சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.160   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

தாது சூழுங் குழல்மலையாள்
தளிர்க்கை சூழுந் திருமேனி
மீது சூழும் புனற்கற்றை
வேணி நம்பர் விரும்புபதி
சோதி சூழும் மணிமௌலிச்
சோழர் பொன்னித் திருநாட்டுப்
போது சூழும் தடஞ்சோலைப்
பொய்கை சூழும் பூம்புகலூர்.
1

நாம மூதூர் மற்றதனுள்
நல்லோர் மனம்போல் அவரணிந்த
சேம நிலவு திருநீற்றின்
சிறந்த வெண்மைத் திருந்தொளியால்
யாம இருளும் வெளியாக்கும்
இரவே யல்ல விரைமலர்மேற்
காமர் மதுவுண் சிறைவண்டுங்
களங்க மின்றி விளங்குமால்.
2

நண்ணும் இசைதேர் மதுகரங்கள்
நனைமென் சினையின் மருங்கலைய
வண்ண மதுரத் தேன்பொழிவ
வாச மலர்வா யேயல்ல
தண்ணென் சோலை எம்மருங்கும்
சாரும் மடமென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும்
பதிகச் செழுந்தேன் பொழியுமால்.
3

வண்டு பாடப் புனல்தடத்து
மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகையவிழ்ந்த
குளிர்பங் கயங்க ளேயல்ல
அண்டர் பெருமான் திருப்பாட்டின்
அமுதம் பெருகச் செவிமடுக்குந்
தொண்டர் வதன பங்கயமுந்
துளித்த கண்ணீர் அரும்புமால்.
4

ஆன பெருமை வளஞ்சிறந்த
அந்தண் புகலூ ரதுதன்னில்
மான மறையோர் குலமரபின்
வந்தார் முந்தை மறைமுதல்வர்
ஞான வரம்பின் தலைநின்றார்
நாகம் புனைவார் சேவடிக்கீழ்
ஊன மின்றி நிறையன்பால்
உருகு மனத்தார் முருகனார்.
5
Go to top

அடைமேல் அலவன் துயிலுணர
அலர்செங் கமல வயற்கயல்கள்
மடைமே லுகளுந் திருப்புகலூர்
மன்னி வாழுந் தன்மையராய்
விடைமேல் வருவார்க் காளான
மெய்ம்மைத் தவத்தால் அவர்கற்றைச்
சடைமேல் அணியத் திருப்பள்ளித்
தாமம் பறித்துச் சாத்துவார்.
6

புலரும் பொழுதின் முன்னெழுந்து
புனித நீரில் மூழ்கிப்போய்
மலருஞ் செவ்வித் தம்பெருமான்
முடிமேல் வான்நீர் ஆறுமதி
உலவு மருங்கு முருகுயிர்க்க
நகைக்கும் பதத்தின் உடன்பறித்த
அலகில் மலர்கள் வெவ்வேறு
திருப்பூங் கூடை களில்அமைப்பார்.

7

கோட்டு மலரும் நிலமலரும்
குளிர்நீர் மலரும் கொழுங்கொடியின்
தோட்டு மலரும் மாமலருஞ்
சுருதி மலருந் திருவாயில்
காட்டு முறுவல் நிலவலரக்
கனக வரையிற் பன்னகநாண்
பூட்டும் ஒருவர் திருமுடிமேல்
புனைய லாகும் மலர்தெரிந்து.
8

கொண்டு வந்து தனியிடத்தில்
இருந்து கோக்குங் கோவைகளும்
இண்டைச் சுருக்கும் தாமமுடன்
இணைக்கும் வாச மாலைகளுந்
தண்டிற் கட்டுங் கண்ணிகளும்
தாளிற் பிணைக்கும் பிணையல்களும்
நுண்டா திறைக்குந் தொடையல்களும்
சமைத்து நுடங்கு நூன்மார்பர்.
9

ஆங்கப் பணிகள் ஆனவற்றுக்  
கமைத்த காலங் களில்அமைத்துத்
தாங்கிக் கொடுசென் றன்பினொடுஞ்
சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கிற் புரிந்து பரிந்துள்ளார்
பரமர் பதிகப் பற்றான
ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும்
ஓவா நாவின் உணர்வினார்.
10
Go to top

தள்ளும் முறைமை ஒழிந்திடஇத்
தகுதி யொழுகு மறையவர்தாம்
தெள்ளு மறைகள் முதலான
ஞானஞ் செம்பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்றளித்த
அம்மை முலைப்பால் உடனுண்ட
பிள்ளை யார்க்கு நண்பருமாம்
பெருமை யுடையா ராயினார்.
11

அன்ன வடிவும் ஏனமுமாய்
அறிவான் இருவர் அறியாமே
மன்னும் புகலூர் உறைவாரை
வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள
நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்செழுத்தும்
பயின்றே பணிந்து பரவினார்.
12

அங்கண் அமருந் திருமுருகர்
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.
13

அரவம் அணிந்த அரையாரை
அருச்சித் தவர்தங் கழல்நிழற்கீழ்
விரவு புகலூர் முருகனார்
மெய்ம்மைத் தொண்டின் திறம்போற்றிக்
கரவில் அவர்பால் வருவாரைக்
கருத்தில் உருத்தி ரங்கொண்டு
பரவு மன்பர் பசுபதியார்
பணிந்த பெருமை பகர்வுற்றேன்.
14

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000