சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.300   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

அந்தியிளம் பிறைக்கண்ணி
அண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு
முதற்பெருநா யகமாகி
இந்திரன்மால் அயன்முதலாம்
இமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற
நான்மறையோ கிகளொருவர்.
1

மற்றவர்தாம் அணிமாதி
வருஞ்சித்தி பெற்றுடையார்
கொற்றவனார் திருக்கயிலை
மலைநின்றுங் குறுமுனிபால்
உற்றதொரு கேண்மையினால்
உடன்சிலநாள் உறைவதற்கு
நற்றமிழின் பொதியமலை
நண்ணுதற்கு வழிக்கொண்டார்.
2

மன்னுதிருக் கேதாரம்
வழிபட்டு மாமுனிவர்
பன்னுபுகழ்ப் பசுபதிநே
பாளத்தைப் பணிந்தேத்தித்
துன்னுசடைச் சங்கரனார்
ஏற்றதூ நீர்க்கங்கை
அன்னமலி யகன்றுறைநீர்
அருங்கரையின் மருங்கணைந்தார்.
3

கங்கைநீள் துறையாடிக்
கருத்துறைநீள் கடலேற்றும்
அங்கணர்தாம் மகிழ்ந்தருளும்
அவிமுத்தம் பணிந்தேத்தி
மங்குல்வளர் வரைவிந்த
மன்னுபருப் பதம்இறைஞ்சித்
திங்களணி சடையர்திருக்
காளத்தி மலைசேர்ந்தார்.
4

நீடுதிருக் காளத்தி
நிலவுதா ணுவைவணங்கி
ஆடுதிரு வரங்கான
ஆலவனந் தொழுதேத்தித்
தேடும்இரு வர்க்கரியார்
திருஏகாம் பரம்பணிந்து
மாடுயர்மா மதிற்காஞ்சி
வளநகரின் வைகினார்.
5
Go to top

நற்பதியங் கமர்யோக
முனிவர்களை நயந்துபோய்க்
கற்புரிசைத் திருவதிகை
கலந்திறைஞ்சிக் கறைக்கண்டர்
அற்புதக்கூத் தாடுகின்ற
அம்பலஞ்சூழ் திருவீதிப்
பொற்பதியாம் பெரும்பற்றப்
புலியூரில் வந்தணைந்தார்.
6

எவ்வுலகும் உய்யவெடுத்
தாடியசே வடியாரைச்
செவ்வியஅன் புறவணங்கிச்
சிந்தைகளி வரத்திளைத்து
வவ்வியமெய் யுணர்வின்கண்
வருமானந் தக்கூத்தை
அவ்வியல்பில் கும்பிட்டங்
காராமை அமர்ந்திருந்தார்.
7

தடநிலைமா ளிகைப்புலியூர்
தன்னிலுறைந் திறைஞ்சிப்போய்
அடல்விடையின் மேல்வருவா
ரமுதுசெய வஞ்சாதே
விடமளித்த தெனக்கருதி
மேதினிக்கு வளநிறைத்தே
கடல்வயிறு நிறையாத
காவிரியின் கரையணைந்தார்.
8

காவிரிநீர்ப் பெருந் தீர்த்தங்
கலந்தாடிக் கடந்தேறி
ஆவின்அருங் கன்றுறையும்
ஆவடுதண் டுறையணைந்து
சேவில்வரும் பசுபதியார்
செழுங்கோயில் வலம்வந்து
மேவுபெருங் காதலினால்
பணிந்தங்கு விருப்புறுவார்.
9

அந்நிலைமைத் தானத்தை
அகலாத தொருகருத்து
முன்னியெழுங் குறிப்பினால்
மூளும் ஆதரவெய்தப்
பின்னுமகன் றேகுவார்
பேணவருங் கோக்குலங்கள்
பொன்னிநதிக் கரைப்புறவிற்
புலம்புவன எதிர்கண்டார்.
10
Go to top

அந்தணர்தஞ் சாத்தனூர்
ஆமேய்ப்பார் குடித்தோன்றி
முந்தைமுறை நிரைமேய்ப்பான்
மூலனெனும் பெயருடையான்
வந்துதனி மேய்க்கின்றான்
வினைமாள வாழ்நாளை
வெந்தொழில்வன் கூற்றுண்ண
வீடிநிலத் திடைவீழ்ந்தான்.
11

மற்றவன்றன் உடம்பினைஅக்
கோக்குலங்கள் வந்தணைந்து
சுற்றிமிகக் கதறுவன
சுழல்வனமோப் பனவாக
நற்றவயோ கிகள்காணா
நம்பரரு ளாலேயா
உற்றதுய ரிவைநீங்க
ஒழிப்பன்என வுணர்கின்றார்.
12

இவன்உயிர்பெற் றெழில்அன்றி
ஆக்களிடர் நீங்காவென்று
அவனுடலில் தம்முயிரை
அடைவிக்க அருள்புரியும்
தவமுனிவர் தம்முடம்புக்
கரண்செய்து தாம்முயன்ற
பவனவழி அவனுடலில்
தம்முயிரைப் பாய்த்தினார்.
13

பாய்த்தியபின் திருமூல
ராய்எழலும் பசுக்களெல்லாம்
நாத்தழும்ப நக்கிமோந்
தணைந்துகனைப் பொடுநயந்து
வாய்த்தெழுந்த களிப்பினால்
வாலெடுத்துத் துள்ளிப்பின்
நீத்ததுய ரினவாகி
நிரந்துபோய் மேய்ந்தனவால்.
14

ஆவினிரை மகிழ்வுறக்கண்
டளிகூர்ந்த அருளினராய்
மேவியவை மேய்விடத்துப்
பின்சென்று மேய்ந்தவைதாம்
காவிரிமுன் துறைத்தண்ணீர்
கலந்துண்டு கரையேறப்
பூவிரிதண் புறவின்நிழல்
இனிதாகப் புறங்காத்தார்.
15
Go to top

வெய்யசுடர்க் கதிரவனும்
மேல்பாலை மலையணையச்
சைவநெறி மெய்யுணர்ந்தோர்
ஆன்இனங்கள் தாமேமுன்
பையநடப் பனகன்றை
நினைந்துபடர் வனவாகி
வையநிகழ் சாத்தனூர்
வந்தெய்தப் பின்போனார்.
16

போனவர்தாம் பசுக்களெலாம்
மனைதோறும் புகநின்றார்
மானமுடை மனையாளும்
வைகியபின் தாழ்த்தார்என்று
ஆனபயத் துடன்சென்றே
அவர்நின்ற வழிகண்டாள்
ஈனம்இவர்க் கடுத்ததென
மெய்தீண்ட அதற்கிசையார்.
17

அங்கவளும் மக்களுடன்
அருஞ்சுற்றம் இல்லாதாள்
தங்கிவெரு வுறமயங்கி
என்செய்தீர் எனத்தளர
இங்குனக்கென் னுடன்அணைவொன்
றில்லையென எதிர்மறுத்துப்
பொங்குதவத் தோர்ஆங்கோர்
பொதுமடத்தின் உட்புக்கார்.
18

இல்லாளன் இயல்புவே
றானமைகண் டிரவெல்லாம்
சொல்லாடா திருந்தவர்பால்
அணையாது துயிலாதாள்
பல்லார்முன் பிற்றைநாள்
இவர்க்கடுத்த பரிசுரைப்ப
நல்லார்கள் அவர்திறத்து
நாடியே நயந்துரைப்பார்.
19

பித்துற்ற மயல்அன்று
பிறிதொருசார் புளதன்று
சித்தவிகற் பங்களைந்து
தெளிந்தசிவ யோகத்தில்
வைத்தகருத் தினராகி
வரம்பில்பெரு மையிலிருந்தார்
இத்தகைமை யளப்பரிதால்
யாராலும் எனவுரைப்பார்.
20
Go to top

பற்றறுத்த வுபதேசப்
பரமர்பதம் பெற்றார்போல்
முற்றுமுணர்ந் தனராகும்
முன்னைநிலை மையில்உங்கள்
சுற்றவியல் பினுக்கெய்தார்
என்றுரைப்பத் துயரெய்தி
மற்றவளும் மையலுற
மருங்குள்ளார் கொண்டகன்றார்.
21

இந்தநிலை மையிலிருந்தார்
எழுந்திருந்தங் கானிரைகள்
வந்தநெறி யேசென்று
வைத்தகாப் பினிலுய்த்த
முந்தையுடல் பொறைகாணார்
முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்தசெயல்
ஆராய்ந்து தெளிகின்றார்.
22

தண்ணிலவார் சடையார்தாம்
தந்தஆ கமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர்
வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணியஅத் திருவருளால்
அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த வுணர்வுடையார்
ஈசர்அரு ளெனவுணர்ந்தார்.
23

சுற்றியஅக் குலத்துள்ளார்
தொடர்ந்தார்க்குத் தொடர்வின்மை
முற்றவே மொழிந்தருள
அவர்மீண்டு போனதற்பின்
பெற்றம்மீ துயர்த்தவர்தாள்
சிந்தித்துப் பெருகார்வச்
செற்றமுதல் கடிந்தவர்தாம்
ஆவடுதண் டுறைசேர்ந்தார்.
24

ஆவடுதண் டுறையணைந்தங்
கரும்பொருளை யுறவணங்கி
மேவுவார் புறக்குடபால்
மிக்குயர்ந்த அரசின்கீழ்த்
தேவிருக்கை அமர்ந்தருளிச்
சிவயோகந் தலைநின்று
பூவலரும் இதயத்துப்
பொருளோடும் புணர்ந்திருந்தார்.
25
Go to top

ஊனுடம்பில் பிறவிவிடம்
தீர்ந்துலகத் தோருய்ய
ஞானமுதல் நான்குமலர்
நல்திருமந் திரமாலை
பான்மைமுறை ஓராண்டுக்
கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனஎயி றணிந்தாரை
ஒன்றவன்தா னெனஎடுத்து.
26

முன்னியஅப் பொருள்மாலைத்
தமிழ்மூவா யிரஞ்சாத்தி
மன்னியமூ வாயிரத்தாண்
டிப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னிமதி யணிந்தார்தந்
திருவருளால் திருக்கயிலை
தன்னிலணைந் தொருகாலும்
பிரியாமைத் தாளடைந்தார்.
27

நலஞ்சிறந்த ஞானயோ
கக்கிரியா சரியையெலாம்
மலர்ந்தமொழித் திருமூல
தேவர்மலர்க் கழல்வணங்கி
அலர்ந்தபுகழ்த் திருவாரூர்
அமணர்கலக் கங்கண்ட
தலங்குலவு விறல்தண்டி
யடிகள்திறஞ் சாற்றுவாம்.
28

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000