மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின்
மன்னுந் தொன்மை மலைநாட்டுப்
பாவீற் றிருந்த பல்புகழில்
பயிலு மியல்பிற் பழம்பதிதான்
சேவீற் றிருந்தார் திருவஞ்சைக்
களமும் நிலவிச் சேரர்குலக்
கோவீற் றிருந்து முறைபுரியுங்
குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.
|
1
|
காலை யெழும்பல் கலையின்ஒலி
களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை யெழுமென் சுரும்பின்ஒலி
துரகச் செருக்காற் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
பாட லாடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கியெழ
விளங்கி யோங்கும் வியப்பினதால்.
|
2
|
மிக்க செல்வ மனைகள்தொறும்
விழையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கு சாலைதொறும்
பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க அணிகொள் மடங்கள்தொறும்
சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும்
அடங்க நிதியந் துவன்றுவன.
|
3
|
வேத நெறியின் முறைபிறழா
மிக்க ஒழுக்கந் தலைநின்ற
சாதி நான்கும் நிலைதழைக்கும்
தன்மைத் தாகித் தடமதில்சூழ்
சூத வகுள சரளநிரை
துதையுஞ் சோலை வளநகர்தான்
கோதை யரசர் மகோதையெனக்
குலவு பெயரும் உடைத்துலகில்.
|
4
|
முருகு விரியும் மலர்ச்சோலை
மூதூ ரதன்கண் முறைமரபின்
அருகி யழியுங் கலிநீக்கி
அறங்கொள் சைவத் திறந்தழைப்பத்
திருகு சினவெங் களியானைச்
சேரர் குலமும் உலகுஞ்செய்
பெருகு தவத்தால் அரனருளால்
பிறந்தார் பெருமாக் கோதையார்.
|
5
|
| Go to top |
திருமா நகரந் திருவவதா
ரஞ்செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாடல்
எடுப்ப வான மலர்மாரி
தருமா விசும்பின் மிகநெருங்கத்
தழங்கும் மொலிமங் கலந்தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும்
பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.
|
6
|
மண்மேற் சைவ நெறிவாழ
வளர்ந்து முன்னை வழியன்பால்
கண்மேல் விளங்கு நெற்றியினார்
கழலே பேணுங் கருத்தினராய்
உண்மே வியஅன் பினராகி
யுரிமை யரசர் தொழில்புரியார்
தெண்ணீர் முடியார் திருவஞ்சைக்
களத்தில் திருத்தொண் டேபுரிவார்.
|
7
|
உலகின் இயல்பும் அரசியல்பும்
உறுதி யல்ல எனவுணர்வார்
புலரி யெழுந்து புனல்மூழ்கிப்
புனித வெண்ணீற் றினும்மூழ்கி
நிலவு திருநந் தனவனத்து
நீடும் பணிகள் பலசெய்து
மலரு முகையுங் கொணர்ந்துதிரு
மாலை சாத்த மகிழ்ந்தமைத்து.
|
8
|
திருமஞ் சனமும் கொணர்ந்துதிரு
வலகும் இட்டுத் திருமெழுக்கு
வருமன் புடன்இன் புறச்சாத்தி
மற்று முள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்தமைத்துப்
பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியி னுணர்வுவர
ஓதிப் பணிந்தே யொழுகுநாள்.
|
9
|
நீரில் மலிந்த கடல்அகழி
நெடுமால் வரையின் கொடிமதில்சூழ்
சீரின் மலிந்த திருநகரம்
அதனிற் செங்கோற் பொறையனெனும்
காரின் மலிந்த கொடைநிழன்மேற்
கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த்
தாரின் மலிந்த புயத்தரசன்
தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.
|
10
|
| Go to top |
வந்த மரபின் அரசளிப்பான்
வனஞ்சார் தவத்தின் மருவியபின்
சிந்தை மதிநூல் தேரமைச்சர்
சிலநாள் ஆய்ந்து தெளிந்தநெறி
முந்தை மரபின் முதல்வர்திருத்
தொண்டு முயல்வார் முதற்றாக
இந்து முடியார் திருவஞ்சைக்
களத்தில் அவர்பால் எய்தினார்.
|
11
|
எய்தி யவர்தம் எதிரிறைஞ்சி
இருந்தண் சாரல் மலைநாட்டுச்
செய்தி முறைமை யால்உரிமைச்
செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடிசூடி
யருளு மரபால் வந்ததெனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள்
போற்றிப் புகன்ற பொழுதின்கண்.
|
12
|
இன்பம் பெருகுந் திருத்தொண்டுக்
கிடையூ றாக இவர்மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை
அரசு புரக்கும் அருளுண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை
இடைபெற் றறிவே னெனப்புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம்
செய்தார் முதல்வர் அருளினால்.
|
13
|
மேவும் உரிமை அரசளித்தே
விரும்பு காதல் வழிபாடும்
யாவும் யாருங் கழறினவும்
அறியும் உணர்வும் ஈறில்லாத்
தாவில் விறலுந் தண்டாத
கொடையும் படைவா கனம்முதலாம்
காவல் மன்னர்க் குரியனவும்
எல்லாங் கைவந் துறப்பெற்றார்.
|
14
|
ஆன அருள்கொண் டஞ்சலிசெய்
திறைஞ்சிப் புறம்போந் தரசளித்தல்
ஊன மாகுந் திருத்தொண்டுக்
கெனினும் உடையா னருளாலே
மேன்மை மகுடந் தாங்குதற்கு
வேண்டும் அமைச்சர்க் குடன்படலும்
மான அமைச்சர் தாம்பணிந்துஅவ்
வினைமேற் கொண்டு மகிழ்ந்தெழுந்தார்.
|
15
|
| Go to top |
உரிமை நாளில் ஓரைநலன்
எய்த மிக்க வுபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன
வெல்லாம் பிறங்க மங்கலஞ்செய்
திருமை யுலகுக் கொருமைமுடி
கவித்தார் எல்லா வுயிருமகிழ்
தரும நிலைமை யறிந்துபுவி
தாங்குங் கழறிற் றறிவார்தாம்.
|
16
|
தம்பி ரானார் கோயில்வலங்
கொண்டு திருமுன் தாழ்ந்தெழுந்து
கும்ப யானை மேல்கொண்டு
கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர்தாங்க
நலங்கொள் நகர்சூழ் வலங்கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதிசுமந்தோர்
வண்ணான் முன்னே வரக்கண்டார்.
|
17
|
மழையிற் கரைந்தங் குவரூறி
மேனி வெளுத்த வடிவினால்
உழையிற் பொலிந்த திருக்கரத்தார்
அடியார் வேடம் என்றுணர்ந்தே
இழையிற் சிறந்த வோடைநுதல்
யானைக் கழுத்தி னின்றிழிந்து
விழைவிற் பெருகுங்காதலினால்
விரைந்து சென்று கைதொழுதார்.
|
18
|
சேரர் பெருமான் தொழக்கண்டு
சிந்தை கலங்கி முன்வணங்கி
யார்என் றடியே னைக்கொண்ட
தடியேன் அடிவண் ணானென்னச்
சேரர் பிரானு மடிச்சேரன்
அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர்
வருந்தா தேகும் எனமொழிந்தார்.
|
19
|
மன்னர் பெருமான் திருத்தொண்டு
கண்டு மதிநீடு அமைச்சரெலாம்
சென்னி மிசைஅஞ் சலிசெய்து
போற்றச் சினமால் களிறேறி
மின்னு மணிப்பூண் கொடிமாட
வீதி மூதூர் வலங்கொண்டு
பொன்னின் மணிமா ளிகைவாயில்
புக்கார் புனைமங் கலம்பொலிய.
|
20
|
| Go to top |
யானை மிசைநின் றிழிந்தருளி
இலங்கும் மணிமண் டபத்தின்கண்
மேன்மை அரியா சனத்தேறி
விளங்குங் கொற்றக் குடைநிழற்றப்
பானல் விழியார் சாமரைமுன்
பணிமா றப்பன் மலர்தூவி
மான அரசர் போற்றிடவீற்
றிருந்தார் மன்னர் பெருமானார்.
|
21
|
உலகு புரக்கும் குடைவளவர்
உரிமைச் செழிய ருடன்கூட
நிலவு பெருமுக் கோக்களாய்
நீதி மனுநூல் நெறிநடத்தி
அலகில் அரசர் திறைகொணர
அகத்தும் புறத்தும் பகையறுத்து
மலருந் திருநீற் றொளிவளர
மறைகள் வளர மண்ணளிப்பார்.
|
22
|
நீடும் உரிமைப் பேரரசால்
நிகழும் பயனும் நிறைதவமும்
தேடும் பொருளும் பெருந்துணையும்
தில்லைத் திருச்சிற் றம்பலத்துள்
ஆடுங் கழலே எனத்தெளிந்த
அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனைமேல்
கொண்டார் சேரர் குலப்பெருமாள்.
|
23
|
வாசத் திருமஞ் சனம்பள்ளித்
தாமஞ் சாந்த மணித்தூபம்
தேசிற் பெருகுஞ் செழுந்தீபம்
முதலா யினவும் திருவமுதும்
ஈசற் கேற்ற பரிசினால்
அருச்சித் தருள எந்நாளும்
பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர்
பொற்பார் சிலம்பின் ஒலியளித்தார்.
|
24
|
நம்பர் தாளின் வழிபாட்டால்
நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும்
வறியோ ரெவர்க்கும் ஈகையினால்
செம்பொன் மழையாம் எனப்பொழிந்து
திருந்து வென்றி யுடன்பொருந்தி
உம்பர் போற்றத் தம்பெருமாற்
குரிய வேள்வி பலசெய்தார்.
|
25
|
| Go to top |
இன்ன வண்ணம் இவரொழுக
எழில்கொள் பாண்டி நன்னாட்டு
மன்னும் மதுரைத் திருவால
வாயில் இறைவர் வருமன்பால்
பன்னும் இசைப்பா டலிற்பரவும்
பாண னார்பத் திரனார்க்கு
நன்மை நீடு பெருஞ்செல்வம்
நல்க வேண்டி அருள்புரிவார்.
|
26
|
இரவு கனவில் எழுந்தருளி
என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவு சேரன் தனக்குனக்குப்
பைம்பொன் காணம் பட்டாடை
விரவு கதிர்செய் நவமணிப்பூண்
வேண்டிற்று எல்லாங் குறைவின்றித்
தரநம் மோலை தருகின்றோம்
தாழா தேகி வருகென்று.
|
27
|
அதிர்கழல் உதியர் வேந்தற்
கருள்செய்த பெருமை யாலே
எதிரில்செல் வத்துக்கு ஏற்ற
இருநிதி கொடுக்க வென்று
மதிமலி புரிசை என்னும்
வாசகம் வரைந்த வாய்மைக்
கதிரொளி விரிந்த தோட்டுத்
திருமுகங் கொடுத்தார் காண.
|
28
|
சங்கப் புலவர் திருமுகத்தைத்
தலைமேற் கொண்டு பத்திரனார்
அங்கப் பொழுதே புறப்பட்டு
மலைநா டணைய வந்தெய்தித்
துங்கப் புரிசைக் கொடுங்கோளூர்
தன்னிற் புகுந்து துன்னுகொடி
மங்குல் தொடக்கும் மாளிகைமுன்
வந்து மன்னர்க் கறிவித்தார்.
|
29
|
கேட்ட பொழுதே கைதலைமேல்
கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழிநீர் வழிந்திழிய
எழுந்து நடுக்கம் மிகவெய்தி
ஓட்டத் தம்பொன் மாளிகையின்
புறத்தி லுருகுஞ் சிந்தையுடன்
பாட்டின் தலைமைப் பாணனார்
பாதம் பலகாற் பணிகின்றார்.
|
30
|
| Go to top |
அடியேன் பொருளாத் திருமுகங்கொண்
டணைந்த தென்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக்
கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி
மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப்
புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.
|
31
|
பரிவில் போற்றித் திருமுகத்தைப்
பலகால் தொழுது படியெடுக்க
உரிய வகையா லெடுத்தோதி
யும்பர் பெருமா னருள்போற்றி
விரிபொற் சுடர்மா ளிகைபுக்கு
மேவும் உரிமைச் சுற்றமெலாம்
பெரிது விரைவிற் கொடுபோந்து
பேணும் அமைச்சர்க் கருள்செய்வார்.
|
32
|
நங்கள் குலமா ளிகையதனுள்
நலத்தின் மிக்க நிதிக்குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு
வகையிற் பொலிந்த பண்டாரம்
அங்க ணொன்று மொழியாமே
அடையக் கொண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேற்
சமைய வேற்றிக் கொணருமென.
|
33
|
சேரர் பெருமான் அருள்செய்யத்
திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரு மணிமா ளிகையுள்ளால்
தனங்கள் எல்லாம் நிறைந்தபெரும்
சீர்கொள் நிதிய மெண்ணிறந்த
வெல்லாம் பொதிசெய் தாளின்மேல்
பாரில் நெருங்க மிசையேற்றிக்
கொண்டு வந்து பணிந்தார்கள்.
|
34
|
பரந்த நிதியின் பரப்பெல்லாம்
பாண னார்பத் திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு
நிரைத்துக் காட்டி மற்றிவையும்
உரந்தங் கியவெங் கரிபரிகள்
முதலாம் உயிருள் ளனதனமும்
புரந்த அரசுங் கொள்ளுமென
மொழிந்தார் பொறையர் புரவலனார்.
|
35
|
| Go to top |
பாண னார்பத் திரனாரும்
பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதியெல்லாம்
கண்டு மகிழ்வுற் றதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன
அடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார்
ஆணை யரசும் அரசுறுப்பும்
கைக்கொண் டருளும் எனஇறைஞ்ச.
|
36
|
இறைவ ராணை மறுப்பதனுக்கு
அஞ்சி யிசைந்தார் இகல்வேந்தர்
நிறையு நிதியின் பரப்பையெல்லாம்
நிலத்தை நெளிய வுடன்கொண்டே
உறைமும் மதத்துக் களிறுபரி
யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர்
பிறைவெண் கோட்டு களிற்றுமேல்
கொண்டு போந்தார் பெரும்பாணர்.
|
37
|
பண்பு பெருகும் பெருமாளும்
பாண னார்பத் திரனார்பின்
கண்கள் பொழிந்த காதல்நீர்
வழியக் கையால் தொழுதணைய
நண்பு சிறக்கு மவர் தம்மை
நகரின் புறத்து விடைகொண்டு
திண்பொற் புரிசைத் திருமதுரை
புக்கார் திருந்தும் இசைப்பாணர்.
|
38
|
வான வரம்பர் குலம்பெருக்கும்
மன்ன னாரும் அறித்தேகிக்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியா ரடிமை கொண்டருளும்
பான்மை யருளின் பெருமையினை
நினைந்து பலகாற் பணிந்தேத்தி
மேன்மை விளங்கு மாளிகைமண்
டபத்துள் அரசு வீற்றிருந்தார்.
|
39
|
அளவில் பெருமை அகிலயோ
னிகளும் கழறிற் றறிந்தவற்றின்
உளமன் னியமெய் யுறுதுயர்கள்
ஒன்று மொழியா வகையகற்றிக்
களவு கொலைகள் முதலான
கடிந்து கழறிற் றறிவார்தாம்
வளவர் பெருமா னுடன்செழியர்
மகிழும் கலப்பில் வைகு நாள்.
|
40
|
| Go to top |
வானக் கங்கை நதிபொதிந்த
மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பின் அர்ச்சனையாம்
தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினார்
ஆடற் சிலம்பின் ஒலி முன்போல்
மானப் பூசை முடிவின்கண்
கேளா தொழிய மதிமயங்கி.
|
41
|
பூசை கடிது முடித்தடியேன்
என்னோ பிழைத்த தெனப் பொருமி
ஆசை உடம்பால் மற்றினிவே
றடையும் இன்பம் யாதென்று
தேசின் விளங்கும் உடைவாளை
யுருவித் திருமார் பினில்நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின்
ஒசை மிகவும் இசைப்பித்தார்.
|
42
|
ஆடல் சிலம்பின் ஒலிகேளா
வுடைவா ளகற்றி யங்கைமலர்
கூடத் தலைமேற் குவித்தருளிக்
கொண்டு விழுந்து தொழுதெழுந்து
நீடப் பரவி மொழிகின்றார்
நெடுமால் பிரமன் அருமறைமுன்
தேடற் கரியாய் திருவருள்முன்
செய்யா தொழிந்த தென்னென்றார்.
|
43
|
என்ற பொழுதில் இறைவர்தாம்
எதிர்நின் றருளா தெழுமொலியால்
மன்றி னிடைநங் கூத்தாடல்
வந்து வணங்கி வன்றொண்டன்
ஒன்று முணர்வால் நமைப்போற்றி
யுரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்.
|
44
|
என்னே அடியார்க் கிவரருளும்
கருணை யிருந்த வாறென்று
பொன்னேர் சடையார் திருநடஞ்செய்
புலியூர்ப் பொன்னம் பலம்இறைஞ்சித்
தன்னே ரில்லா வன்றொண்டர்
தமையுங் காண்பன் எனவிரும்பி
நன்னீர் நாட்டுச் செலநயந்தார்
நாமச் சேரர் கோமானார்.
|
45
|
| Go to top |
பொன்னார் மௌலிச் சேரலனார்
போற்றும் அமைச்சர்க் கஃதியம்பி
நன்னாள் கொண்டு பெரும்பயணம்
எழுக வென்று நலஞ்சாற்ற
மின்னா ரயில்வேற் குலமறவர்
வென்றி நிலவுஞ் சிலைவீரர்
அந்நாட் டுள்ளார் அடையநிரந்
தணைந்தார் வஞ்சிஅக நகர்வாய்.
|
46
|
இட்ட நன்னாள் ஓரையினில்
இறைவர் திருவஞ் சைக்களத்து
மட்டு விரிபூங் கொன்றையினார்
தம்மை வலங்கொண் டிறைஞ்சிப்போய்ப்
பட்ட நுதல்வெங் களியானைப்
பிடர்மேற் கொண்டு பனிமதியந்
தொட்ட கொடிமா ளிகைமூதூர்
கடந்தார் உதியர் தோன்றலார்.
|
47
|
யானை யணிகள் பரந்துவழி
யெங்கும் நிரந்து செல்லுவன
மான மலைநாட் டினின்மலிந்த
மலைக ளுடன்போ துவபோன்ற
சேனை வீரர் புடைபரந்து
செல்வ தங்கண் மலைசூழ்ந்த
கான மடைய வுடன்படர்வ
போலுங் காட்சி மேவின தால்.
|
48
|
புரவித் திரள்கள் ஆயோகப்
பொலிவி னசைவிற் போதுவன
அரவச் சேனைக் கடற்றரங்க
மடுத்து மேன்மே லடர்வனபோல்
விரவிப் பரந்து சென்றனவான்
மிசையு மவலு மொன்றாக
நிரவிப் பரந்த நெடுஞ்சேனை
நேமி நெளியச் சென்றனவால்.
|
49
|
அந்நாட் டெல்லை கடந்தணைய
அமைச்சர்க் கெல்லாம் விடையருளி
மின்னார் மணிப்பூண் மன்னவனார்
வேண்டு வாரை யுடன்கொண்டு
கொன்னார் அயில்வேல் மறவர்பயில்
கொங்கு நாடு கடந்தருளிப்
பொன்னாட் டவரும் அணைந்தாடும் பொன்னி நீர்நாட் டிடைப்போவார்.
|
50
|
| Go to top |
சென்ற திசையில் சிவனடியார்
சிறப்பி னோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக்குறும்பர்
இடங்கள் தோறுங் குறைவறுப்பத்
துன்று முரம்புங் கான்யாறுந்
துறுகற் சுரமும் பலகடந்து
வென்றி விடையார் இடம்பலவும்
மேவிப் பணிந்து செல்கின்றார்.
|
51
|
பொருவில் பொன்னித் திருநதியின்
கரைவந் தெய்திப் புனிதநீர்
மருவும் தீர்த்தம் மகிழ்ந்தாடி
மருங்கு வடபாற் கரையேறித்
திருவிற் பொலியுந் திருப்புலியூர்ச்
செம்பொன் மன்றுள் நடம்போற்ற
உருகி மனத்தி னுடன்சென்றார்
ஒழியா அன்பின் வழிவந்தார்.
|
52
|
வந்து தில்லை மூதூரின்
எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்த ணாளர் தொண்டர்குழாம்
அணைந்த போதில் எதிர்வணங்கிச்
சந்த விரைப்பூந் திருவீதி
இறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழுநிலைக்கோ
புரத்தை யணைந்தார் சேரலனார்.
|
53
|
நிலவும் பெருமை எழுநிலைக்கோ
புரத்தின் முன்னர் நிலத்திறைஞ்சி
மலருங் கண்ணீர்த் துளிததும்பப்
புகுந்து மணிமா ளிகைவலங்கொண்டு
உலகு விளக்குந் திருப்பேரம்
பலத்தை வணங்கி யுள்ளணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர்நின்று
ஆடுந் திருச்சிற் றம்பலமுன்.
|
54
|
அளவில் இன்பப் பெருங்கூத்தர்
ஆட எடுத்த கழல்காட்ட
உளமும் புலமும் ஒருவழிச்சென்று
உருகப் போற்றி யுய்கின்றார்
களனில் விடம்வைத் தளித்தவமு
தன்றி மன்றிற் கழல்வைத்
வளருந் திருக்கூத் தமுதுலகுக்கு
அளித்த கருணை வழுத்தினார்.
|
55
|
| Go to top |
ஆரா ஆசை ஆனந்தக்
கடலுள் திளைத்தே யமர்ந்தருளால்
சீரார் வண்ணப் பொன்வண்ணத்
திருவந் தாதி திருப்படிக்கீழ்ப்
பார்ஆ தரிக்க எடுத்தேத்திப்
பணிந்தார் பருவ மழைபொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக்
கையார் கழறிற் றறிவார் தாம்.
|
56
|
தம்பி ரானார்க் கெதிர்நின்று
தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடமாடும்
ஒருவ ரதற்குப் பரிசிலெனச்
செம்பொன் மணிமன் றினில்எடுத்த
செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்தவொலி
தாமும் எதிரே கேட்பித்தார்.
|
57
|
ஆடற் சிலம்பின் ஒலிகேட்பார்
அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும்பேற்றின்
கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
நீடப் பணியுங் காலமெலாம்
நின்று தொழுது புறம்போந்து
மாடத் திருமா ளிகைவீதி
வணங்கிப் புறத்து வைகினார்.
|
58
|
பரவுந் தில்லை வட்டத்துப்
பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்
அரவும் புனலுஞ் சடையாட
ஆடு வார்கூத் தாராமை
விரவுங் காதல் மிக்கோங்க
வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்தேத்தி
இன்பம் சிறக்கும் அந்நாளில்.
|
59
|
ஆடும் பெருமான் பாடல்கேட்
டருளித் தாழ்த்த படிதமக்குக்
கூடும் பரிசால் முன்பருளிச்
செய்த நாவ லூர்க்கோவை
நீடும் பெருங்கா தலிற்காண
நிறைந்த நினைவு நிரம்பமால்
தேடும் பாதர் அருளினால்
திருவா ரூர்மேற் செலவெழுந்தார்.
|
60
|
| Go to top |
அறிவின் எல்லை யாயதிருத்
தில்லை யெல்லை யமர்ந்திறைஞ்சிப்
பிறிவி லாத திருவடியைப்
பெருகும் உள்ளத் தினிற்பெற்றுச்
செறியு ஞான போனகர்வந்து
அருளும் புகலி சென்றிறைஞ்சி
மறிசேர் கரத்தார் கோயில்பல
வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.
|
61
|
வழியில் குழியில் செழுவயலில்
மதகில் மலர்வா விகளில்மடுச்
சுழியில் தரளந் திரைசொரியுந்
துறைநீர்ப் பொன்னி கடந்தேறி
விழியில் திகழுந் திருநுதலார்
விரும்பும் இடங்கள் இறைஞ்சியுகக்
கழிவில் பெருவெள் ளமுங்கொள்ளாக்
கழனி யாரூர் கண்ணுற்றார்.
|
62
|
நம்பி தாமும் அந்நாள்போய்
நாகைக் காரோ ணம்பாடி
அம்பொன் மணிப்பூண் நவமணிகள்
ஆடை சாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான
பெற்று மற்றும் பலபதியில்
தம்பி ரானைப் பணிந்தேத்தித்
திருவா ரூரில் சார்ந்திருந்தார்.
|
63
|
வந்து சேரர் பெருமானார்
மன்னும் திருவா ரூர்எய்த
அந்த ணாளர் பெருமானும்
அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர்கொண்டு
சென்று கிடைத்தார் சேரலனார்
சந்த விரைத்தார் வன்றொண்டர்
முன்பு விருப்பி னுடன்தாழ்ந்தார்.
|
64
|
முன்பு பணிந்த பெருமாளைத்
தாமும் பணிந்து முகந்தெடுத்தே
அன்பு பெருகத் தழுவவிரைந்
தவரும் ஆர்வத் தொடுதழுவ
இன்ப வெள்ளத் திடைநீந்தி
ஏற மாட்டா தலைவார்போல்
என்பும் உருக வுயிரொன்றி
யுடம்பும் ஒன்றாம் எனஇசைந்தார்.
|
65
|
| Go to top |
ஆன நிலைமை கண்டதிருத்
தொண்டர் அளவில் மகிழ்வெய்த
மானச் சேரர் பெருமானார்
தாமும் வன்றொண் டருங்கலந்த
பான்மை நண்பால் சேரமான்
தோழர் என்று பார்பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி
வேந்தர்க் காகி விளங்கியதால்.
|
66
|
ஒருவர் ஒருவ ரிற்கலந்த
வுணர்வால் இன்ப மொழியுரைத்து
மருவ இனியார் பாற்செய்வ
தென்னா மென்னு மகிழ்ச்சியினால்
பருவ மழைச்செங் கைபற்றிக்
கொண்டு பரமர் தாள்பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள்
புகுந்தார் சேர மான்தோழர்.
|
67
|
சென்று தேவா சிரியனைமுன்
இறைஞ்சித் திருமா ளிகைவலங்கொண்டு
ஒன்றும் உள்ளத் தொடும்புகுவார்
உடைய நம்பி முன்னாக
நின்று தொழுது கண்ணருவி
வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே
என்றும் இனிய தம்பெருமான்
பாதம் இறைஞ்சி ஏத்தினார்.
|
68
|
தேவர் முனிவர் வந்திறைஞ்சுந்
தெய்வப் பெருமாள் கழல்வணங்கி
மூவர் தமக்கு முதலாகும்
அவரைத் திருமும் மணிக்கோவை
நாவ லூரர் தம்முன்பு
நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார்
தம்பி ரானார் தாம்கொண்டார்.
|
69
|
அங்கண் அருள்பெற் றெழுவாரைக்
கொண்டு புறம்போந் தாரூரர்
நங்கை பரவை யார்திருமா
ளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கும் நிறைகுடமும்
பூமா லைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த
அணைந்து தாமும் எதிர்கொண்டார்.
|
70
|
| Go to top |
சோதி மணிமா ளிகையின்கண்
சுடரும் பசும்பொற் கால்அமளி
மீது பெருமாள் தமையிருத்தி
நம்பி மேவி யுடனிருப்பக்
கோதில் குணத்துப் பரவையார்
கொழுந னார்க்குந் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து
நிறைபூ சனைகள் முறையளித்தார்.
|
71
|
தாண்டு புரவிச் சேரர்குலப்
பெருமாள் தமக்குத் திருவமுது
தூண்டு சோதி விளக்கனையார்
அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு
விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித் துடன்வந்தார்க்
கெல்லாம் இயல்பின் விருந்தமைத்தார்.
|
72
|
அரசர்க் கமைத்த சிறப்பினும்மேல்
அடியார்க் கேற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பினுடன்
விரும்பும் அமுது சமைத்ததற்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார்
புடைசூழ்ந் தவரோ டமுதுசெயப்
பரவைப் பிறந்த திருவனைய
பரவை யார்வந் தறிவித்தார்.
|
73
|
சேரர் பெருமான் எழுந்தருளி
அமுது செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூங் குழல்மடவாய்
தாழா தமுது செய்வியெனப்
பாரின் மலிசீர் வன்றொண்டர்
அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருக்கரத்தில்
இரண்டு படியா ஏற்றுதலும்.
|
74
|
ஆண்ட நம்பி பெருமாளை
யுடனே யமுது செய்தருள
வேண்டு மென்ன ஆங்கவரும்
விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தடக்கை பிடித்தருளி
மீண்டும் நேரே குறைகொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்
கிசைந்தார் பொறையர்க் கிறையவனார்.
|
75
|
| Go to top |
ஒக்க அமுது செய்தருள
வுயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்
தருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையுந்
தாம்வேண் டியவா றினிதருந்தத்
தொக்க மகிழ்ச்சி களிசிறப்பத்
தூயவிருந்தின் கடன்முடித்தார்.
|
76
|
பனிநீர் விரவு சந்தனத்தின்
பசுங்கர்ப் பூர விரைக்கலவை
வனிதை யவர்கள் சமைத்தெடுப்பக்
கொடுத்து மகிழ்மான் மதச்சாந்தும்
புனித நறும்பூ மாலைகளும்
போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்
இனிய பஞ்ச வாசமுடன்
அடைக்காய் அமுது மேந்தினார்.
|
77
|
ஆய சிறப்பிற் பூசனைகள்
அளித்த வெல்லாம் அமர்ந்தருளித்
தூய நீறு தங்கள்திரு
முடியில் வாங்கித் தொழுதணிந்து
மேய விருப்பி னுடனிருப்பக்
கழறிற் றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை யடைந்தாராய்
நம்பி செம்பொற் கழல்பணிந்தார்.
|
78
|
மலைநாட் டரசர் பெருமானார்
வணங்க வணங்கி எதிர்தழுவிக்
கலைநாட் பெருகு மதிமுகத்துப்
பரவை யார்தங் கணவனார்
சிலைநாட் டியவெல் கொடியாரைச்
சேரத் தந்தார் எனக்கங்கை
அலைநாட் கொன்றை முடிச்சடையார்
அருளே போற்றி யுடனமர்ந்தார்.
|
79
|
செல்வத் திருவா ரூர்மேவும்
செம்பொற் புற்றில் இனிதமர்ந்த
வில்வெற் புடையார் கழல்வணங்கி
வீதி விடங்கப் பெருமானை
மல்லற் பவனி சேவித்து
வாழ்ந்து நாளும் மனமகிழ்ந்து
சொல்வித் தகர்தாம் இருவர்களுந்
தொடர்ந்த காத லுடன்சிறந்தார்.
|
80
|
| Go to top |
இவ்வா றொழுகும் நாளின்கண்
இலங்கு மணிப்பூண் வன்றொண்டர்
மைவாழ் களத்து மறையவனார்
மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத்
திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள்
இறைஞ்ச முறைமை யால்நினைந்தார்.
|
81
|
சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கன்று
மதுரை யால வாயமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பில் வணங்குதற்குச்
சார வெழுந்த குறிப்பாலுந்
தாமும் உடனே செலத்துணிந்தார்.
|
82
|
இருவர் திருவுள் ளமும்இசைந்த
பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கிறைஞ்சி
யுடன்பாட் டருளாற் போந்தருளி
மருவும் உரிமைப் பெருஞ் சுற்றம்
வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டா ரங்கொண்டு
போது வார்கள் உடன்போத.
|
83
|
சேவித் தணையும் பரிசனங்கள்
சூழத் திருவா ரூர்இறைஞ்சிக்
காவிற் பயிலும் புறம்பணையைக்
கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல்வணங்கிப்
போந்து வேலைக் கழிக்கானல்
பூவில் திகழும் பொழில்நாகை
புகுந்து காரோ ணம்பணிந்தார்.
|
84
|
திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச்
சென்று பணிந்து சிந்தையினை
உருக்கார் வச்செந் தமிழ்மாலை
சாத்திச் சிலநாள் உறைந்துபோய்ப்
பெருக்கா றுலவு சடைமுடியார்
இடங்கள் பலவும் பணிந்தேத்தி
அருட்கா ரணர்தந் திருமறைக்கா
டணைந்தார் சேர ராரூரர்.
|
85
|
| Go to top |
முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு
முதல்வர் கோயில் சென்றெய்திச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்
கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்நேர் திறக்க அடைக்கவெனப்
பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய்
நாயன் மாரை நினைந்திறைஞ்சி.
|
86
|
நிறைந்த மறைகள் அர்ச்சித்த
நீடு மறைக்காட் டருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து
போற்றி யாழைப் பழித்தென்னும்
அறைந்த பதிகத் தமிழ்மாலை
நம்பி சாத்த அருட்சேரர்
சிறந்த அந்தா தியிற்சிறப்பித்
தனவே யோதித் திளைத்தெழுந்தார்.
|
87
|
எழுந்து பணிந்து புறத்தெய்தி
இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள்
செழுந்தண் பழனப் பதியதனுள்
அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ்
சழுந்து மிடற்றார் அகத்தியான்
பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர்
கோடிக் கோயில் குறுகினார்.
|
88
|
கோடிக் குழகர் கோயில்அயல்
குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
பரிசும் பதிகத் திடைவைத்தார்.
|
89
|
அங்கு வைகிப் பணிந்தருளால்
போவார் அகன்சோ ணாட்டரனார்
தங்குமிடங்கள் வணங்கிப் போய்ப்
பாண்டி நாடு தனைச்சார்ந்து
திங்கண் முடியார் திருப்புத்தூர்
இறைஞ்சிப் போந்து சேண்விளங்கு
மங்குல் தவழும் மணிமாட
மதுரை மூதூர் வந்தணைந்தார்.
|
90
|
| Go to top |
சேரமான் தோழரும்அச்
சேரர்பிரா னும்பணிப்பூண்
ஆரமார் பரைமதுரை
ஆலவா யினில்வணங்க
வாரமா வந்தணைய
வழுதியார் மனக்காதல்
கூரமா நகர்கோடித்
தெதிர்கொண்டு கொடுபுக்கார்.
|
91
|
தென்னவர்கோன் மகளாரைத்
திருவேட்டு முன்னரே
தொன்மதுரை நகரின்கண்
இனிதிருந்த சோழனார்
அன்னவர்க ளுடன்கூட
அணையஅவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய்
மணிக்கோயில் வந்தணைந்தார்.
|
92
|
திருவால வாய்அமர்ந்த
செஞ்சடையார் கோயில்வலம்
வருவார்முன் வீழ்ந்திறைஞ்சி
வன்றொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றிசைத்துத்
தாழ்ந்தெழுந்து வாழ்ந்ததமிழ்ப்
பெருவாய்மை மலர்புனைந்து
பெருமகிழ்ச்சி பிறங்கினார்.
|
93
|
படியேறு புகழ்ச்சேரர்
பெருமானும் பார்மிசைவீழ்ந்
தடியேனைப் பொருளாக
அளித்ததிரு முகக்கருணை
முடிவுஏதென் றறிந்திலேன்
எனமொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார்
முன்பரவிக் களிகூர்ந்தார்.
|
94
|
செம்பியனா ருடன்செழியர்
தாம்பணிந்து சேரருடன்
நம்பியும்முன் புறத்தணைய
நண்ணியபே ருவகையால்
உம்பர்பிரான் கோயிலினின்
றுடன்கொடுபோ யிருவர்க்கும்
பைம்பொன்மணி மாளிகையிற்
குறைவறுத்தார் பஞ்சவனார்.
|
95
|
| Go to top |
உளம்மகிழக் கும்பிட்டங்
குறையுநாள் உதியருடன்
கிளரொளிப்பூண் வன்றொண்டர்
தாமிருந்த இடங்கெழுமி
வளவனார் மீனவனார்
வளம்பெருக மற்றவரோ
டளவளா வியவிருப்பால்
அமர்ந்துகலந் தினிதிருந்தார்.
|
96
|
அந்நாளில் மதுரைநகர்
மருங்கரனார் அமர்பதிகள்
பொன்னாரம் மணிமார்பிற்
புரவலர்மூ வரும்போதச்
செந்நாவின் முனைப்பாடித்
திருநாடர் சென்றிறைஞ்சிச்
சொன்மாலை களுஞ்சாத்தித்
தொழத்திருப்பூ வணத்தணைவார்.
|
97
|
நீடுதிருப் பூவணத்துக்
கணித்தாக நேர்செல்ல
மாடுவருந் திருத்தொண்டர்
மன்னியஅப் பதிகாட்டத்
தேடுமறைக் கரியாரைத்
திருவுடையார் என்றெடுத்துப்
பாடிசையிற் பூவணமீ
தோவென்று பணிந்தணைவார்.
|
98
|
சென்றுதிருப் பூவணத்துத்
தேவர்பிரான் மகிழ்கோயில்
முன்றில்வலங் கொண்டிறைவர்
முன்வீழ்ந்து பணிந்தெழுந்து
நின்றுபர விப்பாடி
|
99
|
அப்பதியில் அமர்ந்திறைஞ்சிச்
சிலநாளில் ஆரூரர்
முப்பெருவேந் தர்களோடு
முதன்மதுரை நகரெய்தி
மெய்ப்பரிவில் திருவால
வாயுடையார் விரைமலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்தேத்தி
இன்புற்றங் கமர்கின்றார்.
|
100
|
| Go to top |
செஞ்சடையார் திருவாப்ப
னூர்திருவே டகம்முதலாம்
நஞ்சணியுங் கண்டரவர்
நயந்தபதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால்
இனிதிறைஞ்சி மீண்டணைந்து
மஞ்சணையும் மதில்மதுரை
மாநகரின் மகிழ்ந்திருந்தார்.
|
101
|
பரமர்திருப் பரங்குன்றில்
சென்றுபார்த் திபரோடும்
புரமெரித்தார் கோயில்வலங்
கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச்
சிரமலிமா லைச்சடையார்
திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமைநினைந் தஞ்சுதும்என்
றாரூரர் பாடுவார்.
|
102
|
கோத்திட்டை எனஎடுத்துக்
கோதில்திருப் பதிகவிசை
மூர்த்தியார் தமைவணங்கி
முக்கோக்கள் தம்முன்பே
ஏத்தியவண் டமிழ்மாலை
இன்னிசைபா டிப்பரவிச்
சாத்தினார் சங்கரனார்
தங்குதிருப் பரங்குன்றில்.
|
103
|
இறைவர்திருத் தொண்டுபுரி
யருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர்
மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும்
நிருத்தர்பதி தொழநினைந்தார்.
|
104
|
அந்நாட்டுத் திருப்பதிகள்
பலவும்அணைந்து இறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருடன்
நம்பிதாம் எழுந்தருள
மின்னாட்டும் பன்மணிப்பூண்
வேந்தர்இரு வருமீள்வார்
தென்னாட்டு வேண்டுவன
செய்தமைப்பார் தமைவிடுத்தார்.
|
105
|
| Go to top |
இருபெருவேந் தரும்இயல்பின்
மீண்டதற்பின் எழுந்தருளும்
பொருவருஞ்சீர் வன்றொண்டர்
புகழ்ச்சேர ருடன்புனிதர்
மருவியதா னம்பலவும்
பணிந்துபோய் மலைச்சாரல்
குருமணிகள் வெயிலெறிக்கும்
குற்றாலஞ் சென்றடைந்தார்.
|
106
|
குற்றாலத் தினிதமர்ந்த
கூத்தர்குரை கழல்வணங்கிச்
சொல்தாம மலர்புனைந்து
குறும்பலாத் தொழுதிப்பால்
முற்றாவெண் மதிமுடியார்
பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார்மன் னியசெல்வத்
திருநெல்வே லியையணைந்தார்.
|
107
|
நெல்வேலி நீற்றழகர்
தமைப்பணிந்து பாடிநிகழ்
பல்வேறு பதிபிறவும்
பணிந்தன்பால் வந்தணைந்தார்
வில்வேட ராய்வென்றி
விசயன்எதிர் பன்றிப்பின்
செல்வேத முதல்வரமர்
திருவிரா மேச்சரத்து.
|
108
|
மன்னும்இரா மேச்சரத்து
மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத்
திருக்கேதீச் சரஞ்சார்ந்து
சொன்மலர்மா லைகள்சாத்தித்
தூரத்தே தொழுதமர்ந்தார்.
|
109
|
திருஇரா மேச்சரத்துச்
செழும்பவளச் சுடர்க்கொழுந்தைப்
பரிவினால் தொழுதகன்று
பரமர்பதி பிறபணிந்து
பெருவிமா னத்திமையோர்
வணங்குபெருந் திருச்சுழியல்
மருவினார் வன்றொண்டர்
மலைவேந்த ருடன்கூட.
|
110
|
| Go to top |
திருச்சுழியல் இடங்கொண்ட
செம்பொன்மலைச் சிலையாரைக்
கருச்சுழியின் வீழாமைக்
|
111
|
அங்கணரைப் பணிந்துறையும்
ஆரூரர்க் கவ்வூரில்
கங்குலிடைக் கனவின்கண்
காளையாந் திருவடிவால்
செங்கையினிற் பொற்செண்டுந்
திருமுடியிற் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம்
என்புருக முன்காட்டி.
|
112
|
கானப்பேர் யாம்இருப்ப
தெனக்கழறிக் கங்கையெனும்
வானப்பே ராறுலவும்
மாமுடியார் தாம்அகல
ஞானப்பே ராளர்உணர்ந்
ததிசயித்து நாகமுடன்
ஏனப்பே ரெயிறணிந்தார்
அருளிருந்த பரிசென்பார்.
|
113
|
கண்டருளும் படிகழறிற்
|
114
|
காளையார் தமைக்கண்டு
தொழப்பெறுவ தென்றென்று
தாளைநா ளும்பரவத்
தருவார்பாற் சார்கின்றார்
ஆளைநீ ளிடைக்காண
வஞ்சியநீர் நாயயலே
வாளைபாய் நுழைப்பழன
முனைப்பாடி வளநாடர்.
|
115
|
| Go to top |
மன்னுதிருக் கானப்பேர்
வளம்பதியில் வந்தெய்திச்
சென்னிவளர் மதியணிந்தார்
செழுங்கோயில் வலங்கொண்டு
முன்னிறைஞ்சி யுள்ளணைந்து
முதல்வர்சே வடிதாழ்ந்து
பன்னுசெழுந் தமிழ்மாலை
பாடினார் பரவினார்.
|
116
|
ஆராத காதலுட
னப்பதியிற் பணிந்தேத்திச்
சீராருந் திருத்தொண்டர்
சிலநாளங் கமர்ந்தருளிக்
காராரு மலர்ச்சோலைக்
கானப்பேர் கடந்தணைந்தார்
போரானேற் றார்கயிலைப்
பொருப்பர்திருப் புனவாயில்.
|
117
|
புனவாயிற் பதியமர்ந்த
புனிதரா லயம்புக்கு
மனவார்வம் உறச்சித்த
நீநினைஎன் னொடுஎன்று
வினவான தமிழ்பாடி
வீழ்ந்திறைஞ்சி யப்பதியில்
சினவானை யுரித்தணிந்தார்
திருப்பாதந் தொழுதிருந்தார்.
|
118
|
திருப்புனவா யிற்பதியில்
அமர்ந்தசிவ னார்மகிழும்
விருப்புடைய கோயில்பல
பணிந்தருளால் மேவினார்
பொருப்பினொடு கான்அகன்று
புனற்பொன்னி நாடணைந்து
பருப்பதவார் சிலையார்தம்
பாம்பணிமா நகர்தன்னில்.
|
119
|
பாதாளீச் சரமிறைஞ்சி
அதன்மருங்கு பலபதியும்
வேதாதி நாதர்கழல்
வணங்கிமிகு விரைவினுடன்
சூதாருந் துணைமுலையார்
மணிவாய்க்குத் தோற்றிரவு
சேதாம்பல் வாய்திறக்குந்
திருவாரூர் சென்றணைந்தார்.
|
120
|
| Go to top |
திருநாவ லூர்வேந்தர்
|
121
|
வாசமலர்க் கொன்றையார்
மகிழ்கோயில் வலங்கொண்டு
நேசமுற முன்னிறைஞ்சி
நெடும்பொழுதெ லாம்பரவி
ஏசறவால் திருப்பதிகம்
எடுத்தேத்தி எழுந்தருளால்
பாசவினைத் தொடக்கறுப்பார்
பயில்கோயில் பணிந்தணைவார்.
|
122
|
பரவையார் மாளிகையில்
பரிசனங்கள் முன்னெய்த
விரவுபே ரலங்கார
விழுச்செல்வம் மிகப்பெருக
வரவெதிர்கொண் டடிவணங்க
வன்றொண்டர் மலைநாட்டுப்
புரவலனா ரையுங்கொண்டு
பொன்னணிமா ளிகைபுகுந்தார்.
|
123
|
பரவியே பரவையார்
பரிவுடனே பணிந்தேத்தி
விரவியபோ னகங்கறிகள்
விதம்பலவா கச்சமைத்துப்
பரிகலமும் பாவாடை
பகல்விளக்கும் உடனமைத்துத்
திருவமுது செய்வித்தார்
திருந்தியதேன் மொழியினார்.
|
124
|
மங்கலமாம் பூசனைகள்
பரவையார் செயமகிழ்ந்து
தங்கியினி தமர்கின்றார்
தம்பிரான் கோயிலினுள்
பொங்குபெருங் காலமெலாம்
புக்கிறைஞ்சிப் புறத்தணைந்து
நங்கள்பிரா னருள்மறவா
நல்விளையாட் டினைநயந்தார்.
|
125
|
| Go to top |
நிலைச்செண்டும் பரிச்செண்டும்
வீசிமிக மகிழ்வெய்தி
விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல்
கண்டருளி வென்றிபெற
மலைக்கு நெடு முட்கணைக்கால்
வாரணப்போர் மகிழ்ந்தருளி
அலைக்குமறப் பலபுள்ளின்
அமர்விரும்பி யமர்கின்றார்.
|
126
|
விரவு காதல் மீக்கூர
மேவு நாள்கள் பலசெல்லக்
கரவில் ஈகைக் கேரளனார்
தங்கள் கடல்சூழ் மலைநாட்டுப்
பரவை யார்தங் கொழுநனார்
தம்மைப் பனிந்து கொண்டணைவான்
இரவும் பகலுந் தொழுதிரக்க
இசைந்தார் அவரும் எழுந்தருள.
|
127
|
நங்கை பரவை யார்உள்ளத்
திசைவால் நம்பி யெழுந்தருளத்
திங்கள் முடியார் திருவருளைப்
பரவிச் சேர மான்பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்
கேற்ற பூசை செய்தருளிப்
பொங்கு முயற்சி இருவரும்போய்ப்
புக்கார் புனிதர் பூங்கோயில்.
|
128
|
தம்பி ரானைத் தொழுதருளால்
போந்து தொண்டர் சார்ந்தணைய
நம்பி யாரூ ரருஞ்சேரர்
நன்னாட் டரச னாராகும்
பைம்பொன் மணிநீண் முடிக்கழறிற்
றறிவார் தாமும் பயணமுடன்
செம்பொன் நீடு மதிலாரூர்
தொழுது மேல்பாற் செல்கின்றார்.
|
129
|
பொன்பரப்பி மணிவரன்றிப்
புனல்பரக்குங் காவேரித்
தென்கரைபோய்ச் சிவன்மகிழ்ந்த
கோயில்பல சென்றிறைஞ்சி
மின்பரப்புஞ் சடையண்ணல்
விரும்புதிருக் கண்டியூர்
அன்புருக்குஞ் சிந்தையுடன்
பணிந்துபுறத் தணைந்தார்கள்.
|
130
|
| Go to top |
வடகரையில் திருவையா
றெதிர்தோன்ற மலர்க்கரங்கள்
உடலுருக வுள்ளுருக
வுச்சியின்மேற் குவித்தருளிக்
கடல்பரந்த தெனப்பெருகுங்
காவிரியைக் கடந்தேறித்
தொடர்வுடைய திருவடியைத்
தொழுவதற்கு நினைவுற்றார்.
|
131
|
ஐயா றதனைக் கண்டுதொழு
தருளா ரூரர் தமைநோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான்
பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவுதிரு
வையா றிறைஞ்ச மனமுருகி
நையா நின்ற திவ்வாறு
கடந்து பணிவோம் நாமென்ன.
|
132
|
ஆறு பெருகி இருகரையும்
பொருது விசும்பில் எழுவதுபோல்
வேறு நாவாய் ஓடங்கள்
மீது செல்லா வகைமிகைப்ப
நீறு விளங்குந் திருமேனி
நிருத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார்
தரியா தழைத்துப் பாடுவார்.
|
133
|
பரவும் பரிசொன் றெடுத்தருளிப்
பாடுந் திருப்பாட் டின்முடிவில்
அரவம் புனைவார் தமைஐயா
றுடைய வடிக ளோவென்று
விரவும் வேட்கை யுடனழைத்து
விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவு மிசையில் வன்றொண்டர்
நின்று தொழுது பாடுதலும்.
|
134
|
மன்றில் நிறைந்து நடமாட
வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடையுண் டெதிரழைக்கக்
கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்று முணர்வால் சராசரங்கள்
எல்லாங் கேட்க வோலமென
நின்று மொழிந்தார் பொன்னிமா
நதியு நீங்கி நெறிகாட்ட.
|
135
|
| Go to top |
விண்ணின் முட்டும் பெருக்காறு
மேல்பாற் பளிக்கு வெற்பென்ன
நண்ணி நிற்கக் கீழ்பால்நீர்
வடிந்த நடுவு நல்லவழி
பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக்
கண்ட தொண்டர் பயில்மாரி
கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகங்
கலக்கக் கைஅஞ் சலிகுவித்தார்.
|
136
|
நம்பி பாதஞ் சேரமான்
பெருமாள் பணிய நாவலூர்ச்
செம்பொன் முந்நூன் மணிமார்பர்
சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்களித்த
தன்றோ என்ன வுடன்மகிழ்ந்து
தம்பி ரானைப் போற்றிசைத்துத்
தடங்கா வேரி நடுவணைந்தார்.
|
137
|
செஞ்சொல் தமிழ்நா வலர்கோனும்
சேரர் பிரானும் தம்பெருமான்
எஞ்ச லில்லா நிறைஆற்றின்
இடையே யளித்த மணல்வழியில்
தஞ்ச முடைய பரிசனமும்
தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதிவா ணரைப்பணிந்து
விழுந்தார் எழுந்தார் பரவினார்.
|
138
|
அங்கண் அரனார் கருணையினை
ஆற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித்
தங்கள் பெருமான் திருவருளால்
தாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப்
பொங்கு நதியின் முன்வந்த
படியே நடுவு போந்தேறத்
துங்க வரைபோல் நின்றநீர்
துரந்து தொடரப் பெருகியதால்.
|
139
|
ஆய செயலின் அதிசயத்தைக்
கண்டக் கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள்போற்றி
வீழ்ந்து தாழ்ந்து மேல்பாற்போய்த்
தூய மதிவாழ்சடையார்தம்
பதிகள் பிறவுந் தொழுதேத்திச்
சேய கொங்கர் நாடணைந்தார்
திருவா ரூரர் சேரருடன்.
|
140
|
| Go to top |
கொங்கு நாடு கடந்துபோய்க்
குலவு மலைநாட் டெல்லையுற
நங்கள் பெருமான் தோழனார்
நம்பி தம்பி ரான்தோழர்
அங்க ணுடனே யணையவெழுந்து
அருளா நின்றார் எனும்விருப்பால்
எங்கும் அந்நாட் டுள்ளவர்கள்
எல்லாம் எதிர்கொண் டின்புறுவார்.
|
141
|
பதிகள் எங்குந் தோரணங்கள்
பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்குங் குளிர்பந்தர்
மனைகள் எங்கும் அகிற்புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப்பிறங்கல்
ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள் எங்கும் முழவினொலி
நிலங்கள் எங்கும் பொலஞ்சுடர்ப்பூ.
|
142
|
திசைகள் தோறும் வரும்பெருமை
அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசைகொள் வாசி நிரைவெள்ளங்
கும்ப யானை யணிவெள்ளம்
மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்
மேவுஞ் சோற்று வெள்ளங்கண்
டசைவி லின்பப் பெருவெள்ளத்
தமர்ந்து கொடுங்கோ ளூர்அணைந்தார்.
|
143
|
கொடுங்கோ ளூரின் மதில்வாயில்
அணிகோ டித்து மறுகில்உடுத்
தொடுங்கோ புரங்கள் மாளிகைகள்
சூளி குளிர்சா லைகள்தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடரங்கு
நிரந்த மணித்தா மங்கமுகு
விடுங்கோ தைப்பூந் தாமங்கள்
நிரைத்து வெவ்வே றலங்கரித்து.
|
144
|
நகர மாந்தர் எதிர்கொள்ள
நண்ணி எண்ணில் அரங்குதொறும்
மகரக் குழைமா தர்கள்பாடி
ஆட மணிவீ தியிலணைவார்
சிகர நெடுமா ளிகையணையார்
சென்று திருவஞ் சைக்களத்து
நிகரில் தொண்டர் தமைக்கொண்டு
புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.
|
145
|
| Go to top |
இறைவர் கோயில் மணிமுன்றில்
வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையுங் காத லுடன்வீழ்ந்து
பணிந்து நேர்நின் றாரூரர்
முறையில் விளம்புந் திருப்பதிகம்
முடிப்பது கங்கை யென்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப்
பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.
|
146
|
தொழுது திளைத்துப் புறம்போந்து
தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியைமுன்
பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சா மரைவீசிப்
பைம்பொன் மணிமா ளிகையில்வரும்
பொழுது மறுகில் இருபுடையும்
மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.
|
147
|
நல்ல தோழர் நம்பெருமாள்
தமக்கு நம்பி இவரென்பார்
எல்லை யில்லாத் தவம்முன்பென்
செய்தோம் இவரைத் தொழவென்பார்
செல்வம் இனியென் பெறுவது நம்
சிலம்பு நாட்டுக் கெனவுரைப்பார்
சொல்லுந் தரமோ பெருமாள்செய்
தொழிலைப் பாரீ ர் எனத்தொழுவார்.
|
148
|
பூவும் பொரியும் பொற்றுகளும்
பொழிந்து பணிவார் பொருவில்இவர்
மேவும் பொன்னித் திருநாடே
புவிக்குத் திலதம் எனவியப்பார்
பாவுந் துதிகள் எம்மருங்கும்
பயில வந்து மாளிகையின்
மாவுங் களிறும் நெருங்குமணி
வாயில் புகுந்து மருங்கிழிந்தார்.
|
149
|
கழறிற் றறியுந் திருவடியும்
கலைநா வலர்தம் பெருமானாம்
முழவிற் பொலியுந் திருநெடுந்தோள்
முனைவர் தம்மை யுடன்கொண்டு
விழவிற் பொலியும் மாளிகையில்
விளங்கு சிங்கா சனத்தின்மிசை
நிழல்திக் கொளிரும் பூணாரை
இருத்தித் தாமும் நேர்நின்று.
|
150
|
| Go to top |
செம்பொற் கரக வாசநீர்
தேவி மார்கள் எடுத்தேந்த
அம்பொற் பாதந் தாம்விளக்கி
யருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கியிது
தகாதென் றருளத் தரணியில்வீழ்ந்
தெம்பெற் றிமையாற் செய்தனஈங்
கெல்லாம் இசைய வேண்டுமென.
|
151
|
பெருமாள் வேண்ட எதிர்மறுக்க
மாட்டார் அன்பின் பெருந்தகையார்
திருமா நெடுந்தோள் உதியர்பிரான்
செய்த வெல்லாங் கண்டிருந்தார்
அருமா னங்கொள் பூசனைகள்
அடைவே எல்லாம் அளித்ததற்பின்
ஒருமா மதிவெண் குடைவேந்த
ருடனே அமுது செய்துவந்தார்.
|
152
|
சேர ருடனே திருவமுது
செய்த பின்பு கைகோட்டி
ஆரம் நறுமென் கலவைமான்
மதச்சாந் தாடை யணிமணிப்பூண்
ஈர விரைமென் மலர்ப்பணிகள்
இனைய முதலா யினவருக்கம்
சார வெடுத்து வன்தொண்டர்ச்
சாத்தி மிக்க தமக்காக்கி.
|
153
|
பாடல் ஆட ல் இன்னியங்கள்
பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள்
நெருங்கு காலந் தொறும்நிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செய்
ஆரா மங்கள் வைகுவித்ததுக்
கூட முனைப்பா டியர்கோவைக்
கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.
|
154
|
செண்டாடும் தொழின்மகிழ்வும்
சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்
வண்டாடும் மலர்வாவி
மருவியநீர் விளையாட்டும்
தண்டாமும் மதகும்பத்
தடமலைப்போர் சலமற்போர்
கண்டாரா விருப்பெய்தக்
காவலனார் காதல்செய்நாள்.
|
155
|
| Go to top |
நாவலர்தம் பெருமானும்
திருவாரூர் நகராளும்
தேவர்பிரான் கழல்ஒருநாள்
மிகநினைந்த சிந்தையராய்
ஆவியைஆ ரூரானை
மறக்கலுமா மேஎன்னும்
மேவியசொல் திருப்பதிகம்
பாடியே வெருவுற்றார்.
|
156
|
திருவாரூர் தனைநினைந்து
சென்றுதொழு வேன்என்று
மருவுஆர்வத் தொண்டருடன்
வழிக்கொண்டு செல்பொழுதில்
ஒருவாநண் புள்ளுருக
வுடனெழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார்
பிரிவாற்றார் பின்செல்வார்.
|
157
|
வன்றொண்டர் முன்எய்தி
மனமழிந்த வுணர்வினராய்
இன்றுமது பிரிவாற்றேன்
என்செய்கேன் யான்என்ன
ஒன்றும்நீர் வருந்தாதே
யுமதுபதி யின்கணிருந்
தன்றினார் முனைமுருக்கி
அரசாளும் எனமொழிந்தார்.
|
158
|
ஆரூரர் மொழிந்தருள
அதுகேட்ட அருட்சேரர்
பாரோடு விசும்பாட்சி
எனக்குமது பாதமலர்
தேரூரும் நெடுவீதித்
திருவாரூர்க் கெழுந்தருள
நேரூரு மனக்காதல்
நீக்கவும்அஞ் சுவன்என்றார்.
|
159
|
மன்னவனார் அதுமொழிய
வன்றொண்டர் எதிர்மொழிவார்
என்னுயிருக் கின்னுயிராம்
எழிலாரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன்
மறந்திரேன் மதியணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர்
நீரிருப்பீர் எனவிறைஞ்ச.
|
160
|
| Go to top |
மற்றவரும் பணிந்திசைந்தே
மந்திரிகள் தமையழைத்துப்
பொற்புநிறை தொன்னகரில்
இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும்பண் டாரநா
னாவருக்க மானவெலாம்
பற்பலவாம் ஆளின்மிசை
ஏற்றிவரப் பண்ணும்என.
|
161
|
ஆங்கவரும் அன்றுவரை
ஆயமா கியதனங்கள்
ஓங்கியபொன் நவமணிகள்
ஒளிர்மணிப்பூண் துகில்வருக்கம்
ஞாங்கர்நிறை விரையுறுப்பு
வருக்கமுதல் நலஞ்சிறப்பத்
தாங்குபொதி வினைஞர்மேல்
தலம்மலியக் கொண்டணைந்தார்.
|
162
|
மற்றவற்றின் பரப்பெல்லாம்
வன்றொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவிட்டு
முனைப்பாடித் திருநாடர்
பொற்பதங்கள் பணிந்தவரைத்
தொழுதெடுத்துப் புனையலங்கல்
வெற்பியர்தோ ளுறத்தழுவி
விடையளித்தார் வன்றொண்டர்.
|
163
|
ஆரூரர் அவர்தமக்கு
விடையருளி அங்ககன்று
காரூரும் மலைநாடு
கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு
நெடுங்கானும் பலகழியச்
சீரூருந் திருமுருகன்
பூண்டிவழிச் செல்கின்றார்.
|
164
|
திருமுருகன் பூண்டிஅயல்
செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள
ஒண்ணாமைக் கதுவாங்கி
பெருகருளால் தாங்கொடுக்கப்
பெறுவதற்கோ அதுஅறியோம்.
|
165
|
| Go to top |
வென்றிமிகு பூதங்கள்
வேடர்வடி வாய்ச்சென்று
வன்றொண்டர் பண்டாரங்
கவரஅருள் வைத்தருள
அன்றினார் புரமெரித்தார்
அருளால்வேட் டுவப்படையாய்ச்
சென்றவர்தாம் வரும்வழியில்
இருபாலும் செயிர்த்தெழுந்து.
|
166
|
வில்வாங்கி அலகம்பு
விசைநாணில் சந்தித்துக்
கொல்வோம்இங் கிட்டுப்போம்
எனக்கோபத் தாற்குத்தி
எல்லையில்பண் டாரமெலாங்
கவர்ந்துகொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார்
ஆரூரர் மருங்கணைந்தார்.
|
167
|
ஆரூரர் தம்பால்அவ்
வேடுவர்சென் றணையாதே
நீரூருஞ் செஞ்சடையார்
அருளினால் நீங்கஅவர்
சேர்ஊராந் திருமுருகன்
பூண்டியினிற் சென்றெய்திப்
போரூரும் மழவிடையார்
கோயிலைநா டிப்புக்கார்.
|
168
|
அங்கணர்தங் கோயிலினை
அஞ்சலிகூப் பித்தொழுது
மங்குலுற நீண்டதிரு
வாயிலினை வந்திறைஞ்சிப்
பொங்குவிருப் புடன்புக்கு
வலங்கொண்டு புனிதநதி
திங்கள்முடிக் கணிந்தவர்தந்
திருமுன்பு சென்றணைந்தார்.
|
169
|
உருகியஅன் பொடுகைகள்
குவித்துவிழுந் துமைபாகம்
மருவியதம் பெருமான்முன்
வன்றொண்டர் பாடினார்
வெருவுறவே டுவர்பறிக்கும்
வெஞ்சுரத்தில் எத்துக்கிங்
கருகிருந்தீர் எனக்கொடுகு
வெஞ்சிலையஞ் சொற்பதிகம்.
|
170
|
| Go to top |
பாடியவர் பரவுதலும்
பரம்பொருளாம் அவரருளால்
வேடுவர் தாம் பறித்தபொரு
ளவையெல்லாம் விண்ணெருங்க
நீடுதிரு வாயிலின்முன்
குவித்திடலும் நேரிறைஞ்சி
ஆடுமவர் திருவருளால்
அப்படியே கைக்கொண்டார்.
|
171
|
கைக்கொண்டு கொடுபோம்அக்
கைவினைஞர் தமையேவி
மைக்கொண்ட மிடற்றாரை
வணங்கிப்போய்க் கொங்ககன்று
மெய்க்கொண்ட காதலினால்
விரைந்தேகி மென்கரும்பும்
செய்க்கொண்ட சாலியுஞ்சூழ்
திருவாரூர் சென்றணைந்தார்.
|
172
|
நாவலர்மன் னவர்அருளால்
விடைகொண்ட நரபதியார்
ஆவியின்ஒன் றாநண்பின்
ஆரூரர் தமைநினைந்து
மாவலரு மலர்ச்சோலை
மகோதையினின் மன்னிமலைப்
பூவலயம் பொதுநீக்கி
அரசுரிமை புரிந்திருந்தார்.
|
173
|
இந்நிலைமை யுதியர்பிரான்
எம்பிரான் வன்றொண்டர்
பொன்னிவள நாடகன்று
மகோதையினின் மேற்புகுந்து
மன்னுதிருக் கயிலையினின்
மதவரைமேல் எழுந்தருள
முன்னர்வயப் பரியுகைக்குந்
திருத்தொழில்பின் மொழிகின்றாம்.
|
174
|
மலைமலிந்த திருநாட்டு
மன்னவனார் மாகடல்போல்
சிலைமலிந்த கொடித்தானைச்
சேரலனார் கழல்போற்றி
நிலைமலிந்த மணிமாட
நீண்மறுகு நான்மறைசூழ்
கலைமலிந்த புகழ்க்காழிக்
கணநாதர் திறமுரைப்பாம்.
|
175
|
| Go to top |