உள்ளும் புறம்பும் குலமரபின்
ஒழுக்கம் வழுவா ஒருமைநெறி
கொள்ளும் இயல்பிற் குடிமுதலோர்
மலிந்த செல்வக் குலப்பதியாம்
தெள்ளுந் திரைகள் மதகுதொறும்
சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர்நாட்டு
மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.
|
1
|
சீரின் விளங்கும் அப்பதியில்
திருந்து வேளாண் குடிமுதல்வர்
நீரின் மலிந்த செய்யசடை
நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த
வேரி மலர்ந்த பூங்கழல்சூழ்
மெய்யன் புடைய சைவரெனப்
பாரில் நிகழ்ந்த செருத்துணையார்
பரவுந் தொண்டின் நெறிநின்றார்.
|
2
|
ஆன அன்பர் திருவாரூர்
ஆழித் தேர்வித் தகர்கோயில்
ஞான முனிவர் இமையவர்கள்
நெருங்கு நலஞ்சேர் முன்றிலினுள்
மான நிலவு திருப்பணிகள்
செய்து காலங் களின்வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார்
தொண்டு பொலியக் குலவுநாள்.
|
3
|
உலகு நிகழ்ந்த பல்லவர்கோச்
சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து
மருங்கு நீங்கிக் கிடந்ததொரு
மலரை யெடுத்து மோந்ததற்கு
வந்து பொறாமை வழித்தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவியெடுத்
தெழுந்த வேகத் தாலெய்தி.
|
4
|
கடிது முட்டி மற்றவள்தன்
கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப்
பற்றிப் பரமர் செய்யசடை
முடியில் ஏறுந் திருப்பூமண்
டபத்து மலர்மோந் திடும்மூக்கைத்
தடிவ னென்று கருவியினால்
அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்.
|
5
|
| Go to top |
அடுத்த திருத்தொண் டுலகறியச்
செய்த அடலே றனையவர்தாம்
தொடுத்த தாம மலரிதழி
முடியார் அடிமைத் தொண்டுகடல்
உடுத்த உலகின் நிகழச்செய்
துய்யச் செய்ய பொன்மன்றுள்
எடுத்த பாத நிழலடைந்தே
இறவா வின்பம் எய்தினார்.
|
6
|
செங்கண் விடையார் திருமுன்றில்
விழுந்த திருப்பள் ளித்தாமம்
அங்கண் எடுத்து மோந்ததற்கு
அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணிமூக் கரிந்தசெருத்
துணையார் தூய கழல்இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார்
உரிமை அடிமை யெடுத்துரைப்பாம்.
|
7
|