மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடை
அரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம்
குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே.
|
1
|
நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட , நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் , குரவம் , சுரபுன்னை , கோங்கு , வேங்கை ஆகிய மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை ஆகும் . | |
கீதம் முன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதம் முன் இயல்பு உடைப் புனிதர், பொன் நகர்
கோதனம் வழிபட, குலவு நால்மறை
வேதியர் தொழுது எழு விசயமங்கையே.
|
2
|
கீதங்களை முன்னே இசைக்க விளங்கும் வீணையினை உடையவரும் , பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான சிவபெருமானின் பொன்னகர் என்பது , இடபதேவர் வழிபட விளங்குவதும் , நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் . கோதனம் வழிபட - பசுக்கூட்டங்கள் வழிபட என்றும் பொருள் உரைப்பர் . ஒரு காலத்தில் இவ்வூர் கோவந்த புத்தூர் என வழங்கப்பட்டதாகக் கூறுவர் . | |
அக்கு அரவு அரையினர், அரிவை பாகமாத்
தொக்க நல் விடை உடைச் சோதி, தொல்-நகர்
தக்க நல் வானவர், தலைவர், நாள்தொறும்
மிக்கவர், தொழுது எழு விசயமங்கையே.
|
3
|
உருத்திராக்கத்தையும் , பாம்பையும் அணிந்த இடுப்பையுடையவரும் , உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட வரும் , சிறந்த நல் இடபத்தை வாகனமாக உடைய சோதி வடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமை வாய்ந்த நகர் , தகுதியுடைய நல்ல தேவர்களும் , அவர்களுடைய தலைவர்களும் நாள்தோறும் வணங்கிப் போற்றுகின்ற திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் . அக்கு - உருத்திராக்கம் . இதனை ` அக்கு மாலைகொடங்கையி வெண்ணுவார் ` ( தி .3 ப .307 பா .3) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கால் அறிக . | |
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு
புடை மலி சடை முடி அடிகள் பொன் நகர்
படை மலி மழுவினர், பைங்கண் மூரி வெள்
விடை மலி கொடி அணல், விசயமங்கையே.
|
4
|
கொன்றை மாலையும் , நெருக்கமாகத் தொடுக்கப் பட்ட எருக்க மாலையும் பக்கங்களிலே விளங்கும் சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் அழகிய நகரம் , மழுவை ஆயுதமாக உடையவரும் , பசிய கண்களையுடைய வலிமை யுடைய வெண்ணிற எருதுவை கொடியாக உடைய சிவபெருமானின் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் . | |
தோடு அமர் காதினன், துதைந்த நீற்றினன்,
ஏடு அமர் கோதையோடு இனிது அமர்வு இடம்
காடு அமர் மா கரி கதறப் போர்த்தது ஓர்
வேடம் அது உடை அணல் விசயமங்கையே.
|
5
|
இறைவன் இடப்பாகத்தில் தோடணிந்த காதினன் . நன்கு குழையத் திருநீறு பூசிய மேனியன் . காட்டிலே வசிக்கின்ற பெரிய யானை கதறும்படி அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட ஒப்பற்ற திருக்கோலத்தையுடைய அண்ணலான சிவபெருமான் , பூவிதழ்களை அணிந்த கூந்தலையுடைய உமாதேவியோடு இனிது வீற்றிருக்கும் இடம் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் . | |
| Go to top |
மைப் புரை கண் உமை பங்கன், வண் தழல்
ஒப்பு உரை மேனி எம் உடையவன், நகர்
அப்பொடு மலர்கொடு அங்கு இறைஞ்சி, வானவர்
மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே.
|
6
|
நீலோற்ப மலர் போன்ற கண்ணுடைய உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டவன் இறைவன் . சிறந்த நெருப்புப் போன்ற திருமேனியுடையவன் . எம்மை ஆளும் அவரின் நகர் நீரும் , மலரும் கொண்டு தேவர்கள் உண்மையாக வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் . பூவும் , நீரும் கொண்டு அன்புடன் வழிபடுபவர்களின் பூசையை ஏற்று இறைவன் அருள் செய்வான் என்று கூறுவது அன்பில்லாதவர்களின் பூவையும் , நீரையும் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதைப் புலப்படுத்தும் . ` பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே ` ( தி .5 ப .90 பா .9) என்ற திருநாவுக்கரசரின் திருவாக்கை இங்கு நினைவுகூர்க . | |
இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால்,
வரும் புரங்களைப் பொடிசெய்த மைந்தன் ஊர்
சுரும்பு அமர் கொன்றையும், தூய மத்தமும்,
விரும்பிய சடை அணல் விசயமங்கையே.
|
7
|
பெரிய மேருமலையாகிய வில்லினால் எய்யப்பட்ட நெருப்பாகிய அம்பினால் திரிபுரங்களைப் பொடிசெய்த பெரும் வீரமுடையவன் இறைவன் . வண்டுகள் அமர்கின்ற கொன்றை மலர் மாலையையும் , தூய ஊமத்தை மலரையும் விரும்பி அணிந்த சடைமுடியுடைய தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் . | |
உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு, ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை,
தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன்
விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே.
|
8
|
தன்னுடைய வழியில் இம்மலை தடுக்கின்றது என்று மனம் கசந்து , இருபது தோள்களும் , பத்துத் தலைகளும் கொண்டதால் தான் வலிமையுடையவன் என்று எண்ணி , எடுத்தற்கு அரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுக்க முயன்ற அரக்கனான இராவணன் தளர்ந்து உடல் நெரியும்படி அடர்த்த தன்மையுடைய சிவபெருமான் , ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு வீற்றிருந் தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் . | |
மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை
அண்ணல்கள் தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்
தண் நறுஞ்சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே.
|
9
|
மண்ணினை உண்ட திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அளத்தற்கரிய தலைவனான சிவபெருமானது ஊர் , குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும் சந்தனமும் , பூவும் நீரும் கொண்டு விண்ணவர் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் . | |
கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை
நஞ்சினும் கொடியன; நமர்கள் தேர்கிலார்
செஞ்சடைமுடி உடைத் தேவன் நன்நகர்
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே.
|
10
|
கஞ்சி உண்ணும் புத்தர்களும் , கவனமாக உணவு உண்ணும் சமணர்களும் உரைக்கின்ற கருத்துக்கள் நஞ்சினும் கொடியனவாகும் . நம்மவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளார் . சிவந்த சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம் வித்தியாதரர்கள் தொழுது வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் . | |
| Go to top |
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை,
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்,
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர்; சிவகதி புகுதல் திண்ணமே.
|
11
|
விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசய மங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து , திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தழிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர் . அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும் . | |