முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன்,
அத்தன், எமை ஆள் உடைய அண்ணல், இடம் என்பர்
மைத் தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச,
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.
|
1
|
இயல்பாகவே பாசங்களில் நீங்கியவன், மூவிலை வடிவானவேலை உடையவன், விரிந்த வேதங்களை அருளியவன், தலைவன். எம்மை ஆளாக உடைய முதல்வன். அவனது இடம் கரிய தழைகளை உடைய பெரிய பொழிலின் மணம் கமழ்வதும், பத்தர் சித்தர் பயில்வதுமான பழுவூர் என்பர். | |
கோடலொடு கோங்குஅவை குலாவு முடிதன்மேல்
ஆடுஅரவம் வைத்த பெருமானது இடம் என்பர்
மாடம் மலி சூளிகையில் ஏறி, மடவார்கள்
பாடலொலி செய்ய, மலிகின்ற பழுவூரே.
|
2
|
வெண்காந்தள் மலரும் கோங்கமலரும் சூடிய, முடி மேல் ஆடும் அரவினையும் அணிந்துள்ள, பெருமானின் இடம், பெண்கள் மாடங்களின் உச்சியில் ஏறிப்பாடும் ஒலி நிறைந்துள்ள பழுவூர் என்பர். | |
வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த
போலிய ஒருத்தர், புரிநூலர், இடம் என்பர்
வேலியின் விரைக்கமலம் அன்ன முக மாதர்,
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே.
|
3
|
பெரிய முப்புரங்களைத் தமது இல்லமாகக் கொண்ட அவுணர் வெந்தழியுமாறு கண் விழித்த கோலத்தைக் கொண்ட ஒப்பற்றவரும் | |
எண்ணும், ஒர் எழுத்தும், இசையின் கிளவி, தேர்வார்
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர்
மண்ணின்மிசை ஆடி, மலையாளர் தொழுது ஏத்தி,
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.
|
4
|
எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வார் கருதும் முதற்பொருளாய கடவுளின் இடம், மலையாள அந்தணர் உலகில் பாடியாடித் தொழுது ஏத்திப்பாடி வழிபடும் பழுவூர் என்பர். | |
சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும்
நாதன், நமை ஆள் உடைய நம்பன், இடம் என்பர்
வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன்தன்
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே.
|
5
|
இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் நடனமாடும் நாதனும் நம்மை ஆளாக உடைய நம்பனும் ஆகிய சிவபெருமானது இடம் மறையாளர் வேதங்களை ஓதி இறைவனின் திருவடிப் பெருமைகளைப் பாடும் பழுவூர் என்பர். | |
| Go to top |
மேவு அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி,
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே.
|
6
|
தங்கள் மீது மேவுதலால் துயர் செய்வனவாகிய மும்மதில்களையும் வெந்தழலால் அழித்தும், யானையை அயருமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தும் வீரம் விளைவித்த சிவபிரானது இடம், நாகணவாய்ப் பறவைக்கு இறைவன் புகழைக் கற்பித்துப் பேசவைக்கும் பெண்கள் கற்பொடு விளங்கும் பழுவூர் என்பர். | |
மந்தணம் இருந்து புரி மா மடிதன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில், மட்டு ஆர்
பைந்தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே.
|
7
|
இரகசிய ஆலோசனைகளுடன் மாமனாகிய தக்கன் செய்த வேள்வி அழியுமாறு செய்த சிவபெருமானது இடம், அந்தணர்கள்செய்த வேள்விகளால் அகிலின் மணம் கமழ்வதும் அணிகலன்கள் அணிந்த அழகிய பெண்களின் காலடிச் சுவடுகள் உடையதுமான பழுவூர் என்பர். | |
உரக் கடல்விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்று
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர்
குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு,
பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே.
|
8
|
வலிய கடலிடை எழுந்த நஞ்சினை மிடற்றிடை வைத்துள்ளவனும், அக்காலத்தில் இராவணனை அடர்த்து அருள் செய்ததந்தையும் ஆகிய சிவபிரானது இடம், குரங்குகள் மணமுடைய பொழிலின் மீது ஏறிக்கனிவகைகளை உண்டு நீர் பரவிய வயல்களில் விளையாடும் பழுவூர் என்பர். | |
நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட,
அன்று தழல் ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள்
மன்றினில் இருந்து உடன்மகிழ்ந்த பழுவூரே.
|
9
|
உயர்ந்து நின்ற திருமாலும் நான்முகனும் தேடுமாறு அன்று அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த தலைவனது இடம், சிவபரம் பொருளாகிய ஒருவனையும், நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் உணர்ந்தவர்கள் பொது இடங்களிலிருந்து மகிழ்ந்துறையும் ஊராகிய பழுவூர் என்பர். | |
மொட்டை அமண் ஆதர், துகில் மூடு விரி தேரர்,
முட்டைகள் மொழிந்த முனிவான்தன் இடம் என்பர்
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம்,
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே.
|
10
|
முண்டிதமான தலையை உடைய அமணர்களாகிய அறிவிலிகளும் ஆடையைவிரித்து உடலைப் போர்த்த தேரர்களும் ஆகிய குற்றமுடையோர் கூறுவனவற்றை ஏலாத இறைவனது இடம், மட்டைகள் நிறைந்த தென்னையினது இளநீர்களும் கமுகமரங்களின் பாக்குப் பட்டைகளோடு கூடிய பாக்குக் குலைகளும் நிறைந்த பழுவூர் என்பர். | |
| Go to top |
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச்
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி,
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.
|
11
|
மலையாள அந்தணர்கள் ஏத்தும் அருளுறவு நிறைந்த பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் மனம் ஆரச்சந்த இசையால் பாடிய இப்பாடல்களை விரும்பித்தமக்கு இயன்ற இசையோடு ஏத்தித் தொழுபவர் சிவலோகம் பெறுவர். | |