பூத்த பங்கயப் பொகுட்டின்மேற்
பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம்
புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
முதற்பதி வனப்பு.
|
1
|
நன்மை சாலும்அப் பதியிடை
நறுநுதல் மடவார்
மென்ம லர்த்தடம் படியமற்
றவருடன் விரவி
அன்னம் முன்துறை ஆடுவ
பாடுவ சாமம்
பன்ம றைக்கிடை யுடன்பயிற்
றுவபல பூவை.
|
2
|
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறென
வளர்க்கும்அக் காப்பில்
ஏய்ந்த மூன்றுதீ வளர்த்துளார்
இருபிறப் பாளர்
நீந்து நல்லறம் நீர்மையின்
வளர்க்கும்அத் தீயை
வாய்ந்த கற்புடன் நான்கென
வளர்ப்பர்கண் மடவார்.
|
3
|
சீலம் உய்த்தவத் திருமறை
யோர்செழு மூதூர்
ஞாலம் மிக்கநான் மறைப்பொருள்
விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்தகண் டத்தவர்
தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர்
நிகழ்ந்துளார் ஆனார்.
|
4
|
வேத உள்ளுறை யாவன
விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவரடி
யாரையும் நயந்து
பாத அர்ச்சனை புரிவதும்
பணிவதும் என்றே
காத லால்அவை இரண்டுமே
செய்கருத் துடையார்.
|
5
|
| Go to top |
மெய்த்த ஆகம விதிவழி
வேதகா ரணரை
நித்தல் பூசனை புரிந்தெழு
நியமமுஞ் செய்தே
அத்தர் அன்பருக் கமுதுசெய்
விப்பது முதலா
எத்தி றத்தன பணிகளும்
ஏற்றெதிர் செய்வார்.
|
6
|
ஆய செய்கையில் அமருநாள்
ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை
விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லைநீ
டயவந்தி அமர்ந்த
நாய னாரையும் அருச்சனை
புரிந்திட நயந்தார்.
|
7
|
உறையு ளாகிய மனைநின்றும் ஒருமைஅன் புற்ற
முறைமை யால்வரு பூசைக்கும்
முற்றவேண் டுவன
குறைவ றக்கொண்டு மனைவியார்
தம்மொடுங் கூட
இறைவர் கோயில்வந் தெய்தினர்
எல்லையில் தவத்தோர்.
|
8
|
அணைய வந்துபுக் கயவந்தி
மேவிய அமுதின்
துணைம லர்க்கழல் தொழுதுபூ
சனைசெயத் தொடங்கி
இணைய நின்றங்கு வேண்டுவ
மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்தஅர்ச்
சனைமுறை உய்த்தார்.
|
9
|
நீடு பூசனை நிரம்பியும்
அன்பினால் நிரம்பார்
மாடு சூழ்புடை வலங்கொண்டு வணங்கிமுன் வழுத்தித்
தேடு மாமறைப் பொருளினைத்
தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத் துணர்வுற
இருந்துமுன் நவின்றார்.
|
10
|
| Go to top |
தொலைவில் செய்தவத் தொண்டனார்
சுருதியே முதலாங்
கலையின் உண்மையாம் எழுத்தஞ்சுங்
கணிக்கின்ற காலை
நிலையின் நின்றுமுன் வழுவிட
நீண்டபொன் மேருச்
சிலையி னார்திரு மேனிமேல்
விழுந்ததோர் சிலம்பி.
|
11
|
விழுந்த போதில்அங் கயல்நின்ற
மனைவியார் விரைவுற்
றெழுந்த அச்சமோ டிளங்குழ
வியில்விழுஞ் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதிமுன்
துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதிமேல்
துமிந்தனர் போக.
|
12
|
பதைத்த செய்கையால் மனைவியார்
முற்செயப் பந்தஞ்
சிதைக்கு மாதவத் திருமறை
யவர்கண்டு தங்கண்
புதைத்து மற்றிது செய்ததென்
பொறியிலாய் என்னச்
சுதைச்சி லம்பிமேல் விழஊதித்
துமிந்தனன் என்றார்.
|
13
|
மனைவி யார்செய்த அன்பினை
மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல்மணி மார்பர்தம்
பூசனைத் திறத்தில்
இனைய செய்கைஇங் கநுசித மாம்என எண்ணும்
நினைவி னால்அவர் தம்மைவிட் டகன்றிட நீப்பார்.
|
14
|
மின்நெ டுஞ்சடை விமலர்மேல்
விழுந்தநூற் சிலம்பி
தன்னை வேறொரு பரிசினால்
தவிர்ப்பது தவிர
முன்அ ணைந்துவந் தூதிவாய் நீர்ப்பட முயன்றாய்
உன்னை யான்இனித் துறந்தனன்
ஈங்கென உரைத்தார்.
|
15
|
| Go to top |
மற்ற வேலையிற் கதிரவன்
மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார்
ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுதுதீர்
பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டருங்
கடிமனை புகுந்தார்.
|
16
|
அஞ்சும் உள்ளமோ டவர்மருங்
கணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில்
நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான்மறைத் திருநீல
நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல்லணைப் பள்ளியிற்
பள்ளிகொள் கின்றார்.
|
17
|
பள்ளி கொள்பொழு தயவந்திப்
பரமர்தாங் கனவில்
வெள்ள நீர்ச்சடையோடுதம்
மேனியைக் காட்டி
உள்ளம் வைத்தெமை ஊதிமுன்
துமிந்தபால் ஒழியக்
கொள்ளும் இப்புறஞ் சிலம்பியின்
கொப்புள்என் றருள.
|
18
|
கண்ட அப்பெருங் கனவினை
நனவெனக் கருதிக்
கொண்ட அச்சமோ டஞ்சலி
குவித்துடன் விழித்துத்
தொண்ட னார்தொழு தாடினார்
பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப்
போற்றிநின் றழுதார்.
|
19
|
போது போயிருள் புலர்ந்திடக்
கோயிலுள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி
அமர்ந்தஅங் கணர்தம்
பாத மூலங்கள் பணிந்துவீழ்ந்
தெழுந்துமுன் பரவி
மாத ராரையுங் கொண்டுதம்
மனையில்மீண் டணைந்தார்.
|
20
|
| Go to top |
பின்பு முன்னையிற் பெருகிய
மகிழ்ச்சிவந் தெய்த
இன்பு றுந்திறத் தெல்லையில்
பூசனை இயற்றி
அன்பு மேம்படும் அடியவர்
மிகஅணை வார்க்கு
முன்பு போலவர் வேண்டுவ
விருப்புடன் முடிப்பார்.
|
21
|
அன்ன தன்மையில் அமர்ந்தினி
தொழுகும்அந் நாளில்
மன்னு பூந்தராய் வருமறைப்
பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட
மற்றவர் பாதம்
சென்னி வைத்துடன் சேர்வுறும்
விருப்பினிற் சிறந்தார்.
|
22
|
பண்பு மேம்படு நிலைமையார்
பயிலும்அப் பருவம்
மண்பெ ருந்தவப் பயன்பெற
மருவுநற் பதிகள்
விண்பி றங்குநீர் வேணியார்
தமைத்தொழ அணைவார்
சண்பை மன்னருஞ் சாத்தமங்
கையில்வந்து சார்ந்தார்.
|
23
|
நீடு சீர்த்திரு நீலகண்
டப்பெரும் பாணர்
தோடு லாங்குழல் விறலியார்
உடன்வரத் தொண்டர்
கூடும் அப்பெருங் குழாத்தொடும்
புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டுளம்
மகிழ்நீல நக்கர்.
|
24
|
கேட்ட அப்பொழு தேபெரு
மகிழ்ச்சியிற் கிளர்ந்து
தோட்ட லங்கலுங் கொடிகளும்
புனைந்துதோ ரணங்கள்
நாட்டி நீள்நடைக் காவண
மிட்டுநற் சுற்றத்
தீட்ட முங்கொடு தாமுமுன்
பெதிர்கொள எழுந்தார்.
|
25
|
| Go to top |
சென்று பிள்ளையார் எழுந்தரு
ளுந்திருக் கூட்டம்
ஒன்றி அங்கெதிர் கொண்டுதங்
களிப்பினால் ஒருவா
றன்றி ஆடியும் பாடியும்
தொழுதெழுந் தணைவார்
பொன்ற யங்குநீள் மனையிடை யுடன்கொடு புகுந்தார்.
|
26
|
பிள்ளை யாரெழுந் தருளிய
பெருமைக்குத் தக்க
வெள்ள மாகிய அடியவர்
கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதர வோங்கிட
ஓங்குசீர்க் காழி
வள்ள லாரைத்தம் மனையிடை
அமுதுசெய் வித்தார்.
|
27
|
அமுது செய்தபின் பகலவன்
மேல்கடல் அணையக்
குமுத வாவியிற் குளிர்மதிக்
கதிரணை போதில்
இமய மங்கைதன் திருமுலை
அமுதுண்டார் இரவும்
தமது சீர்மனைத் தங்கிட
வேண்டுவ சமைத்தார்.
|
28
|
சீல மெய்த்திருத் தொண்டரோ
டமுதுசெய் தருளி
ஞாலம் உய்ந்திட நாயகி
யுடன்நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர்
அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்தடி
பணிந்துமுன் நின்றார்.
|
29
|
நின்ற அன்பரை நீலகண்
டயாழ்ப் பாணர்க்
கின்று தங்கஓர் இடங்கொடுத்
தருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை
வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க் கிடங்கொடுத்
தனர்திரு மறையோர்.
|
30
|
| Go to top |
ஆங்கு வேதியில் அறாதசெந்
தீவலஞ் சுழிவுற்
றோங்கி முன்னையில் ஒருபடித்
தன்றியே ஒளிரத்
தாங்கு நூலவர் மகிழ்வுறச்
சகோடயாழ்த் தலைவர்
பாங்கு பாணியா ருடன்அரு
ளாற்பள்ளி கொண்டார்.
|
31
|
கங்கு லிற்பள்ளி கொண்டபின்
கவுணியர் தலைவர்
அங்கு நின்றெழுந் தருளுவார்
அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீலநக்
கரைச்சிறப் பித்தே
பொங்கு செந்தமிழ்த் திருப்பதி
கத்தொடை புனைந்தார்.
|
32
|
பதிக நாண்மலர் கொண்டுதம்
பிரான்கழல் பரவி
அதிக நண்பினை நீலநக்
கருக்களித் தருளி
எதிர்தொ ழும்பதி களில்எழுந்
தருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை
மொழிந்தபூ சுரனார்.
|
33
|
பிள்ளை யார்எழுந் தருளஅத்
தொண்டர்தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும்
தவிர்ப்பில எனினும்
வள்ள லார்திரு வருளினை
வலியமாட் டாமை
உள்ளம் அங்குடன் போக்கிமீண்
டொருவகை இருந்தார்.
|
34
|
மேவு நாளில்அவ் வேதியர்
முன்புபோல் விரும்புந்
தாவில் பூசனை முதற்செய்கை
தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராந்
திருமறைச் சிறுவர்
பூவ டித்தலம் பொருந்திய
உணர்வொடும் பயின்றார்.
|
35
|
| Go to top |
சண்பை யாளியார் தாமெழுந்
தருளும்எப் பதியும்
நண்பு மேம்பட நாளிடைச்
செலவிட்டு நண்ணி
வண்பெ ரும்புக ழவருடன்
பயின்றுவந் துறைந்தார்
திண்பெ ருந்தொண்ட ராகிய
திருநீல நக்கர்.
|
36
|
பெருகு காதலில் பின்நெடு
நாள்முறை பிறங்க
வருபெ ருந்தவ மறையவர்
வாழிசீ காழி
ஒருவர் தந்திருக் கல்லியா
ணத்தினில் உடனே
திரும ணத்திறஞ் சேவித்து
நம்பர்தாள் சேர்ந்தார்.
|
37
|
தருதொ ழில்திரு மறையவர்
சாத்தமங் கையினில்
வருமு தற்பெருந் திருநீல
நக்கர்தாள் வணங்கி
இருபி றப்புடை அந்தணர்
ஏறுயர்த் தவர்பால்
ஒருமை உய்த்துணர் நமிநந்தி
யார்தொழில் உரைப்பாம்.
|
38
|