உருநாட்டும் செயல்காமன்
ஒழியவிழி பொழிசெந்தீ
வருநாட்டத் திருநுதலார்
மகிழ்ந்தருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர்தங்
களிகாட்டுங் காவேரித்
திருநாட்டு வளங்காட்டுஞ்
செங்காட்டங் குடியாகும்.
|
1
|
நிலவியஅத் திருப்பதியில்
நெடுஞ்சடையார் நீற்றடைவால்
உலகில்வள ருயிர்க்கெல்லாம்
உயர்காவல் தொழில்பூண்டு
மலர்புகழ்மா மாத்திரர்தங்
குலம்பெருக வந்துள்ளார்
பலர்புகழுந் திருநாமம்
பரஞ்சோதி யாரென்பார்.
|
2
|
ஆயுள்வே தக்கலையும்
அலகில்வட நூற்கலையும்
தூயபடைக் கலத்தொழிலும்
துறைநிரம்பப் பயின்றுள்ளார்
பாயுமதக் குஞ்சரமும்
பரியுமுகைக் கும்பண்பு
மேயதொழில் விஞ்சையினும்
மேதினியில் மேலானார்.
|
3
|
உள்ளநிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன்கழலிற் செறிவென்றே
கொள்ளும்உணர் வினின்முன்னே
கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாய்என்றும்
பயின்றுவரும் பண்புடையார்.
|
4
|
ஈசன்அடி யார்க்கென்றும்
இயல்பான பணிசெய்தே
ஆசில்புகழ் மன்னவன்பால்
அணுக்கராய் அவற்காகப்
பூசல்முனைக் களிறுகைத்துப்
போர்வென்று பொருமரசர்
தேசங்கள் பலகொண்டு
தேர்வேந்தன் பாற்சிறந்தார்.
|
5
|
| Go to top |
மன்னவற்குத் தண்டுபோய்
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே
இகலரசன் முன்கொணர்ந்தார்.
|
6
|
கதிர்முடிமன் னனுமிவர்தங்
களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப
அறிந்தவமைச் சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு
வாய்த்தவலி யுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகி
லில்லையென வெடுத்துரைத்தார்.
|
7
|
தம்பெருமான் திருத்தொண்டர்
எனக்கேட்ட தார்வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை
உணராதே கெட்டொழிந்தேன்
வெம்புகொடும் போர்முனையில்
விட்டிருந்தேன் எனவெருவுற்று
எம்பெருமான் இதுபொறுக்க
வேண்டுமென இறைஞ்சினான்.
|
8
|
இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி
என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ
தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்தநிதிக் குவைகளுடன்
நீடுவிருத் திகளளித்தே
அறம்புரிசெங் கோலரசன்
அஞ்சலிசெய் துரைக்கின்றான்.
|
9
|
உம்முடைய நிலைமையினை
அறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக்கருத்துக்
கினிதாக விசைந்துஉமது
மெய்ம்மைபுரி செயல்விளங்க வேண்டியவா றேசரித்துச்
செம்மைநெறித் திருத்தொண்டு
செய்யுமென விடைகொடுத்தான்.
|
10
|
| Go to top |
மன்னவனை விடைகொண்டு
தம்பதியில் வந்தடைந்து
பன்னுபுகழ்ப் பரஞ்சோதி
யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச்
சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமை யில்வழுவா
முறையன்பிற் செய்கின்றார்.
|
11
|
வேதகா ரணர்அடியார்
வேண்டியமெய்ப் பணிசெய்யத்
தீதில்குடிப் பிறந்ததிரு
வெண்காட்டு நங்கையெனும்
காதன்மனைக் கிழத்தியார்
கருத்தொன்ற வரும்பெருமை
நீதிமனை யறம்புரியும்
நீர்மையினில் நிலைநிற்பார்.
|
12
|
நறையிதழித் திருமுடியார்
அடியாரை நாள்தோறும்
முறைமையினில் திருவமுது
முன்னூட்டிப் பின்னுண்ணும்
நிறையுடைய பெருவிருப்பால்
நியதியா கக்கொள்ளும்
துறைவழுவா வகையொழுகுந்
தூயதொழில் தலைநின்றார்.
|
13
|
தூயதிரு வமுதுகனி
கன்னல்அறு சுவைக்கறிநெய்
பாயதயிர் பால்இனிய
பண்ணியம்முண் ணீரமுதம்
மேயபடி யாலமுது
செய்விக்க இசைந்தடியார்
மாயிருஞா லம்போற்ற
வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.
|
14
|
சீதமதி அரவினுடன்
செஞ்சடைமேற் செறிவித்த
நாதன்அடி யார்தம்மை
நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர்முன்பு
மிகச்சிறிய ராய்அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர்
எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.
|
15
|
| Go to top |
கண்ணுதலார் கணபதீச்
சரத்தின்கண் கருத்தமர
உண்ணிறைஅன் பினிற்பணிசெய்
தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியார்
இடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுடன்
நயந்துறையும் நாளின்கண்.
|
16
|
நீராருஞ் சடைமுடியார்
அருளினால் நிறைதவத்துப்
பேராளர் அவர்தமக்குப்
பெருகுதிரு மனையறத்தின்
வேராகி விளங்குதிரு
வெண்காட்டு நங்கைபால்
சீராள தேவரெனும்
திருமைந்தர் அவதரித்தார்.
|
17
|
அருமையினில் தனிப்புதல்வர்
பிறந்தபொழு தலங்கரித்த
பெருமையினிற் கிளைகளிப்ப
பெறற்கரிய மணிபெற்று
வருமகிழ்ச்சி தாதையார்
மனத்தடங்கா வகைவளரத்
திருமலிநெய் யாடல்விழாச்
செங்காட்டங் குடியெடுப்ப.
|
18
|
மங்கலநல் லியம்முழக்கம்
மறைமுழக்கம் வானளப்ப
அங்கணர்தஞ் சீரடியார்க்
களவிறந்த நிதியளித்துத்
தங்கள்மர பினில்உரிமைச்
சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன்
புரிந்துகாப் பணிபுனைந்தார்.
|
19
|
ஆர்வநிறை பெருஞ்சுற்றம்
அகம்மலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன்
பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர்
திருமகனார் சீரடியில்
தார்வளர்கிண் கிணியசையத்
தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.
|
20
|
| Go to top |
சுருளுமயிர் நுதற்சுட்டி
துணைக்காதின் மணிக்குதம்பை
மருவுதிருக் கண்டநாண்
மார்பினில்ஐம் படைகையில்
பொருவில்வயி ரச்சரிகள்
பொன்னரைஞாண் புனைசதங்கை
தெருவிலொளி விளங்கவளர்
திருவிளையாட் டினிலமர்ந்தார்.
|
21
|
வந்துவளர் மூவாண்டில்
மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த
தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில்
செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப்
பள்ளியினில் இருத்தினார்.
|
22
|
அந்நாளில் சண்பைநகர்
ஆண்டகையார் எழுந்தருள
முன்னாக எதிர்கொண்டு
கொடுபுகுந்து முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர்
புகலிகா வலனார்தம்
நன்னாமச் சேவடிகள்
போற்றிசைத்து நலஞ்சிறந்தார்.
|
23
|
சண்பையர்தம் பெருமானும்
தாங்கரிய பெருங்காதல்
பண்புடைய சிறுத்தொண்ட
ருடன்பயின்று மற்றவரை
மண்பரவுந் திருப்பதிகத்
தினில்வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்தருளத்
தாமினிது நயப்புற்றார்.
|
24
|
இத்தன்மை நிகழுநாள்
இவர்திருத்தொண் டிருங்கயிலை
அத்தர்திரு வடியிணைக்கீழ்ச்
சென்றணைய அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந்
தருளுதற்கு விடையவர்தாம்
சித்தமகிழ் வயிரவராய்த்
திருமலைநின் றணைகின்றார்.
|
25
|
| Go to top |
மடல்கொண்ட மலரிதழி
நெடுஞ்சடையை வனப்பெய்தக்
கடல்மண்டி முகந்தெழுந்த
காளமேகச் சுருள்போல்
தொடர்பங்கி சுருண்டிருண்டு
தூறிநெறித் தசைந்துசெறி
படர்துஞ்சின் கருங்குஞ்சி
கொந்தளமா கப்பரப்பி.
|
26
|
அஞ்சனம்மஞ் சனஞ்செய்த
தனையவணி கிளர்பம்பை
மஞ்சினிடை யிடையெழுந்த
வானமீன் பரப்பென்னப்
புஞ்சநிரை வண்டுதேன்
சுரும்புபுடை படர்ந்தார்ப்பத்
துஞ்சினுனித் தனிப்பரப்புந்
தும்பைநறு மலர்தோன்ற.
|
27
|
அருகுதிரு முடிச்செருகும்
அந்தியிளம் பிறைதன்னைப்
பெருகுசிறு மதியாக்கிப்
பெயர்த்துச்சாத் தியதென்ன
விரிசுடர்ச்செம் பவளவொளி
வெயில்விரிக்கும் விளங்குசுடர்த்
திருநுதல்மேல் திருநீற்றுத்
தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க.
|
28
|
வெவ்வருக்கன் மண்டலமும்
விளங்குமதி மண்டலமும்
அவ்வனற்செய் மண்டலமும்
உடன்அணைந்த தெனவழகை
வவ்வுதிருக் காதின்மணிக்
குழைச்சங்கு வளைத்ததனுள்
செவ்வரத்த மலர்செறித்த
திருத்தோடு புடைசிறக்க.
|
29
|
களங்கொள்விடம் மறைத்தருளக்
கடலமுதக் குமிழிநிரைத்
துளங்கொளிவெண் திரள்கோவைத்
தூயவடம் அணிந்ததென
உளங்கொள்பவர் கரைந்துடலும்
உயிரும்உரு கப்பெருக
விளங்குதிருக் கழுத்தினிடை
வெண்பளிங்கின் வடந்திகழ.
|
30
|
| Go to top |
செம்பரிதி கடலளித்த
செக்கரொளி யினைஅந்திப்
பம்புமிருள் செறிபொழுது
படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை
கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக்
கஞ்சுகத்தின் அணிவிளங்க.
|
31
|
மிக்கெழும்அன் பர்கள்அன்பு
திருமேனி விளைந்ததென
அக்குமணி யாற்சன்ன
வீரமும்ஆ ரமும்வடமும்
கைக்கணிதோள் வளைச்சரியும்
அரைக்கடிசூத் திரச்சரியும்
தக்கதிருக் காற்சரியுஞ்
சாத்தியவொண் சுடர்தயங்க.
|
32
|
பொருவில்திருத் தொண்டர்க்குப்
புவிமேல்வந் தருள்புரியும்
பெருகருளின் திறங்கண்டு
பிரானருளே பேணுவீர்
வரும்அன்பின் வழிநிற்பீர்
எனமறைபூண் டறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு
திசைமுழுதுஞ் செலவொலிப்ப.
|
33
|
அயன்கபா லந்தரித்த
விடத்திருக்கை யாலணைத்த
வயங்கொளிமூ விலைச்சூல
மணித்திருத்தோள் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத்
தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன்தவத்தாற் பெறும்புவியும்
பாததா மரைசூட.
|
34
|
அருள்பொழியுந் திருமுகத்தில்
அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும்
வடிச்சூலம் வெயிலெறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு
தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச்
செங்காட்டங் குடிசேர்ந்தார்.
|
35
|
| Go to top |
தண்டாத தொருவேட்கைப்
பசியுடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத்தொண்டர்
மனைவினவிக் கடிதணைந்து
தொண்டானார்க் கெந்நாளும்
சோறளிக்குந் திருத்தொண்டர்
வண்டார்பூந் தாரார்இம்
மனைக்குள்ளா ரோவென்ன.
|
36
|
வந்தணைந்து வினவுவார்
மாதவரே யாம்என்று
சந்தனமாந் தையலார்
முன்வந்து தாள்வணங்கி
அந்தமில்சீ ரடியாரைத்
தேடியவர் புறத்தணைந்தார்
எந்தமையா ளுடையவரே
அகத்துள்எழுந் தருளுமென.
|
37
|
மடவரலை முகநோக்கி
மாதரார் தாம்இருந்த
இடவகையில் தனிபுகுதோம்
என்றருள அதுகேட்டு
விடவகல்வார் போலிருந்தார்
எனவெருவி விரைந்துமனைக்
கடனுடைய திருவெண்காட்
டம்மைகடைத் தலையெய்தி.
|
38
|
அம்பலவ ரடியாரை
யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமான் யாவரையுங்
கண்டிலர்தே டிப்போனார்
வம்பெனநீ ரெழுந்தருளி
வருந்திருவே டங்கண்டால்
தம்பெரிய பேறென்றே
மிகமகிழ்வர் இனித்தாழார்.
|
39
|
இப்பொழுதே வந்தணைவர்
எழுந்தருளி யிரும்என்ன
ஒப்பின் மனை யறம்புரப்பீர்
உத்தரா பதியுள்ளோம்
செப்பருஞ்சீர்ச் சிறுத்தொண்டர்
தமைக்காணச் சேர்ந்தனம்யாம்
எப்பரிசும் அவரொழிய
இங்கிரோம் என்றருளி.
|
40
|
| Go to top |
கண்ணுதலிற் காட்டாதார்
கணபதீச் சரத்தின்கண்
வண்ணமலர் ஆத்தியின்கீழ்
இருக்கின்றோம் மற்றவர் தாம்
நண்ணினால் நாமிருந்த
பரிசுரைப்பீர் என்றருளி
அண்ணலார் திருவாத்தி
யணைந்தருளி அமர்ந்திருந்தார்.
|
41
|
நீரார் சடையான் அடியாரை
நேடி யெங்குங் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர்
மீண்டுஞ் செல்வ மனையெய்தி
ஆரா அன்பின் மனைவியார்க்கு
இயம்பி அழிவெய் திடஅவரும்
பார்ஆ தரிக்குந் திருவேடத்
தொருவர் வந்த படிபகர்ந்தார்.
|
42
|
அடியேன் உய்ந்தேன் எங்குற்றார்
உரையா யென்ன அவர்மொழிவார்
வடிசேர் சூல கபாலத்தர்
வடதே சத்தோம் என்றார்வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்யாம்
சொல்ல இங்கும் இராதேபோய்க்
கடிசேர் திருவாத் தியினிழற்கீழ்
இருந்தார் கணப தீச்சரத்து.
|
43
|
என்று மனைவி யார்இயம்ப
எழுந்த விருப்பால் விரைந்தெய்திச்
சென்று கண்டு திருப்பாதம்
பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமைநோக்கி
நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்தருள
இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்.
|
44
|
பூதி யணிசா தனத்தவர்முன்
போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால்
அருளிச் செய்வர் நானென்று
கோதில் அன்பர் தமையமுது
செய்விப் பதற்குக் குலப்பதியில்
காத லாலே தேடியுமுன்
காணேன் தவத்தால் உமைக்கண்டேன்.
|
45
|
| Go to top |
அடியேன் மனையில் எழுந்தருளி
அமுதுசெய்ய வேண்டுமென
நெடியோ னறியா வடியார்தாம்
நிகழுந் தவத்தீர் உமைக்காணும்
படியால் வந்தோம் உத்தரா
பதியோம் எம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி
தொண்ணா தென்று மொழிந்தருள.
|
46
|
எண்ணா தடியேன் மொழியேன்நீர்
அமுது செய்யும் இயல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீர்
அருளிச் செய்யுங் கடிதமைக்கத்
தண்ணார் இதழி முடியார்தம்
அடியார் தலைப்பட் டால்தேட
ஒண்ணா தனவும் உளவாகும்
அருமை யில்லை யெனவுரைத்தார்.
|
47
|
அரிய தில்லை எனக் கேட்ட
பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிர வக்கோலப்
பிரானார் அருளிச் செய்வார்யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது
கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப
துரிய நாளு மதற்கின்றால்
ஊட்ட அரிதாம் உமக்கென்றார்.
|
48
|
சால நன்று முந்நிரையும்
உடையேன் தாழ்விங் கெனக்கில்லை
ஆலம் உண்டா ரன்பர்உமக்
கமுதாம் பசுத்தான் இன்னதென
ஏல வருளிச் செயப்பெற்றால்
யான்போய் அமுது கடிதமைத்துக்
காலந் தப்பா மேவருவேன்
என்று மொழிந்து கைதொழுதார்.
|
49
|
பண்பு மிக்க சிறுத்தொண்டர்
பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம்உண்ணப்
படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்ப தஞ்சு பிராயத்தில்
உறுப்பின் மறுவின் றேல்இன்னம்
புண்செய் நோவில் வேலெறிந்தாற்
போலும் புகல்வ தொன்றென்றார்.
|
50
|
| Go to top |
யாதும் அரிய தில்லைஇனி
ஈண்ட அருளிச் செய்யுமென
நாதன் தானும் ஒருகுடிக்கு
நல்ல சிறுவன் ஒருமகனைத்
தாதை அரியத் தாய்பிடிக்கும்
பொழுது தம்மில் மனமுவந்தே
ஏத மின்றி யமைத்தகறி
யாம்இட் டுண்ப தெனமொழிந்தார்.
|
51
|
அதுவும் முனைவர் மொழிந்தருளக்
கேட்ட தொண்டர் அடியேனுக்
கிதுவும் அரிதன் றெம்பெருமான்
அமுது செய்யப் பெறிலென்று
கதுமென் விரைவில் அவரிசையப்
பெற்றுக் களிப்பாற் காதலொடு
மதுமென் கமல மலர்ப்பாதம்
பணிந்து மனையின் வந்தணைந்தார்.
|
52
|
அன்பு மிக்க பெருங்கற்பின்
அணங்கு திருவெண் காட்டம்மை
முன்பு வந்து சிறுத்தொண்டர்
வரவு நோக்கி முன்னின்றே
இன்பம் பெருக மலர்ந்தமுகங்
கண்டு பாத மிசையிறைஞ்சிப்
பின்பு கணவர் முகம்நோக்கிப்
பெருகுந் தவத்தோர் செயல்வினவ.
|
53
|
வள்ள லாரும் மனையாரை
நோக்கி வந்த மாதவர்தாம்
உள்ள மகிழ அமுதுசெய
இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்க்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய்
உறுப்பிற் குறைபா டின்றித்தாய்
பிள்ளை பிடிக்க வுவந்துபிதா
அரிந்து சமைக்கப் பெறினென்றார்.
|
54
|
அரிய கற்பின் மனைவியார்
அவரை நோக்கி யுரைசெய்வார்
பெரிய பயிர வத்தொண்டர்
அமுது செய்யப் பெறுமதற்கிங்
குரியவகையால் அமுதமைப்போம்
ஒருவ னாகி ஒருகுடிக்கு
வருமச் சிறுவன் தனைப்பெறுமாறு
எவ்வா றென்று வணங்குதலும்.
|
55
|
| Go to top |
மனைவி யார்தம் முகநோக்கி
மற்றித் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதிகொடுத்தால்
தருவா ருளரே நேர்நின்று
தனையன் தன்னைத் தந்தைதாய்
அரிவா ரில்லைத் தாழாமே
எனையிங் குய்ய நீபயந்தான்
தன்னை அழைப்போம் யாம்என்றார்.
|
56
|
என்று கணவர் கூறுதலும்
அதனுக் கிசைந்தெம் பிரான்தொண்டர்
இன்று தாழா தமுதுசெய்யப்
பெற்றிங் கவர்தம் மலர்ந்தமுகம்
நன்று காண்ப தெனநயந்து
நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளி யினிற்கொண்டு
வாரும் என்றார் திருவனையார்.
|
57
|
காதல் மனையார் தாங்கூறக்
கணவ னாருங் காதலனை
ஏதம் அகலப் பெற்றபே
றெல்லா மெய்தி னார்போல
நாதர் தமக்கங் கமுதாக்க
நறுமென் குதலை மொழிப்புதல்வன்
ஓத வணைந்த பள்ளியினில்
உடன்கொண் டெய்தக் கடிதகன்றார்.
|
58
|
பள்ளி யினிற்சென் றெய்துதலும்
பாத சதங்கை மணியொலிப்பப்
பிள்ளை யோடி வந்தெதிரே
தழுவ எடுத்துப் பியலின்மேல்
கொள்ள அணைத்துக் கொண்டுமீண்டு
இல்லம் புகுதக் குலமாதர்
வள்ள லார்தம் முன்சென்று
மைந்தன் தன்னை யெதிர்வாங்கி.
|
59
|
குஞ்சி திருத்தி முகந்துடைத்துக்
கொட்டை யரைநாண் துகள்நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி
மையுங் கண்ணின் மருங்கொதுக்கிப்
பஞ்சி யஞ்சு மெல்லடியார்
பரிந்து திருமஞ் சனமாட்டி
எஞ்ச லில்லாக் கோலஞ்செய்
தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்.
|
60
|
| Go to top |
அச்சம் எய்திக் கறியமுதாம்
என்னு மதனால் அரும்புதல்வன்
உச்சி மோவார் மார்பின்கண்
அணைத்தே முத்தந் தாமுண்ணார்
பொச்ச மில்லாத் திருத்தொண்டர்
புனிதர் தமக்குக் கறியமைக்க
மெச்சு மனத்தார் அடுக்களையின்
மேவார் வேறு கொண்டணைவார்.
|
61
|
ஒன்று மனத்தார் இருவர்களும்
உலகர் அறியா ரெனமறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப்
பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடுசெல்ல
நல்ல மகனை யெடுத்துலகை
வென்ற தாதை யார்தலையைப்
பிடிக்க விரைந்து மெய்த்தாயர்.
|
62
|
இனிய மழலைக் கிண்கிணிக்கால்
இரண்டும் மடியின் புடையிடுக்கிக்
கனிவாய் மைந்தன் கையிரண்டுங்
கையாற் பிடிக்கக் காதலனும்
நனிநீ டுவகை யுறுகின்றார்
என்று மகிழ்ந்து நகைசெய்யத்
தனிமா மகனைத் தாதையார்
கருவி கொண்டு தலையரிவார்.
|
63
|
பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த்
தன்மை யளித்தான் எனப்பொலிந்து
மருவு மகிழ்ச்சி யெய்தஅவர்
மனைவி யாருங் கணவனார்
அருமை யுயிரை யெனக்களித்தான்
என்று மிகவும் அகம்மலர
இருவர் மனமும் பேருவகை
யெய்தி அரிய வினைசெய்தார்.
|
64
|
அறுத்த தலையின் இறைச்சிதிரு
வமுதுக் காகா தெனக்கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார்
கையிற் கொடுத்து மற்றையுறுப்
பிறைச்சி யெல்லாங் கொத்தியறுத்
தெலும்பு மூளை திறந்திட்டுக்
கறிக்கு வேண்டும் பலகாயம்
மரைத்துக் கூட்டிக் கடிதமைப்பார்.
|
65
|
| Go to top |
மட்டு விரிபூங் குழன்மடவார்
அடுப்பில் ஏற்றி மனமகிழ்ந்தே
அட்ட கறியின் பதம்அறிந்தங்
கிழிச்சி வேறோர் அருங்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப்
பலவும் மற்றுங் கறிசமைத்துச்
சட்ட விரைந்து போனகமும்
சமைத்துக் கணவர் தமக்குரைத்தார்.
|
66
|
உடைய நாதர் அமுதுசெய
வுரைத்த படியே அமைத்தஅதற்
கடையு மின்ப முன்னையிலும்
ஆர்வம் பெருகிக் களிகூர
விடையில் வருவார் தொண்டர்தாம்
விரைந்து சென்று மென்மலரின்
புடைவண் டறையும் ஆத்தியின்கீழ்
இருந்த புனிதர் முன்சென்றார்.
|
67
|
அண்ணல் திருமுன் பணைந்திறைஞ்சி
அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீரிங் கமுதுசெய
வேண்டு மென்று நான்பரிவு
பண்ணி னேனாய்ப் பசித்தருளத்
தாழ்த்த தெனினும் பணிசமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள
வேண்டும் என்றுஅங்கு எடுத்துரைப்பார்.
|
68
|
இறையுந் தாழா தெழுந்தருளி
அமுது செய்யும் என்றிறைஞ்சக்
கறையுங் கண்டத் தினின்மறைத்துக்
கண்ணும் நுதலிற் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்
போதும் என்ன நிதியிரண்டும்
குறைவ னொருவன் பெற்றுவந்தாற்
போலக் கொண்டு மனைபுகுந்தார்.
|
69
|
வந்து புகுந்து திருமனையின்
மனைவி யார்தாம் மாதவரை
முந்த எதிர்சென் றடிவணங்கி
முழுதும் அழகு செய்தமனைச்
சந்த மலர்மா லைகள்முத்தின்
தாம நாற்றித் தவிசடுத்த
கந்த மலரா சனங்காட்டிக்
கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.
|
70
|
| Go to top |
தூய நீரால் சிறுத்தொண்டர்
சோதி யார்தங் கழல்விளக்கி
ஆய புனிதப் புனல்தங்கள்
தலைமேல் ஆரத் தெளித்தின்பம்
மேய இல்லம் எம்மருங்கும்
வீசி விரைமென் மலர்சாந்தம்
ஏயுந் தூப தீபங்கள்
முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.
|
71
|
பனிவெண் திங்கள் சடைவிரித்த
பயில்பூங் குஞ்சிப் பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும்
கறியும் படைக்கும் படிபொற்பின்
வனிதை யாருங் கணவரும்முன்
வணங்கிக் கேட்ப மற்றவர்தாம்
இனிய அன்ன முடன்கறிகள்
எல்லாம் ஒக்கப் படைக்கவென.
|
72
|
பரிசு விளங்கப் பரிகலமும்
திருத்திப் பாவா டையில்ஏற்றித்
தெரியும் வண்ணஞ் செஞ்சாலிச்
செழுபோ னகமுங் கறியமுதும்
வரிசை யினின்முன் படைத்தெடுத்து
மன்னும் பரிக லக்கான்மேல்
விரிவெண் டுகிலின் மிசைவைக்க
விமலர் பார்த்தங் கருள்செய்வார்.
|
73
|
சொன்ன முறையிற் படுத்தபசுத்
தொடர்ந்த வுறுப்பெல் லாங்கொண்டு
மன்னு சுவையிற் கறியாக்கி
மாண அமைத்தீ ரேஎன்ன
அன்ன மனையார் தலையிறைச்சி
யமுதுக் காகா தெனக்கழித்தோம்
என்ன வதுவுங் கூடநாம்
உண்ப தென்றா ரிடர்தீர்ப்பார்.
|
74
|
சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர்
மனையா ரோடுந் திகைத்தயரச்
சந்த னத்தா ரெனுந்தாதி
யார்தாம் அந்தத் தலையிறைச்சி
வந்த தொண்டர் அமுதுசெயும்
பொழுது நினைக்க வருமென்றே
முந்த வமைத்தேன் கறியமுதென்று
எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார்.
|
75
|
| Go to top |
வாங்கி மகிழ்ந்து படைத்ததற்பின்
வணங்குஞ் சிறுத்தொண் டரைநோக்கி
ஈங்கு நமக்குத் தனியுண்ண
ஒண்ணா தீசன் அடியாரிப்
பாங்கு நின்றார் தமைக்கொணர்வீர்
என்று பரமர் பணித்தருள
ஏங்கிக் கெட்டேன் அமுதுசெய
இடையூ றிதுவோ வெனநினைவார்.
|
76
|
அகத்தின் புறத்துப் போயருளால்
எங்குங் காணார் அழிந்தணைந்து
முகத்தில் வாட்டம் மிகப்பெருகப்
பணிந்து முதல்வர்க் குரைசெய்வார்
இகத்தும் பரத்தும் இனியாரைக்
காணேன் யானுந் திருநீறு
சகத்தி லிடுவார் தமைக்கண்டே
யிடுவே னென்று தாழ்ந்திறைஞ்ச.
|
77
|
உம்மைப் போல நீறிட்டார்
உளரோ வுண்பீர் நீரென்று
செம்மைக் கற்பில் திருவெண்காட்
டம்மை தம்மைக் கலந்திருத்தி
வெம்மை இறைச்சி சோறிதனின்
மீட்டுப் படையு மெனப்படைத்தார்
தம்மை யூட்ட வேண்டியவர்
உண்ணப் புகலுந் தடுத்தருளி.
|
78
|
ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்.
|
79
|
நாம்இங் குண்ப தவன்வந்தால்
நாடி யழையு மெனநம்பர்
தாமங் கருளிச் செயத்தரியார்
தலைவ ரமுது செய்தருள
யாமிங் கென்செய் தாலாகும்
என்பார் விரைவுற் றெழுந்தருளால்
பூமென் குழலார் தம்மோடும்
புறம்போ யழைக்கப் புகும்பொழுது.
|
80
|
| Go to top |
வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர்
மைந்தா வருவா யெனவழைத்தார்
தைய லாருந் தலைவர்பணி
தலைநிற் பாராய்த் தாமழைப்பார்
செய்ய மணியே சீராளா
வாராய் சிவனா ரடியார்யாம்
உய்யும் வகையால் உடன்உண்ண
அழைக்கின் றார்என்று ஓலமிட.
|
81
|
பரம ரருளாற் பள்ளியினின்
றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்
தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன் னணைத்துக் கணவனார்
கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.
|
82
|
வந்த மகனைக் கடிதிற்கொண்
டமுது செய்விப் பான்வந்தார்
முந்த வேஅப் பயிரவராம்
முதல்வர் அங்கண் மறைந்தருளச்
சிந்தை கலங்கிக் காணாது
திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறியமுதுங்
கலத்திற் காணார் வெருவுற்றார்.
|
83
|
செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே
ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த அவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத்
தனய ரோடுந் தாமணைவார்.
|
84
|
தனிவெள் விடைமேல் நெடுவிசும்பில்
தலைவர் பூத கணநாதர்
முனிவ ரமரர் விஞ்சையர்கள்
முதலா யுள்ளோர் போற்றிசைப்ப
இனிய கறியுந் திருவமுதும்
அமைத்தார் காண எழுந்தருளிப்
பனிவெண் திங்கள் முடிதுளங்கப்
பரந்த கருணை நோக்களித்தார்.
|
85
|
| Go to top |
அன்பின் வென்ற தொண்டரவர்க்கு
அமைந்த மனைவி யார்மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை
முழுதுங் கண்டு பரவசமாய்
என்பு மனமுங் கரைந்துருக
விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால்
பெரியோ ரவருக் கருள்புரிவார்.
|
86
|
கொன்றை வேணி யார் தாமும்
பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும்தம்
விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார்
நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியா தேயிறைஞ்சி
யிருக்க வுடன்கொண் டேகினார்.
|
87
|
ஆறு முடிமேல் அணிந்தவருக்
அடியா ரென்று கறியமுதா
ஊறி லாத தனிப்புதல்வன்
தன்னை யரிந்தங் கமுதூட்டப்
பேறு பெற்றார் சேவடிகள்
தலைமேற் கொண்டு பிறவுயிர்கள்
வேறு கழறிற் றறிவார் தம்
பெருமை தொழுது விளம்புவாம்.
|
88
|