திருக்கிளர்சீர் மாடங்கள்
திருந்துபெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத்
தென்கரைப்பால் பிறங்குபொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன்
மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவே ளூரென்ப
திவ்வுலகில் விளங்குபதி.
|
1
|
அப்பதியில் குடிமுதல்வர்க்
கதிபராய் அளவிறந்த
எப்பொருளும் முடிவறியா
எய்துபெருஞ் செல்வத்தார்
ஒப்பில்பெருங் குணத்தினால்
உலகின்மேற் படவெழுந்தார்
மெய்ப்பொருளா வனஈசர்
கழல்என்னும் விருப்புடையார்.
|
2
|
தாவாத பெருஞ்செல்வம்
தலைநின்ற பயன்இதுவென்
றோவாத ஓளிவிளக்குச்
சிவன்கோயில் உள்ளெரித்து
நாவாரப் பரவுவார்
நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான்
திருத்தில்லை சென்றடைந்தார்.
|
3
|
தில்லைநகர் மணிமன்றுள்
ஆடுகின்ற சேவடிகள்
அல்கியஅன் புடன்இறைஞ்சி
அமர்கின்றார் புரமெரித்த
வில்லியார் திருப்புலீச்
சரத்தின்கண் விளக்கெரிக்க
இல்லிடையுள் ளனமாறி
எரித்துவரும் அந்நாளில்.
|
4
|
ஆயசெயல் மாண்டதற்பின்
அயலவர்பால் இரப்பஞ்சிக்
காயமுயற் சியில்அரிந்த
கணம்புல்லுக் கொடுவந்து
மேய விலைக் குக்கொடுத்து
விலைப்பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கெரித்தார்
துளக்கறுமெய்த் தொண்டனார்.
|
5
|
| Go to top |
இவ்வகையால் திருந்துவிளக்
கெரித்துவர அங்கொருநாள்
மெய்வருந்தி அரிந்தெடுத்துக்
கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலைபோகாது
ஒழியவும்அப் பணியொழியார்
அவ்வரிபுல் லினைமாட்டி
அணிவிளக்கா யிடஎரிப்பார்.
|
6
|
முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.
|
7
|
தங்கள்பிரான் திருவுள்ளம்
செய்துதலைத் திருவிளக்குப்
பொங்கியஅன் புடன்எரித்த
பொருவில்திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை
வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்லர்
இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.
|
8
|
மூரியார் கலியுலகில்
முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக்
கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை
விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம்.
|
9
|