சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.190   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு.
1

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டைநன் னாடு.
2

நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகால்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கிஅச் சொல்லையே காககப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு.
3

ஆணை யாமென நீறுகண் டடிச்சேரன் என்னும்
சேணு லாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு
வாணி லாவுபூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது பெருந்தொண்டை நாடு.
4

கறைவி ளங்கிய கண்டர்பால் காதல்செய்ம் முறைமை
நிறைபு ரிந்திட நேரிழை அறம்புரிந் ததனால்
பிறையு ரிஞ்செயிற் பதிபயில் பெருந்தொண்டை நாடு
முறைமை யாமென உலகினில் மிகுமொழி உடைத்தால்.

5
Go to top

தாவில் செம்மணி அருவியா றிழிவன சாரல்
பூவில் வண்டினம் புதுநற வருந்துவ புறவம்
வாவி நீள்கயல் வரம்பிற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.
6

குறவர் பன்மணி அரித்திதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன்நிரை மானுடன் பயில்வன கானம்
பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனஞ்
சுறவ முள்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்.
7

கொண்டல் வானத்தின் மணிசொரி வனகுல வரைப்பால்
தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால்
வண்டல் முத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால்
கண்டல் முன்துறைக் கரிசொரி வனகலங் கடற்பால்.
8

தேனி றைந்தசெந் தினையிடி தருமலைச் சீறூர்
பானி றைந்தபுற் பதத்தன முல்லைநீள் பாடி
தூநெ லன்னம்நெய் கன்னலின் கனியதண் டுறையூர்
மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள்.
9

குழல்செய் வண்டினங் குறிஞ்சியாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார்கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென்கிளி மருதமர் சேக்கைய மருதம்
நிழல்செய் கைதைசூழ் நெய்தலங் கழியன நெய்தல்.
10
Go to top

மல்கும் அப்பெரு நிலங்களில் வரைபுணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல்முன் விளைக்கும்
பல்பெ ரும்புனம் பயில்வன படர்சிறைத் தோகை
சொல்லும் அப்புனங் காப்பவுஞ் சுரிகுழல் தோகை.
11

அங்கண் வான்மிசை அரம்பையர் கருங்குழற் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல்மூழ்கிப் போகாச்
செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னும்
மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.
12

பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறில் வேடரும் மாதரு மாகவே வணங்கும்
ஆறு சூழ்சடை அண்ணலார் திருவிடைச் சுரமுங்
கூறு மேன்மையின் மிக்கதந் நாட்டுவண் குறிஞ்சி.
13

அம்பொன் வார்குழல் கொடிச்சியர் உடன்அர மகளிர்
வம்பு லாமலர்ச் சுனைபடிந் தாடுநீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமும் உடைத்தால்
கொம்பர் வண்டுசூழ் குறிஞ்சிசெய் தவங்குறை யுளதோ.
14

கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள்
நீல வாட்படை நீலிகோட் டங்களும் நிரந்து
கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப்
பாலை யுஞ்சொல லாவன உளபரல் முரம்பு.
15
Go to top

சொல்லும் எல்லையின் புறத்தன
துணர்ச்சுரும் பலைக்கும்
பல்பெ ரும்புனல் கானியா
றிடையிடை பரந்து
கொல்லை மெல்லிணர்க் குருந்தின்மேல்
படர்ந்தபூம் பந்தர்
முல்லை மென்புதல் முயலுகைத்
தடங்குநீள் முல்லை.
16

பிளவு கொண்டதண் மதிநுதற் பேதையர் எயிற்றைக்
களவு கொண்டது தளவெனக் களவலர் தூற்றும்
அளவு கண்டவர் குழல்நிறங் கனியும்அக் களவைத்
தளவு கண்டெதிர் சிரிப்பன தமக்குமுண் டென்று.
17

மங்கை யர்க்குவாள் விழியிணை
தோற்றமான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கிடை
மலர்க்கொடி யெங்கும்
அங்கண் முல்லையின் தெய்வமென்
றருந்தமிழ் உரைக்கும்
செங்கண் மால்தொழும் சிவன்மகிழ்
திருமுல்லை வாயில்.
18

நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேல்
மாறில் கங்கைதான் வாக்கும்மஞ் சனம்தர அணைந்தே
ஊறு நீர்தரும் ஒளிமலர்க் கலிகைமா நகரை
வேறு தன்பெரு வைப்பென விளங்குமா முல்லை.
19

வாச மென்மலர் மல்கிய முல்லைசூழ் மருதம்
வீசு தெண்டிரை நதிபல மிக்குயர்ந் தோடிப்
பாச டைத்தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும்
பூசல் வன்கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.
20
Go to top

துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலஞ் சந்தனம் அகிலொடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி.
21

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட
வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப்
பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.
22

அனைய வாகிய நதிபரந்
தகன்பணை மருங்கில்
கனைநெ டும்புனல் நிறைந்துதிண்
கரைப்பொரும் குளங்கள்
புனையி ருங்கடி மதகுவாய்
திறந்திடப் புறம்போய்
வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர்
வழங்குவ வியன்கால்.
23

மாறில் வண்பகட் டேர்பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண்முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவ ரான
வேறு பல்வினை யுடைப்பெருங் கம்பலை மிகுமால்.
24

வரும்பு னற்பெருங் கால்களை மறித்திட வாளை
பெருங்கு லைப்பட விலங்குவ பிறங்குநீர்ப் பழனம்
நெருங்கு சேற்குல முயர்த்துவ நீள்கரைப் படுத்துச்
சுருங்கை நீர்வழக் கறுப்பன பருவரால் தொகுதி.
25
Go to top

தளைத்த டம்பணை எழுந்தசெந் தாமரைத் தவிசின்
இளைத்த சூல்வளை கண்படுப் பனஇடை யெங்கும்
விளைத்த பாசொளி விளங்குநீள் விசும்பிடை யூர்கோள்
வளைத்த மாமதி போன்றுள மருதநீர் வைப்பு.
26

ஓங்கு செந்நெலின் புடையன உயர்கழைக் கரும்பு
பூங்க ரும்பயல் மிடைவன பூகம்அப் பூகப்
பாங்கு நீள்குலைத் தெங்குபைங் கதலிவண் பலவு
தூங்கு தீங்கனிச் சூதநீள் வேலிய சோலை.
27

நீடு தண்பணை உடுத்தநீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்தெதிர் கொள்ளும்
பீடு தங்கிய பெருங்குடி மனையறம் பிறங்கும்
மாட மோங்கிய மறுகின மல்லல்மூ தூர்கள்.

28

தொல்லை நான்மறை முதற்பெருங் கலையொலி துவன்றி
இல்ல றம்புரிந் தாகுதி வேள்வியில் எழுந்த
மல்கு திண்புகை மழைதரு முகிற்குலம் பரப்பும்
செல்வ மோங்கிய திருமறை யவர்செழும் பதிகள்.
29

தீது நீங்கிடத் தீக்கலி யாம்அவு ணற்கு
நாதர் தாமருள் புரிந்தது நல்வினைப் பயன்செய்
மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.
30
Go to top

அருவி தந்தசெம் மணிகளும் புறவில்ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின்
மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்தமாற் பேறாம்
பொருவில் கோயிலுஞ் சூழ்ந்ததப் பூம்பணை மருதம்.
31

விரும்பு மேன்மையென் பகர்வது விரிதிரை நதிகள்
அருங்க ரைப்பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து
பருங்கை யானையை உரித்தவர் இருந்தஅப் பாசூர்
மருங்கு சூழ்தவம் புரிந்ததன் றோமற்ற மருதம்.
32

பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்
தாம ருங்கிளை உடன்தட மென்மலர் மிலைந்து
மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலும்
காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
33

தூய வெண்டுறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேரளத் தளவர்கள் அளப்பன உப்பு
சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.
34

கொடுவி னைத்தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படும ணற்கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடுக டற்சங்கு துறையவர் குளிப்பன அவர்தம்
வடுவ கிர்க்கண்மங் கையர்குளிப் பனமணற் கேணி.
35
Go to top

சுழிப்பு னற்கடல் ஓதமுன் சூழ்ந்துகொண் டணிய
வழிக்க ரைப்பொதிப் பொன்னவிழ்ப் பனமலர்ப் புன்னை
விழிக்கு நெய்தலின் விரைமலர்க் கண்சுரும் புண்ணக்
கழிக்க ரைப்பொதி சோறவிழ்ப் பனமடற் கைதை.
36

காயல் வண்கரைப் புரைநெறி அடைப்பன கனிமுள்
சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும்முண் டகங்கள்
ஆய நுண்மணல் வெண்மையை மறைப்பன அன்னந்
தாய முன்துறைச் சூழல்சூழ் ஞாழலின் தாது.
37

வாம்பெ ருந்திரை வளாகமுன் குடிபயில் வரைப்பில்
தாம்ப ரப்பிய கயல்களின் விழிக்கயல் தவிரக்
காம்பின் நேர்வருந் தோளியர் கழிக்கயல் விலைசெய்
தேம்பொ திந்தசின் மழலைமென் மொழியசெவ் வழியாழ்.
38

மருட்கொ டுந்தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கலென் றெழுதும்
ஒருத்தர் தம்பெருங் கோயிலின் ஒருபுறஞ் சூழ்ந்த
திருப்ப ரப்பையும் உடையதத் திரைக்கடல் வரைப்பு.

39

மெய்த ரும்புகழ்த் திருமயி லாபுரி விரைசூழ்
மொய்த யங்குதண் பொழில்திரு வான்மியூர் முதலாப்
பைத ரும்பணி அணிந்தவர் பதியெனைப் பலவால்
நெய்தல் எய்தமுன் செய்தஅந் நிறைதவம் சிறிதோ.
40
Go to top

கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து
மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்
ஆடு நீள்கொடி மாடமா மல்லையே அனைய.
41

மலைவி ழிப்பன எனவயற் சேல்வரைப் பாறைத்
தலையு கைப்பவுந் தளைச்செறு விடைநெடுங் கருமான்
கலைகு திப்பன கரும்பகட் டேர்நிகர்ப் பவுமாய்
அலைபு னற்பணை குறிஞ்சியோ டணைவன அனேகம்.
42

புணர்ந்த ஆனிரைப் புறவிடைக் குறுமுயல் பொருப்பின்
அணைந்த வான்மதி முயலினை இனமென அணைந்து
மணங்கொள் கொல்லையில் வரகுபோர் மஞ்சன வரைக்கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்.
43

கவரும் மீன்குவை கழியவர் கானவர்க் களித்துச்
சிவலுஞ் சேவலும் மாறியுஞ் சிறுகழிச் சியர்கள்
அவரை ஏனலுக் கெயிற்றியர் பவளமுத் தளந்தும்
உவரி நெய்தலுங் கானமுங் கலந்துள ஒழுக்கம்.
44

அயல்ந றும்புற வினில்இடைச் சியர்அணி நடையும்
வியன்நெ டும்பணை உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும் எதிரெதிர் பயில
வயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு.
45
Go to top

மீளும் ஓதம்முன் கொழித்தவெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலிற் பரத்தியர் பணைமென்
தோளு ழத்தியர் மகளிர்மா றாடிமுன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள்.
46

ஆய நானிலத் தமைதியில் தத்தமக் கடுத்த
மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித்
தீய வென்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத்
தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்புசொல் வரைத்தோ.
47

இவ்வ ளந்தரு பெருந்திரு நாட்டிடை என்றும்
மெய்வ ளந்தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ்வு கங்களும் உள்ளதென் றியாவரும் ஏத்தும்
கைவி ளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்.
48

ஆன தொன்னகர் அம்பிகை தம்பெரு மானை
மான அர்ச்சனை யாலொரு காலத்து வழிபட்
டூன மில்அறம் அனேகமும் உலகுய்ய வைத்த
மேன்மை பூண்டஅப் பெருமையை அறிந்தவா விளம்பில்.
49

வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகையா ளுடையாள்.
50
Go to top

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்
பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.
51

நங்கை உள்நிறை காதலை நோக்கி
நாய கன்திரு வுள்ளத்து  மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலுந் தோன்ற
அடுத்த தென்கொல்நின்  பாலென வினவ
இங்கு நாதநீ மொழிந்தஆ கமத்தின்
இயல்பி னால்உனை அர்ச்சனை புரியப்
பொங்கு கின்றதென் னாசையென் றிறைஞ்சிப்
போக மார்த்தபூண் முலையினாள் போற்ற.
52

தேவ தேவனும் அதுதிரு வுள்ளஞ்
செய்து தென்திசை மிக்கசெய் தவத்தால்
யாவ ருந்தனை யடைவது மண்மேல்
என்று முள்ளது காஞ்சிமற் றதனுள்
மாஅ மர்ந்தநம் இருக்கையி லணைந்து
மன்னு பூசனை மகிழ்ந்துசெய் வாயென்
றேவ வெம்பெரு மாட்டியும் பிரியா
விசைவு கொண்டெழுந் தருளுதற் கிசைந்தாள்.
53

ஏத மில்பல யோனிஎண் பத்து
நான்கு நூறாயி ரந்தனுள் வைத்த
பேத மும்புரந் தருளும்அக் கருணைப்
பிரான்மொ ழிந்தஆ கமவழி பேணிப்
போது நீர்மையில் தொழுதனள் போதப்
பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந் தெய்தி
மாத வம்புரிந் தருளுதற் கமைந்த
வளத்தொ டும்பரி சனங்களை விடுத்தான்.
54

துன்னு பல்லுயிர் வானவர் முதலாச்
சூழ்ந்து டன்செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர்வரும் பதுமமா நாகந்
தம்பி ராட்டிதாள் தலைமிசை வைத்தே
அன்னை யாயுல கனைத்தையும் ஈன்றாய்
அடிய னேன்உறை பிலமத னிடையே
மன்னு கோயில்கொண் டருளுவாய் என்ன
மலைம டந்தைமற் றதற்கருள் புரிந்து.
55
Go to top

அங்கு மண்ணுல கத்துயிர் தழைப்ப
அளவில் இன்பத்தின் அருட்கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரிசடை யார்க்குத்
திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவுந் திருவிளை யாட்டால்
ஏக மாமுதல் எதிர்ப்படா தொழியப்
பொங்கு மாதவஞ் செய்துகாண் பதற்கே
புரிவு செய்தனள் பொன்மலை வல்லி.
56

நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி
நிரந்த ரந்திரு வாக்கினில் நிகழ்வ
தஞ்செ ழுத்துமே யாகஆ ளுடைய
அம்மை செம்மலர்க் கைகுவித் திறைஞ்சித்
தஞ்ச மாகிய அருந்தவம் புரியத்
தரிப்ப ரேஅவள் தனிப்பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின்மூ லத்தில்
வந்து தோன்றினார் மலைமகள் காண.
57

கண்ட போதிலப் பெருந்தவப் பயனாம்
கம்பம் மேவிய தம்பெரு மானை
வண்டு லாங்குழற் கற்றைமுன் தாழ
வணங்கி வந்தெழும் ஆசைமுன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்பள வின்றிக்
குறித்த பூசனை கொள்கைமேற் கொண்டு
தொண்டை யங்கனி வாயுமை நங்கை
தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.
58

உம்பர் நாயகர் பூசனைக் கவர்தாம்
உரைத்த ஆகமத் துண்மையே  தலைநின்
றெம்பி ராட்டிஅர்ச் சனைபுரி வதனுக்
கியல்பில் வாழ்திருச் சேடிய ரான
கொம்ப னார்கள்பூம் பிடகைகொண் டணையக்
குலவு மென்தளி ரடியிணை யொதுங்கி
அம்பி காவன மாந்திரு வனத்தி
லான தூநறும் புதுமலர் கொய்தாள்.
59

கொய்த பன்மலர் கம்பைமா நதியில்
குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு
நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய்த ரும்படி வேண்டின வெல்லாம்
வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை
எய்த ஆகம விதியெலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்றவெம் பிராட்டி.
60
Go to top

கரந்த ரும்பயன் இதுவென உணர்ந்து
கம்பம் மேவிய உம்பர்நா யகர்பால்
நிரந்த காதல்செய் உள்ளத்த ளாகி
நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரந்த ரும்பொரு ளாம்மலை வல்லி
மாறி லாவகை மலர்ந்தபே ரன்பால்
சிரம்ப ணிந்தெழு பூசைநா டோறுந்
திருவு ளங்கொளப் பெருகிய தன்றே.
61

நாத ரும்பெரு விருப்பொடு நயந்து
நங்கை யர்ச்சனை செய்யுமப் பொழுதில்
காதல் மிக்கதோர் திருவிளை யாட்டில்
கனங்கு ழைக்கருள் புரிந்திட வேண்டி
ஓத மார்கடல் ஏழும்ஒன் றாகி
ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல்வரக் கம்பை
வெள்ள மாந்திரு உள்ளமுஞ் செய்தார்.
62

அண்ண லாரருள் வெள்ளத்தை நோக்கி
அங்க யற்கண்ணி தம்பெரு மான்மேல்
விண்ணெ லாங்கொள வரும்பெரு வெள்ளம்
மீது வந்துறும் எனவெருக் கொண்டே
உண்ணி லாவிய பதைப்புறு காதல்
உடன்தி ருக்கையால் தடுக்கநில் லாமை
தண்ணி லாமலர் வேணி யினாரைத்
தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்.
63

மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்
மாவின் மேவிய தேவநா யகரை
முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி
முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும்
செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத் தெனவே
கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி
குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்.
64

கம்பர் காதலி தழுவமெய் குழையக்
கண்டு நிற்பவுஞ் சரிப்பவு மான
உம்ப ரேமுதல் யோனிக ளெல்லாம்
உயிரும் யாக்கையும் உருகியொன் றாகி
எம்பி ராட்டிக்கு மெல்லிய ரானார்
என்றும் ஏகம்பர் என்றெடுத் தேத்த
வம்பு லாமலர் நிறையவிண் பொழியக்
கம்பை யாறுமுன் வணங்கிய தன்றே.
65
Go to top

பூதி யாகிய புனிதநீ றாடிப்
பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து
காதில் வெண்குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனா ராயுமா தவஞ்செய்
அவ்வ ரங்கொலோ அகிலம்ஈன் றளித்த
மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
வளைத்த ழும்புடன் முலைச்சுவ டணிந்தார்.
66

கோதி லாஅமு தனையவள் முலைக்குக்
குழைந்த தம்மண வாளநற் கோலம்
மாது வாழவே காட்டிமுன் நின்று
வரங்கள் வேண்டுவ கொள்கஎன் றருள
வேத காரண ராயஏ கம்பர்
விரைம லர்ச்செய்ய தாமரைக் கழற்கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்த
தின்மை தானறி விப்பதற் கிறைஞ்சி.
67

அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும்
அளவி னால்அஞ்சி அஞ்சலி கூப்பிக்
கொண்ட இற்றையென் பூசனை யின்னும்
குறைநி ரம்பிடக் கொள்கஎன் றருள
வண்டு வார்குழல் மலைமகள் கமல
வதனம் நோக்கிஅம் மலர்க்கண்நெற் றியின்மேல்
முண்ட நீற்றர்நின் பூசனை யென்றும்
முடிவ தில்லைநம் பாலென மொழிய.
68

மாறி லாதஇப் பூசனை யென்றும்
மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண் டருளி
ஈறி லாதஇப் பதியினு ளெல்லா
அறமும் யான்செய அருள்செய வேண்டும்
வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல்
ஒழிய இங்குளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன்கொடுத் தருளப்
பெறவும் வேண்டும்என் றனள்பிறப் பொழிப்பாள்.
69

விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே
இடைய றாஅறம் வளர்க்கும்வித் தாக
இகப ரத்திரு நாழிநெல் லளித்துக்
கடைய ராகியும் உயர்ந்தவ ராயுங்
காஞ்சி வாழ்பவர் தாஞ்செய்தீ வினையுந்
தடைப டாதுமெய்ந் நெறியடை வதற்காம்
தவங்க ளாகவும் உவந்தருள் செய்தார்.
70
Go to top

எண்ண ரும்பெரு வரங்கள்முன் பெற்றங்
கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்ந் தருள
மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி
மனைய றம்பெருக் குங்கரு ணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்.
71

அலகில் நீள்தவத் தறப்பெருஞ் செல்வி
அண்ட மாந்திரு மனைக்கிடுந் தீபம்
உலகில் வந்துறு பயனறி விக்க
ஓங்கும் நாண்மலர் மூன்றுட னொன்று
நிலவ ஆண்டினுக் கொருமுறை செய்யும்
நீடு தொன்மையால் நிறைந்தபே ருலகம்
மலர்பெ ருந்திருக் காமக்கோட் டத்து
வைத்த நல்லறம் மன்னவே மன்னும்.
72

தீங்கு தீர்க்குநல் தீர்த்தங்கள் போற்றுஞ்
சிறப்பி னால்திருக் காமக்கோட் டத்தின்
பாங்கு மூன்றுல கத்தினுள் ளோரும்
பரவு தீர்த்தமாம் பைம்புனற் கேணி
வாங்கு தெண்டிரை வேலைமே கலைசூழ்
வைய கந்தனக் கெய்திய படியாய்
ஓங்கு தன்வடி வாய்நிகழ்ந் தென்றும்
உள்ள தொன்றுல காணியென் றுளதால்.
73

அந்த மின்றிநல் லறம்புரிந் தளிக்கும்
அம்மை தன்திருக் காமக்கோட் டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது
வழிக்கொ ளாததன் மருங்குபோ தலினால்
சந்த மாதிர மயங்கியெம் மருங்குஞ்
சாயை மாறிய தன்றிசை மயக்கம்
இந்த மாநிலத் தவரெலாங் காண
என்றும் உள்ளதொன் றின்றுமங் குளதால்.
74

கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில்
காஞ்சி யாந்திரு நதிக்கரை மருங்கு
சென்னி யிற்பிறை யணிந்தவர் விரும்பும்
திருப்பெ ரும்பெய ரிருக்கையில் திகழ்ந்து
மன்னு வெங்கதிர் மீதெழும் போதும்
மறித்து மேல்கடல் தலைவிழும் போதும்
தன்னி ழற்பிரி யாதவண் காஞ்சித்
தானம் மேவிய மேன்மையும் உடைத்தால்.
75
Go to top

மறைக ளால்துதித் தருந்தவம் புரிந்து
மாறி லாநிய மந்தலை நின்று
முறைமை யால்வரும் பூசனை செய்ய
முனிவர் வானவர் முதலுயி ரெல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய
நீடு காமங்கள் அவரவர்க் கருளி
இறைவர் தாமகிழ்ந் தருளிய தளிகள்
எண்ணி றந்தஅத் திருநக ரெல்லை.
76

மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில்
மண்ணில் மிக்கதோர் நன்மையி னாலே
துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன்
துரக்க வெய்திய தொலைவில்ஊக் கத்தால்
தன்னி லத்துநின் றகற்றுதல் செய்யும்
தான மன்றியும் தனுவெழுந் தரணி
எந்நி லத்தினுங் காண்பரும் இறவாத்
தானமென் றிவைஇ யல்பினில் உடைத்தால்.
77

ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய்
விளங்கு தீர்த்தம்நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண் ணிலவும்
அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்.
78

தாள தொன்றினில் மூன்றுபூ மலரும்
தமனி யச்செழுந் தாமரைத் தடமும்
நீள வார்புனல் குடதிசை யோடி
நீர்க ரக்குமா நதியுடன் நீடு
நாள லர்ந்துசெங் குவளைபைங் கமலம்
நண்ப கல்தரும் பாடலம் அன்றிக்
காள மேகம்ஒப் பாள்உறை வரைப்பிற்
கண்ப டாதகா யாப்புளி உளதால்.
79

சாயை முன்பிணிக் கும்கிண றொன்று
தஞ்சம் உண்ணில்நஞ் சாம்தடமொன்று
மாயை யின்றிவந் துள்ளடைந் தார்கள்
வான ரத்துரு வாம்பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும்
விளங்கு பொய்கையும் ஒன்றுவிண் ணவரோ
டாய இன்பம்உய்க் கும்பிலம் ஒன்றோ
டனைய ஆகிய அதிசயம் பலவால்.
80
Go to top

அஞ்சு வான்கரத் தாறிழி மதத்தோர்
ஆனை நிற்கவும் அரையிருள் திரியும்
மஞ்சு நீள்வது போலுமா மேனி
மலர்ப்ப தங்களில் வண்சிலம் பொலிப்ப
நஞ்சு பில்கெயிற் றரவவெற் றரையின்
நாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை
எஞ்ச லின்றிமுன் திரியவுங் குன்றம்
எறிந்த வேலவன் காக்கவும் இசையும்.
81

சத்தி தற்பர சித்தயோ கிகளும்
சாத கத்தனித் தலைவ ரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள்மெய்த் தவர்கள்
நீடு வாழ்திருப் பாடியும் அனேகஞ்
சித்தர் விஞ்சையர் இயக்கர்கந் தருவர்
திகழ்ந்து மன்னுவார் செண்டுகை யேந்தி
வித்த கக்கரி மேல்கொளுங் காரி
மேவு செண்டணை வெளியுமொன் றுளதால்.
82

வந்த டைந்தவர் தம்முரு மாய
மற்று ளாரைத்தாங் காண்பிட முளது
சிந்தை யோகத்து முனிவர்யோ கினிகள்
சேரும் யோகபீ டமும்உள தென்றும்
அந்த மில்அறம் புரப்பவள் கோயில்
ஆன போகபீ டமும்உள தாகும்
எந்தை யார்மகிழ் காஞ்சிநீ டெல்லை
எல்லை யில்லன உள்ளஆ ரறிவார்.
83

தூண்டு சோதியொன் றெழுந்திருள் துரக்கும்
சுரர்கள் வந்துசூழ் உருத்திர சோலை
வேண்டி னார்கள்தம் பிறப்பினை யொழிக்கும்
மெய்ந்நெ றிக்கண்நின் றார்கள்தாம் விரும்பித்
தீண்டில் யாவையுஞ் செம்பொனாக் குவதோர்
சிலையும் உண்டுரை செய்வதற் கரிதால்
ஆண்ட நாயகி சமயங்க ளாறும்
அகில யோனியும் அளிக்கும்அந் நகரம்.
84

என்றும் உள்ளவிந் நகர்கலி யுகத்தில்
இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்
வன்றி றற்புலி இமயமால் வரைமேல்
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை
சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
திருந்து காதநான் குட்பட வகுத்துக்
குன்று போலுமா மதில்புடை போக்கிக்
குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்.
85
Go to top

தண்காஞ்சி மென்சினைப்பூங் கொம்ப ராடல்
சார்ந்தசைய அதன்மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண்காஞ்சி இசைபாடும் பழன வேலிப்
பணைமருதம் புடையுடைத்தாய்ப் பாரில் நீடும்
திண்காஞ்சி நகர்நொச்சி இஞ்சி சூழ்ந்த
செழுங்கிடங்கு திருமறைக ள் ஒலிக்குந் தெய்வ
வண்காஞ்சி அல்குல்மலை வல்லி காக்க
வளர்கருணைக் கடலுலகஞ் சூழ்ந்தால் மானும்.
86

கொந்தலர்பூங் குழல்இமயக் கொம்பு கம்பர்
கொள்ளும்பூ சனைகுறித்த தானங் காக்க
மந்திரமா மதிலகழி அவர்தாந் தந்த
வாய்மைஆ கமவிதியின் வகுப்புப் போலும்
அந்தமில்சீர்க் காஞ்சியைவந் தடைந்தார்க் கன்றி
அடைகளங்கம் அறுப்பரிதென் றறிந்து சூழ
வந்தணைந்து தன்கறுப்பும் உவர்ப்பும் நீக்கும்
மாகடலும் போலுமலர்க் கிடங்கு மாதோ.
87

ஆங்குவளர் எயிலினுடன் விளங்கும் வாயில்
அப்பதியில் வாழ்பெரியோர் உள்ளம் போல
ஓங்குநிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய
உமைபாகர் அருள்செய்த ஒழுக்க மல்லால்
தீங்குநெறி அடையாத தடையு மாகிச்
செந்நெறிக்கண் நிகழ்வாய்மை திருந்து மார்க்கம்
தாங்குலவ நிலவிவளர் ஒளியா லென்றும்
தடநெடுவான் அளப்பனவாந் தகைய வாகும்.
88

மாறுபெறல் அருங்கனக மாடம் நீடு
மணிமறுகும் நெடுந்தெருவும் வளத்தில் வந்த
ஆறுபயில் ஆவணவீ திகளும் மற்றும்
அமைந்தநகர் அணிவரைகள் நடுவு போக்கிக்
கூறுபடு நவகண்ட மன்றி மல்கக்
கொண்டஅனே கங்கண்ட மாகி யன்ன
வேறொருமண் ணுலகுதனில் உளதாம் என்ன
விளங்கியமா லோகநிலை மேவிற் றன்றே.
89

பாகமருங் கிருபுடையும் உயர்ந்து நீண்ட
படரொளிமா ளிகைநிரைகள் பயில்மென் கூந்தல்
தோகையர்தங் குழாமலையத் தூக்கு முத்தின்
சுடர்க்கோவைக் குளிர்நீர்மை துதைந்த வீதி
மாகமிடை யொளிதழைப்ப மன்னி நீடு
மருங்குதா ரகைஅலைய வரம்பில் வண்ண
மேகமிடை கிழித்தொழுகுந் தெய்வக் கங்கை
மேல்நதிகள் பலமண்மேல் விளங்கி ஓங்கும்.
90
Go to top

கிளரொளிச்செங் கனகமயந் தானாய் மாடு
கீழ்நிலையோர் நீலச்சோ பானம் பூணக்
கொளவமைத்து மீதொருபாற் கன்ன சாலை
குலவயிரத் தாலமைத்த கொள்கை யாலே
அளவில்சுடர்ப் பிழம்பானார் தம்மைத் தேடி
அகழ்ந்தேனம் ஆனானும் அன்ன மாகி
வளர்விசும்பில் எழுந்தானும் போல நீடும்
மாளிகைகள் உளமற்ற மறுகு தோறும்.
91

மின்பொலிபன் மணிமிடைந்த தவள மாட
மிசைப்பயில்சந் திரகாந்தம் விசும்பின் மீது
பொன்புரையுஞ் செக்கர்நிறப் பொழுது தோன்றும்
புனிற்றுமதி கண்டுருகிப் பொழிந்த நீரால்
வன்புலியி னுரியாடைத் திருவே கம்பர்
வளர்சடையும் இளம்பிறையுங் கண்டு கும்பிட்
டன்புருகி மெய்பொழியக் கண்ணீர் வாரும்
அடியவரும் அனையவுள அலகி லாத.
92

முகிலுரிஞ்சுங் கொடிதொடுத்த முடிய வாகும்
முழுப்பளிங்கின் மாளிகைக்கள் முற்றுஞ் சுற்றும்
நிகரில்சரா சரங்களெல்லாம் நிழலி னாலே
நிறைதலினால் நிறைதவஞ்செய் இமயப் பாவை
நகிலுழுத சுவடும்வளைத் தழும்பும் பூண்ட
நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கும்
அகிலயோ னிகளெல்லாம் அமைத்து வைத்த
அரும்பெரும்பண் டாரநிலை யனைய வாகும்.
93

பொற்களப மாளிகைமேல் முன்றில் நின்று
பூங்கழங்கும் மணிப்பந்தும் போற்றி யாடும்
விற்புருவக் கொடிமடவார் கலன்கள் சிந்தி
விழுவனவும் கெழுவுதுணை மேவு மாதர்
அற்புமுதிர் கலவியினிற் பரிந்து சிந்தும்
அணிமணிச்சே டியர்தொகுக்கும் அவையு மாகி
நற்கனக மழையன்றிக் காஞ்சி யெல்லை
நவமணிமா ரியும்பொழியும் நாளும் நாளும்.
94

பூமகளுக் குறையுளெனுந் தகைய வான
பொன்மாடத் தரமியங்கள் பொலிய நின்று
மாமகரக் குழைமகளிர் மைந்தர் அங்கண்
வந்தேறு முன்நறுநீர் வண்ட லாடத்
தூமணிப்பொன் புனைநாளத் துருத்தி வீசும்
சுடர்விடுசெங் குங்குமநீர்த் துவலை தோய்ந்த
காமர்மணி நாசிகையின் மருங்கு தங்கும்
கருமுகில்கள் செம்முகில்க ளாகிக் காட்டும்.
95
Go to top

இமமலிய வெடுத்தநெடு வரைகள் போல
இலங்குசுதைத் தவளமா ளிகைநீள் கோட்டுச்
சிமையடையுஞ் சோபான நிரையும் விண்ணும்
தெரிவரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர்களுடன் இழிந்தேறு மைந்தர் மாதர்
தங்களையும் விசும்பிடைநின் றிழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வே
றறிவரிதாந் தகைமையன அனேகம் அங்கண்.
96

அரவநெடுந் தேர்வீதி அருகு மாடத்
தணிமணிக்கோ புரத்தயலே வியல்வாய் நீண்ட
விரவுமர கதச்சோதி வேதித் திண்ணை
விளிம்பினொளி துளும்பமுறைப் படிமீ தேறுங்
குரவமரும் குழல்மடவா ரடியி லூட்டும்
குழம்படுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்
பரவைநெடுந் தரங்கமிசை விளங்கித் தோன்றும்
பவளநறுந் தளிரனைய பலவும் பாங்கர்.
97

வெம்புசினக் களிற்றதிர்வும் மாவின் ஆர்ப்பும்
வியனெடுந்தேர்க் காலிசைப்பும் விழவ றாத
அம்பொன்மணி வீதிகளில் அரங்கி லாடும்
அரிவையர்நூ புரஒலியோ டமையும் இம்பர்
உம்பரின்இந் திரன்களிற்றின் முழக்குந் தெய்வ
உயர்இரவி மாக்கலிப்பும் அயனூர் தித்தேர்
பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப்
பாவையர்நூ புரஅரவத் துடனே பல்கும்.
98

அருமறைஅந் தணர்மன்னும் இருக்கை யான
ஆகுதியின் புகையடுத்த அம்பொன் மாடப்
பெருமறுகு தொறும்வேள்விச் சாலை யெங்கும்
பெறுமவிப்பா கங்கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைத்துவிடு மந்திரம்எம் மருங்கும்
வானவர்நா யகர்திருவே கம்பர் முன்றில்
திருமலிபொற் கோபுரத்து நெருங்கும் எல்லாத்
தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்.
99

அரசர்குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத்
தாயுதங்கள் பயிலும்வியல் இடமு மங்கண்
புரசைமதக் கரிகளொடு புரவி யேறும்
பொற்புடைய வீதிகளும் பொலிய வெங்கும்
விரைசெய்நறுந் தொடையலங்கல் குமரர் செய்யும்
வியப்புறுசெய் தொழில்கண்டு விஞ்சை விண்ணோர்
நிரைசெறியும் விமானவூர் திகளின் மேலும்
நிலமிசையும் பலமுறையும் நிரந்து நீங்கார்.
100
Go to top

வெயிலுமிழும் பன்மணிப்பூண் வணிக மாக்கள்
விரவுநிதி வளம்பெருக்கும் வெறுக்கை மிக்க
வயினிலவு மணிக்கடைமா நகர்கள் எல்லாம்
வனப்புடைய பொருட்குலங்கள் மலிதலாலே
கயிலைமலை யார்கச்சி ஆலயங்கள் பலவுங்
கம்பமுமே வியதன்மை கண்டு போற்றப்
பயிலுமுருப் பலகொண்டு நிதிக்கோன் தங்கப்
பயில்அளகா புரிவகுத்த பரிசு காட்டும்.
101

விழவுமலி திருக்காஞ்சி வரைப்பின் வேளாண்
விழுக்குடிமைப் பெருஞ்செல்வர் விளங்கும் வேணி
மழஇளவெண் திங்கள்புனை கம்பர் செம்பொன்
மலைவல்லிக் களித்தவள ருணவின் மூலந்
தொழவுலகு பெறுமவள்தான் அருளப் பெற்றுத்
தொன்னிலத்து மன்னுபயிர் வேத வாய்மை
உழவுதொழி லாற்பெருக்கி உயிர்க ளெல்லாம்
ஓங்கவருந் தருமவினைக் குளரால் என்றும்.
102

ஓங்கியநாற் குலத்தொவ்வாப் புணர்வில் தம்மில்
உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாங்குழுமிப் பிறந்தகுல பேத மெல்லாம்
தந்தகைமைக் கேற்றதனி யிடங்கள் மேவி
ஆங்குநிறை கிளைபயின்று மரபி னாற்ற
அடுத்தவினைத் தொழில்முறைமை வழாமை நீடு
பாங்குவளர் இருக்கைநிலை பலவும் எல்லாம்
பண்புநீ டியவுரிமைப் பால அன்றே.
103

ஆதி மூதெயில் அந்நகர் மன்னிய
சோதி நீள்மணித் தூபமுந் தீபமும்
கோதில் பல்லிய முங்கொடி யும்பயில்
வீதி நாளும் ஒழியா விழாவணி.
104

வாயில் எங்கணுந் தோரணம் மாமதில்
ஞாயில் எங்கணுஞ் சூழ்முகில் நாள்மதி
தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர்சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குலக்குழாம்.
105
Go to top

வேத வேதியர் வேள்வியே தீயன
மாத ரோதி மலரே பிணியன
காதல் வீதிவி லக்கே கவலைய
சூத மாதவி யேபுறஞ் சூழ்வன.
106

சாய லார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாடக் கொடியே அசைவன
சேய ஓடைக் களிறே திகைப்பன
பாய சோலைத் தருவே பயத்தன.
107

அண்ண லார்அன்பர் அன்பேமுன் ஆர்த்தன
தண்ண றுஞ்செழுந் தாதே துகளன
வண்ண நீள்மணி மாலையே தாழ்வன
எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின.
108

வென்றி வானவர் தாம்விளை யாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கொழி யாவகை உய்ப்பது.
109

புரங்க டந்தவர் காஞ்சி புரம்புகழ்
பரம்பு நீள்புவ னம்பதி னான்கினும்
வரம்பில் போக வனப்பின் வளமெலாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால்.
110
Go to top

அவ்வகைய திருநகரம்
அதன்கண்ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால்
ஏகாலிக் குலத்துள்ளார்
செவ்வியஅன் புடைமனத்தார்
சீலத்தின் நெறிநின்றார்
மைவிரவு கண்டரடி
வழித்தொண்டர் உளரானார்.
111

மண்ணின்மிசை வந்ததற்பின்
மனமுதலா யினமூன்றும்
அண்ணலார் சேவடியின்
சார்வாக அணைவிப்பார்
புண்ணியமெய்த் தொண்டர்திருக்
குறிப்பறிந்து போற்றுநிலைத்
திண்மையினால் திருக்குறிப்புத்
தொண்டர்எனுஞ் சிறப்பினார்.
112

தேரொலிக்க மாவொலிக்கத்
திசையொலிக்கும் புகழ்க்காஞ்சி
ஊரொலிக்கும் பெருவண்ணார்
எனவொண்ணா உண்மையினார்
நீரொலிக்க அராவிரைக்க
நிலாமுகிழ்க்குந் திருமுடியார்
பேரொலிக்க உருகுமவர்க்
கொலிப்பர்பெரு விருப்பினொடும்.
113

. தேசுடைய மலர்க்கமலச்
சேவடியார் அடியார்தம்
தூசுடைய துகள்மாசு
கழிப்பார்போல் தொல்லைவினை
ஆசுடைய மலம்மூன்றும்
அணையவரும் பெரும்பிறவி
மாசுதனை விடக்கழித்து
வருநாளில் அங்கொருநாள்.
114

பொன்னிமயப் பொருப்பரையன்
பயந்தருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்றளக்க
எழுந்தருளும் நம்பெருமான்
தன்னுடைய அடியவர்தம்
தனித்தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டன்பர்க்
கருள்புரிவான் வந்தணைவார்.
115
Go to top

சீதமலி காலத்துத்
திருக்குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலராய் மெலிந்துமிக
அழுக்கடைந்த கந்தையுடன்
மாதவவே டந்தாங்கி
மாலறியா மலரடிகள்
கோதடையா மனத்தவர்முன்
குறுநடைகள் கொளக்குறுகி.
116

திருமேனி வெண்ணீறு
திகழ்ந்தொளிருங் கோலத்துக்
கருமேக மெனஅழுக்குக்
கந்தையுடன் எழுந்தருளி
வருமேனி அருந்தவரைக்
கண்டுமனம் மகிழ்ந்தெதிர்கொண்
டுருமேவும் மயிர்ப்புளகம்
உளவாகப் பணிந்தெழுந்தார்.
117

எய்துமவர் குறிப்பறிந்தே
இன்மொழிகள் பலமொழிந்து
செய்தவத்தீர் திருமேனி
இளைத்திருந்த தென்னென்று
கைதொழுது கந்தையினைத்
தந்தருளும் கழுவஎன
மைதிகழ்கண் டங்கரந்த
மாதவத்தோர் அருள்செய்வார்.
118

இக்கந்தை அழுக்கேறி
எடுக்கவொணா தெனினும்யான்
மெய்க்கொண்ட குளிர்க்குடைந்து
விடமாட்டேன் மேல்கடற்பால்
அக்குன்றம் வெங்கதிரோன்
அணைவதன்முன் தருவீரேல்
கைக்கொண்டு போய்ஒலித்துக்
கொடுவாருங் கடிதென்றார்.
119

தந்தருளும் இக்கந்தை
தாழாதே ஒலித்துமக்கின்
றந்திபடு வதன்முன்னம்
தருகின்றேன் எனஅவரும்
கந்தையிது ஒலித்துணக்கிக்
கடிதின்றே தாரீரேல்
இந்தவுடற் கிடர்செய்தீர்
என்றுகொடுத் தேகினார்.
120
Go to top

குறித்தபொழு தேயொலித்துக்
கொடுப்பதற்குக் கொடுபோந்து
வெறித்தடநீர்த் துறையின்கண்
மாசெறிந்து மிகப்புழுக்கிப்
பிறித்தொலிக்கப் புகுமளவில்
பெரும்பகல்போய்ப் பின்பகலாய்
மறிக்கரத்தார் திருவருளால்
மழையெழுந்து பொழிந்திடுமால்.
121

திசைமயங்க வெளியடைத்த
செறிமுகிலின் குழாமிடைந்து
மிசைசொரியும் புனல்தாரை
விழிநுழையா வகைமிடைய
அசைவுடைய மனத்தன்பர்
அறிவுமறந் தருந்தவர்பால்
இசைவுநினைந் தழிந்தினியான்
என்செய்கேன் எனநின்றார்.

122

ஓவாதே பொழியுமழை
ஒருகால்விட் டொழியுமெனக்
காவாலி திருத்தொண்டர்
தனிநின்றார் விடக்காணார்
மேவார்போல் கங்குல்வர
மெய்குளிரும் விழுத்தவர்பால்
ஆஆ என் குற்றேவல்
அழிந்தவா எனவிழுந்தார்.
123

விழுந்தமழை ஒழியாது
மெய்த்தவர்சொல் லியஎல்லை
கழிந்ததுமுன் பொலித்துமனைக்
காற்றேற்க அறிந்திலேன்
செழுந்தவர்தந் திருமேனி
குளிர்காணுந் தீங்கிழைத்த
தொழும்பனேற் கினியிதுவே
செயலென்று துணிந்தெழுவார்.
124

கந்தைபுடைத் திடஎற்றுங்
கற்பாறை மிசைத்தலையைச்
சிந்தவெடுத் தெற்றுவன்என்
றணைந்துசெழும் பாறைமிசைத்
தந்தலையைப் புடைத்தெற்ற
அப்பாறை தன்மருங்கு
வந்தெழுந்து பிடித்ததணி
வளைத்தழும்பர் மலர்ச்செங்கை.
125
Go to top

வானிறைந்த புனல்மழைபோய்
மலர்மழையாய் இடமருங்கு
தேனிறைந்த மலரிதழித்
திருமுடியார் பொருவிடையின்
மேனிறைந்த துணைவியொடும்
வெளிநின்றார் மெய்த்தொண்டர்
தானிறைந்த அன்புருகக்
கைதொழுது தனிநின்றார்.
126

முன்னவரை நேர்நோக்கி
முக்கண்ணர் மூவுலகும்
நின்னிலைமை அறிவித்தோம்
நீயும்இனி நீடியநம்
மன்னுலகு பிரியாது
வைகுவாய் எனஅருளி
அந்நிலையே எழுந்தருளி
அணிஏகாம் பரம்அணைந்தார்.
127

சீர்நிலவு திருக்குறிப்புத்
தொண்டர்திருத் தொழில்போற்றிப்
பார்குலவத் தந்தைதாள்
அறஎறிந்தார் பரிசுரைக்கேன்
பேரருளின் மெய்த்தொண்டர்
பித்தனெனப் பிதற்றுதலால்
ஆருலகில் இதனுண்மை
அறிந்துரைக்க இசைந்தெழுவார்.
128

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000