உரி-தோல்; கழல் உள்க வல்லார் வினைகள்
கெடுத்து அருள்செய்ய வல்லான்; கிளர் கீதம் ஓர்
நால்மறையான்;
மடுத்தவன். நஞ்சு அமுதா; மிக்க மா தவர் வேள்வியை முன்
தடுத்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

3
சிவபெருமான் மான்தோலை ஆடையாக அணிந்தவன் . தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவன் . இனிய இசையுடைய நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் உட்பொருளாகவும் விளங்குபவன் . பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன் . தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் கோயிலாகும் .

சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல், மிக ஏத்துமின்-பாய்புனலும்,
போழ் இளவெண்மதியும்(ம்), அனல் பொங்கு அரவும், புனைந்த
தாழ்சடையான் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே!

4
பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற எளிதில் நீங்காத வினைகளும் , அவற்றின் காரணமாக உடலில் தோன்றும் பலவகை நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணுவீராயின் பாய்கின்ற கங்கையையும் , பிளவுபட்ட இளமையான வெண்ணிறச் சந்திரனையும் , நெருப்புப் போல் விடம் கக்கும் பாம்பையும் அணிந்த தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலைப் மிகவும் போற்றி வழிபடுவீர்களாக !

விடம் படு கண்டத்தினான், இருள் வெள்வளை மங்கையொடும்
நடம் புரி கொள்கையினான் அவன், எம் இறை, சேரும் இடம்
படம் புரி நாகமொடு திரை பல்மணியும் கொணரும்
தடம் புனல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

5
சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை உடையவன் . வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு நள்ளிருளில் திருநடனம் புரிபவன் . எங்கள் தலைவனான சிவ பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , படமெடுத்தாடும் பாம்பு கக்குகின்ற நவரத்தினமணிகளோடு , அலைகள் பலவகையான மணிகளை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய மண்ணியாறு சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .
Go to top

விடை உயர் வெல்கொடியான்; அடி விண்ணொடு மண்ணும் எல்லாம்
புடைபட ஆடவல்லான்; மிகு பூதம் ஆர் பல் படையான்;
தொடை நவில் கொன்றையொடு, வன்னி, துன் எருக்கும், அணிந்த
சடையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

6
சிவபெருமான் வெற்றிக் கொடியாக இடபம் பொறித்த கொடி உடையவன் . விண்ணுலகமும் , மண்ணுலகமும் , மற்றுமுள்ள எல்லா உலகங்களும் தன் திருவடிபதியுமாறு விசுவரூபம் எடுத்து ஆடவல்லவன் . பலவகையான பூதகணங்களைப் படையாக உடையவன் . கொன்றைமாலையோடு , வன்னி , எருக்கம் இவை அணிந்த சடையுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

மலையவன் முன் பயந்த மடமாதை ஓர் கூறு உடையான்;
சிலை மலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்;
அலை மலி தண்புனலும், மதி, ஆடு அரவும்(ம்), அணிந்த
தலையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

7
சிவபெருமான் மலையரசன் பெற்றெடுத்த உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டவன் . மேரு மலையை வில்லாக்கி , அக்கினியைக் கணையாக்கி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகும்படி அழித்தவன் . அலைகளையுடைய குளிர்ந்த கங்கையையும் , சந்திரனையும் , பாம்பையும் அணிந்த சடைமுடியுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

செற்று, அரக்கன் வலியை, திருமெல்விரலால் அடர்த்து
முற்றும் வெண் நீறு அணிந்த திருமேனியன்; மும்மையினான்;
புற்று அரவம், புலியின்(ன்) உரி-தோலொடு, கோவணமும்,
தற்றவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

8
இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்காற்பெருவிரலை ஊன்றி அழித்தவன் . முற்றும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன் . உருவம் , அருவம் , அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன் . புற்றில் வாழ்கின்ற பாம்பையும் , புலித்தோலையும் , கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

வில் மலை, நாண் அரவம், மிகு வெங்கனல் அம்பு, அதனால்,
புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்;
நல் மலர்மேல் அயனும், நண்ணு நாரணனும்(ம்), அறியாத்
தன்மையன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

9
சிவபெருமான் மேருமலையை வில்லாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , மிகுந்த வெப்பமுடைய அக்கினியை அம்பாகவும் கொண்டு , தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகுமாறு அழித்தவன் . நல்ல தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் அறியாத தன்மையன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது திருப்பனந்தாள் என்னும் திருத்தலமாகும் . அங்குத் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளான் .

ஆதர் சமணரொடும்(ம்), அடை ஐ(ந்)துகில் போர்த்து உழலும்
நீதர், உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின்! நின்மலன் ஊர்
போது அவிழ் பொய்கைதனுள்-திகழ் புள் இரிய, பொழில்வாய்த்
தாது அவிழும் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

10
பயனிலிகளாகிய சமணர்களும் , அழகிய துணிகளைப் போர்த்துத் திரிகின்ற புத்தர்களும் உரைக்கின்ற மொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள் . நின்மலனான சிவபெருமானது உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில் புள்ளினங்கள் ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிரும் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகை யீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .
Go to top

தண்வயல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரத்துக்
கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர் கோன்-
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன்-நல்ல
பண் இயல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.

11
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் , வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி , சீகாழியில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு கூடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பனந்தாள்
3.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் பொலி நெற்றியினான், திகழ்
Tune - பஞ்சமம்   (திருப்பனந்தாள் சடையப்பஈசுவரர் பெரியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000