தாது சூழுங் குழல்மலையாள்
தளிர்க்கை சூழுந் திருமேனி
மீது சூழும் புனற்கற்றை
வேணி நம்பர் விரும்புபதி
சோதி சூழும் மணிமௌலிச்
சோழர் பொன்னித் திருநாட்டுப்
போது சூழும் தடஞ்சோலைப்
பொய்கை சூழும் பூம்புகலூர்.
|
1
|
நாம மூதூர் மற்றதனுள்
நல்லோர் மனம்போல் அவரணிந்த
சேம நிலவு திருநீற்றின்
சிறந்த வெண்மைத் திருந்தொளியால்
யாம இருளும் வெளியாக்கும்
இரவே யல்ல விரைமலர்மேற்
காமர் மதுவுண் சிறைவண்டுங்
களங்க மின்றி விளங்குமால்.
|
2
|
நண்ணும் இசைதேர் மதுகரங்கள்
நனைமென் சினையின் மருங்கலைய
வண்ண மதுரத் தேன்பொழிவ
வாச மலர்வா யேயல்ல
தண்ணென் சோலை எம்மருங்கும்
சாரும் மடமென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும்
பதிகச் செழுந்தேன் பொழியுமால்.
|
3
|
வண்டு பாடப் புனல்தடத்து
மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகையவிழ்ந்த
குளிர்பங் கயங்க ளேயல்ல
அண்டர் பெருமான் திருப்பாட்டின்
அமுதம் பெருகச் செவிமடுக்குந்
தொண்டர் வதன பங்கயமுந்
துளித்த கண்ணீர் அரும்புமால்.
|
4
|
ஆன பெருமை வளஞ்சிறந்த
அந்தண் புகலூ ரதுதன்னில்
மான மறையோர் குலமரபின்
வந்தார் முந்தை மறைமுதல்வர்
ஞான வரம்பின் தலைநின்றார்
நாகம் புனைவார் சேவடிக்கீழ்
ஊன மின்றி நிறையன்பால்
உருகு மனத்தார் முருகனார்.
|
5
|
| Go to top |
அடைமேல் அலவன் துயிலுணர
அலர்செங் கமல வயற்கயல்கள்
மடைமே லுகளுந் திருப்புகலூர்
மன்னி வாழுந் தன்மையராய்
விடைமேல் வருவார்க் காளான
மெய்ம்மைத் தவத்தால் அவர்கற்றைச்
சடைமேல் அணியத் திருப்பள்ளித்
தாமம் பறித்துச் சாத்துவார்.
|
6
|
புலரும் பொழுதின் முன்னெழுந்து
புனித நீரில் மூழ்கிப்போய்
மலருஞ் செவ்வித் தம்பெருமான்
முடிமேல் வான்நீர் ஆறுமதி
உலவு மருங்கு முருகுயிர்க்க
நகைக்கும் பதத்தின் உடன்பறித்த
அலகில் மலர்கள் வெவ்வேறு திருப்பூங் கூடை களில்அமைப்பார்.
|
7
|
கோட்டு மலரும் நிலமலரும்
குளிர்நீர் மலரும் கொழுங்கொடியின்
தோட்டு மலரும் மாமலருஞ்
சுருதி மலருந் திருவாயில்
காட்டு முறுவல் நிலவலரக்
கனக வரையிற் பன்னகநாண்
பூட்டும் ஒருவர் திருமுடிமேல்
புனைய லாகும் மலர்தெரிந்து.
|
8
|
கொண்டு வந்து தனியிடத்தில்
இருந்து கோக்குங் கோவைகளும்
இண்டைச் சுருக்கும் தாமமுடன்
இணைக்கும் வாச மாலைகளுந்
தண்டிற் கட்டுங் கண்ணிகளும்
தாளிற் பிணைக்கும் பிணையல்களும்
நுண்டா திறைக்குந் தொடையல்களும்
சமைத்து நுடங்கு நூன்மார்பர்.
|
9
|
ஆங்கப் பணிகள் ஆனவற்றுக் கமைத்த காலங் களில்அமைத்துத்
தாங்கிக் கொடுசென் றன்பினொடுஞ்
சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கிற் புரிந்து பரிந்துள்ளார்
பரமர் பதிகப் பற்றான
ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும்
ஓவா நாவின் உணர்வினார்.
|
10
|
| Go to top |
தள்ளும் முறைமை ஒழிந்திடஇத்
தகுதி யொழுகு மறையவர்தாம்
தெள்ளு மறைகள் முதலான
ஞானஞ் செம்பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்றளித்த
அம்மை முலைப்பால் உடனுண்ட
பிள்ளை யார்க்கு நண்பருமாம்
பெருமை யுடையா ராயினார்.
|
11
|
அன்ன வடிவும் ஏனமுமாய்
அறிவான் இருவர் அறியாமே
மன்னும் புகலூர் உறைவாரை
வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள
நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்செழுத்தும்
பயின்றே பணிந்து பரவினார்.
|
12
|
அங்கண் அமருந் திருமுருகர்
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.
|
13
|
அரவம் அணிந்த அரையாரை
அருச்சித் தவர்தங் கழல்நிழற்கீழ்
விரவு புகலூர் முருகனார்
மெய்ம்மைத் தொண்டின் திறம்போற்றிக்
கரவில் அவர்பால் வருவாரைக்
கருத்தில் உருத்தி ரங்கொண்டு
பரவு மன்பர் பசுபதியார்
பணிந்த பெருமை பகர்வுற்றேன்.
|
14
|