அந்தியிளம் பிறைக்கண்ணி
அண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு
முதற்பெருநா யகமாகி
இந்திரன்மால் அயன்முதலாம்
இமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற
நான்மறையோ கிகளொருவர்.
|
1
|
மற்றவர்தாம் அணிமாதி
வருஞ்சித்தி பெற்றுடையார்
கொற்றவனார் திருக்கயிலை
மலைநின்றுங் குறுமுனிபால்
உற்றதொரு கேண்மையினால்
உடன்சிலநாள் உறைவதற்கு
நற்றமிழின் பொதியமலை
நண்ணுதற்கு வழிக்கொண்டார்.
|
2
|
மன்னுதிருக் கேதாரம்
வழிபட்டு மாமுனிவர்
பன்னுபுகழ்ப் பசுபதிநே
பாளத்தைப் பணிந்தேத்தித்
துன்னுசடைச் சங்கரனார்
ஏற்றதூ நீர்க்கங்கை
அன்னமலி யகன்றுறைநீர்
அருங்கரையின் மருங்கணைந்தார்.
|
3
|
கங்கைநீள் துறையாடிக்
கருத்துறைநீள் கடலேற்றும்
அங்கணர்தாம் மகிழ்ந்தருளும்
அவிமுத்தம் பணிந்தேத்தி
மங்குல்வளர் வரைவிந்த
மன்னுபருப் பதம்இறைஞ்சித்
திங்களணி சடையர்திருக்
காளத்தி மலைசேர்ந்தார்.
|
4
|
நீடுதிருக் காளத்தி
நிலவுதா ணுவைவணங்கி
ஆடுதிரு வரங்கான
ஆலவனந் தொழுதேத்தித்
தேடும்இரு வர்க்கரியார்
திருஏகாம் பரம்பணிந்து
மாடுயர்மா மதிற்காஞ்சி
வளநகரின் வைகினார்.
|
5
|
| Go to top |
நற்பதியங் கமர்யோக
முனிவர்களை நயந்துபோய்க்
கற்புரிசைத் திருவதிகை
கலந்திறைஞ்சிக் கறைக்கண்டர்
அற்புதக்கூத் தாடுகின்ற
அம்பலஞ்சூழ் திருவீதிப்
பொற்பதியாம் பெரும்பற்றப்
புலியூரில் வந்தணைந்தார்.
|
6
|
எவ்வுலகும் உய்யவெடுத்
தாடியசே வடியாரைச்
செவ்வியஅன் புறவணங்கிச்
சிந்தைகளி வரத்திளைத்து
வவ்வியமெய் யுணர்வின்கண்
வருமானந் தக்கூத்தை
அவ்வியல்பில் கும்பிட்டங்
காராமை அமர்ந்திருந்தார்.
|
7
|
தடநிலைமா ளிகைப்புலியூர்
தன்னிலுறைந் திறைஞ்சிப்போய்
அடல்விடையின் மேல்வருவா
ரமுதுசெய வஞ்சாதே
விடமளித்த தெனக்கருதி
மேதினிக்கு வளநிறைத்தே
கடல்வயிறு நிறையாத
காவிரியின் கரையணைந்தார்.
|
8
|
காவிரிநீர்ப் பெருந் தீர்த்தங்
கலந்தாடிக் கடந்தேறி
ஆவின்அருங் கன்றுறையும்
ஆவடுதண் டுறையணைந்து
சேவில்வரும் பசுபதியார்
செழுங்கோயில் வலம்வந்து
மேவுபெருங் காதலினால்
பணிந்தங்கு விருப்புறுவார்.
|
9
|
அந்நிலைமைத் தானத்தை
அகலாத தொருகருத்து
முன்னியெழுங் குறிப்பினால்
மூளும் ஆதரவெய்தப்
பின்னுமகன் றேகுவார்
பேணவருங் கோக்குலங்கள்
பொன்னிநதிக் கரைப்புறவிற்
புலம்புவன எதிர்கண்டார்.
|
10
|
| Go to top |
அந்தணர்தஞ் சாத்தனூர்
ஆமேய்ப்பார் குடித்தோன்றி
முந்தைமுறை நிரைமேய்ப்பான்
மூலனெனும் பெயருடையான்
வந்துதனி மேய்க்கின்றான்
வினைமாள வாழ்நாளை
வெந்தொழில்வன் கூற்றுண்ண
வீடிநிலத் திடைவீழ்ந்தான்.
|
11
|
மற்றவன்றன் உடம்பினைஅக்
கோக்குலங்கள் வந்தணைந்து
சுற்றிமிகக் கதறுவன
சுழல்வனமோப் பனவாக
நற்றவயோ கிகள்காணா
நம்பரரு ளாலேயா
உற்றதுய ரிவைநீங்க
ஒழிப்பன்என வுணர்கின்றார்.
|
12
|
இவன்உயிர்பெற் றெழில்அன்றி
ஆக்களிடர் நீங்காவென்று
அவனுடலில் தம்முயிரை
அடைவிக்க அருள்புரியும்
தவமுனிவர் தம்முடம்புக்
கரண்செய்து தாம்முயன்ற
பவனவழி அவனுடலில்
தம்முயிரைப் பாய்த்தினார்.
|
13
|
பாய்த்தியபின் திருமூல
ராய்எழலும் பசுக்களெல்லாம்
நாத்தழும்ப நக்கிமோந்
தணைந்துகனைப் பொடுநயந்து
வாய்த்தெழுந்த களிப்பினால்
வாலெடுத்துத் துள்ளிப்பின்
நீத்ததுய ரினவாகி
நிரந்துபோய் மேய்ந்தனவால்.
|
14
|
ஆவினிரை மகிழ்வுறக்கண்
டளிகூர்ந்த அருளினராய்
மேவியவை மேய்விடத்துப்
பின்சென்று மேய்ந்தவைதாம்
காவிரிமுன் துறைத்தண்ணீர்
கலந்துண்டு கரையேறப்
பூவிரிதண் புறவின்நிழல்
இனிதாகப் புறங்காத்தார்.
|
15
|
| Go to top |
வெய்யசுடர்க் கதிரவனும்
மேல்பாலை மலையணையச்
சைவநெறி மெய்யுணர்ந்தோர்
ஆன்இனங்கள் தாமேமுன்
பையநடப் பனகன்றை
நினைந்துபடர் வனவாகி
வையநிகழ் சாத்தனூர்
வந்தெய்தப் பின்போனார்.
|
16
|
போனவர்தாம் பசுக்களெலாம்
மனைதோறும் புகநின்றார்
மானமுடை மனையாளும்
வைகியபின் தாழ்த்தார்என்று
ஆனபயத் துடன்சென்றே
அவர்நின்ற வழிகண்டாள்
ஈனம்இவர்க் கடுத்ததென
மெய்தீண்ட அதற்கிசையார்.
|
17
|
அங்கவளும் மக்களுடன்
அருஞ்சுற்றம் இல்லாதாள்
தங்கிவெரு வுறமயங்கி
என்செய்தீர் எனத்தளர
இங்குனக்கென் னுடன்அணைவொன்
றில்லையென எதிர்மறுத்துப்
பொங்குதவத் தோர்ஆங்கோர்
பொதுமடத்தின் உட்புக்கார்.
|
18
|
இல்லாளன் இயல்புவே
றானமைகண் டிரவெல்லாம்
சொல்லாடா திருந்தவர்பால்
அணையாது துயிலாதாள்
பல்லார்முன் பிற்றைநாள்
இவர்க்கடுத்த பரிசுரைப்ப
நல்லார்கள் அவர்திறத்து
நாடியே நயந்துரைப்பார்.
|
19
|
பித்துற்ற மயல்அன்று
பிறிதொருசார் புளதன்று
சித்தவிகற் பங்களைந்து
தெளிந்தசிவ யோகத்தில்
வைத்தகருத் தினராகி
வரம்பில்பெரு மையிலிருந்தார்
இத்தகைமை யளப்பரிதால்
யாராலும் எனவுரைப்பார்.
|
20
|
| Go to top |
பற்றறுத்த வுபதேசப்
பரமர்பதம் பெற்றார்போல்
முற்றுமுணர்ந் தனராகும்
முன்னைநிலை மையில்உங்கள்
சுற்றவியல் பினுக்கெய்தார்
என்றுரைப்பத் துயரெய்தி
மற்றவளும் மையலுற
மருங்குள்ளார் கொண்டகன்றார்.
|
21
|
இந்தநிலை மையிலிருந்தார்
எழுந்திருந்தங் கானிரைகள்
வந்தநெறி யேசென்று
வைத்தகாப் பினிலுய்த்த
முந்தையுடல் பொறைகாணார்
முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்தசெயல்
ஆராய்ந்து தெளிகின்றார்.
|
22
|
தண்ணிலவார் சடையார்தாம்
தந்தஆ கமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர்
வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணியஅத் திருவருளால்
அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த வுணர்வுடையார்
ஈசர்அரு ளெனவுணர்ந்தார்.
|
23
|
சுற்றியஅக் குலத்துள்ளார்
தொடர்ந்தார்க்குத் தொடர்வின்மை
முற்றவே மொழிந்தருள
அவர்மீண்டு போனதற்பின்
பெற்றம்மீ துயர்த்தவர்தாள்
சிந்தித்துப் பெருகார்வச்
செற்றமுதல் கடிந்தவர்தாம்
ஆவடுதண் டுறைசேர்ந்தார்.
|
24
|
ஆவடுதண் டுறையணைந்தங்
கரும்பொருளை யுறவணங்கி
மேவுவார் புறக்குடபால்
மிக்குயர்ந்த அரசின்கீழ்த்
தேவிருக்கை அமர்ந்தருளிச்
சிவயோகந் தலைநின்று
பூவலரும் இதயத்துப்
பொருளோடும் புணர்ந்திருந்தார்.
|
25
|
| Go to top |
ஊனுடம்பில் பிறவிவிடம்
தீர்ந்துலகத் தோருய்ய
ஞானமுதல் நான்குமலர்
நல்திருமந் திரமாலை
பான்மைமுறை ஓராண்டுக்
கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனஎயி றணிந்தாரை
ஒன்றவன்தா னெனஎடுத்து.
|
26
|
முன்னியஅப் பொருள்மாலைத்
தமிழ்மூவா யிரஞ்சாத்தி
மன்னியமூ வாயிரத்தாண்
டிப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னிமதி யணிந்தார்தந்
திருவருளால் திருக்கயிலை
தன்னிலணைந் தொருகாலும்
பிரியாமைத் தாளடைந்தார்.
|
27
|
நலஞ்சிறந்த ஞானயோ
கக்கிரியா சரியையெலாம்
மலர்ந்தமொழித் திருமூல
தேவர்மலர்க் கழல்வணங்கி
அலர்ந்தபுகழ்த் திருவாரூர்
அமணர்கலக் கங்கண்ட
தலங்குலவு விறல்தண்டி
யடிகள்திறஞ் சாற்றுவாம்.
|
28
|