சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.260   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

பூத்த பங்கயப் பொகுட்டின்மேற்
பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம்
புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
முதற்பதி வனப்பு.
1

நன்மை சாலும்அப் பதியிடை
நறுநுதல் மடவார்
மென்ம லர்த்தடம் படியமற்
றவருடன் விரவி
அன்னம் முன்துறை ஆடுவ
பாடுவ சாமம்
பன்ம றைக்கிடை யுடன்பயிற்
றுவபல பூவை.
2

ஆய்ந்த மெய்ப்பொருள் நீறென
வளர்க்கும்அக் காப்பில்
ஏய்ந்த மூன்றுதீ வளர்த்துளார்
இருபிறப் பாளர்
நீந்து நல்லறம் நீர்மையின்
வளர்க்கும்அத் தீயை
வாய்ந்த கற்புடன் நான்கென
வளர்ப்பர்கண் மடவார்.
3

சீலம் உய்த்தவத் திருமறை
யோர்செழு மூதூர்
ஞாலம் மிக்கநான் மறைப்பொருள்
விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்தகண் டத்தவர்
தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர்
நிகழ்ந்துளார் ஆனார்.
4

வேத உள்ளுறை யாவன
விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவரடி
யாரையும் நயந்து
பாத அர்ச்சனை புரிவதும்
பணிவதும் என்றே
காத லால்அவை இரண்டுமே
செய்கருத் துடையார்.
5
Go to top

மெய்த்த ஆகம விதிவழி
வேதகா ரணரை
நித்தல் பூசனை புரிந்தெழு
நியமமுஞ் செய்தே
அத்தர் அன்பருக் கமுதுசெய்
விப்பது முதலா
எத்தி றத்தன பணிகளும்
ஏற்றெதிர் செய்வார்.
6

ஆய செய்கையில் அமருநாள்
ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை
விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லைநீ
டயவந்தி அமர்ந்த
நாய னாரையும் அருச்சனை
புரிந்திட நயந்தார்.
7

உறையு ளாகிய மனைநின்றும்
ஒருமைஅன் புற்ற
முறைமை யால்வரு பூசைக்கும்
முற்றவேண் டுவன
குறைவ றக்கொண்டு மனைவியார்
தம்மொடுங் கூட
இறைவர் கோயில்வந் தெய்தினர்
எல்லையில் தவத்தோர்.
8

அணைய வந்துபுக் கயவந்தி
மேவிய அமுதின்
துணைம லர்க்கழல் தொழுதுபூ
சனைசெயத் தொடங்கி
இணைய நின்றங்கு வேண்டுவ
மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்தஅர்ச்
சனைமுறை உய்த்தார்.
9

நீடு பூசனை நிரம்பியும்
அன்பினால் நிரம்பார்
மாடு சூழ்புடை வலங்கொண்டு
வணங்கிமுன் வழுத்தித்
தேடு மாமறைப் பொருளினைத்
தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத் துணர்வுற
இருந்துமுன் நவின்றார்.
10
Go to top

தொலைவில் செய்தவத் தொண்டனார்
சுருதியே முதலாங்
கலையின் உண்மையாம் எழுத்தஞ்சுங்
கணிக்கின்ற காலை
நிலையின் நின்றுமுன் வழுவிட
நீண்டபொன் மேருச்
சிலையி னார்திரு மேனிமேல்
விழுந்ததோர் சிலம்பி.
11

விழுந்த போதில்அங் கயல்நின்ற
மனைவியார் விரைவுற்
றெழுந்த அச்சமோ டிளங்குழ
வியில்விழுஞ் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதிமுன்
துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதிமேல்
துமிந்தனர் போக.
12

பதைத்த செய்கையால் மனைவியார்
முற்செயப் பந்தஞ்
சிதைக்கு மாதவத் திருமறை
யவர்கண்டு தங்கண்
புதைத்து மற்றிது செய்ததென்
பொறியிலாய் என்னச்
சுதைச்சி லம்பிமேல் விழஊதித்
துமிந்தனன் என்றார்.
13

மனைவி யார்செய்த அன்பினை
மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல்மணி மார்பர்தம்
பூசனைத் திறத்தில்
இனைய செய்கைஇங் கநுசித
மாம்என எண்ணும்
நினைவி னால்அவர் தம்மைவிட்
டகன்றிட நீப்பார்.
14

மின்நெ டுஞ்சடை விமலர்மேல்
விழுந்தநூற் சிலம்பி
தன்னை வேறொரு பரிசினால்
தவிர்ப்பது தவிர
முன்அ ணைந்துவந் தூதிவாய்
நீர்ப்பட முயன்றாய்
உன்னை யான்இனித் துறந்தனன்
ஈங்கென உரைத்தார்.
15
Go to top

மற்ற வேலையிற் கதிரவன்
மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார்
ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுதுதீர்
பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டருங்
கடிமனை புகுந்தார்.
16

அஞ்சும் உள்ளமோ டவர்மருங்
கணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில்
நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான்மறைத் திருநீல
நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல்லணைப் பள்ளியிற்
பள்ளிகொள் கின்றார்.
17

பள்ளி கொள்பொழு தயவந்திப்
பரமர்தாங் கனவில்
வெள்ள நீர்ச்சடையோடுதம்
மேனியைக் காட்டி
உள்ளம் வைத்தெமை ஊதிமுன்
துமிந்தபால் ஒழியக்
கொள்ளும் இப்புறஞ் சிலம்பியின்
கொப்புள்என் றருள.
18

கண்ட அப்பெருங் கனவினை
நனவெனக் கருதிக்
கொண்ட அச்சமோ டஞ்சலி
குவித்துடன் விழித்துத்
தொண்ட னார்தொழு தாடினார்
பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப்
போற்றிநின் றழுதார்.
19

போது போயிருள் புலர்ந்திடக்
கோயிலுள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி
அமர்ந்தஅங் கணர்தம்
பாத மூலங்கள் பணிந்துவீழ்ந்
தெழுந்துமுன் பரவி
மாத ராரையுங் கொண்டுதம்
மனையில்மீண் டணைந்தார்.
20
Go to top

பின்பு முன்னையிற் பெருகிய
மகிழ்ச்சிவந் தெய்த
இன்பு றுந்திறத் தெல்லையில்
பூசனை இயற்றி
அன்பு மேம்படும் அடியவர்
மிகஅணை வார்க்கு
முன்பு போலவர் வேண்டுவ
விருப்புடன் முடிப்பார்.
21

அன்ன தன்மையில் அமர்ந்தினி
தொழுகும்அந் நாளில்
மன்னு பூந்தராய் வருமறைப்
பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட
மற்றவர் பாதம்
சென்னி வைத்துடன் சேர்வுறும்
விருப்பினிற் சிறந்தார்.
22

பண்பு மேம்படு நிலைமையார்
பயிலும்அப் பருவம்
மண்பெ ருந்தவப் பயன்பெற
மருவுநற் பதிகள்
விண்பி றங்குநீர் வேணியார்
தமைத்தொழ அணைவார்
சண்பை மன்னருஞ் சாத்தமங்
கையில்வந்து சார்ந்தார்.
23

நீடு சீர்த்திரு நீலகண்
டப்பெரும் பாணர்
தோடு லாங்குழல் விறலியார்
உடன்வரத் தொண்டர்
கூடும் அப்பெருங் குழாத்தொடும்
புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டுளம்
மகிழ்நீல நக்கர்.
24

கேட்ட அப்பொழு தேபெரு
மகிழ்ச்சியிற் கிளர்ந்து
தோட்ட லங்கலுங் கொடிகளும்
புனைந்துதோ ரணங்கள்
நாட்டி நீள்நடைக் காவண
மிட்டுநற் சுற்றத்
தீட்ட முங்கொடு தாமுமுன்
பெதிர்கொள எழுந்தார்.
25
Go to top

சென்று பிள்ளையார் எழுந்தரு
ளுந்திருக் கூட்டம்
ஒன்றி அங்கெதிர் கொண்டுதங்
களிப்பினால் ஒருவா
றன்றி ஆடியும் பாடியும்
தொழுதெழுந் தணைவார்
பொன்ற யங்குநீள் மனையிடை
யுடன்கொடு புகுந்தார்.
26

பிள்ளை யாரெழுந் தருளிய
பெருமைக்குத் தக்க
வெள்ள மாகிய அடியவர்
கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதர வோங்கிட
ஓங்குசீர்க் காழி
வள்ள லாரைத்தம் மனையிடை
அமுதுசெய் வித்தார்.
27

அமுது செய்தபின் பகலவன்
மேல்கடல் அணையக்
குமுத வாவியிற் குளிர்மதிக்
கதிரணை போதில்
இமய மங்கைதன் திருமுலை
அமுதுண்டார் இரவும்
தமது சீர்மனைத் தங்கிட
வேண்டுவ சமைத்தார்.
28

சீல மெய்த்திருத் தொண்டரோ
டமுதுசெய் தருளி
ஞாலம் உய்ந்திட நாயகி
யுடன்நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர்
அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்தடி
பணிந்துமுன் நின்றார்.
29

நின்ற அன்பரை நீலகண்
டயாழ்ப் பாணர்க்
கின்று தங்கஓர் இடங்கொடுத்
தருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை
வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க் கிடங்கொடுத்
தனர்திரு மறையோர்.
30
Go to top

ஆங்கு வேதியில் அறாதசெந்
தீவலஞ் சுழிவுற்
றோங்கி முன்னையில் ஒருபடித்
தன்றியே ஒளிரத்
தாங்கு நூலவர் மகிழ்வுறச்
சகோடயாழ்த் தலைவர்
பாங்கு பாணியா ருடன்அரு
ளாற்பள்ளி கொண்டார்.
31

கங்கு லிற்பள்ளி கொண்டபின்
கவுணியர் தலைவர்
அங்கு நின்றெழுந் தருளுவார்
அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீலநக்
கரைச்சிறப் பித்தே
பொங்கு செந்தமிழ்த் திருப்பதி
கத்தொடை புனைந்தார்.
32

பதிக நாண்மலர் கொண்டுதம்
பிரான்கழல் பரவி
அதிக நண்பினை நீலநக்
கருக்களித் தருளி
எதிர்தொ ழும்பதி களில்எழுந்
தருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை
மொழிந்தபூ சுரனார்.
33

பிள்ளை யார்எழுந் தருளஅத்
தொண்டர்தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும்
தவிர்ப்பில எனினும்
வள்ள லார்திரு வருளினை
வலியமாட் டாமை
உள்ளம் அங்குடன் போக்கிமீண்
டொருவகை இருந்தார்.
34

மேவு நாளில்அவ் வேதியர்
முன்புபோல் விரும்புந்
தாவில் பூசனை முதற்செய்கை
தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராந்
திருமறைச் சிறுவர்
பூவ டித்தலம் பொருந்திய
உணர்வொடும் பயின்றார்.
35
Go to top

சண்பை யாளியார் தாமெழுந்
தருளும்எப் பதியும்
நண்பு மேம்பட நாளிடைச்
செலவிட்டு நண்ணி
வண்பெ ரும்புக ழவருடன்
பயின்றுவந் துறைந்தார்
திண்பெ ருந்தொண்ட ராகிய
திருநீல நக்கர்.
36

பெருகு காதலில் பின்நெடு
நாள்முறை பிறங்க
வருபெ ருந்தவ மறையவர்
வாழிசீ காழி
ஒருவர் தந்திருக் கல்லியா
ணத்தினில் உடனே
திரும ணத்திறஞ் சேவித்து
நம்பர்தாள் சேர்ந்தார்.
37

தருதொ ழில்திரு மறையவர்
சாத்தமங் கையினில்
வருமு தற்பெருந் திருநீல
நக்கர்தாள் வணங்கி
இருபி றப்புடை அந்தணர்
ஏறுயர்த் தவர்பால்
ஒருமை உய்த்துணர் நமிநந்தி
யார்தொழில் உரைப்பாம்.
38

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000