மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர்நாடு.
|
1
|
நீவி நிதம்ப உழத்தியர் நெய்க்குழல் மைச்சூழல்
மேவி யுறங்குவ மென்சிறை வண்டு விரைக்கஞ்சப்
பூவி லுறங்குவ நீள்கயல் பூமலி தேமாவின்
காவின் நறுங்குளிர் நீழ லுறங்குவ கார்மேதி.
|
2
|
வன்னிலை மள்ளர் உகைப்ப வெழுந்த மரக்கோவைப்
பன்முறை வந்தெழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்குறை தண்டுறை வாவி யதன்பாலைக்
கன்னல் அடும்புகை யால்முகில் செய்வ கருப்பாலை.
|
3
|
பொங்கிய மாநதி நீடலை உந்து புனற்சங்கம்
துங்க விலைக்கத லிப்புதல் மீது தொடக்கிப்போய்த்
தங்கிய பாசடை சூழ்கொடி யூடு தவழ்ந்தேறிப்
பைங்கமு கின்தலை முத்தம் உதிர்க்குவ பாளையென.
|
4
|
அல்லி மலர்ப்பழ னத்தயல் நாகிள ஆன்ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான்மறி யோடு குதித்தோடும்
மல்கு வளத்தது முல்லை யுடுத்த மருங்கோர்பால்.
|
5
|
| Go to top |
கண்மலர் காவிகள் பாய இருப்பன கார்முல்லைத்
தண்ணகை வெண்முகை மேவு சுரும்பு தடஞ்சாலிப்
பண்ணை எழுங்கயல் பாய விருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய வன்சிறை வண்டானம்.
|
6
|
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேலோடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கல மாக அதற்கேயோர்
மங்கல மானது மங்கல மாகிய வாழ்மூதூர்.
|
7
|
ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.
|
8
|
ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்
வாயினில் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலில்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.
|
9
|
ஆனிரை கூட அகன்புற விற்கொடு சென்றேறிக்
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்தெங்கும்
தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூநீருண்
டூனமில் ஆயம் உலப்பில பல்க அளித்துள்ளார்.
|
10
|
| Go to top |
கன்றொடு பால்மறை நாகு கறப்பன பாலாவும்
புன்தலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடைக்குல மோடும் இனந்தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழ லுடன்பல தோழங்கள்.
|
11
|
ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும்
காவலர் தம்பெரு மானடி அன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார்.
|
12
|
முந்தைமறை நூன்மரபின்
மொழிந்தமுறை யெழுந்தவேய்
அந்தமுதல் நாலிரண்டில்
அரிந்துநரம் புறுதானம்
வந்ததுளை நிரையாக்கி
வாயுமுதல் வழங்குதுளை
அந்தமில்சீ ரிடையீட்டின்
அங்குலியெண் களின்அமைத்து.
|
13
|
எடுத்தகுழற் கருவியினில்
எம்பிரான் எழுத்தைந்தும்
தொடுத்தமுறை யேழிசையின்
சுருதிபெற வாசித்துத்
தடுத்தசரா சரங்களெலாம்
தங்கவருந் தங்கருணை
அடுத்தஇசை யமுதளித்துச்
செல்கின்றார் அங்கொருநாள்.
|
14
|
வாசமலர்ப் பிணைபொங்க
மயிர்நுழுதி மருங்குயர்ந்த
தேசுடைய சிகழிகையில்
செறிகண்ணித் தொடைசெருகிப்
பாசிலைமென் கொடியின்வடம்
பயிலநறு விலிபுனைந்து
காசுடைநாண் அதற்கயலே
கருஞ்சுருளின் புறங்கட்டி.
|
15
|
| Go to top |
வெண்கோடல் இலைச்சுருளிற்
பைந்தோட்டு விரைத்தோன்றித்
தண்கோல மலர்புனைந்த
வடிகாதின் ஒளிதயங்கத்
திண்கோல நெற்றியின்மேல்
திருநீற்றின் ஒளிகண்டோர்
கண்கோடல் நிறைந்தாராக்
கவின்விளங்க மிசையணிந்து.
|
16
|
நிறைந்தநீ றணிமார்பின்
நிரைமுல்லை முகைசுருக்கிச்
செறிந்தபுனை வடந்தாழத்
திரள்தோளின் புடையலங்கல்
அறைந்தசுரும் பிசையரும்ப
அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலிதானைப்
பூம்பட்டுப் பொலிந்தசைய.
|
17
|
சேவடியில் தொடுதோலும்
செங்கையினில் வெண்கோலும்
மேவுமிசை வேய்ங்குழலும்
மிகவிளங்க வினைசெய்யும்
காவல்புரி வல்லாயர்
கன்றுடைஆன் நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார்
நிரைகாக்கப் புறம்போந்தார்.
|
18
|
எம்மருங்கும் நிரைபரப்ப
எடுத்தகோல் உடைப்பொதுவர்
தம்மருங்கு தொழுதணையத்
தண்புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்தசினை
அலர்மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்புசுழல்
செழுங்கொன்றை மருங்கணைந்தார்.
|
19
|
சென்றணைந்த ஆனாயர்
செய்தவிரைத் தாமமென
மன்றல்மலர்த் துணர்தூக்கி
மருங்குதாழ் சடையார்போல்
நின்றநறும் கொன்றையினை
நேர்நோக்கி நின்றுருகி
ஒன்றியசிந் தையிலன்பை
உடையவர்பால் மடைதிறந்தார்.
|
20
|
| Go to top |
அன்பூறி மிசைப்பொங்கும்
அமுதஇசைக் குழலொலியால்
வன்பூதப் படையாளி
எழுத்தைந்தும் வழுத்தித்தாம்
முன்பூதி வருமளவின்
முறைமையே யெவ்வுயிரும்
என்பூடு கரைந்துருக்கும்
இன்னிசைவேய்ங் கருவிகளில்.
|
21
|
ஏழுவிரல் இடையிட்ட
இன்னிசைவங் கியமெடுத்துத்
தாழுமலர் வரிவண்டு
தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன் றெழநின்று
தூயபெருந் தனித்துளையில்
வாழியநந் தோன்றலார்
மணியதரம் வைத்தூத.
|
22
|
முத்திரையே முதலனைத்தும்
முறைத்தானஞ் சோதித்து
வைத்ததுளை ஆராய்ச்சி
வக்கரனை வழிபோக்கி
ஒத்தநிலை யுணர்ந்ததற்பின்
ஒன்றுமுதல் படிமுறையால்
அத்தகைமை ஆரோசை
அமரோசை களின்அமைத்தார்.
|
23
|
மாறுமுதற் பண்ணின்பின்
வளர்முல்லைப் பண்ணாக்கி
ஏறியதா ரமும்உழையும்
கிழமைகொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடைமுடியார்
அஞ்செழுத்தி னிசைபெருகக்
கூறியபட் டடைக்குரலாங்
கொடிப்பாலை யினில்நிறுத்தி.
|
24
|
ஆயஇசைப் புகல்நான்கின்
அமைந்தபுகல் வகையெடுத்து
மேயதுளை பற்றுவன
விடுப்பனவாம் விரல்நிரையில்
சேயவொளி யிடையலையத்
திருவாள னெழுத்தஞ்சுந்
தூயஇசைக் கிளைகொள்ளுந்
துறையஞ்சின் முறைவிளைத்தார்.
|
25
|
| Go to top |
மந்தரத்தும் மத்திமத்தும்
தாரத்தும் வரன்முறையால்
தந்திரிகள் மெலிவித்தும்
சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல்தொழில்கள்
அளவுபெற அசைத்தியக்கிச்
சுந்தரச்செங் கனிவாயும்
துளைவாயும் தொடக்குண்ண.
|
26
|
எண்ணியநூற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ணஇசை வகையெல்லாம்
மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியலும்
தூக்குநடை முதற்கதியில்
பண்ணமைய எழுமோசை
எம்மருங்கும் பரப்பினார்.
|
27
|
வள்ளலார் வாசிக்கும்
மணித்துளைவாய் வேய்ங்குழலின்
உள்ளுறைஅஞ் செழுத்தாக
ஓங்கியெழும் மதுரவொலி
வெள்ளநிறைந் தெவ்வுயிர்க்கும்
மேலமரர் தருவிளைதேன்
தெள்ளமுதின் உடன்கலந்து
செவிவார்ப்ப தெனத்தேக்க.
|
28
|
ஆனிரைகள் அறுகருந்தி
அசைவிடா தணைந்தயரப்
பானுரைவாய்த் தாய்முலையில் பற்றுமிளங் கன்றினமும்
தானுணவு மறந்தொழியத்
தடமருப்பின் விடைக்குலமும்
மான்முதலாம் கான்விலங்கும்
மயிர்முகிழ்த்து வந்தணைய.
|
29
|
ஆடுமயில் இனங்களும்அங்
கசைவயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி யிசைநிறைந்த
உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந் துணர்வொழிய
மருங்குதொழில் புரிந்தொழுகும்
கூடியவன் கோவலரும்
குறைவினையின் துறைநின்றார்.
|
30
|
| Go to top |
பணிபுவனங் களிலுள்ளார்
பயில்பிலங்கள் வழியணைந்தார்
மணிவரைவாழ் அரமகளிர்
மருங்குமயங் கினர்மலிந்தார்
தணிவிலொளி விஞ்சையர்கள்
சாரணர்கின் னரர்அமரர்
அணிவிசும்பில் அயர்வெய்தி
விமானங்கள் மிசையணைந்தார்.
|
31
|
சுரமகளிர் கற்பகப்பூஞ்
சோலைகளின் மருங்கிருந்து
கரமலரின் அமுதூட்டுங்
கனிவாய்மென் கிள்ளையுடன்
விரவுநறுங் குழலலைய
விமானங்கள் விரைந்தேறிப்
பரவியஏழ் இசையமுதஞ்
செவிமடுத்துப் பருகினார்.
|
32
|
நலிவாரும் மெலிவாரும்
உணர்வொன்றாய் நயத்தலினால்
மலிவாய்வெள் ளெயிற்றரவம்
மயில்மீது மருண்டுவிழும்
சலியாத நிலைஅரியுந்
தடங்கரியும் உடன்சாரும்
புலிவாயின் மருங்கணையும்
புல்வாய புல்வாயும்.
|
33
|
மருவியகால் விசைத்தசையா
மரங்கள்மலர்ச் சினைசலியா
கருவரைவீழ் அருவிகளுங்
கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை
பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா
எழுகடலு மிடைதுளும்பா.
|
34
|
இவ்வாறு நிற்பனவுஞ்
சரிப்பனவும் இசைமயமாய்
மெய்வாழும் புலன்கரண
மேவியவொன் றாயினவால்
மொய்வாச நறுங்கொன்றை
முடிச்சடையார் அடித்தொண்டர்
செவ்வாயின் மிசைவைத்த
திருக்குழல்வா சனையுருக்க.
|
35
|
| Go to top |
மெய்யன்பர் மனத்தன்பின்
விளைத்தஇசைக் குழலோசை
வையந்தன் னையும்நிறைத்து
வானந்தன் வயமாக்கிப்
பொய்யன்புக் கெட்டாத
பொற்பொதுவில் நடம்புரியும்
ஐயன்தன் திருச்செவியின்
அருகணையப் பெருகியதால்.
|
36
|
ஆனாயர் குழலோசை
கேட்டருளி அருட்கருணை
தானாய திருவுள்ளம்
உடையதவ வல்லியுடன்
கானாதி காரணராம்
கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார்
மதிநாறும் சடைதாழ.
|
37
|
திசைமுழுதுங் கணநாதர்
தேவர்கட்கு முன்நெருங்கி
மிசைமிடைந்து வரும்பொழுது
வேற்றொலிகள் விரவாமே
அசையவெழுங் குழல்நாதத்
தஞ்செழுத்தால் தமைப்பரவும்
இசைவிரும்புங் கூத்தனார்
எழுந்தருளி யெதிர்நின்றார்.
|
38
|
முன்னின்ற மழவிடைமேல்
முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர்
திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம்
பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார்
ஐயர்திரு மருங்கணைந்தார்.
|
39
|
விண்ணவர்கள் மலர்மாரி
மிடைந்துலக மிசைவிளங்க
எண்ணிலரு முனிவர்குழாம்
இருக்குமொழி எடுத்தேத்த
அண்ணலார் குழற்கருவி
அருகிசைத்தங் குடன்செல்லப்
புண்ணியனார் எழுந்தருளிப்
பொற்பொதுவின் இடைப்புக்கார்.
|
40
|
| Go to top |
தீதுகொள் வினைக்கு வாரோம்
செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
காதுகொள் குழைகள் வீசும்
கதிர்நில விருள்கால் சீப்ப
மாதுகொள் புலவி நீக்க
மனையிடை இருகாற் செல்லத்
தூதுகொள் பவராம் நம்மைத்
தொழும்புகொண் டுரிமை கொள்வார்.
|
41
|