சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.100   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

மேவலர் புரங்கள் செற்ற  
விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்கா ளத்திக்
கண்ணப்பர் திருநா டென்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும்
நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை  
சூழ்ந்தபொத் தப்பி நாடு.
1

இத்திரு நாடு தன்னில்
இவர்திருப் பதியா தென்னில்
நித்தில அருவிச் சாரல்
நீள்வரை சூழ்ந்த பாங்கர்
மத்தவெங் களிற்றுக் கோட்டு
வன்றொடர் வேலி கோலி
ஒத்தபே ரரணஞ் சூழ்ந்த
முதுபதி உடுப்பூர் ஆகும்.
2

குன்றவர் அதனில் வாழ்வார்
கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த
வன்றிரள் விளவின் கோட்டு
வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும்
கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில்
ஐவனம் உணங்கு மெங்கும்.
3

வன்புலிக் குருளை யோடும்
வயக்கரிக் கன்றி னோடும்
புன்தலைச் சிறும கார்கள்
புரிந்துடன் ஆட லன்றி
அன்புறு காதல் கூர
அணையுமான் பிணைக ளோடும்
இன்புற மருவி யாடும்
எயிற்றியர் மகளி ரெங்கும்.
4

வெல்படைத் தறுகண் வெஞ்சொல்
வேட்டுவர் கூட்டந் தோறும்
கொல்எறி குத்தென் றார்த்துக்
குழுமிய வோசை யன்றிச்
சில்லரித் துடியுங் கொம்பும்
சிறுகண்ஆ குளியுங் கூடிக்
கல்லெனு மொலியின் மேலும்
கறங்கிசை யருவி யெங்கும்.
5
Go to top

ஆறலைத் துண்ணும் வேடர்
அயற்புலங் கவர்ந்து கொண்ட
வேறுபல் உருவின் மிக்கு
விரவும்ஆன் நிரைக ளன்றி
ஏறுடை வானந் தன்னில்
இடிக்குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும்
மதக்கைமா நிரைக ளெங்கும்.
6

மைச்செறிந் தனைய மேனி
வன்தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும்
அடைவிலார் உடைவன் தோலார்
பொச்சையி னறவும் ஊனின்
புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற் பகழி வேடர்க்
கதிபதி நாக னென்பான்.
7

பெற்றியால் தவமுன் செய்தான்
ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான்
கொடுமையே தலைநின் றுள்ளான்
விற்றொழில் விறலின் மிக்கான் 
வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை 
மனைவியும் தத்தை யென்பாள்.
8

அரும்பெறல் மறவர் தாயத்
தான்றதொல் குடியில் வந்தாள்
இரும்புலி எயிற்றுத் தாலி
இடையிடை மனவு கோத்துப்
பெரும்புறம் அலையப் பூண்டாள் 
பீலியுங் குழையுந் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச்
சூரரிப் பிணவு போல்வாள்.
9

பொருவருஞ் சிறப்பின் மிக்கார்
இவர்க்கினிப் புதல்வர்ப் பேறே
அரியதென் றெவருங் கூற
அதற்படு காத லாலே
முருகலர் அலங்கற் செவ்வேல்
முருகவேள் முன்றிற் சென்று
பரவுதல் செய்து நாளும்
பராய்க்கடன் நெறியில் நிற்பார்.
10
Go to top

வாரணச் சேவ லோடும்
வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச்
சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவே லோற்குப்
புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து
பெருவிழா எடுத்த பின்றை.
11

பயில்வடுப் பொலிந்த யாக்கை  
வேடர்தம் பதியாம் நாகற்
கெயிலுடைப் புரங்கள் செற்ற
எந்தையார் மைந்த ரான
மயிலுடைக் கொற்ற வூர்தி
வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி
அண்ணலார் அருளி னாலே.
12

கானவர் குலம்வி ளங்கத்
தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி
உறுகடன் வெறியாட் டோடும்
ஆனஅத் திங்கள் செல்ல
அளவில்செய் தவத்தி னாலே
பான்மதி உவரி ஈன்றால்
எனமகப் பயந்த போது.

13

கரிப்பரு மருப்பின் முத்தும்
கழைவிளை செழுநீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர்
பொழிதரு மழையே யன்றி
வரிச்சுரும் பலைய வானின் 
மலர்மழை பொழிந்த தெங்கும்
அரிக்குறுந் துடியே யன்றி
அமரர்துந் துபியும் ஆர்த்த.
14

அருவரைக் குறவர் தங்கள்
அகன்குடிச் சீறூ ராயம்
பெருவிழா எடுத்து மிக்க
பெருங்களி கூருங் காலைக்
கருவரை காள மேகம் 
ஏந்திய தென்னத் தாதை
பொருவரைத் தோள்க ளாரப்
புதல்வனை யெடுத்துக் கொண்டான்.
15
Go to top

கருங்கதிர் விரிக்கு மேனிக் 
காமரு குழவி தானும்
இரும்புலிப் பறழின் ஓங்கி 
இறவுள ரளவே யன்றி
அரும்பெறல் உலகம் எல்லாம் 
அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவுஞ் சாற்றுந்
தன்மையில் பொலிந்து தோன்ற.
16

அண்ணலைக் கையில் ஏந்தற்
கருமையால் உரிமைப் பேரும்
திண்ணன்என் றியம்பும் என்னத்
திண்சிலை வேட ரார்த்தார்
புண்ணியப் பொருளா யுள்ள
பொருவில்சீர் உருவி னானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள்
கலன்பல வணிந்தா ரன்றே.
17

வரையுறை கடவுட் காப்பும்
மறக்குடி மரபில் தங்கள்
புரையில்தொல் முறைமைக்
கேற்ப பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி
வேம்பிழைத் திடையே கோத்த
அரைமணிக் கவடி கட்டி
அழகுற வளர்க்கும் நாளில்.
18

வருமுறைப் பருவந் தோறும்
வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க
பெருவிறல் வேடர்க் கெல்லாம்
திருமலி துழனி பொங்கச்
செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையிற் புதல்வர்ப் பெற்ற
ஆர்வமுந் தோன்ற உய்த்தார்.
19

ஆண்டெதிர் அணைந்து செல்ல
இடும்அடித் தளர்வு நீங்கிப்
பூண்திகழ் சிறுபுன் குஞ்சிப்
புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண்
முளவுமுள் அரிந்து கோத்த
நாண்தரும் எயிற்றுத் தாலி
நலங்கிளர் மார்பில் தூங்க.
20
Go to top

பாசொளி மணியோ டார்த்த
பன்மணிச் சதங்கை ஏங்கக்
காசொடு தொடுத்த காப்புக்
கலன்புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை
செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலங் காட்டி
மறுகிடை யாடும் நாளில்.
21

தண்மலர் அலங்கல் தாதை
தாய்மனங் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில்
புனிதமாந் திருவாய் நீரில்
உண்ணனைந் தமுதம் ஊறி
ஒழுகிய மழலைத் தீஞ்சொல்
வண்ணமென் பவளச் செவ்வாய்
குதட்டியே வளரா நின்றார்.
22

பொருபுலிப் பார்வைப் பேழ்வாய்
முழையெனப் பொற்கை நீட்டப்
பரிவுடைத் தந்தை கண்டு
பைந்தழை கைக்கொண் டோச்ச
இருசுடர்க் குறுகண் தீர்க்கும்
எழில்வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய்
வாய்முத்தங் கொள்ள மாற்றி.
23

துடிக்குற டுருட்டி யோடித்
தொடக்குநாய்ப் பாசஞ் சுற்றிப்
பிடித்தறுத் தெயினப் பிள்ளைப்
பேதையர் இழைத்த வண்டல்
அடிச்சிறு தளிராற் சிந்தி
அருகுறு சிறுவ ரோடும்
குடிச்சிறு குரம்பை யெங்கும்
குறுநடைக் குறும்பு செய்து.
24

அனையன பலவும் செய்தே
ஐந்தின்மே லான ஆண்டில்
வனைதரு வடிவார் கண்ணி
மறச்சிறு மைந்த ரோடும்
சினைமலர்க் காவு ளாடிச்
செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனைமருப் புழலை வேலிப்
புறச்சிறு கானிற் போகி.
25
Go to top

கடுமுயற் பறழி னோடும்
கானஏ னத்தின் குட்டி
கொடுவரிக் குருளை செந்நாய்
கொடுஞ்செவிச் சாப மான
முடுகிய விசையி லோடித்
தொடர்ந்துடன் பற்றி முற்றத்
திடுமரத் தாளிற் கட்டி
வளர்ப்பன எண்ணி லாத.
26

அலர்பகல் கழிந்த அந்தி
ஐயவிப் புகையு மாட்டிக்
குலமுது குறத்தி யூட்டிக்
கொண்டுகண் துயிற்றிக் கங்குல்
புலரஊன் உணவு நல்கிப்
புரிவிளை யாட்டின் விட்டுச்
சிலமுறை யாண்டு செல்லச்
சிலைபயில் பருவஞ் சேர்ந்தார்.
27

தந்தையும் மைந்த னாரை
நோக்கித்தன் தடித்த தோளால்
சிந்தையுள் மகிழப் புல்லிச்
சிலைத்தொழில் பயிற்ற வேண்டி
முந்தையத் துறையின் மிக்க
முதியரை அழைத்துக் கூட்டி
வந்தநாட் குறித்த தெல்லாம்
மறவர்க்குச் சொல்லி விட்டான்.
28

வேடர்தங் கோமான் நாகன்
வென்றிவேள் அருளாற் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் 
திண்ணன்விற் பிடிக்கின் றான்என்
றாடியல் துடியுஞ் சாற்றி
யறைந்தபே ரோசை கேட்டு
மாடுயர் மலைக ளாளும்
மறக்குலத் தலைவ ரெல்லாம்.
29

மலைபடு மணியும் பொன்னும்
தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றின் கோடும் 
பீலியின் குவையும் தேனும்
தொலைவில்பல் நறவும் ஊனும் 
பலங்களுங் கிழங்குந் துன்றச்
சிலையுடை வேடர் கொண்டு
திசைதொறும் நெருங்க வந்தார்.
30
Go to top

மல்கிய வளங்கள் எல்லாம்
நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம்
ஈண்டினர் கொணர்ந்தா ரெங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப்
பராய்க்கடன் பலவும் நேர்ந்து
வில்விழா எடுக்க வென்று
விளம்பினன் வேடர் கோமான்.
31

பான்மையில் சமைத்துக் கொண்டு
படைக்கலம் வினைஞர் ஏந்தத்
தேனலர் கொன்றை யார்தம்
திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சம்
ஆக்கிட அவர்க்கே பின்னும்
கானஊன் அமுத மாக்கும்
சிலையினைக் காப்புச் சேர்த்தார்.
32

சிலையினைக் காப்புக் கட்டும்
திண்புலி நரம்பிற் செய்த
நலமிகு காப்பு நன்னாள்
நாகனார் பயந்த நாகர்
குலம்விளங் கரிய குன்றின்
கோலமுன் கையிற் சேர்த்தி
மலையுறை மாக்க ளெல்லாம்
வாழ்த்தெடுத் தியம்பி னார்கள்.
33

ஐவன அடிசில் வெவ்வே
றமைத்தன புற்பாற் சொன்றி
மொய்வரைத் தினைமென் சோறு
மூங்கில்வன் பதங்கள் மற்றும்
கைவினை எயின ராக்கிக்
கலந்தவூன் கிழங்கு துன்றச்
செய்வரை யுயர்ப்ப வெங்கும்
கலந்தனர் சினவில் வேடர்.
34

செந்தினை இடியும் தேனும் 
அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்தஊன் அயில்வார் வேரி 
விளங்கனிக் கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி
நசையொடும் மிசைவார் வெவ்வே
றந்தமி லுணவின் மேலோர்
ஆயினர் அளவி லார்கள்.
35
Go to top

அயல்வரைப் புலத்தின் வந்தார்
அருங்குடி யிருப்பின் உள்ளார்
இயல்வகை உணவி லார்ந்த
எயிற்றியர் எயின ரெல்லாம்
உயர்கதி ருச்சி நீங்க
ஒழிவில்பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி
வரிசிலை விழவு கொள்வார்.
36

பாசிலைப் படலை சுற்றிப்
பன்மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத்தோல் கட்டிக்
கவடிமெய்க் கலன்கள் பூண்டு
மாசில்சீர் வெட்சி முன்னா
வருந்துறைக் கண்ணி சூடி
ஆசில்ஆ சிரியன் ஏந்தும்
அடற்சிலை மருங்கு சூழ்ந்தார்.
37

தொண்டக முரசும் கொம்பும்
துடிகளுந் துளைகொள் வேயும்
எண்திசை நிறைந்து விம்ம
எழுந்தபே ரொலியி னோடும்
திண்திறல் மறவ ரார்ப்புச்
சேண்விசும் பிடித்துச் செல்லக்
கொண்டசீர் விழவு பொங்கக்
குறிச்சியை வலங்கொண் டார்கள்.
38

குன்றவர் களிகொண் டாடக்
கொடிச்சியர் துணங்கை யாடத்
துன்றிய மகிழ்ச்சி யோடும்
சூரர மகளி ராட
வென்றிவில் விழவி னோடும்
விருப்புடை ஏழாம் நாளின்
அன்றிரு மடங்கு செய்கை 
அழகுற அமைத்த பின்றை.
39

வெங்கதிர் விசும்பின் உச்சி
மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க 
மருங்குபல் லியங்க ளார்ப்பத்
தங்கள்தொல் மரபின் விஞ்சைத்
தனுத்தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும்போர் ஏற்றைப் 
பொருசிலை பிடிப்பித் தார்கள்.
40
Go to top

பொற்றட வரையின் பாங்கர்ப்
புரிவுறு கடன்முன் செய்த
விற்றொழிற் களத்தில் நண்ணி
விதிமுறை வணங்கி மேவும்
அற்றைநாள் தொடங்கி நாளும்
அடற்சிலை யாண்மை முற்றக்
கற்றன ரென்னை யாளும்
கானவர்க் கரிய சிங்கம்.
41

வண்ணவெம் சிலையு மற்றப்
படைகளும் மலரக் கற்றுக்
கண்ணகன் சாயல் பொங்கக்
கலைவளர் திங்க ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி
எய்தினார் எல்லை யில்லாப்
புண்ணியந் தோன்றி மேன்மேல்
வளர்வதன் பொலிவு போல்வார்.
42

இவ்வண்ணந் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவ னாய
மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் தானும்
மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலம்
கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர்
கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து
மெய்வண்ணந் தளர்மூப்பின் பருவ மெய்தி
வில்லுழவின் பெருமுயற்சி மெலிவா னானான்.
43

அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கும்
அடலேனம் புலிகரடி கடமை ஆமா
வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள
மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் காலைத்
திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்று
சிலைவேடர் தாமெல்லாம திரண்டு சென்று
தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார்.
44

சொன்னவுரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்துவருந் தன்மூப்பின் தொடர்வு நோக்கி
முன்னவர்கட் குரைசெய்வான் மூப்பி னாலே
முன்புபோல் வேட்டையினின் முயல கில்லேன்
என்மகனை உங்களுக்கு நாத னாக
எல்லீருங் கைக்கொண்மி னென்ற போதில்
அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோன்
அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்.
45
Go to top

இத்தனைகா லமும்நினது சிலைக்கீழ்த் தங்கி
இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம் இன்னும்
அத்தநின தருள்வழியே நிற்ப தல்லால்
அடுத்தநெறி வேறுளதோ அதுவே யன்றி
மெய்த்தவிறல் திண்ணனைஉன் மரபில் சால
மேம்படவே பெற்றளித்தாய் விளங்கு மேன்மை
வைத்தசிலை மைந்தனைஈண் டழைத்து நுங்கள்
 வரையாட்சி யருளென்றார் மகிழ்ந்து வேடர்.
46

சிலைமறவ ருரைசெய்ய நாகன் தானும்
திண்ணனைமுன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலைமருவு நெடுங்கானிற் கன்னி வேட்டை
மகன்போகக் காடுபலி மகிழ வூட்டத்
தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி
தனையழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமையவள் தனக்குரைப்ப நரைமூ தாட்டி
நெடிதுவந்து விருப்பினொடுங் கடிது வந்தாள்.
47

கானில்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடிக்
கலைமருப்பின் அரிந்த குழை காதிற் பெய்து
மானின்வயிற் றரிதாரத் திலக மிட்டு
மயிற் கழுத்து மனவுமணி வடமும் பூண்டு
தானிழிந்து திரங்கிமுலை சரிந்து தாழத்
தழைப்பீலி மரவுரிமேற் சார வெய்திப்
பூநெருங்கு தோரைமல சேடை நல்கிப்
போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.
48

நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை
நேர்நோக்கி அன்னைந நிரப்பு நீங்கி
நன்றினிதி னிருந்தனையோ என்று கூறும்
நாக னெதிர் நலம்பெருக வாழ்த்தி
நல்ல மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில்
விளைவளனும் பிறவளனும் வேண்டிற் றெல்லாம்
அன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வேன்
அழைத்தபணி என்னென்றாள் அணங்கு சார்ந்தாள்.
49

கோட்டமில்என் குலமைந்தன் திண்ணன் எங்கள்
குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு பூண்டு
பூட்டுறுவெஞ் சிலைவேடர் தம்மைக் காக்கும்
பொருப்புரிமை புகுகின்றான் அவனுக் கென்றும்
வேட்டைவினை யெனக்குமே லாக வாய்த்து
வேறுபுலங் கவர்வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக்
காடுபலி ஊட்டென்றான் கவலை யில்லான்.
50
Go to top

மற்றவன்தன் மொழிகேட்ட வரைச்சூ ராட்டி
மனமகிழ்ந்திங் கன்போடு வருகின் றேனுக்
கெற்றையினுங் குறிகள்மிக நல்ல வான
இதனாலே உன்மைந்தன் திண்ண னான
வெற்றிவரிச் சிலையோன்நின் அளவி லன்றி
மேம்படுகின் றான்என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன தெய்வங்கள் மகிழ வூட்ட
வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்.
51

தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு
திண்ணனார் சிலைத்தாதை அழைப்பச்சீர்கொள்
மைவிரவு நறுங்குஞ்சி வாசக கண்ணி
மணிநீல மலையொன்று வந்த தென்னக்
கைவிரவு சிலைவேடர் போற்ற வந்து
காதல்புரி தாதைகழல் வணங்கும் போதில்
செவ்வரைபோல் புயமிரண்டுஞ் செறியப் புல்லிச்
செழும்புலித்தோ லிருக்கையின்முன் சேர வைத்தான்.
52

முன்னிருந்த மைந்தன்முகம் நோக்கி நாகன்
மூப்பெனைவந் தடைதலினால் முன்பு போல
என்னுடைய முயற்சியினால் வேட்டை யாட
இனிஎனக்குக் கருத்தில்லை எனக்கு மேலாய்
மன்னுசிலை மலையர்குலக் காவல் பூண்டு
மாறெறிந்து மாவேட்டை யாடி என்றும்
உன்னுடைய மரபுரிமை தாங்கு வாயென்
றுடைதோலும் சுரிகையுங்கைக் கொடுத்தா னன்றே.
53

தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.
54

நம்முடைய குலமறவர் சுற்றத் தாரை
நான்கொண்டு பரித்த தன்மேல் நலமே செய்து
தெம்முனையி லயற்புலங்கள் கவர்ந்து கொண்டு
திண்சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
வெம்முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்துநீ தாழாதே வேட்டை யாட
இம்முரண்வெஞ் சிலைவேடர் தங்க ளோடும்
எழுகவென விடைகொடுத்தான் இயல்பில் நின்றான்.
55
Go to top

செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மைத்
திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண்விறல் தாதைகழல் வணங்கி நின்று
விடைகொண்டு புறம்போந்து வேட ரோடும்
மங்கலநீர்ச் சுனைபடிந்து மனையின் வைகி
வைகிருளின் புலர்காலை வரிவிற் சாலைப்
பொங்குசிலை அடல்வேட்டைக் கோலங் கொள்ளப்
புனைதொழிற்கை வினைஞருடன் பொலிந்து புக்கார்.
56

நெறிகொண்ட குஞ்சிச் சுருள்துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு செய்து.

57

முன்னெற்றி யின்மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னிற்புரி கொண்ட மயிர்க்கயி றாரச் சாத்தி
மின்னிற்றிகழ் சங்கு விளங்குவெண் டோடு காதின்
மன்னிப்புடை நின்றன மாமதி போல வைக.
58

கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்
கொண்டக்கொடு பன்மணி கோத்திடை ஏனக் கோடு
துண் டப்பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க.

59

மார்பிற்சிறு தந்த மணித்திரள் மாலை தாழத்
தாரிற்பொலி தோள்வல யங்கள் தழைத்து மின்னச்
சேர்விற்பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கைக்
கார்விற்செறி நாணெறி கைச்செறி கட்டி கட்டி.
60
Go to top

அரையிற்சர ணத்துரி யாடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளல கார்த்து விளிம்பு சேர்த்தி
நிரையிற்பொலி நீளுடை தோல்சுரி கைப்பு றஞ்சூழ்
விரையிற்றுவர் வார்விசி போக்கி அமைத்து வீக்கி.
61

வீரக்கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப்பெரு வில்வலங் கொண்டு பணிந்து திண்ணன்
சாரத்திருத் தாள்மடித் தேற்றி வியந்து தாங்கி.
62

அங்கப்பொழு திற்புவ னத்திடர் வாங்க ஓங்கித்
துங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப
வெங்கட்சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத்தலத் தால்தட விச்சிறு நாண்எ றிந்தார்.
63

பல்வேறு வாளிபுதை பார்த்துடன் போத ஏவி
வில்வேட ராயத் துடிமேவி ஒலிக்கு முன்றில்
சொல்வேறு வாழ்த்துத் திசைதோறுந் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல்வாளி தெரிந்து நின்றார்.
64

மானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில்
பானற்குல மாமல ரிற்படர் சோதி யார்முன்
தேனற்றசை தேறல் சருப்பொரி மற்று முள்ள
கானப்பலி நேர்கட வுட்பொறை யாட்டி வந்தாள்.
65
Go to top

நின்றெங்கு மொய்க்குஞ்சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்றங்கு வள்ளல்திரு நெற்றியிற் சேடை சாத்தி
உன்தந்தை தந்தைக்கும் இந்நன்மை கள்உள்ள வல்ல
நன்றும்பெரி துன்விறல் நம்மள வன்றி தென்றாள்.
66

அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை
யாட்டி தன்னைச்
செப்பற்கரி தாய சிறப்பெதிர்
செய்து போக்கிக்
கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை  
மேக மென்ன
மெய்ப்பொற்புடை வேட்டை யின்மேற்கொண்
டெழுந்து போந்தார்.
67

தாளில்வாழ் செருப்பர்தோல்
தழைத்தநீடு தானையார்
வாளியோடு சாபம்மேவு  
கையர்வெய்ய வன்கணார்
ஆளியேறு போலஏகும்  
அன்ணலார்முன் எண்ணிலார்
மீளிவேடர் நீடுகூட்டம்
மிக்குமேல் எழுந்ததே.
68

வன்தொடர்ப்பி ணித்தபாசம்  
வன்கைமள்ளர் கொள்ளவே
வென்றிமங்கை வேடர்வில்லின்
மீதுமேவு பாதமுன்
சென்றுநீளு மாறுபோல்வ  
செய்யநாவின் வாயவாய்
ஒன்றொடொன்று நேர்படாமல்
ஓடுநாய்கள் மாடெலாம்.
69

போர்வலைச் சிலைத்தொழிற்  
புறத்திலே விளைப்பவச்
சார்வலைத் தொடக்கறுக்க  
ஏகும்ஐயர் தம்முனே
கார்வலைப் படுத்தகுன்று
கானமா வளைக்கநீள்
வார்வலைத் திறஞ்சுமந்து  
வந்தவெற்பர் முந்தினார்.
70
Go to top

நண்ணிமாம றைக்குலங்கள்
நாடவென்று நீடுமத்
தண்ணிலா அடம்புகொன்றை  
தங்குவேணி யார்தமைக்
கண்ணினீடு பார்வையொன்று  
கொண்டு காணும் அன்பர்முன்
எண்ணில்பார்வை கொண்டுவேடர்  
எம்மருங்கும் ஏகினார்.
71

கோடுமுன் பொலிக்கவும்
குறுங்கணா குளிக்குலம்
மாடுசென் றிசைப்பவும்  
மருங்குபம்பை கொட்டவும்
சேடுகொண்ட கைவிளிச்  
சிறந்தவோசை செல்லவும்
காடுகொண் டெழுந்தவேடு  
கைவளைந்து சென்றதே.
72

நெருங்குபைந் தருக்குலங்கள்
நீடுகாடு கூடநேர்
வருங்கருஞ் சிலைத்தடக்கை  
மானவேடர் சேனைதான்
பொருந்தடந் திரைக்கடல்  
பரப்பிடைப் புகும்பெருங்
கருந்தரங்க நீள்புனல்
களிந்திகன்னி யொத்ததே.
73

தென்றிசைப் பொருப்புடன்
செறிந்தகானின் மானினம்
பன்றிவெம் மரைக்கணங்கள்  
ஆதியான பல்குலம்
துன்றிநின்ற வென்றடிச்
சுவட்டின்ஒற்றர் சொல்லவே
வன்தடக்கை வார்கொடெம்  
மருங்கும் வேடரோடினார்.
74

ஒடியெறிந்து வாரொழுக்கி  
யோசனைப் பரப்பெலாம்
நெடியதிண் வலைத்தொடக்கு
நீளிடைப் பிணித்துநேர்
கடிகொ ளப் பரந்தகாடு  
காவல்செய் தமைத்தபின்
செடிதலைச் சிலைக்கைவேடர்  
திண்ணனார்முன் நண்ணினார்.
75
Go to top

வெஞ்சிலைக்கை வீரனாரும்  
வேடரோடு கூடிமுன்
மஞ்சலைக்கு மாமலைச்  
சரிப்புறத்து வந்தமா
அஞ்சுவித் தடர்க்குநாய்கள்  
அட்டமாக விட்டுநீள்
செஞ்சரத்தி னோடுசூழல்  
செய்தகானுள் எய்தினார்.
76

வெய்யமா எழுப்பஏவி
வெற்பராயம் ஓடிநேர்
எய்யும்வாளி முன்தெரிந்து  
கொண்டுசெல்ல எங்கணும்
மொய்குரல் துடிக்குலங்கள்  
பம்பைமுன் சிலைத்தெழக்
கைவிளித் ததிர்த்துமா
எழுப்பினார்கள் கானெலாம்.
77

ஏனமோடு மானினங்கள்  
எண்குதிண் கலைக்குலம்
கானமேதி யானைவெம்  
புலிக்கணங்கள் கான்மரை
ஆனமாவ னேகமா  
வெருண்டெழுந்து பாயமுன்
சேனைவேடர் மேலடர்ந்து
சீறிஅம்பில் நூறினார்.
78

தாளறுவன இடைதுணிவன  
தலைதுமிவன கலைமா
வாளிகளொடு குடல்சொரிதர
மறிவனசில மரைமா
நீளுடல்விடு சரமுருவிட
நிமிர்வனமிடை கடமா
மீளிகொள்கணை படுமுடலெழ  
விழுவனபல உழையே.
79

வெங்கணைபடு பிடர்கிழிபட  
விசையுருவிய கயவாய்
செங்கனல்பட அதனொடுகணை
செறியமுன்இரு கருமா
அங்கெழுசிர முருவியபொழு  
தடலெயிறுற அதனைப்
பொங்கியசின மொடுகவர்வன
புரைவனசில புலிகள்.
80
Go to top

பின்மறவர்கள் விடுபகழிகள்  
பிறகுறவயி றிடைபோய்
முன்னடுமுக மிசையுறுவிட  
முடுகியவிசை யுடனக்
கொன்முனையடு சரமினமெதிர்
குறுகியமுக முருவத்
தன்னெதிரெதிர் பொருவனநிகர்
தலையனபல கலைகள்.
81

கருவரையொரு தனுவொடுவிசை
கடுகியதென முனைநேர்
குரிசில்முன்விடும் அடுசரமெதிர்
கொலைபயில்பொழு தவையே
பொருகரியொடு சினவரியிடை
புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன
எனமிடையுமவ் வனமே.
82

நீளிடைவிசை மிசைகுதிகொள  
நெடுமுகில்தொட எழுமான்
தாளுறுகழல் மறவர்கள்விடு
சரநிரைதொடர் வனதாம்
வாள்விடுகதிர் மதிபிரிவுற
வருமெனவிழும் உழையைக்
கோளொடுபயில் பணிதொடர்நிலை
கொளவுளவெதிர் பலவே.
83

கடல்விரிபுனல் கொளவிழுவன  
கருமுகிலென நிரையே
படர்வொடுசெறி தழைபொதுளிய  
பயில்புதல்வன மதன்மேல்
அடலுறுசரம் உடலுறவரை  
அடியிடம்அல மரலால்
மிடைகருமரை கரடிகளொடு
விழுவனவன மேதி.

84

பலதுறைகளின் வெருவரலொடு  
பயில்வலையற நுழைமா
உலமொடுபடர் வனதகையுற
உறுசினமொடு கவர்நாய்
நிலவியவிரு வினைவலையிடை
நிலைசுழல்பவர் நெறிசேர்
புலனுறுமன னிடைதடைசெய்த
பொறிகளின்அள வுளவே.
85
Go to top

துடியடியன மடிசெவியன  
துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள்
மிகைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன  
அணைவுறுபிணை அலையார்
கொடியனஎதிர் முடுகியும்உறு  
கொலைபுரிசிலை மறவோர்.
86

இவ்வகைவரு கொலைமறவினை
எதிர்நிகழ்வுழி அதிரக்
கைவரைகளும் வெருவுறமிடை
கானெழுவதொர் ஏனம்
பெய்கருமுகி லெனஇடியொடு
பிதிர்கனல்விழி சிதறி
மொய்வலைகளை அறநிமிர்வுற
முடுகியகடு விசையில்.
87

போமதுதனை அடுதிறலொடு  
பொருமறவர்கள் அரியே
றாமவர்தொடர் வுறும்விசையுடன்
அடிவழிசெலும் அளவில்
தாமொருவரு ம் அறிகிலரவர்  
தனிதொடர்வுழி அதன்மேல்
ஏமுனையடு சிலைவிடலைகள்  
இருவர்கள்அடி பிரியார்.
88

நாடியகழல் வயவர்களவர்
நாணனும்நெடு வரிவில்
காடனும்எனும் இருவருமலை  
காவலரொடு கடிதில்
கூடினர்விடு பகழிகளொடு  
கொலைஞமலிகள் வழுவி
நீடியசரி படர்வதுதரு
நீழலின்விரை கேழல்.
89

குன்றியைநிகர் முன்செறஎரி
கொடுவிழிஇடி குரல்நீள்
பன்றியும்அடல் வன்றிறலொடு
படர்நெறிநெடி தோடித்
துன்றியதொரு குன்றடிவரை
சுலவியநெறி சூழல்
சென்றதனிடை நின்றதுவலி  
தெருமரமரம் நிரையில்.
90
Go to top

அத்தருவளர் சுழலிடையடை  
அதனிலையறி பவர்முன்
கைத்தெரிகணை யினிலடுவது
கருதலர்விசை கடுகி
மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை
முனைபெறஎதிர் உருவிக்
குத்தினருடல் முறிபடவெறி
குலமறவர்கள் தலைவர்.
91

வேடர்தங் கரிய செங்கண்  
வில்லியார் விசையிற் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த  
வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன்பின் இன்று  
காதங்கள் பலவந் தெய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ
என்றவர் அடியில் தாழ்ந்தார்.
92

மற்றவர் திண்ண னார்க்கு  
மொழிகின்றார் வழிவந் தாற்ற
உற்றது பசிவந் தெம்மை
உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்றுநீ அருந்தி யாமும்  
தின்றுதண் ணீர்கு டித்து
வெற்றிகொள் வேட்டைக் காடு  
குறுகுவோம் மெல்ல என்றார்.
93

என்றவர் கூற நோக்கித்  
திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றுமிவ் வனத்தி லுள்ள  
தென்றுரை செய்ய நாணன்
நின்றவிப் பெரிய தேக்கின்
அப்புறஞ் சென்றால் நீண்ட
குன்றினுக் கயலே ஓடும்
குளிர்ந்தபொன் முகலி என்றான்.
94

பொங்கிய சினவில் வேடன்  
சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு  
போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார்
காவதம் அரையிற் கண்டார்
செங்கண்ஏ றுடையார் வைகும்
திருமலைச் சாரற் சோலை.
95
Go to top

நாணனே தோன்றும் குன்றில்  
நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல  
காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி  
மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர்
இருப்பர்கும் பிடலாம் என்றான்.
96

ஆவதென் இதனைக் கண்டிங்  
கணைதொறும் என்மேல் பாரம்
போவதொன் றுளது போலும்  
ஆசையும் பொங்கி மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர்
விருப்புற விரையா நிற்கும்
தேவரங் கிருப்ப தெங்கே
போகென்றார் திண்ண னார்தாம்.
97

உரைசெய்து விரைந்து செல்ல  
அவர்களும் உடனே போந்து
கரைவளர் கழையின் முத்தும்
காரகில் குறடுஞ் சந்தும்
வரைதரு மணியும் பொன்னும்  
வயிரமும் புளினம் தோறும்
திரைகள்முன் திரட்டி வைத்த  
திருமுக லியினைச் சார்ந்தார்.
98

ஆங்கதன் கரையின் பாங்கோர்  
அணிநிழற் கேழ லிட்டு
வாங்குவிற் காடன் தன்னை
மரக்கடை தீக்கோல் பண்ணி
ஈங்குநீ நெருப்புக் காண்பாய்  
இம்மலை யேறிக் கண்டு
நாங்கள்வந் தணைவோ மென்று
நாணனும் தாமும் போந்தார்.
99

அளிமிடை கரைசூழ் சோலை
அலர்கள்கொண் டணைந்த ஆற்றின்
தெளிபுன லிழிந்து சிந்தை
தெளிவுறுந் திண்ண னார்தாம்
களிவரு மகிழ்ச்சி பொங்கக்  
காளத்தி கண்டு கொண்டு
குளிர்வரு நதியூ டேகிக்  
குலவரைச் சாரல் சேர்ந்தார்.
100
Go to top

கதிரவ னுச்சி நண்ணக்
கடவுள்மால் வரையி னுச்சி
அதிர்தரு மோசை ஐந்தும்  
ஆர்கலி முழக்கங் காட்ட
இதுவென்கொல் நாணா வென்றார்க்  
கிம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மதுமலர் ஈக்கள் மொய்த்து  
மருங்கெழும் ஒலிகொல் என்றான்.
101

முன்புசெய் தவத்தின் ஈட்டம்  
முடிவிலா இன்ப மான
அன்பினை எடுத்துக் காட்ட  
அளவிலா ஆர்வம் பொங்கி
மன்பெருங் காதல் கூர வ
ள்ளலார் மலையை நோக்கி
என்புநெக் குருகி உள்ளத்
தெழுபெரு வேட்கை யோடும்.
102

நாணனும் அன்பும் முன்பு
நளிர்வரை ஏறத் தாமும்
பேணுதத் துவங்க ளென்னும்
பெருகுசோ பானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார  
அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி  
நேர்படச் செல்லும் போதில்.
103

திங்கள்சேர் சடையார் தம்மைச்  
சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த  
அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச்  
சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல்  
பொருவில்அன் புருவம் ஆனார்.
104

மாகமார் திருக்கா ளத்தி  
மலையெழு கொழுந்தா யுள்ள
எகநா யகரைக் கண்டார் 
எழுந்தபே ருவகை அன்பின்
வேகமா னதுமேற் செல்ல  
மிக்கதோர் விரைவி னோடு
மோகமா யோடிச் சென்றார்  
தழுவினார் மோந்து நின்றார்.
105
Go to top

நெடிதுபோ துயிர்த்து நின்று  
நிறைந்தெழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க  
மலர்க்கண்ணீர் அருவி பாய
அடியனேற் கிவர்தாம் இங்கே  
அகப்பட்டார் அச்சோ என்று
படியிலாப் பரிவு தானோர்
படிவமாம் பரிசு தோன்ற.
106

வெம்மறக் குலத்து வந்த  
வேட்டுவச் சாதி யார்போல்
கைம்மலை கரடி வேங்கை
அரிதிரி கானந் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார்  
ஒருவரு மின்றிக் கெட்டேன்
இம்மலைத் தனியே நீரிங்  
கிருப்பதே என்று நைந்தார்.
107

கைச்சிலை விழுந்த தோரார்
 காளையார் மீள இந்தப்
பச்சிலை யோடு பூவும்  
பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ  
என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும்
நான் இது அறிந்தேன் என்பான்.
108

வன்திறல் உந்தை யோடு  
மாவேட்டை யாடிப் பண்டிக்
குன்றிடை வந்தோ மாகக்  
குளிர்ந்தநீ ரிவரை யாட்டி
ஒன்றிய இலைப்பூச் சூட்டி
ஊட்டிமுன் பறைந்தோர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும்  
அவன்செய்தா னாகு மென்றான்.
109

உண்ணிறைந் தெழுந்த தேனும்  
ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக்கா ளத்தி
நாயனார்க் கினிய செய்கை
எண்ணிய இவைகொ லாமென்
றிதுகடைப் பிடித்துக் கொண்டவ்
அண்ணலைப் பிரிய மாட்டா  
தளவில் ஆதரவு நீட.
110
Go to top

இவர்தமைக் கண்டே னுக்குத்
தனியராய் இருந்தார் என்னே
இவர்தமக் கமுது செய்ய  
இறைச்சியும் இடுவா ரில்லை
இவர்தமைப் பிரிய ஒண்ணா
தென்செய்கேன் இனியான் சால
இவர்தமக் கிறைச்சி கொண்டிங்
கெய்தவும் வேண்டு மென்று.
111

போதுவர் மீண்டு செல்வர்
புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர்  
கன்றகல் புனிற்றாப் போல்வர்
நாதனே அமுது செய்ய  
நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு
கொண்டிங்கு வருவே னென்பார்.
112

ஆர்தம ராக நீரிங்
கிருப்பதென் றகல மாட்டேன்
நீர்பசித் திருக்க இங்கு  
நிற்கவுங் கில்லேன் என்று
சோர்தரு கண்ணீர் வாரப்  
போய்வரத் துணிந்தா ராகி
வார்சிலை எடுத்துக் கொண்டு  
மலர்க்கையால் தொழுது போந்தார்.
113

முன்புநின் றரிதில் நீங்கி
மொய்வரை யிழிந்து நாணன்
பின்புவந் தணைய முன்னைப்  
பிறதுறை வேட்கை நீங்கி
அன்புகொண் டுய்ப்பச் செல்லும்
அவர்திரு முகலி ஆற்றின்
பொன்புனை கரையி லேறிப்  
புதுமலர்க் காவிற் புக்கார்.
114

காடனும் எதிரே சென்று
தொழுதுதீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள்
குறிப்படி உறுப்பை யெல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும்
மறித்துநாம் போகைக் கின்று
நீடநீர் தாழ்த்த தென்னோ  
என்றலும் நின்ற நாணன்.
115
Go to top

அங்கிவன் மலையில் தேவர்  
தம்மைக்கண் டணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதா  
வல்லுடும் பென்ன நீங்கான்
இங்குமத் தேவர் தின்ன
இறைச்சிகொண் டேகப் போந்தான்
நங்குலத் தலைமை விட்டான்
நலப்பட்டான் தேவர்க் கென்றான்.
116

என்செய்தாய் திண்ணா நீதான்  
என்னமால் கொண்டாய் எங்கள்
முன்பெரு முதலி யல்லை  
யோவென முகத்தை நோக்கார்
வன்பெரும் பன்றி தன்னை  
எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வே  
றம்பினால் ஈர்ந்து கொண்டு.
117

கோலினிற் கோத்துக் காய்ச்சிக்
கொழுந்தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான்  
வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம்  
சருகிலை யிணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட  
அதன்மிசை இடுவா ரானார்.
118

மருங்குநின் றவர்கள் பின்னும்
மயல்மிக முதிர்ந்தான் என்னே
அரும்பெறல் இறைச்சி காய்ச்சி  
அதுக்கிவே றுமிழா நின்றான்
பெரும்பசி யுடைய னேனும்
பேச்சிலன் எமக்கும் பேறு
தரும்பரி சுணரான் மற்றைத்  
தசைபுறத் தெறியா நின்றான்.
119

தேவுமால் கொண்டான் இந்தத்
திண்ணன்மற் றிதனைத் தீர்க்கல்
ஆவதொன் றறியோந் தேவ
ராட்டியை நாக னோடு
மேவிநாங் கொணர்ந்து தீர்க்க  
வேண்டும்அவ் வேட்டைக் கானில்
ஏவலாட் களையுங் கொண்டு  
போதுமென் றெண்ணிப் போனார்.
120
Go to top

கானவர் போன தோரார்  
கடிதினில் கல்லை யின்கண்
ஊனமு தமைத்துக் கொண்டு  
மஞ்சனம் ஆட்ட உன்னி
மாநதி நன்னீர் தூய  
வாயினிற் கொண்டு கொய்த
தூநறும் பள்ளித் தாமம்  
குஞ்சிமேல் துதையக் கொண்டார்.
121

தனுவொரு கையில் வெய்ய  
சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனிதமெல் லிறைச்சி நல்ல
போனகம் ஒருகை யேந்தி
இனியஎம் பிரானார் சாலப்  
பசிப்பரென் றிரங்கி யேங்கி
நனிவிரைந் திறைவர் வெற்பை  
நண்ணினார் திண்ண னார்தாம்.
122

இளைத்தனர் நாய னார்என்  
றீண்டச்சென் றெய்தி வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு  
முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொற் செருப்பால் மாற்றி
வாயில்மஞ் சனநீர் தன்னை
விளைத்தஅன் புமிழ்வார் போல  
விமலனார் முடிமேல் விட்டார்.
123

தலைமிசைச் சுமந்த பள்ளித்  
தாமத்தைத் தடங்கா ளத்தி
மலைமிசைத் தம்பி ரானார்  
முடிமிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத்
திண்ணனார் சேர்த்த கல்லை
இலைமிசைப் படைத்த ஊனின்  
திருவமு தெதிரே வைத்து.
124

கொழுவிய தசைக ளெல்லாம்  
கோலினில் தெரிந்து கோத்தங்
கழலுறு பதத்திற் காய்ச்சிப்  
பல்லினா லதுக்கி நாவிற்
பழகிய இனிமை பார்த்துப்  
படைத்தஇவ் விறைச்சி சால
அழகிது நாய னீரே  
அமுதுசெய் தருளும் என்றார்.
125
Go to top

அன்னவிம் மொழிகள் சொல்லி  
அமுதுசெய் வித்த வேடர்
மன்னனார் திருக்கா ளத்தி  
மலையினார்க் கினிய நல்லூன்
இன்னமும் வேண்டு மென்னும்  
எழுபெருங் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப்  
பகலவன் மலையில் தாழ்ந்தான்.
126

அவ்வழி யந்தி மாலை  
அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங் குளவென் றஞ்சி
மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித்
திருக்கையில் சிலையும் தாங்கி
மைவரை யென்ன ஐயர்
மருங்குநின் றகலா நின்றார்.
127

சார்வருந் தவங்கள் செய்தும்  
முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும்  
காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா  
அன்பினிற் கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார்  
நீளிருள் நீங்க நின்றார்.
128

கழைசொரி தரளக் குன்றில்  
கதிர்நில வொருபாற் பொங்க
முழையர வுமிழ்ந்த செய்ய  
மணிவெயில் ஒருபால் மொய்ப்பத்
தழைகதிர்ப் பரிதியோடும
சந்திரன் தலைஉ வாவில்
குழையணி காதர் வெற்பைக்
கும்பிடச் சென்றால் ஒக்கும்.
129

விரவுபன் மணிகள் கான்ற
விரிசுடர்ப் படலை பொங்க
மரகதம் ஒளிகொள் நீல
மணிகளும் இமைக்குஞ் சோதி
பொரவிரு சுடருக் கஞ்சிப்  
போயின புடைகள் தோறும்
இரவிரு ளொதுங்கி னாலே  
போன்றுள தெங்கும் எங்கும்.
130
Go to top

செந்தழல் ஒளியில் பொங்கும்
தீபமா மரங்க ளாலும்
மந்திகள் முழையில் வைத்த
மணிவிளக் கொளிக ளாலும்
ஐந்தும்ஆ றடக்கி யுள்ளார்  
அரும்பெருஞ் சோதி யாலும்
எந்தையார் திருக்கா ளத்தி
மலையினில் இரவொன் றில்லை.
131

வருங்கறைப் பொழுது நீங்கி
மல்கிய யாமம் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின்
சூழ்சிலம் போசை கேட்டுக்
கருங்கட லென்ன நின்ற  
கண்துயி லாத வீரர்
அரும்பெறல் தம்பி ரானார்க்
கமுதுகொண் டணைய வேண்டி.
132

ஏறுகாற் பன்றி யோடும்  
இருங்கலை புனமான் மற்றும்
வேறுவே றினங்கள் வேட்டை  
வினைத்தொழில் விரகி னாலே
ஊறுசெய் காலம் சிந்தித்  
துருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையுங் கொண்டு
வள்ளலைத் தொழுது போந்தார்.
133

மொய்காட்டும் இருள்வாங்கி
முகங்காட்டுந் தேர்இரவி
மெய்காட்டும் அன்புடைய
வில்லியார் தனிவேட்டை
எய்காட்டின் மாவளைக்க
இட்டகருந் திரையெடுத்துக்
கைகாட்டு வான்போலக்
கதிர்காட்டி யெழும்பொழுதில்.
134

எய்தியசீர் ஆகமத்தில்  
இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும்  
முதலான கொண்டணைந்தார்
மைதழையுங் கண்டத்து  
மலைமருந்தை வழிபாடு
செய்துவருந் தவமுடைய  
முனிவர்சிவ கோசரியார்.
135
Go to top

வந்துதிரு மலையின்கண்
வானவர்நா யகர்மருங்கு
சிந்தைநிய மத்தோடும்  
செல்கின்றார் திருமுன்பு
வெந்தஇறைச் சியும்எலும்பும்
கண்டகல மிதித்தோடி
இந்தஅனு சிதங்கெட்டேன்
யார்செய்தார் என்றழிவார்.
136

மேவநேர் வரஅஞ்சா
வேடுவரே இதுசெய்தார்
தேவதே வேசனே  
திருமுன்பே இதுசெய்து
போவதே இவ்வண்ணம்
புகுதநீர் திருவுள்ளம்
ஆவதே எனப்பதறி  
அழுதுவிழுந் தலமந்தார்.
137

பொருப்பிலெழுஞ் சுடர்க்கொழுந்தின்  
பூசனையும் தாழ்க்கநான்
இருப்பதினி என்என்றவ்  
இறைச்சியெலும் புடன்இலையும்
செருப்படியும் நாயடியும்  
திருவலகால் மாற்றியபின்
விருப்பினொடுந் திருமுகலிப்  
புனல்மூழ்கி விரைந்தணைந்தார்.
138

பழுதுபுகுந் ததுதீரப்
பவித்திரமாம் செயல்புரிந்து
தொழுதுபெறு வனகொண்டு
தூயபூ சனைதொடங்கி
வழுவில்திரு மஞ்சனமே  
முதலாக வரும்பூசை
முழுதுமுறை மையின்முடித்து
முதல்வனார் கழல்பணிந்தார்.
139

பணிந்தெழுந்து தனிமுதலாம்  
பரனென்று பன்முறையால்
துணிந்தமறை மொழியாலே
துதிசெய்து சுடர்த்திங்கள்
அணிந்தசடை முடிக்கற்றை  
அங்கணரை விடைகொண்டு
தணிந்தமனத் திருமுனிவர்
தபோவனத்தி னிடைச்சார்ந்தார்.
140
Go to top

இவ்வண்ணம் பெருமுனிவர்
ஏகினார் இனியிப்பால்
மைவண்ணக் கருங்குஞ்சி
வனவேடர் பெருமானார்
கைவண்ணச் சிலைவளைத்துக்  
கான்வேட்டை தனியாடிச்
செய்வண்ணத் திறம்மொழிவேன்
தீவினையின் திறம்ஒழிவேன்.
141

திருமலையின் புறம்போன
திண்ணனார் செறிதுறுகல்
பெருமலைக ளிடைச்சரிவில்
பெரும்பன்றி புனம்மேய்ந்து
வருவனவுந் துணிபடுத்து
மானினங்கள் கானிடைநின்
றொருவழிச்சென் றேறுதுறை
ஒளிநின்று கொன்றருளி.
142

பயில்விளியால் கலையழைத்துப்
பாடுபெற ஊடுருவும்
அயில்முகவெங் கணைபோக்கி
அடியொற்றி மரையினங்கள்
துயிலிடையிற் கிடையெய்து  
தொடர்ந்துகட மைகளெய்து
வெயில்படுவெங் கதிர்முதிரத்
தனிவேட்டை வினைமுடித்தார்.
143

பட்டவன விலங்கெல்லாம்
படர்வனத்தில் ஒருசூழல்
இட்டருகு தீக்கடைகோல்
இருஞ்சுரிகை தனையுருவி
வெட்டிநறுங் கோல்தேனும்
மிகமுறித்துத் தேக்கிலையால்
வட்டமுறு பெருங்கல்லை  
மருங்குபுடை படவமைத்தார்.
144

இந்தனத்தை முறித்தடுக்கி
எரிகடையும் அரணியினில்
வெந்தழலைப் பிறப்பித்து  
மிகவளர்த்து மிருகங்கள்
கொந்திஅயில் அலகம்பாற்  
குட்டமிட்டுக் கொழுப்பரிந்து
வந்தனகொண் டெழுந்தழலில்  
வக்குவன வக்குவித்து.
145
Go to top

வாயம்பால் அழிப்பதுவும்  
வகுப்பதுவும் செய்தவற்றின்
ஆயவுறுப் பிறைச்சியெலாம்
அரிந்தொருகல் லையிலிட்டுக்
காயநெடுங் கோல்கோத்துக்  
கனலின்கண் உறக்காய்ச்சித்
தூயதிரு அமுதமைக்ககச்  
சுவைகாணல் உறுகின்றார்.
146

எண்ணிறந்த கடவுளருக்
கிடுமுணவு கொண்டூட்டும்
வண்ணஎரி வாயின்கண்
வைத்ததெனக் காளத்தி
அண்ணலார்க் காம்பரிசு
தாஞ்சோதித் தமைப்பார்போல்
திண்ணனார் திருவாயில்
அமைத்தார்ஊன் திருவமுது.
147

நல்லபத முறவெந்து
நாவின்கண் இடுமிறைச்சி
கல்லையினிற் படைத்துத்தேன்  
பிழிந்துகலந் ததுகொண்டு
வல்விரைந்து திருப்பள்ளித்
தாமமுந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்புபோல்
உடன்கொண்டு வந்தணைந்தார்.
148

வந்துதிருக் காளத்தி  
மலையேறி வனசரர்கள்
தந்தலைவ னார்இமையோர்  
தலைவனார் தமையெய்தி
அந்தணனார் பூசையினை
முன்புபோ லகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய
பூசனையின் செயல்முடிப்பார்.
149

ஊனமுது கல்லையுடன்
வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள்  
மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு  
தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது  
தித்திக்கும் எனமொழிந்தார்.
150
Go to top

இப்பரிசு திருவமுது  
செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனைசெய்
தந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந்  
தெழும்அன்பால் காளத்தி
அப்பர்எதிர் அல்லுறங்கார்
பகல்வேட்டை யாடுவார்.
151

மாமுனிவர் நாள்தோறும்
வந்தணைந்து வனவேந்தர்
தாமுயலும் பூசனைக்குச்  
சாலமிகத் தளர்வெய்தித்
தீமையென அதுநீக்கிச்
செப்பியஆ கமவிதியால்
ஆமுறையில் அருச்சனைசெய்
தந்நெறியில் ஒழுகுவரால்.
152

நாணனொடு காடனும்போய்
நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும்உறக் கமுமின்றி
அணங்குறைவா ளையுங்கொண்டு
பேணுமக னார்தம்பால்  
வந்தெல்லாம் பேதித்துக்
காணுநெறி தங்கள்குறி  
வாராமற் கைவிட்டார்.
153

முன்புதிருக் காளத்தி
முதல்வனார் அருள்நோக்கால்
இன்புறுவே தகத்திரும்பு
பொன்னானாற் போல்யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டும்  
சாருமலம் மூன்றுமற
அன்புபிழம் பாய்த்திரிவார்
அவர்கருத்தின் அளவினரோ.
154

அந்நிலையில் அன்பனார்  
அறிந்தநெறி பூசிப்ப
மன்னியஆ கமப்படியால்
மாமுனிவர் அருச்சித்திங்
கென்னுடைய நாயகனே  
இதுசெய்தார் தமைக்காணேன்
உன்னுடைய திருவருளால்
ஒழித்தருள வேண்டுமென.
155
Go to top

அன்றிரவு கனவின்கண்  
அருள்முனிவர் தம்பாலே
மின்திகழுஞ் சடைமவுலி  
வேதியர்தா மெழுந்தருளி
வன்திறல்வே டுவன்என்று  
மற்றவனை நீநினையேல்
நன்றவன்தன் செயல்தன்னை
நாமுரைப்பக் கேள்என்று.
156

அவனுடைய வடிவெல்லாம்
நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம்  
நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம்  
நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலைஇவ்வா  
றறிநீயென் றருள்செய்வார்.
157

உனக்கவன்தன் செயல்காட்ட
நாளைநீ யொளித்திருந்தால்
எனக்கவன்தன் பரிவிருக்கும்  
பரிசெல்லாம் காண்கின்றாய்
மனக்கவலை ஒழிகென்று  
மறைமுனிவர்க் கருள்செய்து
புனற்சடிலத் திருமுடியார்
எழுந்தருளிப் போயினார்.
158

கனவுநிலை நீங்கியபின்  
விழித்துணர்ந்து கங்குலிடைப்
புனைதவத்து மாமுனிவர்  
புலர்வளவும் கண்துயிலார்
மனமுறும்அற் புதமாகி  
வரும்பயமும் உடனாகித்
துனைபுரவித் தனித்தேர்மேல்
தோன்றுவான் கதிர்தோன்ற.
159

முன்னைநாள் போல்வந்து
திருமுகலிப் புனல்மூழ்கிப்
பன்முறையும் தம்பிரான்
அருள்செய்த படிநினைந்து
மன்னுதிருக் காளத்தி  
மலையேறி முன்புபோல்
பிஞ்ஞகனைப் பூசித்துப்  
பின்பாக ஒளித்திருந்தார்.
160
Go to top

கருமுகி லென்ன நின்ற  
கண்படா வில்லி யார்தாம்
வருமுறை ஆறாம் நாளில்
வரும்இர வொழிந்த காலை
அருமறை முனிவ னார்வந்
தணைவதன் முன்னம் போகித்
தருமுறை முன்பு போலத்  
தனிப்பெரு வேட்டை யாடி.
161

மாறில்ஊன் அமுதும் நல்ல  
மஞ்சனப் புனலுஞ் சென்னி
ஏறுநாண் மலரும் வெவ்வே  
றியல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க் கமுத மான  
செல்வனார் திருக்கா ளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை  
அணுகவந் தணையா நின்றார்.
162

இத்தனை பொழுதுந் தாழ்த்தேன்
எனவிரைந் தேகு வார்முன்
மொய்த்தபல் சகுன மெல்லாம்
முறைமுறை தீங்கு செய்ய
இத்தகு தீய புட்கள்
ஈண்டமுன் உதிரங் காட்டும்
அத்தனுக் கென்கொல் கெட்டேன்  
அடுத்ததென் றணையும் போதில்.
163

அண்ணலார் திருக்கா ளத்தி  
அடிகளார் முனிவ னார்க்குத்
திண்ணனார் பரிவு காட்டத்  
திருநய னத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய  
இருந்தனர் தூரத் தேஅவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு
வல்விரைந் தோடி வந்தார்.
164

வந்தவர் குருதி கண்டார்
மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும்
சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங்
குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர்  
நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.
165
Go to top

விழுந்தவர் எழுந்து சென்று  
துடைத்தனர் குருதி வீழ்வ
தொழிந்திடக் காணார் செய்வ  
தறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்துபோய் வீழ்ந்தார் தேறி
யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைக ளெங்கும்
பார்த்தனர் எடுத்தார் வில்லும்.
166

வாளியுந் தெரிந்து கொண்டிம்
மலையிடை எனக்கு மாறா
மீளிவெம் மறவர் செய்தார்
உளர்கொலோ விலங்கின் சாதி
ஆளிமுன் னாகி யுள்ள
விளைத்தவோ அறியே னென்று
நீளிருங் குன்றச் சாரல்
நெடிதிடை நேடிச் சென்றார்.
167

வேடரைக் காணார் தீய
விலங்குகள் மருங்கும் எங்கும்
நாடியுங் காணார் மீண்டும்
நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத் தோடு
நிறைமலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு
கதறினார் கண்ணீர் வார.
168

பாவியேன் கண்ட வண்ணம்  
பரமனார்க் கடுத்த தென்னோ
ஆவியின் இனிய எங்கள்  
அத்தனார்க் கடுத்த தென்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க் கடுத்த தென்னோ
ஆவதொன் றறிகி லேன்யான்
என்செய்கேன் என்று பின்னும்.
169

என்செய்தால் தீரு மோதான்  
எம்பிரான் திறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன்
மொய்கழல் வேட ரென்றும்
மின்செய்வார் பகழிப் புண்கள்
தீர்க்குமெய் மருந்து தேடிப்
பொன்செய்தாழ் வரையிற் கொண்டு
வருவன்நான் என்று போனார்.
170
Go to top

நினைத்தனர் வேறு வேறு  
நெருங்கிய வனங்க ளெங்கும்
இனத்திடைப் பிரிந்த செங்கண்  
ஏறென வெருக்கொண் டெய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு
பூதநா யகன்பால் வைத்த
மனத்தினுங் கடிது வந்து  
மருந்துகள் பிழிந்து வார்த்தார்.
171

மற்றவர் பிழிந்து வார்த்த
மருந்தினால் திருக்கா ளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர்  
குறைபடா திழியக் கண்டே
இற்றையின் நிலைமைக் கென்னோ
இனிச்செய லென்று பார்ப்பார்
உற்றநோய் தீர்ப்ப தூனுக்
கூனெனும் உரைமுன் கண்டார்.
172

இதற்கினி என்கண் அம்பால்  
இடந்தப்பின் எந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர்  
நிற்கவும் அடுக்கு மென்று
மதர்த்தெழும் உள்ளத் தோடு  
மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி  
முதல்வர்தங் கண்ணில் அப்ப.
173

நின்றசெங் குருதி கண்டார்  
நிலத்தினின் றேறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள்
கொட்டினார் கூத்து மாடி
நன்றுநான் செய்த இந்த  
மதியென நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பி னாலே  
உன்மத்தர் போல மிக்கார்.
174

வலத்திருக் கண்ணில் தங்கண்
அப்பிய வள்ள லார்தம்
நலத்தினைப் பின்னும் காட்ட  
நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில்செங் குருதி பாயக்  
கண்டனர் உலகில் வேடர்
குலப்பெரும் தவத்தால் வந்து  
கொள்கையின் உம்பர் மேலார்.
175
Go to top

கண்டபின் கெட்டேன் எங்கள்
காளத்தி யார்கண் ணொன்று
புண்தரு குருதி நிற்க
மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்மற் றிதனுக் கஞ்சேன்
மருந்துகைக் கண்டே னின்னும்
உண்டொரு கண்அக் கண்ணை
இடந்தப்பி யொழிப்பே னென்று.
176

கண்ணுதல் கண்ணில் தங்கண்  
இடந்தப்பிற் காணும் நேர்பா
டெண்ணுவார் தம்பி ரான்தன்  
திருக்கண்ணில் இடக்கா லூன்றி
உண்ணிறை காத லோடும்  
ஒருதனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத்
தரித்திலர் தேவ தேவர்.
177

செங்கண்வெள் விடையின் பாகர்
திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி  
அற்புதர் திருக்கை யன்பர்
தங்கண்முன் னிடக்குங் கையைத்  
தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக்  
கண்ணப்ப நிற்க வென்றே.
178

கானவர் பெருமா னார்தங்
கண்ணிடந் தப்பும் போதும்
ஊனமு துகந்த ஐயர்  
உற்றுமுன் பிடிக்கும் போதும்
ஞானமா முனிவர் கண்டார்
நான்முகன் முதலா யுள்ள
வானவர் வளர்பூ மாரி
பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப.
179

பேறினி யிதன்மேல் உண்டோ  
பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண்  
இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால்
பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று  
மன்னுபே ரருள்பு ரிந்தார்.
180
Go to top

மங்குல்வாழ் திருக்கா ளத்தி  
மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்றப் பெற்ற
தலைவர்தாள் தலைமேற் கொண்டே
கங்கைவாழ் சடையார் வாழும்  
கடவூரிற் கலய னாராம்
பொங்கிய புகழின் மிக்கார்  
திருத்தொண்டு புகல லுற்றேன்.
181

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000