சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.250   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

தாண்டவம் புரிய வல்ல
தம்பிரா னாருக் கன்பர்
ஈண்டிய புகழின் பாலார்
எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்டசீர் அரசின் பாதம்
அடைந்தவர் அறியா முன்னே
காண்டகு காதல் கூரக்
கலந்தஅன் பினராய் உள்ளார்.
1

களவுபொய் காமம் கோபம்
முதலிய குற்றங் காய்ந்தார்
வளமிகு மனையின் வாழ்க்கை
நிலையினார் மனைப்பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள்
ஆவொடு மேதி மற்றும்
உளவெலாம் அரசின் நாமஞ்
சாற்றும்அவ் வொழுகல் ஆற்றார்.
2

வடிவுதாங் காணா ராயும்
மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையுந் தம்பி ரானார்
அருளுங்கேட் டவர்நா மத்தால்
படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப்
பந்தர்கள் முதலா யுள்ள
முடிவிலா அறங்கள் செய்து
முறைமையால் வாழும் நாளில்.
3

பொருப்பரையன் மடப்பிடியி
னுடன்புணருஞ் சிவக்களிற்றின்
திருப்பழனம் பணிந்துபணி
செய்திருநா வுக்கரசர்
ஒருப்படுகா தலிற்பிறவும்
உடையவர்தம் பதிவணங்கும்
விருப்பினொடுந் திங்களூர்
மருங்குவழி மேவுவார்.
4

அளவில்சனஞ் செலவொழியா
வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய்
உறுவேனில் பரிவகற்றிக்
குளநிறைந்த நீர்த்தடம்போல்
குளிர்தூங்கும் பரப்பினதாய்
வளமருவும் நிழல்தருதண்
ணீர்ப்பந்தர் வந்தணைந்தார்.
5
Go to top

வந்தணைந்த வாகீசர்
மந்தமா ருதசீதப்
பந்தருடன் அமுதமாந்
தண்ணீரும் பார்த்தருளிச்
சிந்தைவியப் புறவருவார்
திருநாவுக் கரசெனும்பேர்
சந்தமுற வரைந்ததனை
எம்மருங்குந் தாங்கண்டார்.
6

இப்பந்தர் இப்பெயரிட்
டிங்கமைத்தார் யார்என்றார்க்
கப்பந்தர் அறிந்தார்கள்
ஆண்டஅர செனும்பெயரால்
செப்பருஞ்சீர் அப்பூதி
அடிகளார் செய்தமைத்தார்
தப்பின்றி எங்குமுள
சாலைகுளங் காவென்றார்.
7

என்றுரைக்க அரசுகேட்
டிதற்கென்னோ கருத்தென்று
நின்றவரை நோக்கிஅவர்
எவ்விடத்தார் எனவினவத்
துன்றியநூல் மார்பரும்இத்
தொல்பதியார் மனையின்கண்
சென்றனர்இப் பொழுததுவும்
சேய்த்தன்று நணித்தென்றார்.
8

அங்ககன்று முனிவரும்போய்
அப்பூதி அடிகளார்
தங்குமனைக் கடைத்தலைமுன்
சார்வாக உள்ளிருந்த
திங்களூர் மறைத்தலைவர்
செழுங்கடையில் வந்தடைந்தார்
நங்கள்பிரான் தமர்ஒருவர்
எனக்கேட்டு நண்ணினார்.
9

கடிதணைந்து வாகீசர்
கழல்பணிய மற்றவர்தம்
அடிபணியா முன்பணியும்
அரசின்எதிர் அந்தணனார்
முடிவில்தவஞ் செய்தேன்கொல்
முன்பொழியுங் கருணைபுரி
வடிவுடையீர் என்மனையில்
வந்தருளிற் றென்என்றார்.
10
Go to top

ஒருகுன்ற வில்லாரைத்
திருப்பழனத் துள்ளிறைஞ்சி
வருகின்றோம் வழிக்கரையில்
நீர்வைத்த வாய்ந்தவளம்
தருகின்ற நிழல்தண்ணீர்ப்
பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற அறம்பிறவும்
கேட்டணைந்தோம் எனப்புகல்வார்.
11

ஆறணியுஞ் சடைமுடியார்
அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப்பந்
தரில்நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத
வேண்டியகா ரணம்என்கொல்
கூறும்என எதிர்மொழிந்தார்
கோதில்மொழிக் கொற்றவனார்.
12

நின்றமறை யோர்கேளா
நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர்
நாணில்அமண் பதகருடன்
ஒன்றியமன் னவன்சூட்சி
திருத்தொண்டின் உறைப்பாலே
வென்றவர்தந் திருப்பேரோ
வேறொருபேர் எனவெகுள்வார்.
13

நம்மையுடை யவர்கழற்கீழ்
நயந்ததிருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பதென
என்போல்வா ருந்தெளியச்
செம்மைபுரி திருநாவுக்
கரசர்திருப் பெயரெழுத
வெம்மைமொழி யான்கேட்க
விளம்பினீர் எனவிளம்பி.
14

பொங்குகடல் கல்மிதப்பில்
போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில்
அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத்
துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார்
இயம்பும்என இயம்பினார்.
15
Go to top

திருமறையோர் அதுமொழியத்
திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார்
பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத
சிறுமையேன் யான்என்றார்.
16

அரசறிய உரைசெய்ய
அப்பூதி அடிகள்தாம்
கரகமல மிசைகுவியக்
கண்ணருவி பொழிந்திழிய
உரைகுழறி உடம்பெல்லாம்
உரோமபுள கம்பொலியத்
தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ்
சரணகம லம்பூண்டார்.
17

மற்றவரை எதிர்வணங்கி
வாகீசர் எடுத்தருள
அற்றவர்கள் அருநிதியம்
பெற்றார்போல் அருமறையோர்
முற்றவுளங் களிகூர
முன்னின்று கூத்தாடி
உற்றவிருப் புடன்சூழ
ஓடினார் பாடினார்.
18

மூண்டபெரு மகிழ்ச்சியினால்
முன்செய்வ தறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி
இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டஅர செழுந்தருளும்
ஓகைஉரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங்
கொடுமீளப் புறப்பட்டார்.
19

மனைவியா ருடன்மக்கள்
மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையுங் கொண்டிறைஞ்சி
ஆராத காதலுடன்
முனைவரைஉள் ளெழுந்தருளு
வித்தவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல்
தெளித்துள்ளும் பூரித்தார்.
20
Go to top

ஆசனத்தில் பூசனைகள்
அமர்வித்து விருப்பினுடன்
வாசநிறை திருநீற்றுக்
காப்பேந்தி மனந்தழைப்பத்
தேசம்உய்ய வந்தவரைத்
திருவமுது செய்விக்கும்
நேசம்உற விண்ணப்பம்
செயஅவரும் அதுநேர்ந்தார்.
21

செய்தவர் இசைந்த போது
திருமனை யாரை நோக்கி
எய்திய பேறு நம்பால்
இருந்தவா றென்னே என்று
மைதிகழ் மிடற்றி னான்தன்
அருளினால் வந்த தென்றே
உய்தும்என் றுவந்து கொண்டு
திருவமு தாக்கல் உற்றார்.
22

தூயநற் கறிக ளான
அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆயஇன் னமுதும் ஆக்கி
அமுதுசெய் தருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த
திருநாவுக் கரசை வாழை
மேயபொற் குருத்துக் கொண்டு
வாஎன விரைந்து விட்டார்.
23

நல்லதாய் தந்தை ஏவ
நான்இது செயப்பெற் றேன்என்
றொல்லையில் அணைந்து தோட்டத்
துள்புக்குப் பெரிய வாழை
மல்லவங் குருத்தை ஈரும்
பொழுதினில் வாள ராஒன்
றல்லல்உற் றழுங்கிச் சோர
அங்கையில் தீண்டிற் றன்றே.
24

கையினிற் கவர்ந்து சுற்றிக்
கண்ணெரி காந்து கின்ற
பையர வுதறி வீழ்த்துப்
பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா
முன்னம்வே கத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று
கொடுப்பன்என் றோடி வந்தான்.
25
Go to top

பொருந்திய விடவே கத்தில்
போதுவான் வேகம் முந்த
வருந்தியே அணையும் போழ்து
மாசுணங் கவர்ந்த தியார்க்கும்
அருந்தவர் அமுது செய்யத்
தாழ்க்கயான் அறையேன் என்று
திருந்திய கருத்தி னோடுஞ்
செழுமனை சென்று புக்கான்.
26

எரிவிடம் முறையே ஏறித்
தலைக்கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும்
மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி
விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
பரிகலக் குருத்தைத் தாயார்
பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்.
27

தளர்ந்துவீழ் மகனைக் கண்டு
தாயருந் தந்தை யாரும்
உளம்பதைத் துற்று நோக்கி
உதிரஞ்சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியுங் கண்டு
விடத்தினால் வீந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர்
அமுதுசெய் வதற்குச் சூழ்வார்.
28

பெறலரும் புதல்வன் தன்னைப்
பாயினுள் பெய்து மூடிப்
புறமனை முன்றிற் பாங்கோர்
புடையினில் மறைத்து வைத்தே
அறஇது தெரியா வண்ணம்
அமுதுசெய் விப்போம் என்று
விறலுடைத் தொண்ட னார்பால்
விருப்பொடு விரைந்து வந்தார்.
29

கடிதுவந் தமுது செய்யக்
காலந்தாழ்க் கின்ற தென்றே
அடிசிலும் கறியும் எல்லாம்
அழகுற அணைய வைத்துப்
படியில்சீர்த் தொண்ட னார்முன்
பணிந்தெழுந் தமுது செய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீர்
என்றவர் கூறக் கேட்டு.
30
Go to top

அருந்தவர் எழுந்து செய்ய
அடியிணை விளக்கி வேறோர்
திருந்தும்ஆ சனத்தில் ஏறிப்
பரிகலந் திருத்து முன்னர்
இருந்துவெண் ணீறு சாத்தி
இயல்புடை இருவ ருக்கும்
பொருந்திய நீறு நல்கிப்
புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.
31

ஆதிநான் மறைநூல் வாய்மை
அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ
திங்கவன் உதவான் என்றார்.
32

அவ்வுரை கேட்ட போதே
அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திருஉள் ளத்தோர்
தடுமாற்றஞ் சேர நோக்கி
இவ்வுரை பொறாதென் உள்ளம்
என்செய்தான் இதற்கொன் றுண்டால்
மெய்விரித் துரையும் என்ன
விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி.
33

பெரியவர் அமுது செய்யும்
பேறிது பிழைக்க என்னோ
வருவதென் றுரையா ரேனும்
மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டுஞ்
சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்
குற்றது பகர்ந்தார் அன்றே.
34

நாவினுக் கரசர் கேளா
நன்றுநீர் மொழிந்த வண்ணம்
யாவர்இத் தன்மை செய்தார்
என்றுமுன் எழுந்து சென்றே
ஆவிதீர் சவத்தை நோக்கி
அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப்
பணிவிடம் பாற்று வித்தார்.
35
Go to top

தீவிடம் நீங்க உய்ந்த
திருமறை யவர்தஞ் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி
விரைந்தெழு வானைப் போன்று
சேவுகைத் தவர்ஆட் கொண்ட
திருநாவுக் கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு
புனிதநீ றளித்தார் அன்றே.
36

பிரிவுறும் ஆவி பெற்ற
பிள்ளையைக் காண்பார் தொண்டின்
நெறியினைப் போற்றி வாழ்ந்தார்
நின்றஅப் பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர்
அமுதுசெய் தருளு தற்குச்
சிறிதிடை யூறு செய்தான்
இவனென்று சிந்தை நொந்தார்.
37

ஆங்கவர் வாட்டந் தன்னை
அறிந்துசொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி
அமுதுசெய் தருள வுற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல்
பயில்மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடுந்
தகுவன சமைத்துச் சார்வார்.
38

புகழ்ந்தகோ மயத்து நீரால்
பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்தவான் சுதையும் போக்கிச்
சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்தஅக் கதலி நீண்ட
குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய்
வலம்பட மன்னு வித்தார்.
39

திருந்திய வாச நன்னீர்
அளித்திடத் திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப்
பிள்ளைக ளுடனே நோக்கி
அரும்புதல் வர்களும் நீரும்
அமுதுசெய் வீர்இங் கென்ன
விரும்பிய உள்ளத் தோடு
மேலவர் ஏவல் செய்வார்.
40
Go to top

மைந்தரும் மறையோர் தாமும்
மருங்கிருந் தமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர்
திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக்
கூத்தனார் அடியா ரோடும்
அந்தமி ழாளி யார்அங்
கமுதுசெய் தருளி னாரே.
41

மாதவ மறையோர் செல்வ
மனையிடை அமுது செய்து
காதல்நண் பளித்துப் பன்னாள்
கலந்துடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர்
விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து
நற்றமிழ்ப் பதிகஞ் செய்தார்.
42

அப்பூதி யடிக ளார்தம்
அடிமையைச் சிறப்பித் தான்ற
மெய்ப்பூதி அணிந்தார் தம்மை
விரும்புசொன் மாலை வேய்ந்த
இப்பூதி பெற்ற நல்லோர்
எல்லையில் அன்பால் என்றும்
செப்பூதி யங்கைக் கொண்டார்
திருநாவுக் கரசர் பாதம்.
43

இவ்வகை அரசின் நாமம்
ஏத்திஎப் பொருளும் நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே
எனவுணர்ந் தடைவார் செல்லும்
செவ்விய நெறிய தாகத்
திருத்தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர்
நற்கழல் நண்ணி னாரே
44

மான்மறிக் கையர் பொற்றாள்
வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மைஅப் பூதி யாராம்
வேதியர் பாதம் போற்றிக்
கான்மலர்க் கமல வாவிக்
கழனிசூழ் சாத்த மங்கை
நான்மறை நீல நக்கர்
திருத்தொழில் நவிலல் உற்றேன்.
45
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000