சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பழுவூர் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு அருந்தவநாயகியம்மை உடனுறை அருள்மிகு வடவனநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=hcE7aR2PXm8   Add audio link Add Audio

முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன்,
அத்தன், எமை ஆள் உடைய அண்ணல், இடம் என்பர்
மைத் தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச,
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.

1
இயல்பாகவே பாசங்களில் நீங்கியவன், மூவிலை வடிவானவேலை உடையவன், விரிந்த வேதங்களை அருளியவன், தலைவன். எம்மை ஆளாக உடைய முதல்வன். அவனது இடம் கரிய தழைகளை உடைய பெரிய பொழிலின் மணம் கமழ்வதும், பத்தர் சித்தர் பயில்வதுமான பழுவூர் என்பர்.

கோடலொடு கோங்குஅவை குலாவு முடிதன்மேல்
ஆடுஅரவம் வைத்த பெருமானது இடம் என்பர்
மாடம் மலி சூளிகையில் ஏறி, மடவார்கள்
பாடலொலி செய்ய, மலிகின்ற பழுவூரே.

2
வெண்காந்தள் மலரும் கோங்கமலரும் சூடிய, முடி மேல் ஆடும் அரவினையும் அணிந்துள்ள, பெருமானின் இடம், பெண்கள் மாடங்களின் உச்சியில் ஏறிப்பாடும் ஒலி நிறைந்துள்ள பழுவூர் என்பர்.

வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த
போலிய ஒருத்தர், புரிநூலர், இடம் என்பர்
வேலியின் விரைக்கமலம் அன்ன முக மாதர்,
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே.

3
பெரிய முப்புரங்களைத் தமது இல்லமாகக் கொண்ட அவுணர் வெந்தழியுமாறு கண் விழித்த கோலத்தைக் கொண்ட ஒப்பற்றவரும்

எண்ணும், ஒர் எழுத்தும், இசையின் கிளவி, தேர்வார்
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர்
மண்ணின்மிசை ஆடி, மலையாளர் தொழுது ஏத்தி,
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.

4
எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வார் கருதும் முதற்பொருளாய கடவுளின் இடம், மலையாள அந்தணர் உலகில் பாடியாடித் தொழுது ஏத்திப்பாடி வழிபடும் பழுவூர் என்பர்.

சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும்
நாதன், நமை ஆள் உடைய நம்பன், இடம் என்பர்
வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன்தன்
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே.

5
இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் நடனமாடும் நாதனும் நம்மை ஆளாக உடைய நம்பனும் ஆகிய சிவபெருமானது இடம் மறையாளர் வேதங்களை ஓதி இறைவனின் திருவடிப் பெருமைகளைப் பாடும் பழுவூர் என்பர்.
Go to top

மேவு அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி,
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே.

6
தங்கள் மீது மேவுதலால் துயர் செய்வனவாகிய மும்மதில்களையும் வெந்தழலால் அழித்தும், யானையை அயருமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தும் வீரம் விளைவித்த சிவபிரானது இடம், நாகணவாய்ப் பறவைக்கு இறைவன் புகழைக் கற்பித்துப் பேசவைக்கும் பெண்கள் கற்பொடு விளங்கும் பழுவூர் என்பர்.

மந்தணம் இருந்து புரி மா மடிதன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில், மட்டு ஆர்
பைந்தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே.

7
இரகசிய ஆலோசனைகளுடன் மாமனாகிய தக்கன் செய்த வேள்வி அழியுமாறு செய்த சிவபெருமானது இடம், அந்தணர்கள்செய்த வேள்விகளால் அகிலின் மணம் கமழ்வதும் அணிகலன்கள் அணிந்த அழகிய பெண்களின் காலடிச் சுவடுகள் உடையதுமான பழுவூர் என்பர்.

உரக் கடல்விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்று
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர்
குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு,
பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே.

8
வலிய கடலிடை எழுந்த நஞ்சினை மிடற்றிடை வைத்துள்ளவனும், அக்காலத்தில் இராவணனை அடர்த்து அருள் செய்ததந்தையும் ஆகிய சிவபிரானது இடம், குரங்குகள் மணமுடைய பொழிலின் மீது ஏறிக்கனிவகைகளை உண்டு நீர் பரவிய வயல்களில் விளையாடும் பழுவூர் என்பர்.

நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட,
அன்று தழல் ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள்
மன்றினில் இருந்து உடன்மகிழ்ந்த பழுவூரே.

9
உயர்ந்து நின்ற திருமாலும் நான்முகனும் தேடுமாறு அன்று அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த தலைவனது இடம், சிவபரம் பொருளாகிய ஒருவனையும், நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் உணர்ந்தவர்கள் பொது இடங்களிலிருந்து மகிழ்ந்துறையும் ஊராகிய பழுவூர் என்பர்.

மொட்டை அமண் ஆதர், துகில் மூடு விரி தேரர்,
முட்டைகள் மொழிந்த முனிவான்தன் இடம் என்பர்
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம்,
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே.

10
முண்டிதமான தலையை உடைய அமணர்களாகிய அறிவிலிகளும் ஆடையைவிரித்து உடலைப் போர்த்த தேரர்களும் ஆகிய குற்றமுடையோர் கூறுவனவற்றை ஏலாத இறைவனது இடம், மட்டைகள் நிறைந்த தென்னையினது இளநீர்களும் கமுகமரங்களின் பாக்குப் பட்டைகளோடு கூடிய பாக்குக் குலைகளும் நிறைந்த பழுவூர் என்பர்.
Go to top

அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச்
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி,
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

11
மலையாள அந்தணர்கள் ஏத்தும் அருளுறவு நிறைந்த பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் மனம் ஆரச்சந்த இசையால் பாடிய இப்பாடல்களை விரும்பித்தமக்கு இயன்ற இசையோடு ஏத்தித் தொழுபவர் சிவலோகம் பெறுவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பழுவூர்
2.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி
Tune - இந்தளம்   (திருப்பழுவூர் வடவனநாதர் அருந்தவநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000