பூந்தண் பொன்னி எந்நாளும்
பொய்யா தளிக்கும் புனல்நாட்டு
வாய்ந்த மண்ணித் தென்கரையில்
மன்ன முன்னாள் வரைகிழிய
ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி
இமையோர் இகல்வெம் பகைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்.
|
1
|
செம்மை வெண்ணீற் றொருமையினார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத் தழலோம் பியநெறியார்
நான்கு வேதம் முறைபயின்றார்
தம்மை ஐந்து புலனும்பின் செல்லுந்
தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை யொழுக்கம் ஏழுலகும்
போற்றும் மறையோர் விளங்குவது.
|
2
|
கோதில் மான்தோல் புரிமுந்நூல்
குலவும் மார்பில் குழைக்குடுமி
ஓது கிடைசூழ் சிறுவர்களும்
உதவும் பெருமை ஆசானும்
போதின் விளங்குந் தாரகையும்
மதியும் போலப் புணர்மடங்கள்
மீது முழங்கு முகிலொதுங்க
வேத ஒலிகள் முழங்குவன.
|
3
|
யாகம் நிலவும் சாலைதொறும்
மறையோர் ஈந்த அவியுணவின்
பாகம் நுகர வருமாலும்
அயனும் ஊரும் படர்சிறைப்புள்
மாகம் இகந்து வந்திருக்கும்
சேக்கை யெனவும் வானவர்கோன்
நாகம் அணையுங் கந்தெனவும்
நாட்டும் யூப ஈட்டமுள.
|
4
|
தீம்பால் ஒழுகப் பொழுதுதொறும்
ஓம தேனுச் செல்வனவும்
தாம்பா டியசா மங்கணிப்போர்
சமிதை யிடக்கொண் டணைவனவும்
பூம்பா சடைநீர்த் தடம்மூழ்கி
மறையோர் மகளிர் புகுவனவும்
ஆம்பான் மையினில் விளங்குவன
அணிநீள் மறுகு பலவுமுள.
|
5
|
| Go to top |
வாழ்பொற் பதிமற் றதன்மருங்கு
மண்ணித் திரைகள் வயல்வரம்பின்
தாழ்வில் தரளஞ் சொரிகுலைப்பால்
சமைத்த யாகத் தடஞ்சாலை
சூழ்வைப் பிடங்கள் நெருங்கியுள
தொடங்கு சடங்கு முடித்தேறும்
வேள்வித் தலைவர் பெருந்தேர்கள்
விண்ணோர் ஏறும் விமானங்கள்.
|
6
|
மடையில் கழுநீர் செழுநீர்சூழ்
வயலில் சாலிக் கதிர்க்கற்றை
புடையில் சுரும்பு மிடைகமுகு
புனலில் பரம்பு பூம்பாளை
அடையில் பயிலுந் தாமரைநீள்
அலரில் துயிலும் கயல்கள்வழி
நடையில் படர்மென் கொடிமௌவல்
நனையில் திகழுஞ் சினைக்காஞ்சி.
|
7
|
சென்னி அபயன் குலோத்துங்கச்
சோழன் தில்லைத் திருவெல்லை
பொன்னின் மயமாக் கியவளவர்
போரே றென்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன்
வருந்தொல் மரபின் முடிசூட்டுந்
தன்மை நிலவு பதிஐந்தின்
ஒன்றாய் விளங்குந் தகைத்தவ்வூர்.
|
8
|
பண்ணின் பயனாம் நல்லிசையும்
பாலின் பயனாம் இன்சுவையும்
கண்ணின் பயனாம் பெருகொளியும்
கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும்
விண்ணின் பயனாம் பொழிமழையும்
வேதப் பயனாம் சைவமும்போல்
மண்ணின் பயனாம் அப்பதியின்
வளத்தின் பெருமை வரம்புடைத்தோ.
|
9
|
பெருமை பிறங்கும் அப்பதியின்
மறையோர் தம்முள் பெருமனைவாழ்
தருமம் நிலவு காசிபகோத்
திரத்துத் தலைமை சால்மரபில்
அருமை மணியும் அளித்ததுவே
நஞ்சும் அளிக்கும் அரவுபோல்
இருமை வினைக்கும் ஒருவடிவாம்
எச்ச தத்தன் உளனானான்.
|
10
|
| Go to top |
மற்றை மறையோன் திருமனைவி
வாய்ந்த மரபின் வந்துதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத்
தொழிலாள் உலகில் துணைப்புதல்வற்
பெற்று விளங்குந் தவஞ்செய்தாள்
பெறும்பே றெல்லைப் பயன்பெறுவாள்
பற்றை யெறியும் பற்றுவரச்
சார்பா யுள்ள பவித்திரையாம்.
|
11
|
நன்றி புரியும் அவர்தம்பால்
நன்மை மறையின் துறைவிளங்க
என்றும் மறையோர் குலம்பெருக ஏழு புவனங் களும்உய்ய
மன்றில் நடஞ்செய் பவர்சைவ
வாய்மை வளர மாதவத்தோர்
வென்றி விளங்க வந்துதயம்
செய்தார் விசார சருமனார்.
|
12
|
ஐந்து வருடம் அவர்க்கணைய
அங்கம் ஆறும் உடன்நிறைந்த
சந்த மறைகள் உட்படமுன்
தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை யறிவின் தொடர்ச்சியினால்
முகைக்கும் மலரின் வாசம்போல்
சிந்தை மலர உடன்மலரும்
செவ்வி யுணர்வு சிறந்ததால்.
|
13
|
நிகழும் முறைமை ஆண்டேழும்
நிரம்பும் பருவம் வந்தெய்தப்
புகழும் பெருமை உபநயனப்
பொருவில் சடங்கு முடித்தறிவின்
இகழு நெறிய அல்லாத
எல்லாம் இயைந்த வெனினும்தம்
திகழு மரபின் ஓதுவிக்கும்
செய்கை பயந்தார் செய்வித்தார்.
|
14
|
குலவு மறையும் பலகலையும்
கொளுத்து வதன்முன் கொண்டமைந்த
நிலவும் உணர்வின் திறங்கண்டு
நிறுவும் மறையோர் அதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்கெல்லை
ஆடுங் கழலே எனக்கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில்
தெளிந்தார் சிறிய பெருந்தகையார்.
|
15
|
| Go to top |
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் எனும்மெய்ம்மை
உடனே தோன்றும் உணர்வின்கண்
ஒழியா தூறும் வழியன்பின்
கடனே இயல்பாய் முயற்றிவருங்
காதல் மேன்மேல் எழுங்கருத்தின்
திடநேர் நிற்குஞ் செம்மலார்
திகழு நாளில் ஆங்கொருநாள்.
|
16
|
ஓது கிடையின் உடன்போவார்
ஊர்ஆன் நிரையின் உடன்புக்க
போது மற்றங் கொருபுனிற்றா
போற்றும் அவன்மேன் மருப்போச்ச
யாது மொன்றுங் கூசாதே
யெடுத்த கோல்கொண் டவன்புடைப்ப
மீது சென்று மிகும்பரிவால்
வெகுண்டு விலக்கி மெய்யுணர்ந்து.
|
17
|
பாவுங் கலைகள் ஆகமநூல்
பரப்பின் தொகுதிப் பான்மையினால்
மேவும் பெருமை அருமறைகள்
மூல மாக விளங்குலகில்
யாவுந் தெளிந்த பொருளின்நிலையே
எய்த உணர்ந்த உள்ளத்தால்
ஆவின் பெருமை உள்ளபடி
அறிந்தார் ஆயற் கருள்செய்வார்.
|
18
|
தங்கும் அகில யோனிகட்கும்
மேலாம் பெருமைத் தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள்
எல்லா மென்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர்
கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்துந் தாமுடைய
அல்ல வோநல் ஆனினங்கள்.
|
19
|
ஆய சிறப்பி னால்பெற்ற
அன்றே மன்றுள் நடம்புரியும்
நாய னார்க்கு வளர்மதியும்
நதியும் நகுவெண் டலைத்தொடையும்
மேய வேணித் திருமுடிமேல்
விரும்பி யாடி அருளுதற்குத்
தூய திருமஞ் சனம்ஐந்தும்
அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்.
|
20
|
| Go to top |
சீலம் உடைய கோக்குலங்கள்
சிறக்குந் தகைமைத் தேவருடன்
கால முழுதும் உலகனைத்தும்
காக்கும் முதற்கா ரணராகும்
நீல கண்டர் செய்யசடை
நிருத்தர் சாத்து நீறுதரும்
மூலம் அவதா ரஞ்செய்யும்
மூர்த்தம் என்றால் முடிவென்னோ.
|
21
|
உள்ளுந் தகைமை இனிப்பிறவே
றுளவே உழைமான் மறிக்கன்று
துள்ளுங் கரத்தார் அணிபணியின்
சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர்
தெள்ளுஞ் சடையார் தேவர்கள்தம்
பிராட்டி யுடனே சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர்
குலமன் றோஇச் சுரபிகுலம்.
|
22
|
என்றின் னனவே பலவும்நினைந்
திதத்தின் வழியே மேய்த்திந்தக்
கன்று பயில்ஆன் நிரைகாக்கும்
இதன்மே லில்லை கடனிதுவே
மன்றுள் ஆடுஞ் சேவடிகள்
வழுத்து நெறியா வதும்என்று
நின்ற ஆயன் தனைநோக்கி
நிரைமேய்ப் பொழிக நீயென்பார்.
|
23
|
யானே இனியிந் நிரைமேய்ப்பன்
என்றார் அஞ்சி இடைமகனும்
தானேர் இறைஞ்சி விட்டகன்றான்
தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேராயம்
அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு
வானே யென்ன நிரைகாக்க
வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.
|
24
|
கோலும் கயிறும் கொண்டுகுழைக்
குடுமி அலையக் குலவுமான்
தோலும் நூலுஞ் சிறுமார்பில்
துவள அரைக்கோ வணஞ்சுடரப்
பாலும் பயனும் பெருகவரும்
பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்
சாலும் புல்லின் அவைவேண்டுந்
தனையும் மிசையுந் தலைச்சென்று.
|
25
|
| Go to top |
பதவு காலங் களின்மேய்த்தும்
பறித்தும் அளித்தும் பரிவகற்றி
இதமுண் துறையுள் நற்றண்ணீர்
ஊட்டி அச்சம் எதிர்நீக்கி
அதர்நல் லனமுன் செலநீழல்
அமர்வித் தமுத மதுரப்பால்
உதவும் பொழுது பிழையாமல்
உடையோர் இல்லந் தொறுமுய்த்தார்.
|
26
|
மண்ணிக் கரையின் வளர்புறவின்
மாடும் படுகர் மருங்கினிலும்
தண்ணித் திலநீர் மருதத்தண்
டலைசூழ் குலையின் சார்பினிலும்
எண்ணிற் பெருகு நிரைமேய்த்துச்
சமிதை யுடன்மேல் எரிகொண்டு
நண்ணிக் கங்குல் முன்புகுதும்
நன்னாள் பலவாம் அந்நாளில்.
|
27
|
ஆய நிரையின் குலமெல்லாம்
அழகின் விளங்கி மிகப்பல்கி
மேய இனிய புல்லுணவும்
விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி
எய்த இரவும் நண்பகலும்
தூய தீம்பால் மடிபெருகிச்
சொரிய முலைகள் சுரந்தனவால்.
|
28
|
பூணுந் தொழில்வேள் விச்சடங்கு
புரிய ஓம தேனுக்கள்
காணும் பொலிவில் முன்னையினும்
அனேக மடங்கு கறப்பனவாய்ப்
பேணுந் தகுதி அன்பால்இப்
பிரம சாரி மேய்த்ததற்பின்
மாணுந் திறத்த வானவென
மறையோர் எல்லாம் மனமகிழ்ந்தார்.
|
29
|
அனைத்துத் திறத்தும் ஆனினங்கள்
அணைந்த மகிழ்ச்சி அளவின்றி
மனைக்கண் கன்று பிரிந்தாலும்
மருவுஞ் சிறிய மறைக்கன்று
தனைக்கண் டருகு சார்ந்துருகித்
தாயாந் தன்மை நிலையினவாய்க்
கனைத்துச் சுரந்து முலைக்கண்கள்
கறவா மேபால் பொழிந்தனவால்.
|
30
|
| Go to top |
தம்மை அணைந்த ஆன்முலைப்பால்
தாமே பொழியக் கண்டுவந்து
செம்மை நெறியே உறுமனத்தில்
திருமஞ் சனமாங் குறிப்புணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார்
எய்த நினைந்து தெளிந்ததனில்
மெய்ம்மைச் சிவனார் பூசனையை
விரும்பும் வேட்கை விளைந்தெழலும்.
|
31
|
அங்கண் முன்னை அர்ச்சனையின்
அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணிமணற்
புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி
மணலால் ஆக்கிச் சிவாலயமும்
துங்க நீடு கோபுரமுஞ் சுற்றா
லயமும் வகுத்தமைத்தார்.
|
32
|
ஆத்தி மலரும் செழுந்தளிரும்
முதலா அருகு வளர்புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து
புனிதர் சடிலத் திருமுடிமேல்
சாத்த லாகுந் திருப்பள்ளித்
தாமம் பலவுந் தாங்கொய்து
கோத்த இலைப்பூங் கூடையினில்
கொணர்ந்து மணந்தங் கிடவைத்தார்.
|
33
|
நல்ல நவகும் பங்கள்பெற
நாடிக் கொண்டு நாணற்பூங்
கொல்லை இடத்துங் குறைமறைவும்
மேவுங் கோக்கள் உடன்கூட
ஒல்லை யணைந்து பாலாக்கள்
ஒன்றுக் கொருகா லாகவெதிர்
செல்ல அவையுங் கனைத்துமுலை
தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்.
|
34
|
கொண்டு மடுத்த குடம்நிறையக்
கொணர்ந்து விரும்புங் கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண்மணல்ஆ
லயத்துள் அவைமுன் தாபித்து
வண்டு மருவுந் திருப்பள்ளித்
தாமங் கொண்டு வரன்முறையே
பண்டைப் பரிவால் அருச்சித்துப்
பாலின் திருமஞ் சனமாட்டி.
|
35
|
| Go to top |
மீள மீள இவ்வண்ணம்
வெண்பால் சொரிமஞ் சனமாட்ட
ஆள உடையார் தம்முடைய
அன்ப ரன்பின் பாலுளதாய்
மூள அமர்ந்த நயப்பாடு
முதிர்ந்த பற்று முற்றச்சூழ்
கோளம் அதனில் உள்நிறைந்து
குறித்த பூசை கொளநின்றார்.
|
36
|
பெருமை பிறங்குஞ் சேய்ஞ்ஞலூர்ப்
பிள்ளை யார்தம் உள்ளத்தில்
ஒருமை நினைவால் உம்பர்பிரான்
உவக்கும் பூசை உறுப்பான
திருமஞ் சனமே முதலவற்றில்
தேடா தனஅன் பினில்நிரப்பி
வரும்அந் நெறியே அர்ச்சனைசெய்
தருளி வணங்கி மகிழ்கின்றார்.
|
37
|
இறையோன் அடிக்கீழ் மறையவனார்
எடுத்துத் திருமஞ் சனமாட்டும்
நிறைபூ சனைக்குக் குடங்கள்பால்
நிரம்பச் சொரிந்து நிரைக்குலங்கள்
குறைபா டின்றி மடிபெருகக்
குவிந்த முலைப்பால் குறைவின்றி
மறையோர் மனையின் முன்புதரும்
வளங்கள் பொலிய வைகுமால்.
|
38
|
செயலிப் படியே பலநாளும்
சிறந்த பூசை செய்வதற்கு
முயல்வுற் றதுவே திருவிளையாட்
டாக முந்நூல் அணிமார்பர்
இயல்பில் புரியும் மற்றிதனைக்
கண்டித் திறத்தை யறியாத
அயல்மற் றொருவன் அப்பதியில்
அந்த ணாளர்க் கறிவித்தான்.
|
39
|
அச்சொற் கேட்ட அருமறையோர்
ஆயன் அறியான் என்றவற்றின்
இச்சை வழியே யான்மேய்ப்பேன்
என்றெம் பசுக்கள் தமைக்கறந்து
பொச்சம் ஒழுகு மாணவகன்
பொல்லாங் குரைக்க அவன்தாதை
எச்ச தத்தன் தனையழைமின்
என்றார் அவையில் இருந்தார்கள்.
|
40
|
| Go to top |
ஆங்கு மருங்கு நின்றார்கள்
அவ்வந் தணன்தன் திருமனையின்
பாங்கு சென்று மற்றவனை
அழைத்துக் கொண்டு வரப்பகர்ந்த
ஓங்கு சபையோர் அவனைப்பார்த்
தூர்ஆன் நிரைமேய்த் துன்மகன்செய்
தீங்கு தன்னைக் கேளென்று
புகுந்த பரிசு செப்புவார்.
|
41
|
அந்தண் மறையோர் ஆகுதிக்குக்
கறக்கும் பசுக்க ளானவெலாம்
சிந்தை மகிழ்ந்து பரிவினால்
திரளக் கொடுபோய் மேய்ப்பான்போல்
கந்தம் மலிபூம் புனல்மண்ணி
மணலில் கறந்து பாலுகுத்து
வந்த பரிசே செய்கின்றான்
என்றான் என்று வாய்மொழிந்தார்.
|
42
|
மறையோர் மொழியக் கேட்டஞ்சிச்
சிறுமா ணவகன் செய்தஇது
இறையும் நான்முன் பறிந்திலேன்
இதற்கு முன்பு புகுந்ததனை
நிறையும் பெருமை அந்தணர்காள்
பொறுக்க வேண்டும் நீங்களெனக்
குறைகொண் டிறைஞ்சி இனிப்புகுதில்
குற்றம் எனதே யாம்என்றான்.
|
43
|
அந்த ணாளர் தமைவிடைகொண்
டந்தி தொழுது மனைபுகுந்து
வந்த பழியொன் றெனநினைந்தே
மகனார் தமக்கு வாய்நேரான்
இந்த நிலைமை அறிவேனென்
றிரவு கழிந்து நிரைமேய்க்க
மைந்த னார்தாம் போயினபின்
மறைந்து சென்றான் மறைமுதியோன்.
|
44
|
சென்ற மறையோன் திருமகனார்
சிறந்த ஊர்ஆன் நிரைகொடுபோய்
மன்றல் மருவும் புறவின்கண்
மேய்ப்பார் மண்ணி மணற்குறையில்
அன்று திரளக் கொடுசென்ற
அதனை யறிந்து மறைந்தப்பால்
நின்ற குரவின் மிசையேறி
நிகழ்வ தறிய ஒளித்திருந்தான்.
|
45
|
| Go to top |
அன்பு புரியும் பிரமசா
ரிகளும் மூழ்கி அரனார்க்கு
முன்பு போல மணற்கோயில்
ஆக்கி முகைமென் மலர்கொய்து
பின்பு வரும்ஆன் முலைபொழிபால்
பெருகுங் குடங்கள் பேணுமிடந்
தன்பாற் கொணர்ந்து தாபித்துப்
பிறவும் வேண்டு வனசமைத்தார்.
|
46
|
நின்ற விதியின் விளையாட்டால்
நிறைந்த அரும்பூ சனைதொடங்கி
ஒன்றும் உள்ளத் துண்மையினால்
உடைய நாதன் திருமுடிமேல்
மன்றல் விரவுந் திருப்பள்ளித்
தாமம் சாத்தி மஞ்சனமா
நன்று நிறைதீம் பாற்குடங்கள்
எடுத்து நயப்புற் றாட்டுதலும்.
|
47
|
பரவ மேன்மேல் எழும்பரிவும்
பழைய பான்மை மிகும்பண்பும்
விரவ மேதக் கவர்தம்பால்
மேவும் பெருமை வெளிப்படுப்பான்
அரவம் மேவுஞ் சடைமுடியார்
அருளாம் என்ன அறிவழிந்து
குரவு மேவும் முதுமறையோன்
கோபம் மேவும் படிகண்டான்.
|
48
|
கண்ட போதே விரைந்திழிந்து
கடிது சென்று கைத்தண்டு
கொண்டு மகனார் திருமுதுகில்
புடைத்துக் கொடிதாம் மொழிகூறத்
தொண்டு புரியுஞ் சிறியபெருந்
தோன்ற லார்தம் பெருமான்மேல்
மண்டு காதல் அருச்சனையில்
வைத்தார் மற்றொன் றறிந்திலரால்.
|
49
|
மேலாம் பெரியோர் பலகாலும்
வெகுண்டோன் அடிக்க வேறுணரார்
பாலார் திருமஞ் சனமாட்டும்
பணியிற் சலியா ததுகண்டு
மாலா மறையோன் மிகச்செயிர்த்து
வைத்த திருமஞ் சனக்குடப்பால்
காலா லிடறிச் சிந்தினான் கையாற்
கடைமைத் தலைநின்றான்.
|
50
|
| Go to top |
சிந்தும் பொழுதில் அதுநோக்கும்
சிறுவர் இறையில் தீயோனைத்
தந்தை யெனவே அறிந்தவன்தன்
தாள்கள் சிந்துந் தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்தகோல்
எடுத்தார்க் கதுவே முறைமையினால்
வந்து மழுவா யிடஎறிந்தார்
மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்.
|
51
|
எறிந்த அதுவே அர்ச்சனையில்
இடையூ றகற்றும் படையாக
மறிந்த தாதை இருதாளும்
துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த இடையூ றகற்றினராய்
முன்போல் அருச்சித் திடப்புகலும்
செறிந்த சடைநீள் முடியாரும்
தேவி யோடும் விடையேறி.
|
52
|
பூத கணங்கள் புடைசூழப்
புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிகள் எடுத்தேத்த
விமல மூர்த்தி திருவுள்ளம்
காதல் கூர வெளிப்படலும்
கண்டு தொழுது மனங்களித்துப்
பாத மலர்கள் மேல்விழுந்தார்
பத்தி முதிர்ந்த பாலகனார்.
|
53
|
தொடுத்த இதழி சூழ்சடையார்
துணைத்தாள் நிழற்கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம்பொருட்டால்
ஈன்ற தாதை விழவெறிந்தாய்
அடுத்த தாதை இனியுனக்கு
நாம்என் றருள்செய் தணைத்தருளி
மடுத்த கருணை யால்தடவி
உச்சி மோந்து மகிழ்ந்தருள.
|
54
|
செங்கண் விடையார் திருமலர்க்கை
தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின்மேல்
அளவின் றுயர்ந்த சிவமயமாய்ப்
பொங்கி யெழுந்த திருவருளின்
மூழ்கிப் பூமேல் அயன்முதலாம்
துங்க அமரர் துதிசெய்யச்
சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
|
55
|
| Go to top |
அண்டர் பிரானும் தொண்டர்தமக்
கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோம்
என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.
|
56
|
எல்லா உலகும் ஆர்ப்பெடுப்ப
எங்கும் மலர்மா ரிகள்பொழியப்
பல்லா யிரவர் கணநாதர்
பாடி ஆடிக் களிபயிலச்
சொல்லார் மறைகள் துதிசெய்யச்
சூழ்பல் லியங்கள் எழச்சைவ
நல்லா றோங்க நாயகமாம்
நங்கள் பெருமான் தொழுதணைந்தார்.
|
57
|
ஞாலம் அறியப் பிழைபுரிந்து
நம்பர் அருளால் நான்மறையின்
சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப்
பிள்ளை யார்தந் திருக்கையில்
கோல மழுவால் ஏறுண்டு
குற்றம் நீங்கிச் சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோகம்
எய்தப் பெற்றான் முதுமறையோன்.
|
58
|
வந்து மிகைசெய் தாதைதாள்
மழுவால் துணித்த மறைச்சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார்
ஈறி லாதார் தமக்கன்பு
தந்த அடியார் செய்தனவே
தவமா மன்றோ சாற்றுங்கால்.
|
59
|
நேசம் நிறைந்த உள்ளத்தால்
நீலம் நிறைந்த மணிகண்டத்
தீசன் அடியார் பெருமையினை
எல்லா உயிரும் தொழவெடுத்துத்
தேசம் உய்யத் திருத்தொண்டத்
தொகைமுன் பணித்த திருவாளன்
வாச மலர்மென் கழல்வணங்க
வந்த பிறப்பை வணங்குவாம்
|
60
|
| Go to top |