அம்பொன் நீடிய அம்ப
லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர்
சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர
நற்கு லஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை
யான்கு டிப்பதி மாறனார்.
|
1
|
ஏரின் மல்குவ ளத்தி னால்வரும்
எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணி யார்அடி
யார்தி றத்துநி றைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை
திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்கவி ரும்பி மற்றவை
பெற்ற நீடுப யன்கொள்வார்.
|
2
|
ஆர மென்புபு னைந்த ஐயர்தம்
அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும்
நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்கு வித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி
வெய்த முன்னுரை செய்தபின்.
|
3
|
கொண்டு வந்தும னைப்பு குந்துகு
குலாவு பாதம்வி ளக்கியே
மண்டு காதலின் ஆத னத்திடை
வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலுவி தத்தி லாறுசு
வைத்தி றத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில்
அமுது செய்யஅ ளித்துளார்.
|
4
|
ஆளு நாயகர் அன்பர் ஆனவர்
அளவி லார்உளம் மகிழவே
நாளு நாளும்நி றைந்து வந்துநு
கர்ந்த தன்மையின் நன்மையால்
நீளு மாநிதி யின்ப ரப்புநெ
ருங்கு செல்வநி லாவியெண்
தோளி னார்அள கைக்கி ருத்திய
தோழ னாரென வாழுநாள்.
|
5
|
| Go to top |
செல்வம் மேவிய நாளி லிச்செயல்
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.
|
6
|
இன்ன வாறுவ ளஞ்சு ருங்கவும்
எம்பி ரான்இளை யான்குடி
மன்னன் மாறன்ம னஞ்சு ருங்குத
லின்றி யுள்ளன மாறியுந்
தன்னை மாறியி றுக்க உள்ளக
டன்கள் தக்கன கொண்டுபின்
முன்னை மாறில்தி ருப்ப ணிக்கண்மு
திர்ந்த கொள்கைய ராயினார்.
|
7
|
மற்ற வர்செய லின்ன தன்மைய
தாக மாலய னானஅக்
கொற்ற ஏனமும் அன்ன முந்தெரி
யாத கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வதும் இன்றி நீடிய
பேதை யாளுடன் இன்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு
ஞால முய்ந்திட நண்ணினார்.
|
8
|
மாரிக் காலத் திரவினில் வைகியோர்
தாரிப் பின்றிப் பசிதலைக் கொள்வது
பாரித் தில்லம் அடைத்தபின் பண்புற
வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன்.
|
9
|
ஈர மேனியை நீக்கி இடங்கொடுத்
தார வின்னமு தூட்டுதற் காசையால்
தார மாதரை நோக்கித் தபோதனர்
தீர வேபசித் தார்செய்வ தென்னென்று.
|
10
|
| Go to top |
நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாம்இன் னடிசில் தகவுற
அமைக்கு மாறெங்ங னேஅணங் கேயென.
|
11
|
மாது கூறுவள் மற்றொன்றும் காண்கிலேன்
ஏதி லாரும் இனித்தரு வாரில்லை
போதும் வைகிற்றுப் போமிடம் வேறிலை
தீது செய்வினை யேற்கென் செயலென்று.
|
12
|
செல்லல் நீங்கப் பகல்வித்தி யசெந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக்கொ டுவந்தால்
வல்ல வாறமு தாக்கலும் ஆகுமற்
றல்ல தொன்றறி யேனென் றயர்வுற.
|
13
|
மற்றம் மாற்ற மனைவியார் கூறமுன்
பெற்ற செல்வம் எனப்பெரி துள்மகிழ்ந்
துற்ற காதலி னால்ஒருப் பட்டனர்
சுற்று நீர்வயல் செல்லத்தொ டங்குவார்.
|
14
|
பெருகு வானம் பிறங்கம ழைபொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்
டுருகு கின்றது போன்ற துலகெலாம்.
|
15
|
| Go to top |
எண்ணு மிவ்வுல கத்தவர் யாவருந்
துண்ணெ னும்படி தோன்றமுன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம் பாம்என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து.
|
16
|
உள்ள மன்புகொண் டூக்கவோர் பேரிடாக்
கொள்ள முன்கவித் துக்குறி யின்வழிப்
புள்ளு றங்கும் வயல்புகப் போயினார்
வள்ள லார்இளை யான்குடி மாறனார்.
|
17
|
காலி னால்தட விச்சென்று கைகளால்
சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன
கோலி வாரி யிடாநிறை யக்கொண்டு
மேலெ டுத்துச் சுமந்தொல்லை மீண்டனர்.
|
18
|
வந்தபின் மனைவி யாரும்
வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில்
சேற்றினை யலம்பி யூற்றி
வெந்தழல் அடுப்பின் மூட்ட
விறகில்லை யென்ன மேலோர்
அந்தமின் மனையில் நீடும்
அலக்கினை யறுத்து வீழ்த்தார்.
|
19
|
முறித்தவை அடுப்பின் மாட்டி
முளைவித்துப் பதமுன் கொள்ள
வறுத்தபின் அரிசி யாக்கி
வாக்கிய உலையிற் பெய்து
வெறுப்பில்இன் அடிசி லாக்கி
மேம்படு கற்பின் மிக்கார்
கறிக்கினி யென்செய் கோமென்
றிறைஞ்சினார் கணவ னாரை.
|
20
|
| Go to top |
வழிவரும் இளைப்பி னோடும்
வருத்திய பசியி னாலே
அழிவுறும் ஐயன் என்னும்
அன்பினிற் பொலிந்து சென்று
குழிநிரம் பாத புன்செய்க்
குறும்பயிர் தடவிப் பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப்
பறித்தவை கறிக்கு நல்க.
|
21
|
மனைவியார் கொழுநர் தந்த
மனமகிழ் கறிக ளாய்ந்து
புனலிடைக் கழுவித் தக்க
புனிதபாத் திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு
கறியமு தாக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து
திருவமு தமைத்து நின்று.
|
22
|
கணவனார் தம்மை நோக்கிக்
கறியமு தான காட்டி
இணையிலா தவரை ஈண்ட
அமுதுசெய் விப்போ மென்ன
உணர்வினால் உணர ஒண்ணா
ஒருவரை உணர்த்த வேண்டி
அணையமுன் சென்று நின்றங்
கவர்துயில் அகற்ற லுற்றார்.
|
23
|
அழுந்திய இடருள் நீங்கி
அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்ட
அமுதுசெய் தருள்க வென்று
தொழும்பனா ருரைத்த போதில்
சோதியா யெழுந்து தோன்றச்
செழுந்திரு மனைவி யாரும்
தொண்டருந் திகைத்து நின்றார்.
|
24
|
மாலயற் கரிய நாதன்
வடிவொரு சோதி யாகச்
சாலவே மயங்கு வார்க்குச்
சங்கரன் தான்ம கிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோ
டிடபவா கனனாய்த் தோன்றிச்
சீலமார் பூசை செய்த
திருத்தொண்டர் தம்மை நோக்கி.
|
25
|
| Go to top |
அன்பனே அன்பர் பூசை
அளித்தநீ அணங்கி னோடும்
என்பெரும் உலகை எய்தி
யிருநிதிக் கிழவன் தானே
முன்பெரு நிதியம் ஏந்தி
மொழிவழி ஏவல் கேட்ப
இன்பமார்ந் திருக்க என்றே
அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான்.
|
26
|
இப்பரி சிவர்க்குத் தக்க
வகையினால் இன்பம் நல்கி
முப்புரஞ் செற்றா ரன்பர்
முன்பெழுந் தருளிப் போனார்
அப்பெரி யவர்தந் தூய
அடியிணை தலைமேற் கொண்டு
மெய்ப்பொருட் சேதி வேந்தன்
செயலினை விளம்ப லுற்றேன்.
|
27
|