சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.360   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

உருநாட்டும் செயல்காமன்
ஒழியவிழி பொழிசெந்தீ
வருநாட்டத் திருநுதலார்
மகிழ்ந்தருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர்தங்
களிகாட்டுங் காவேரித்
திருநாட்டு வளங்காட்டுஞ்
செங்காட்டங் குடியாகும்.
1

நிலவியஅத் திருப்பதியில்
நெடுஞ்சடையார் நீற்றடைவால்
உலகில்வள ருயிர்க்கெல்லாம்
உயர்காவல் தொழில்பூண்டு
மலர்புகழ்மா மாத்திரர்தங்
குலம்பெருக வந்துள்ளார்
பலர்புகழுந் திருநாமம்
பரஞ்சோதி யாரென்பார்.
2

ஆயுள்வே தக்கலையும்
அலகில்வட நூற்கலையும்
தூயபடைக் கலத்தொழிலும்
துறைநிரம்பப் பயின்றுள்ளார்
பாயுமதக் குஞ்சரமும்
பரியுமுகைக் கும்பண்பு
மேயதொழில் விஞ்சையினும்
மேதினியில் மேலானார்.
3

உள்ளநிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன்கழலிற் செறிவென்றே
கொள்ளும்உணர் வினின்முன்னே
கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாய்என்றும்
பயின்றுவரும் பண்புடையார்.
4

ஈசன்அடி யார்க்கென்றும்
இயல்பான பணிசெய்தே
ஆசில்புகழ் மன்னவன்பால்
அணுக்கராய் அவற்காகப்
பூசல்முனைக் களிறுகைத்துப்
போர்வென்று பொருமரசர்
தேசங்கள் பலகொண்டு
தேர்வேந்தன் பாற்சிறந்தார்.
5
Go to top

மன்னவற்குத் தண்டுபோய்
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே
இகலரசன் முன்கொணர்ந்தார்.
6

கதிர்முடிமன் னனுமிவர்தங்
களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப
அறிந்தவமைச் சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு
வாய்த்தவலி யுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகி
லில்லையென வெடுத்துரைத்தார்.
7

தம்பெருமான் திருத்தொண்டர்
எனக்கேட்ட தார்வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை
உணராதே கெட்டொழிந்தேன்
வெம்புகொடும் போர்முனையில்
விட்டிருந்தேன் எனவெருவுற்று
எம்பெருமான் இதுபொறுக்க
வேண்டுமென இறைஞ்சினான்.
8

இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி
என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ
தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்தநிதிக் குவைகளுடன்
நீடுவிருத் திகளளித்தே
அறம்புரிசெங் கோலரசன்
அஞ்சலிசெய் துரைக்கின்றான்.
9

உம்முடைய நிலைமையினை
அறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக்கருத்துக்
கினிதாக விசைந்துஉமது

மெய்ம்மைபுரி செயல்விளங்க வேண்டியவா றேசரித்துச்
செம்மைநெறித் திருத்தொண்டு
செய்யுமென விடைகொடுத்தான்.
10
Go to top

மன்னவனை விடைகொண்டு
தம்பதியில் வந்தடைந்து
பன்னுபுகழ்ப் பரஞ்சோதி
யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச்
சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமை யில்வழுவா
முறையன்பிற் செய்கின்றார்.
11

வேதகா ரணர்அடியார்
வேண்டியமெய்ப் பணிசெய்யத்
தீதில்குடிப் பிறந்ததிரு
வெண்காட்டு நங்கையெனும்
காதன்மனைக் கிழத்தியார்
கருத்தொன்ற வரும்பெருமை
நீதிமனை யறம்புரியும்
நீர்மையினில் நிலைநிற்பார்.
12

நறையிதழித் திருமுடியார்
அடியாரை நாள்தோறும்
முறைமையினில் திருவமுது
முன்னூட்டிப் பின்னுண்ணும்
நிறையுடைய பெருவிருப்பால்
நியதியா கக்கொள்ளும்
துறைவழுவா வகையொழுகுந்
தூயதொழில் தலைநின்றார்.
13

தூயதிரு வமுதுகனி
கன்னல்அறு சுவைக்கறிநெய்
பாயதயிர் பால்இனிய
பண்ணியம்முண் ணீரமுதம்
மேயபடி யாலமுது
செய்விக்க இசைந்தடியார்
மாயிருஞா லம்போற்ற
வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.
14

சீதமதி அரவினுடன்
செஞ்சடைமேற் செறிவித்த
நாதன்அடி யார்தம்மை
நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர்முன்பு
மிகச்சிறிய ராய்அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர்
எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.
15
Go to top

கண்ணுதலார் கணபதீச்
சரத்தின்கண் கருத்தமர
உண்ணிறைஅன் பினிற்பணிசெய்
தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியார்
இடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுடன்
நயந்துறையும் நாளின்கண்.
16

நீராருஞ் சடைமுடியார்
அருளினால் நிறைதவத்துப்
பேராளர் அவர்தமக்குப்
பெருகுதிரு மனையறத்தின்
வேராகி விளங்குதிரு
வெண்காட்டு நங்கைபால்
சீராள தேவரெனும்
திருமைந்தர் அவதரித்தார்.
17

அருமையினில் தனிப்புதல்வர்
பிறந்தபொழு தலங்கரித்த
பெருமையினிற் கிளைகளிப்ப
பெறற்கரிய மணிபெற்று
வருமகிழ்ச்சி தாதையார்
மனத்தடங்கா வகைவளரத்
திருமலிநெய் யாடல்விழாச்
செங்காட்டங் குடியெடுப்ப.
18

மங்கலநல் லியம்முழக்கம்
மறைமுழக்கம் வானளப்ப
அங்கணர்தஞ் சீரடியார்க்
களவிறந்த நிதியளித்துத்
தங்கள்மர பினில்உரிமைச்
சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன்
புரிந்துகாப் பணிபுனைந்தார்.
19

ஆர்வநிறை பெருஞ்சுற்றம்
அகம்மலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன்
பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர்
திருமகனார் சீரடியில்
தார்வளர்கிண் கிணியசையத்
தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.
20
Go to top

சுருளுமயிர் நுதற்சுட்டி
துணைக்காதின் மணிக்குதம்பை
மருவுதிருக் கண்டநாண்
மார்பினில்ஐம் படைகையில்
பொருவில்வயி ரச்சரிகள்
பொன்னரைஞாண் புனைசதங்கை
தெருவிலொளி விளங்கவளர்
திருவிளையாட் டினிலமர்ந்தார்.
21

வந்துவளர் மூவாண்டில்
மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த
தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில்
செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப்
பள்ளியினில் இருத்தினார்.
22

அந்நாளில் சண்பைநகர்
ஆண்டகையார் எழுந்தருள
முன்னாக எதிர்கொண்டு
கொடுபுகுந்து முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர்
புகலிகா வலனார்தம்
நன்னாமச் சேவடிகள்
போற்றிசைத்து நலஞ்சிறந்தார்.
23

சண்பையர்தம் பெருமானும்
தாங்கரிய பெருங்காதல்
பண்புடைய சிறுத்தொண்ட
ருடன்பயின்று மற்றவரை
மண்பரவுந் திருப்பதிகத்
தினில்வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்தருளத்
தாமினிது நயப்புற்றார்.
24

இத்தன்மை நிகழுநாள்
இவர்திருத்தொண் டிருங்கயிலை
அத்தர்திரு வடியிணைக்கீழ்ச்
சென்றணைய அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந்
தருளுதற்கு விடையவர்தாம்
சித்தமகிழ் வயிரவராய்த்
திருமலைநின் றணைகின்றார்.
25
Go to top

மடல்கொண்ட மலரிதழி
நெடுஞ்சடையை வனப்பெய்தக்
கடல்மண்டி முகந்தெழுந்த
காளமேகச் சுருள்போல்
தொடர்பங்கி சுருண்டிருண்டு
தூறிநெறித் தசைந்துசெறி
படர்துஞ்சின் கருங்குஞ்சி
கொந்தளமா கப்பரப்பி.
26

அஞ்சனம்மஞ் சனஞ்செய்த
தனையவணி கிளர்பம்பை
மஞ்சினிடை யிடையெழுந்த
வானமீன் பரப்பென்னப்
புஞ்சநிரை வண்டுதேன்
சுரும்புபுடை படர்ந்தார்ப்பத்
துஞ்சினுனித் தனிப்பரப்புந்
தும்பைநறு மலர்தோன்ற.
27

அருகுதிரு முடிச்செருகும்
அந்தியிளம் பிறைதன்னைப்
பெருகுசிறு மதியாக்கிப்
பெயர்த்துச்சாத் தியதென்ன
விரிசுடர்ச்செம் பவளவொளி
வெயில்விரிக்கும் விளங்குசுடர்த்
திருநுதல்மேல் திருநீற்றுத்
தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க.
28

வெவ்வருக்கன் மண்டலமும்
விளங்குமதி மண்டலமும்
அவ்வனற்செய் மண்டலமும்
உடன்அணைந்த தெனவழகை
வவ்வுதிருக் காதின்மணிக்
குழைச்சங்கு வளைத்ததனுள்
செவ்வரத்த மலர்செறித்த
திருத்தோடு புடைசிறக்க.
29

களங்கொள்விடம் மறைத்தருளக்
கடலமுதக் குமிழிநிரைத்
துளங்கொளிவெண் திரள்கோவைத்
தூயவடம் அணிந்ததென
உளங்கொள்பவர் கரைந்துடலும்
உயிரும்உரு கப்பெருக
விளங்குதிருக் கழுத்தினிடை
வெண்பளிங்கின் வடந்திகழ.
30
Go to top

செம்பரிதி கடலளித்த
செக்கரொளி யினைஅந்திப்
பம்புமிருள் செறிபொழுது
படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை
கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக்
கஞ்சுகத்தின் அணிவிளங்க.
31

மிக்கெழும்அன் பர்கள்அன்பு
திருமேனி விளைந்ததென
அக்குமணி யாற்சன்ன
வீரமும்ஆ ரமும்வடமும்
கைக்கணிதோள் வளைச்சரியும்
அரைக்கடிசூத் திரச்சரியும்
தக்கதிருக் காற்சரியுஞ்
சாத்தியவொண் சுடர்தயங்க.
32

பொருவில்திருத் தொண்டர்க்குப்
புவிமேல்வந் தருள்புரியும்
பெருகருளின் திறங்கண்டு
பிரானருளே பேணுவீர்
வரும்அன்பின் வழிநிற்பீர்
எனமறைபூண் டறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு
திசைமுழுதுஞ் செலவொலிப்ப.
33

அயன்கபா லந்தரித்த
விடத்திருக்கை யாலணைத்த
வயங்கொளிமூ விலைச்சூல
மணித்திருத்தோள் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத்
தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன்தவத்தாற் பெறும்புவியும்
பாததா மரைசூட.
34

அருள்பொழியுந் திருமுகத்தில்
அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும்
வடிச்சூலம் வெயிலெறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு
தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச்
செங்காட்டங் குடிசேர்ந்தார்.
35
Go to top

தண்டாத தொருவேட்கைப்
பசியுடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத்தொண்டர்
மனைவினவிக் கடிதணைந்து
தொண்டானார்க் கெந்நாளும்
சோறளிக்குந் திருத்தொண்டர்
வண்டார்பூந் தாரார்இம்
மனைக்குள்ளா ரோவென்ன.
36

வந்தணைந்து வினவுவார்
மாதவரே யாம்என்று
சந்தனமாந் தையலார்
முன்வந்து தாள்வணங்கி
அந்தமில்சீ ரடியாரைத்
தேடியவர் புறத்தணைந்தார்
எந்தமையா ளுடையவரே
அகத்துள்எழுந் தருளுமென.
37

மடவரலை முகநோக்கி
மாதரார் தாம்இருந்த
இடவகையில் தனிபுகுதோம்
என்றருள அதுகேட்டு
விடவகல்வார் போலிருந்தார்
எனவெருவி விரைந்துமனைக்
கடனுடைய திருவெண்காட்
டம்மைகடைத் தலையெய்தி.
38

அம்பலவ ரடியாரை
யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமான் யாவரையுங்
கண்டிலர்தே டிப்போனார்
வம்பெனநீ ரெழுந்தருளி
வருந்திருவே டங்கண்டால்
தம்பெரிய பேறென்றே
மிகமகிழ்வர் இனித்தாழார்.
39

இப்பொழுதே வந்தணைவர்
எழுந்தருளி யிரும்என்ன
ஒப்பின் மனை யறம்புரப்பீர்
உத்தரா பதியுள்ளோம்
செப்பருஞ்சீர்ச் சிறுத்தொண்டர்
தமைக்காணச் சேர்ந்தனம்யாம்
எப்பரிசும் அவரொழிய
இங்கிரோம் என்றருளி.
40
Go to top

கண்ணுதலிற் காட்டாதார்
கணபதீச் சரத்தின்கண்
வண்ணமலர் ஆத்தியின்கீழ்
இருக்கின்றோம் மற்றவர் தாம்
நண்ணினால் நாமிருந்த
பரிசுரைப்பீர் என்றருளி
அண்ணலார் திருவாத்தி
யணைந்தருளி அமர்ந்திருந்தார்.
41

நீரார் சடையான் அடியாரை
நேடி யெங்குங் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர்
மீண்டுஞ் செல்வ மனையெய்தி
ஆரா அன்பின் மனைவியார்க்கு
இயம்பி அழிவெய் திடஅவரும்
பார்ஆ தரிக்குந் திருவேடத்
தொருவர் வந்த படிபகர்ந்தார்.
42

அடியேன் உய்ந்தேன் எங்குற்றார்
உரையா யென்ன அவர்மொழிவார்
வடிசேர் சூல கபாலத்தர்
வடதே சத்தோம் என்றார்வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்யாம்
சொல்ல இங்கும் இராதேபோய்க்
கடிசேர் திருவாத் தியினிழற்கீழ்
இருந்தார் கணப தீச்சரத்து.
43

என்று மனைவி யார்இயம்ப
எழுந்த விருப்பால் விரைந்தெய்திச்
சென்று கண்டு திருப்பாதம்
பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமைநோக்கி
நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்தருள
இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்.
44

பூதி யணிசா தனத்தவர்முன்
போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால்
அருளிச் செய்வர் நானென்று
கோதில் அன்பர் தமையமுது
செய்விப் பதற்குக் குலப்பதியில்
காத லாலே தேடியுமுன்
காணேன் தவத்தால் உமைக்கண்டேன்.
45
Go to top

அடியேன் மனையில் எழுந்தருளி
அமுதுசெய்ய வேண்டுமென
நெடியோ னறியா வடியார்தாம்
நிகழுந் தவத்தீர் உமைக்காணும்
படியால் வந்தோம் உத்தரா
பதியோம் எம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி
தொண்ணா தென்று மொழிந்தருள.
46

எண்ணா தடியேன் மொழியேன்நீர்
அமுது செய்யும் இயல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீர்
அருளிச் செய்யுங் கடிதமைக்கத்
தண்ணார் இதழி முடியார்தம்
அடியார் தலைப்பட் டால்தேட
ஒண்ணா தனவும் உளவாகும்
அருமை யில்லை யெனவுரைத்தார்.
47

அரிய தில்லை எனக் கேட்ட
பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிர வக்கோலப்
பிரானார் அருளிச் செய்வார்யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது
கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப
துரிய நாளு மதற்கின்றால்
ஊட்ட அரிதாம் உமக்கென்றார்.
48

சால நன்று முந்நிரையும்
உடையேன் தாழ்விங் கெனக்கில்லை
ஆலம் உண்டா ரன்பர்உமக்
கமுதாம் பசுத்தான் இன்னதென
ஏல வருளிச் செயப்பெற்றால்
யான்போய் அமுது கடிதமைத்துக்
காலந் தப்பா மேவருவேன்
என்று மொழிந்து கைதொழுதார்.
49

பண்பு மிக்க சிறுத்தொண்டர்
பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம்உண்ணப்
படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்ப தஞ்சு பிராயத்தில்
உறுப்பின் மறுவின் றேல்இன்னம்
புண்செய் நோவில் வேலெறிந்தாற்
போலும் புகல்வ தொன்றென்றார்.
50
Go to top

யாதும் அரிய தில்லைஇனி
ஈண்ட அருளிச் செய்யுமென
நாதன் தானும் ஒருகுடிக்கு
நல்ல சிறுவன் ஒருமகனைத்
தாதை அரியத் தாய்பிடிக்கும்
பொழுது தம்மில் மனமுவந்தே
ஏத மின்றி யமைத்தகறி
யாம்இட் டுண்ப தெனமொழிந்தார்.
51

அதுவும் முனைவர் மொழிந்தருளக்
கேட்ட தொண்டர் அடியேனுக்
கிதுவும் அரிதன் றெம்பெருமான்
அமுது செய்யப் பெறிலென்று
கதுமென் விரைவில் அவரிசையப்
பெற்றுக் களிப்பாற் காதலொடு
மதுமென் கமல மலர்ப்பாதம்
பணிந்து மனையின் வந்தணைந்தார்.
52

அன்பு மிக்க பெருங்கற்பின்
அணங்கு திருவெண் காட்டம்மை
முன்பு வந்து சிறுத்தொண்டர்
வரவு நோக்கி முன்னின்றே
இன்பம் பெருக மலர்ந்தமுகங்
கண்டு பாத மிசையிறைஞ்சிப்
பின்பு கணவர் முகம்நோக்கிப்
பெருகுந் தவத்தோர் செயல்வினவ.
53

வள்ள லாரும் மனையாரை
நோக்கி வந்த மாதவர்தாம்
உள்ள மகிழ அமுதுசெய
இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்க்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய்
உறுப்பிற் குறைபா டின்றித்தாய்
பிள்ளை பிடிக்க வுவந்துபிதா
அரிந்து சமைக்கப் பெறினென்றார்.
54

அரிய கற்பின் மனைவியார்
அவரை நோக்கி யுரைசெய்வார்
பெரிய பயிர வத்தொண்டர்
அமுது செய்யப் பெறுமதற்கிங்
குரியவகையால் அமுதமைப்போம்
ஒருவ னாகி ஒருகுடிக்கு
வருமச் சிறுவன் தனைப்பெறுமாறு
எவ்வா றென்று வணங்குதலும்.
55
Go to top

மனைவி யார்தம் முகநோக்கி
மற்றித் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதிகொடுத்தால்
தருவா ருளரே நேர்நின்று
தனையன் தன்னைத் தந்தைதாய்
அரிவா ரில்லைத் தாழாமே
எனையிங் குய்ய நீபயந்தான்
தன்னை அழைப்போம் யாம்என்றார்.
56

என்று கணவர் கூறுதலும்
அதனுக் கிசைந்தெம் பிரான்தொண்டர்
இன்று தாழா தமுதுசெய்யப்
பெற்றிங் கவர்தம் மலர்ந்தமுகம்
நன்று காண்ப தெனநயந்து
நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளி யினிற்கொண்டு
வாரும் என்றார் திருவனையார்.
57

காதல் மனையார் தாங்கூறக்
கணவ னாருங் காதலனை
ஏதம் அகலப் பெற்றபே
றெல்லா மெய்தி னார்போல
நாதர் தமக்கங் கமுதாக்க
நறுமென் குதலை மொழிப்புதல்வன்
ஓத வணைந்த பள்ளியினில்
உடன்கொண் டெய்தக் கடிதகன்றார்.
58

பள்ளி யினிற்சென் றெய்துதலும்
பாத சதங்கை மணியொலிப்பப்
பிள்ளை யோடி வந்தெதிரே
தழுவ எடுத்துப் பியலின்மேல்
கொள்ள அணைத்துக் கொண்டுமீண்டு
இல்லம் புகுதக் குலமாதர்
வள்ள லார்தம் முன்சென்று
மைந்தன் தன்னை யெதிர்வாங்கி.
59

குஞ்சி திருத்தி முகந்துடைத்துக்
கொட்டை யரைநாண் துகள்நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி
மையுங் கண்ணின் மருங்கொதுக்கிப்
பஞ்சி யஞ்சு மெல்லடியார்
பரிந்து திருமஞ் சனமாட்டி
எஞ்ச லில்லாக் கோலஞ்செய்
தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்.
60
Go to top

அச்சம் எய்திக் கறியமுதாம்
என்னு மதனால் அரும்புதல்வன்
உச்சி மோவார் மார்பின்கண்
அணைத்தே முத்தந் தாமுண்ணார்
பொச்ச மில்லாத் திருத்தொண்டர்
புனிதர் தமக்குக் கறியமைக்க
மெச்சு மனத்தார் அடுக்களையின்
மேவார் வேறு கொண்டணைவார்.
61

ஒன்று மனத்தார் இருவர்களும்
உலகர் அறியா ரெனமறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப்
பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடுசெல்ல
நல்ல மகனை யெடுத்துலகை
வென்ற தாதை யார்தலையைப்
பிடிக்க விரைந்து மெய்த்தாயர்.
62

இனிய மழலைக் கிண்கிணிக்கால்
இரண்டும் மடியின் புடையிடுக்கிக்
கனிவாய் மைந்தன் கையிரண்டுங்
கையாற் பிடிக்கக் காதலனும்
நனிநீ டுவகை யுறுகின்றார்
என்று மகிழ்ந்து நகைசெய்யத்
தனிமா மகனைத் தாதையார்
கருவி கொண்டு தலையரிவார்.
63

பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த்
தன்மை யளித்தான் எனப்பொலிந்து
மருவு மகிழ்ச்சி யெய்தஅவர்
மனைவி யாருங் கணவனார்
அருமை யுயிரை யெனக்களித்தான்
என்று மிகவும் அகம்மலர
இருவர் மனமும் பேருவகை
யெய்தி அரிய வினைசெய்தார்.
64

அறுத்த தலையின் இறைச்சிதிரு
வமுதுக் காகா தெனக்கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார்
கையிற் கொடுத்து மற்றையுறுப்
பிறைச்சி யெல்லாங் கொத்தியறுத்
தெலும்பு மூளை திறந்திட்டுக்
கறிக்கு வேண்டும் பலகாயம்
மரைத்துக் கூட்டிக் கடிதமைப்பார்.
65
Go to top

மட்டு விரிபூங் குழன்மடவார்
அடுப்பில் ஏற்றி மனமகிழ்ந்தே
அட்ட கறியின் பதம்அறிந்தங்
கிழிச்சி வேறோர் அருங்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப்
பலவும் மற்றுங் கறிசமைத்துச்
சட்ட விரைந்து போனகமும்
சமைத்துக் கணவர் தமக்குரைத்தார்.
66

உடைய நாதர் அமுதுசெய
வுரைத்த படியே அமைத்தஅதற்
கடையு மின்ப முன்னையிலும்
ஆர்வம் பெருகிக் களிகூர
விடையில் வருவார் தொண்டர்தாம்
விரைந்து சென்று மென்மலரின்
புடைவண் டறையும் ஆத்தியின்கீழ்
இருந்த புனிதர் முன்சென்றார்.
67

அண்ணல் திருமுன் பணைந்திறைஞ்சி
அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீரிங் கமுதுசெய
வேண்டு மென்று நான்பரிவு
பண்ணி னேனாய்ப் பசித்தருளத்
தாழ்த்த தெனினும் பணிசமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள
வேண்டும் என்றுஅங்கு எடுத்துரைப்பார்.
68

இறையுந் தாழா தெழுந்தருளி
அமுது செய்யும் என்றிறைஞ்சக்
கறையுங் கண்டத் தினின்மறைத்துக்
கண்ணும் நுதலிற் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்
போதும் என்ன நிதியிரண்டும்
குறைவ னொருவன் பெற்றுவந்தாற்
போலக் கொண்டு மனைபுகுந்தார்.
69

வந்து புகுந்து திருமனையின்
மனைவி யார்தாம் மாதவரை
முந்த எதிர்சென் றடிவணங்கி
முழுதும் அழகு செய்தமனைச்
சந்த மலர்மா லைகள்முத்தின்
தாம நாற்றித் தவிசடுத்த
கந்த மலரா சனங்காட்டிக்
கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.
70
Go to top

தூய நீரால் சிறுத்தொண்டர்
சோதி யார்தங் கழல்விளக்கி
ஆய புனிதப் புனல்தங்கள்
தலைமேல் ஆரத் தெளித்தின்பம்
மேய இல்லம் எம்மருங்கும்
வீசி விரைமென் மலர்சாந்தம்
ஏயுந் தூப தீபங்கள்
முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.
71

பனிவெண் திங்கள் சடைவிரித்த
பயில்பூங் குஞ்சிப் பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும்
கறியும் படைக்கும் படிபொற்பின்
வனிதை யாருங் கணவரும்முன்
வணங்கிக் கேட்ப மற்றவர்தாம்
இனிய அன்ன முடன்கறிகள்
எல்லாம் ஒக்கப் படைக்கவென.
72

பரிசு விளங்கப் பரிகலமும்
திருத்திப் பாவா டையில்ஏற்றித்
தெரியும் வண்ணஞ் செஞ்சாலிச்
செழுபோ னகமுங் கறியமுதும்
வரிசை யினின்முன் படைத்தெடுத்து
மன்னும் பரிக லக்கான்மேல்
விரிவெண் டுகிலின் மிசைவைக்க
விமலர் பார்த்தங் கருள்செய்வார்.
73

சொன்ன முறையிற் படுத்தபசுத்
தொடர்ந்த வுறுப்பெல் லாங்கொண்டு
மன்னு சுவையிற் கறியாக்கி
மாண அமைத்தீ ரேஎன்ன
அன்ன மனையார் தலையிறைச்சி
யமுதுக் காகா தெனக்கழித்தோம்
என்ன வதுவுங் கூடநாம்
உண்ப தென்றா ரிடர்தீர்ப்பார்.
74

சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர்
மனையா ரோடுந் திகைத்தயரச்
சந்த னத்தா ரெனுந்தாதி
யார்தாம் அந்தத் தலையிறைச்சி
வந்த தொண்டர் அமுதுசெயும்
பொழுது நினைக்க வருமென்றே
முந்த வமைத்தேன் கறியமுதென்று
எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார்.
75
Go to top

வாங்கி மகிழ்ந்து படைத்ததற்பின்
வணங்குஞ் சிறுத்தொண் டரைநோக்கி
ஈங்கு நமக்குத் தனியுண்ண
ஒண்ணா தீசன் அடியாரிப்
பாங்கு நின்றார் தமைக்கொணர்வீர்
என்று பரமர் பணித்தருள
ஏங்கிக் கெட்டேன் அமுதுசெய
இடையூ றிதுவோ வெனநினைவார்.
76

அகத்தின் புறத்துப் போயருளால்
எங்குங் காணார் அழிந்தணைந்து
முகத்தில் வாட்டம் மிகப்பெருகப்
பணிந்து முதல்வர்க் குரைசெய்வார்
இகத்தும் பரத்தும் இனியாரைக்
காணேன் யானுந் திருநீறு
சகத்தி லிடுவார் தமைக்கண்டே
யிடுவே னென்று தாழ்ந்திறைஞ்ச.
77

உம்மைப் போல நீறிட்டார்
உளரோ வுண்பீர் நீரென்று
செம்மைக் கற்பில் திருவெண்காட்
டம்மை தம்மைக் கலந்திருத்தி
வெம்மை இறைச்சி சோறிதனின்
மீட்டுப் படையு மெனப்படைத்தார்
தம்மை யூட்ட வேண்டியவர்
உண்ணப் புகலுந் தடுத்தருளி.
78

ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்.
79

நாம்இங் குண்ப தவன்வந்தால்
நாடி யழையு மெனநம்பர்
தாமங் கருளிச் செயத்தரியார்
தலைவ ரமுது செய்தருள
யாமிங் கென்செய் தாலாகும்
என்பார் விரைவுற் றெழுந்தருளால்
பூமென் குழலார் தம்மோடும்
புறம்போ யழைக்கப் புகும்பொழுது.
80
Go to top

வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர்
மைந்தா வருவா யெனவழைத்தார்
தைய லாருந் தலைவர்பணி
தலைநிற் பாராய்த் தாமழைப்பார்
செய்ய மணியே சீராளா
வாராய் சிவனா ரடியார்யாம்
உய்யும் வகையால் உடன்உண்ண
அழைக்கின் றார்என்று ஓலமிட.
81

பரம ரருளாற் பள்ளியினின்
றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்
தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன் னணைத்துக் கணவனார்
கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.
82

வந்த மகனைக் கடிதிற்கொண்
டமுது செய்விப் பான்வந்தார்
முந்த வேஅப் பயிரவராம்
முதல்வர் அங்கண் மறைந்தருளச்
சிந்தை கலங்கிக் காணாது
திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறியமுதுங்
கலத்திற் காணார் வெருவுற்றார்.
83

செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே
ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த அவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத்
தனய ரோடுந் தாமணைவார்.
84

தனிவெள் விடைமேல் நெடுவிசும்பில்
தலைவர் பூத கணநாதர்
முனிவ ரமரர் விஞ்சையர்கள்
முதலா யுள்ளோர் போற்றிசைப்ப
இனிய கறியுந் திருவமுதும்
அமைத்தார் காண எழுந்தருளிப்
பனிவெண் திங்கள் முடிதுளங்கப்
பரந்த கருணை நோக்களித்தார்.
85
Go to top

அன்பின் வென்ற தொண்டரவர்க்கு
அமைந்த மனைவி யார்மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை
முழுதுங் கண்டு பரவசமாய்
என்பு மனமுங் கரைந்துருக
விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால்
பெரியோ ரவருக் கருள்புரிவார்.
86

கொன்றை வேணி யார் தாமும்
பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும்தம்
விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார்
நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியா தேயிறைஞ்சி
யிருக்க வுடன்கொண் டேகினார்.
87

ஆறு முடிமேல் அணிந்தவருக்
அடியா ரென்று கறியமுதா
ஊறி லாத தனிப்புதல்வன்
தன்னை யரிந்தங் கமுதூட்டப்
பேறு பெற்றார் சேவடிகள்
தலைமேற் கொண்டு பிறவுயிர்கள்
வேறு கழறிற் றறிவார் தம்
பெருமை தொழுது விளம்புவாம்.
88

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000