சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.000   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். ,
1

பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை.
2

அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின்
நண்ணு மூன்றுல குந்நான் மறைகளும்
எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய
புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது.
3

நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளி ராக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.
4

மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் காரெதிர்
தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர்
வான துந்துபி யார்ப்பும் மருங்கெலாம்.
5
Go to top

பனிவி சும்பி லமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பகப் பொன்னரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம்.
6

நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.
7

நாய கன்கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூய மால்வரைச் சோதியின் மூழ்கியொன்
றாய அன்னமும் காணா தயர்க்குமால்.
8

காதில்வெண் குழையோன் கழல்தொழ நெடியோன்
காலம்பார்த் திருந்ததும் அறியான்
சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில்
துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செழுஞ்சுடர் இன்று
வெண்சுட ரானதென் றதன் கீழ்
ஆதிஏ னமதாய் இடக்கலுற் றானென்
றதனைவந் தணைதருங் கலுழன்.
9

அரம்பைய ராடல் முழவுடன் மருங்கின்
அருவிகள் எதிரெதிர் முழங்க
வரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ
மதுமல ரிருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமானசோ பான
நீடுயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்
பொலிவதத் திருமலைப் புறம்பு.
10
Go to top

வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம்
விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதற்பெருந் தடையாம்
கதிர்மணிக் கோபுரத் துள்ளான்
பூதவே தாளப் பெருங்கண நாதர்
போற்றிடப் பொதுவில்நின் றாடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில்
நாயகன் நந்தியெம் பெருமான்.
11

நெற்றியிற் கண்ணர் நாற்பெருந் தோளர்
நீறணி மேனியர் அனேகர்
பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார்
பிஞ்ஞகன் தன்னருள் பெறுவார்
மற்றவர்க் கெல்லாந் தலைமையாம் பணியும்
மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினாற் பெற்றான்
காப்பதக் கயிலைமால் வரைதான்.
12

கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையில்
கதிரிளம் பிறைநறுங் கண்ணி
ஐயர்வீற் றிருக்குந் தன்மையி னாலும்
அளப்பரும் பெருமையி னாலும்
மெய்யொளி தழைக்குந் தூய்மையி னாலும்
வென்றிவெண் குடைஅந பாயன்
செய்யகோல் அபயன் திருமனத் தோங்குந்
திருக்கயி லாயநீள் சிலம்பு.
13

அன்ன தன்திருத் தாழ்வரை யின்னிடத்து
இன்ன தன்மையன் என்றறி யாச்சிவன்
தன்னை யேயுணர்ந் தார்வம் தழைக்கின்றான்
உன்ன ருஞ்சீர் உபமன் னியமுனி.
14

யாத வன்துவ ரைக்கிறை யாகிய
மாத வன்முடி மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு
ஆதி யந்தம் இலாமை யடைந்தவன்.
15
Go to top

அத்தர் தந்த அருட்பாற் கடலுண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்த ராய முனிவர்பல் லாயிரர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி.

16

அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.
17

அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தி யாவுணர்ந் தம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்றொண்டன்
எந்தை யார்அரு ளால்அணை வான்என.
18

கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோ ரந்தணர்.
19

சம்பு வின்அடித் தாமரைப் போதலால்
எம்பி ரான்இறைஞ் சாயிஃ தென்னெனத்
தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூரன் நாம்தொழுந் தன்மையான்.
20
Go to top

என்று கூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேரொளி யார்செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பு நசையினோம்
இன்றெ மக்குரை செய்தருள் என்றலும்.
21

உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.
22

அன்ன வன்பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கொரு நாள்முதல் வன்தனக்கு
இன்ன வாமெனு நாள்மலர் கொய்திடத்
துன்னி னான்நந் தனவனச் சூழலில்.
23

அங்கு முன்னெமை ஆளுடை நாயகி
கொங்கு சேர்குழற் காமலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.
24

அந்த மில்சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருளென.
25
Go to top

மாத வம்செய்த தென்றிசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வாரவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதருங் காட்சியிற் கண்ணினார்.
26

முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை யாட்கொண்ட ஈசனுக் கேய்வன
பன்ம லர்கொய்து செல்லப் பனிமலர்
அன்னம் அன்னவ ருங்கொண் டகன்றபின்.
27

ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றிஅம் மெல்லிய லாருடன்
காதல் இன்பம் கலந்தணை வாயென.
28

கைக ளஞ்சலி கூப்பிக் கலங்கினான்
செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்என.
29

அங்க ணாளன் அதற்கருள் செய்தபின்
நங்கை மாருடன் நம்பிமற் றத்திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாருமென்று
அங்க வன்செயல் எல்லாம் அறைந்தனன்.
30
Go to top

அந்த ணாளரும் ஆங்கது கேட்டவர்
பந்த மானுடப் பாற்படு தென்றிசை
இந்த வான்றிசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதென மாதவன்.
31

பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று
ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.
32

அத்தி ருப்பதி யில்நமை ஆளுடை
மெய்த்த வக்கொடி காண விருப்புடன்
நித்தன் நீடிய அம்பலத் தாடும்மற்று
இத்தி றம்பெற லாந்திசை எத்திசை.
33

பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினிக்
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆருர் மலர்ந்ததால்.
34

எம்பி ராட்டிஇவ் வேழுல கீன்றவள்
தம்பி ரானைத் தனித்தவத் தால்எய்திக்
கம்பை யாற்றில் வழிபடு காஞ்சியென்று
உம்பர் போற்றும் பதியும் உடையது.
35
Go to top

நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனல்மலர்
செங்கை யாளர்ஐ யாறுந் திகழ்வது.
36

தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூச னைக்குப் பொருந்தும் இடம்பல
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை.
37

என்று மாமுனி வன்றொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
துன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
இன்றெ னாதர வாலிங் கியம்புகேன்.
38

மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம்
புற்றி டத்தெம் புராணர் அருளினால்
சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகையெனப்
பெற்ற நற்பதி கம்தொழப் பெற்றதாம்.
39

அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்.
40
Go to top

உலகம் உய்யவும் சைவம்நின் றோங்கவும்
அலகில் சீர்நம்பி ஆருரர் பாடிய
நிலவு தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை
குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்.
41

பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுட்
கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி
நாட்டியல் பதனையான் நவில லுற்றனன்.
42

ஆதிமா தவமுனி அகத்தி யன்தரு
பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர்மண் மடந்தைபொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.
43

சையமால் வரைபயில் தலைமை சான்றது
செய்யபூ மகட்குநற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டு நீரது.
44

மாலின்உந் திச்சுழி மலர்தன் மேல்வருஞ்
சால்பினால் பல்லுயிர் தருதன் மாண்பினால்
கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையாற்
போலும்நான் முகனையும் பொன்னி மாநதி.
45
Go to top

திங்கள்சூ டியமுடிச் சிகரத் துச்சியில்
பொங்குவெண் டலைநுரை பொருது போதலால்
எங்கள்நா யகன்முடி மிசைநின் றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.
46

வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால்
எண்ணில்பே ரறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல்பா கத்தையா ளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.
47

வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பி ரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்.
48

வாச நீர்குடை மங்கையர் கொங்கையில்
பூசு குங்கும மும்புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழித் தோடுநீர்
தேசு டைத்தெனி னும்தெளி வில்லதே.
49

மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால்.
50
Go to top

ஒண்து றைத்தலை மாமத கூடுபோய்
மண்டு நீர்வய லுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரைத்தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.
51

மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஓதை யார்செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்தவே.
52

உழுத சால்மிக வூறித் தெளிந்தசே
றிழுது செய்யினுள் இந்திரத் தெய்வதந்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.
53

மண்டுபுனல் பரந்தவயல்
வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்டக்
களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம்
இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழலசைய
மடநடையின் வரம்பணைவார்.
54

 செங்குவளை பறித்தணிவார்
கருங்குழல்மேல் சிறைவண்டை
அங்கைமலர் களைக்கொடுகைத்
தயல்வண்டும் வரவழைப்பார்
திங்கணுதல் வெயர்வரும்பச்
சிறுமுறுவல் தளவரும்பப்
பொங்குமலர்க் கமலத்தின்
புதுமதுவாய் மடுத்தயர்வார்.
55
Go to top

 கரும்பல்ல நெல்லென்னக்
கமுகல்ல கரும்பென்னச்
சுரும்பல்லி குடைநீலத்
துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன 
அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லா யிரங்கடைசி
மடந்தையர்கள் வயலெல்லாம்.
56

கயல்பாய்பைந் தடநந்தூன் 
கழிந்தபெருங் கருங்குழிசி
வியல்வாய்வெள் வளைத்தரள 
மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி
அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் 
விளையாட்டு வரம்பெல்லாம்.
57

காடெல்லாங் கழைக்கரும்பு
காவெல்லாங் குழைக்கரும்பு
மாடெல்லாங் கருங்குவளை
வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாங் கடலன்ன
நாடெல்லாம் நீர்நாடு 
தனையொவ்வா நலமெல்லாம்.
58

ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண் டிரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.
59

அன்னம் ஆடும் அகன்றுறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்.
60
Go to top

காவி னிற்பயி லுங்களி வண்டினம்
வாவி யிற்படிந் துண்ணும் மலர்மது
மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்
தாவி அப்பொழி லிற்கனி சாடுமால்.
61

சாலிநீள் வயலின் ஓங்கித் 
தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மைக்
கருவினாம் வளத்த வாகிச்
சூல்முதிர் பசலை கொண்டு 
சுருள்விரித் தரனுக் கன்பர்
ஆலின சிந்தை போல 
அலர்ந்தன கதிர்க ளெல்லாம்.
62

பத்தியின் பால ராகிப்
பரமனுக் காளா மன்பர்
தத்தமிற் கூடி னார்கள்
தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தி யின்பால்
முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல
விளைந்தன சாலி யெல்லாம்.
63

அரிதரு செந்நெற் சூட்டின்
அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன்
படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின்
சுடர்ப்பெரும் பொருப்பு யர்ப்பார்
விரிமலர்க் கற்றை வேரி
பொழிந்திழி வெற்பு வைப்பார்.
64

சாலியின் கற்றை துற்ற
தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்குங்
கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம்
அருவரைச் சிமயச் சாரல்
மேல்வலங் கொண்டு சூழுங்
காட்சியின் மிக்க தன்றே.
65
Go to top

வைதெரிந் தகற்றி யாற்றி
மழைப்பெயல் மானத் தூற்றிச்
செய்யபொற் குன்றும் வேறு
நவமணிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர் வானங்
கரக்கவாக் கியநெற் குன்றால்
மொய்வரை உலகம் போலும்
முளரிநீர் மருத வைப்பு.
66

அரசுகொள் கடன்கள் ஆற்றி 
மிகுதிகொண் டறங்கள் பேணிப்
பரவருங் கடவுட் போற்றிக் 
குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையுந் தாங்கி 
விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம் நீடி 
மலர்ந்துள பதிகள் எங்கும்.
67

கரும்படு களமர் ஆலைக் 
கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட
தூபமோ யூப வேள்விப்
பெரும்பெயர்ச் சாலை தோறும்
பிறங்கிய புகையோ வானின்
வரும்கரு முகிலோ சூழ்வ
மாடமும் காவு மெங்கும். ,
68

சூதபா டலங்கள் எங்குஞ்
சூழ்வழை ஞாழல் எங்குஞ்
சாதிமா லதிகள் எங்குந்
தண்டளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும்
வகுளசண் பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும்
பூகபுன் னாகம் எங்கும்.
69

மங்கல வினைகள் எங்கும்
மணஞ்செய்கம் பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும
பண்களின் மழலை எங்கும்
பொங்கொளிக் கலன்கள் எங்கும்
புதுமலர்ப் பந்தர் எங்குஞ்
செங்கயல் பழனம் எங்குந்
திருமகள் உறையுள் எங்கும்.
70
Go to top

மேகமுங் களிறு மெங்கும்
வேதமுங் கிடையு மெங்கும்
யாகமுஞ் சடங்கு மெங்கும்
இன்பமும் மகிழ்வு மெங்கும்
யோகமுந் தவமு மெங்கும்
ஊசலு மறுகு மெங்கும்
போகமும் பொலிவு மெங்கும்
புண்ணிய முனிவ ரெங்கும்.
71

பண்டரு விபஞ்சி எங்கும்
பாதசெம் பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும்
வளரிசைக் குழல்கள் எங்கும்
தொண்டர்த மிருக்கை எங்கும்
சொல்லுவ திருக்கை யெங்கும்
தண்டலை பலவும் எங்கும்
தாதகி பலவு மெங்கும்.
72

மாடுபோ தகங்கள் எங்கும்
வண்டுபோ தகங்கள் எங்கும்
பாடுமம் மனைகள் எங்கும்
பயிலுமம் மனைகள் எங்கும்
நீடுகே தனங்கள் எங்கும்
நிதிநிகே தனங்கள் எங்குந்
தோடுசூழ் மாலை எங்குந்
துணைவர்சூழ் மாலை எங்கும்.
73

வீதிகள் விழவின் ஆர்ப்பும்
விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா
தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும்
நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும்
உறுபிணி வரத்தாம் அஞ்சும்.
74

நற்றமிழ் வரைப்பின் ஓங்கு
நாம்புகழ் திருநா டென்றும்
பொற்றடந் தோளால் வையம்
பொதுக்கடிந் தினிது காக்குங்
கொற்றவன் அநபா யன்பொற்
குடைநிழற் குளிர்வ தென்றால்
மற்றதன் பெருமை நம்மால்
வரம்புற விளம்ப லாமோ.
75
Go to top

சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது
மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.
76

வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணிமுழ வோசையும்
கீத வோசையு மாய்க்கிளர் வுற்றவே.
77

 பல்லி யங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி யெழுந்துள எங்கணும்.
78

 மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரந் தெற்றிகள்
நீடு சாளர நீடரங் கெங்கணும்
ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன.
79

அங்கு ரைக்கென் னளவப் பதியிலார்
தங்கள் மாளிகை யின்னொன்று சம்புவின்
பங்கி னாள்திருச் சேடி பரவையாம்
மங்கை யாரவ தாரஞ்செய் மாளிகை.
80
Go to top

 படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய்
நடந்த செந்தா மரையடி நாறுமால்.
81

செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங்
குங்கு மத்தின் குழம்பை அவர்குழல்
பொங்கு கோதையின் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி யளறு புலர்த்துமால்.
82

 உள்ளம் ஆர்உரு காதவர் ஊர்விடை
வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந்
தெள்ளும் ஓசைத் திருப்பதி கங்கள்பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.
83

 விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலி யால்துன்னு பண்டங்கள்
வளத்தொ டும்பல வாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.
84

 ஆர ணங்களே அல்ல மறுகிடை
வார ணங்களும் மாறி முழங்குமால்
சீர ணங்கிய தேவர்க ளேயலால்
தோர ணங்களில் தாமமுஞ் சூழுமால்.
85
Go to top

தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வே றிடத்ததத் தொல்நகர்.
86

 நிலம கட்கழ கார்திரு நீள்நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர்ம கட்குவண் தாமரை போல்மலர்ந்து
அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்.
87

அன்ன தொல்நக ருக்கர சாயினான்
துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான்
மன்னு சீர்அந பாயன் வழிமுதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.
88

 மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங்
கண்ணும் ஆவியு மாம்பெருங் காவலான்
விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள்
எண்ணி லாதன மாண இயற்றினான்.
89

கொற்ற வாழி குவலயஞ் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறைகடை சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்
பெற்ற நீதியுந் தன்பெயர் ஆக்கினான்.
90
Go to top

 பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தமா ராய்ந்துளான்
துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்.
91

அறம்பொரு ளின்ப மான
அறநெறி வழாமற் புல்லி
மறங்கடிந் தரசர் போற்ற
வையகங் காக்கும் நாளில்
சிறந்தநல் தவத்தால் தேவி
திருமணி வயிற்றில் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்றப்
பேரரிக் குருளை அன்னான்.
92

 தவமுயன் றரிதில் பெற்ற
தனிஇளங் குமரன் நாளுஞ்
சிவமுயன் றடையுந் தெய்வக்
கலைபல திருந்த ஓதிக்
கவனவாம் புரவி யானை
தேர்படைத் தொழில்கள் கற்றுப்
பவமுயன் றதுவும் பேறே
எனவரும் பண்பின் மிக்கான்.
93

அளவில்தொல் கலைகள் முற்றி
அரும்பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர
ஓங்கிய குணத்தால் நீடி
இளவர சென்னுந் தன்மை
எய்துதற் கணிய னாகி
வளரிளம் பரிதி போன்று
வாழுநாள் ஒருநாள் மைந்தன்.
94

திங்கள்வெண் கவிகை மன்னன்
திருவளர் கோயில் நின்று
மங்குல்தோய் மாட வீதி
மன்னிளங் குமரர் சூழக்
கொங்கலர் மாலை தாழ்ந்த
குங்குமங் குலவு தோளான்
பொங்கிய தானை சூழத்
தேர்மிசைப் பொலிந்து போந்தான்.
95
Go to top

பரசுவந் தியர்முன் சூதர்  
மாகதர் ஒருபால் பாங்கர்
விரைநறுங் குழலார் சிந்தும்
வெள்வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப
முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும்
அணிமணி மாட வீதி.
96

தனிப்பெருந் தருமம் தானோர்
தயாவின்றித் தானை மன்னன்
பனிப்பில்சிந் தையினில் உண்மைப்
பான்மைசோ தித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா  
வண்ணமோர் வண்ணம் நல்ஆன்
புனிற்றிளங் கன்று துள்ளிப்
போந்ததம் மறுகி னூடே.
97

 அம்புனிற் றாவின் கன்றோர்
அபாயத்தின் ஊடு போகிச்
செம்பொனின் தேர்க்கால் மீது
விசையினாற் செல்லப் பட்டங்
கும்பரி னடையக் கண்டங்
குருகுதா யலமந் தோடி
வெம்பிடும் அலறும் சோரும்
 மெய்ந்நடுக் குற்று வீழும்.
98

 மற்றது கண்டு மைந்தன்
வந்ததிங் கபாயம் என்று
சொற்றடு மாறி நெஞ்சில்
துயருழந் தறிவ ழிந்து
பெற்றமுங் கன்றும் இன்றென்
உணர்வெனும் பெருமை மாளச்
செற்றஎன் செய்கேன் என்று
தேரினின் றிழிந்து வீழ்ந்தான்
99

அலறுபேர் ஆவை நோக்கி
ஆருயிர் பதைத்துச் சோரும்
நிலமிசைக் கன்றை நோக்கி
நெடிதுயிர்த் திரங்கி நிற்கும்
மலர்தலை உலகங் காக்கும்
மனுவெனும் எங்கோ மானுக்கு
உலகில்இப் பழிவந் தெய்தப்
பிறந்தவா வொருவ னென்பான்.
100
Go to top

வந்தஇப் பழியை மாற்றும்
வகையினை மறைநூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால்
ஆற்றுவ தறமே யாகில்
எந்தைஈ தறியா முன்னம்
இயற்றுவ னென்று மைந்தன்
சிந்தைவெந் துயரந் தீர்ப்பான்
திருமறை யவர்முன் சென்றான்.
101

தன்னுயிர்க் கன்று வீயத்
தளர்ந்தஆத் தரியா தாகி
முன்நெருப் புயிர்த்து விம்மி
முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல்
மனுவின்பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று
கோட்டினால் புடைத்த தன்றே.
102

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும்
பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி
கொளவரும் மறலி ஊர்திக்
கழுத்தணி மணியின் ஆர்ப்போ
என்னத்தன் கடைமுன் கேளாத்
தெழித்தெழும் ஓசை மன்னன்
செவிப்புலம் புக்க போது.
103

ஆங்கது கேட்ட வேந்தன்
அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ணக்
காவல ரெதிரே போற்றி
ஈங்கிதோர் பசுவந் தெய்தி
இறைவநின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால்
துளக்கிய தென்று சொன்னார்.
104

மன்னவ னதனைக் கேளா
வருந்திய பசுவை நோக்கி
என்னிதற் குற்ற தென்பான்
அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம்
அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொன்னெறி யமைச்சன் மன்னன்
தாளிணை தொழுது சொல்வான்.
105
Go to top

 வளவநின் புதல்வன் ஆங்கோர்
மணிநெடுந் தேர்மே லேறி
அளவில்தேர்த் தானை சூழ
அரசுலாந் தெருவிற் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால்
இடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து
விளைத்ததித் தன்மை என்றான்.
106

அவ்வுரை கேட்ட வேந்தன்
ஆவுறு துயர மெய்தி
வெவ்விடந் தலைக்கொண் டாற்போல்
வேதனை யகத்து மிக்கிங்கு
இவ்வினை விளைந்த வாறென்
றிடருறு மிரங்கு மேங்குஞ்
செவ்விதென் செங்கோ லென்னுந்
தெருமருந் தெளியுந் தேறான்.
107

மன்னுயிர் புரந்து வையம்
பொதுக்கடிந் தறத்தில் நீடும்
என்னெறி நன்றா லென்னும்
என்செய்தால் தீரு மென்னுந்
தன்னிளங் கன்று காணாத்
தாய்முகங் கண்டு சோரும்
அந்நிலை யரச னுற்ற
துயரமோர் அளவிற் றன்றால்.
108

மந்திரிகள் அதுகண்டு
மன்னவனை அடிவணங்கிச்
சிந்தைதளர்ந் தருளுவது
மற்றிதற்குத் தீர்வன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனைமுன்
கோவதைசெய் தார்க்குமறை
அந்தணர்கள் விதித்தமுறை
வழிநிறுத்தல் அறமென்றார்.
109

வழக்கென்று நீர்மொழிந்தால்
மற்றதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்தலறுங்
கோவுறுநோய் மருந்தாமோ
இழக்கின்றேன் மைந்தனைஎன்
றெல்லீருஞ் சொல்லியஇச்
சழக்கின்று நானியைந்தால்
தருமந்தான் சலியாதோ.
110
Go to top

மாநிலங்கா வலனாவான்
மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு
தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த்
தறங்காப்பா னல்லனோ.
111

 என்மகன்செய் பாதகத்துக்
கிருந்தவங்கள் செயஇசைந்தே
அன்னியனோர் உயிர்கொன்றால்
அவனைக்கொல் வேனானால்
தொன்மனுநூற் றொடைமனுவால்
துடைப்புண்ட தெனும்வார்த்தை
மன்னுலகில் பெறமொழிந்தீர்
மந்திரிகள் வழக்கென்றான்.
112

 என்றரசன் இகழ்ந்துரைப்ப
எதிர்நின்ற மதியமைச்சர்
நின்றநெறி உலகின்கண்
இதுபோல்முன் நிகழ்ந்ததால்
பொன்றுவித்தன் மரபன்று
மறைமொழிந்த அறம்புரிதல்
தொன்றுதொடு நெறியன்றோ
தொல்நிலங்கா வலஎன்றார்.
113

அவ்வண்ணந் தொழுதுரைத்த
அமைச்சர்களை முகம்நோக்கி
மெய்வண்ணந் தெரிந்துணர்ந்த
மனுவென்னும் விறல்வேந்தன்
இவ்வண்ணம் பழுதுரைத்தீர்
என்றெரியி னிடைத்தோய்ந்த
செவ்வண்ணக் கமலம்போல்
முகம்புலர்ந்து செயிர்த்துரைப்பான்.
114

 அவ்வுரையில் வருநெறிகள்
அவைநிற்க அறநெறியின்
செவ்வியவுண் மைத்திறநீர்
சிந்தைசெயா துரைக்கின்றீர்
எவ்வுலகில் எப்பெற்றம்
இப்பெற்றித் தாமிடரால்
வெவ்வுயிர்த்துக் கதறிமணி
யெறிந்துவிழுந் ததுவிளம்பீர்.
115
Go to top

போற்றிசைத்துப் புரந்தரன்மா
லயன்முதலோர் புகழ்ந்திறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார்
மேவியுறை திருவாரூர்த்
தோற்றமுடை உயிர்கொன்றான்
ஆதலினால் துணிபொருள்தான்
ஆற்றவுமற் றவற்கொல்லும்
அதுவேயா மெனநினைமின்.
116

எனமொழிந்து மற்றிதனுக்
கினியிதுவே செயல்இவ்ஆன்
மனமழியுந் துயரகற்ற
மாட்டாதேன் வருந்துமிது
தனதுறுபே ரிடர்யானுந்
தாங்குவதே கருமமென
அனகன்அரும் பொருள்துணிந்தான்
அமைச்சருமஞ் சினரகன்றார்.
117

மன்னவன்தன் மைந்தனையங்
கழைத்தொருமந் திரிதன்னை
முன்னிவனை அவ்வீதி
முரண்தேர்க்கா லூர்கவென
அன்னவனும் அதுசெய்யா
தகன்றுதன்ஆ ருயிர்துறப்பத்
தன்னுடைய குலமகனைத்
தான்கொண்டு மறுகணைந்தான்.,
118

 தண்ணளிவெண் குடைவேந்தன்
செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார்
வானவர்பூ மழைசொரிந்தார்
அண்ணலவன் கண்ணெதிரே
அணிவீதி மழவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான்
வீதிவிடங் கப்பெருமான்.
119

சடைமருங்கில் இளம்பிறையுந்
தனிவிழிக்குந் திருநுதலும்
இடமருங்கில் உமையாளும்
எம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையும்முன்
கண்டரசன் போற்றிசைப்ப
விடைமருவும் பெருமானும்
விறல்வேந்தற் கருள்கொடுத்தான்.
120
Go to top

அந்நிலையே உயிர்பிரிந்த
ஆன்கன்றும் அவ்வரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும்
மந்திரியும் உடனெழலும்
இன்னபரி சானானென்
றறிந்திலன்வேந் தனும்யார்க்கும்
முன்னவனே முன்னின்றால்
முடியாத பொருளுளதோ.
121

அடிபணிந்த திருமகனை
ஆகமுற எடுத்தணைத்து
நெடிதுமகிழ்ந் தருந்துயரம்
நீங்கினான் நிலவேந்தன்
மடிசுரந்து பொழிதீம்பால்
வருங்கன்று மகிழ்ந்துண்டு
படிநனைய வரும்பசுவும்
பருவரல்நீங் கியதன்றே.
122

பொன்தயங்கு மதிலாரூர்ப்
பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு
வீதியிலே அருள்கொடுத்துச்
சென்றருளும் பெருங்கருணைத்
திறங்கண்டு தன்னடியார்க்கு
என்றும்எளி வரும்பெருமை
ஏழுலகும் எடுத்தேத்தும்.
123

இனையவகை அறநெறியில்
எண்ணிறந்தோர்க் கருள்புரிந்து
முனைவரவர் மகிழ்ந்தருளப்
பெற்றுடைய மூதூர்மேல்
புனையுமுரை நம்மளவில்
புகலலாந் தகைமையதோ
அனையதனுக் ககமலராம்
அறவனார் பூங்கோயில்.
124

பூத நாயகர் புற்றிடங் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்தபூங் கோயிலிற்
சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ்
மூதெ யிற்றிரு வாயின்முன் னாயது.
125
Go to top

 பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசை
மாவாழ் அகலத்து மால்முத லானவர்
ஓவா தெவரும் நிறைந்துறைந் துள்ளது
தேவா சிரிய னெனுந்திருக் காவணம்.
126

அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்றொளி யால்நிறை தூய்மையால்
புரந்த வஞ்செழுத் தோசை பொலிதலால்
பரந்த வாயிரம் பாற்கடல் போல்வது.
127

 அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்
அகில லோகமும் ஆளற் குரியரென்று
அகில லோகத்து ளார்க ளடைதலின்
அகில லோகமும் போல்வ ததனிடை.
128

அத்தர் வேண்டிமுன் ஆண்டவர் அன்பினால்
மெய்த்த ழைத்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத்தி ருத்தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்தி றத்தவ ரன்றியும் எண்ணிலார்.
129

மாசி லாத மணிதிகழ் மேனிமேல்
பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்
தேசி னால்எத் திசையும் விளக்கினார்
பேச வொண்ணாப் பெருமை பிறங்கினார்.
130
Go to top

பூத மைந்தும் நிலையிற் கலங்கினும்
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார்.
131

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
132

ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பார மீசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்
வீர மென்னால் விளம்புந் தகையதோ.
133

 வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்ட வப்பெரு மான்தனித் தொண்டர்கள்
நீண்ட தொல்புக ழார்தந் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந் தேத்துகேன்.
134

இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரான்
அந்த மில்புகழ் ஆலால சுந்தரன்
சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்.
135
Go to top

கங்கையும் மதியும் பாம்புங்
கடுக்கையு முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி
ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத
மதியிரு மருங்கு மோடிச்
செங்கயல் குழைகள் நாடுந்
திருமுனைப் பாடி நாடு.
136

பெருகிய நலத்தால் மிக்க 
பெருந்திரு நாடு தன்னில்
அருமறைச் சைவ மோங்க
அருளினால் அவத ரித்த
மருவிய தவத்தான் மிக்க
வளம்பதி வாய்மை குன்றாத்
திருமறை யவர்கள் நீடுந்
திருநாவ லூரா மன்றே.
137

மாதொரு பாக னார்க்கு
வழிவழி யடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி
மேம்படு சடைய னாருக்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை
மனையிசை ஞானி யார்பால்
தீதகன் றுலகம் உய்யத்
திருவவ தாரஞ் செய்தார்.
138

தம்பிரா னருளி னாலே
தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பியா ரூர ரென்றே
நாமமுஞ் சாற்றி மிக்க
ஐம்படைச் சதங்கை சாத்தி
அணிமணிச் சுட்டி சாத்திச்
செம்பொன்நாண் அரையில் மின்னத்
தெருவில்தேர் உருட்டு நாளில்.
139

நரசிங்க முனையர் என்னும்
நாடுவாழ் அரசர் கண்டு
பரவருங் காதல் கூர 
பயந்தவர் தம்பாற் சென்று
விரவிய நண்பி னாலே
வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப
அன்பினால் மகன்மை கொண்டார்
140
Go to top

பெருமைசா லரசர் காதற்
பிள்ளையாய்ப் பின்னுந் தங்கள்
வருமுறை மரபின் வைகி
வளர்ந்துமங் கலஞ்செய் கோலத்
தருமறை முந்நூல் சாத்தி
யளவில்தொல் கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச்
சீர்மணப் பருவஞ் சேர்ந்தார்.
141

தந்தையார் சடைய னார்தம்
தனித்திரு மகற்குச் சைவ
அந்தணர் குலத்துள் தங்கள்
அரும்பெரும் மரபுக் கேற்ப
வந்ததொல் சிறப்பில் புத்தூர்ச்
சடங்கவி மறையோன் தன்பால்
செந்திரு வனைய கன்னி
மணத்திறஞ் செப்பி விட்டார்.
142

குலமுத லறிவின் மிக்கார்
கோத்திர முறையுந் தேர்ந்தார்
நலமிகு முதியோர் சொல்லச்
சடங்கவி நன்மை யேற்று
மலர்தரு முகத்த னாகி
மணம்புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த 
பண்பினால் அன்பு நேர்ந்தான்.
143

மற்றவன் இசைந்த வார்த்தை
கேட்டவர் வள்ளல் தன்னைப்
பெற்றவர் தம்பால் சென்று
சொன்னபின் பெருகு சிந்தை
உற்றதோர் மகிழ்ச்சி யெய்தி
மணவினை உவந்து சாற்றிக்
கொற்றவர் திருவுக் கேற்பக்
குறித்துநாள் ஓலை விட்டார்.
144

மங்கலம் பொலியச் செய்த
மணவினை ஓலை ஏந்தி
அங்கயற் கண்ணி னாரும்
ஆடவர் பலரும் ஈண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர்
குறுகினா ரெதிரே வந்து
பங்கய வதனி மாரும் 
மைந்தரும் பணிந்து கொண்டார்.
145
Go to top

மகிழ்ச்சியால் மணமீக் கூறி
மங்கல வினைக ளெல்லாம்
புகழ்ச்சியாற் பொலிந்து தோன்றப்
போற்றிய தொழில ராகி
இகழ்ச்சியொன் றானும் இன்றி
ஏந்துபூ மாலைப் பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி
நீள்முளை சாத்தி னார்கள்.
146

மணவினைக் கமைந்த செய்கை
மாதினைப் பயந்தார் செய்யத்
துணர்மலர்க் கோதைத் தாமச்
சுரும்பணை தோளி னானைப்
புணர்மணத் திருநாள் முன்னாட்
பொருந்திய விதியி னாலே
பணைமுர சியம்ப வாழ்த்திப்
பைம்பொன்நாண் காப்புச் சேர்த்தார்.
147

மாமறை விதிவ ழாமல் 
மணத்துறைக் கடன்க ளாற்றித்
தூமறை மூதூர்க் கங்குல்
மங்கலந் துவன்றி ஆர்ப்பத்
தேமரு தொடையல் மார்பன்
திருமணக் கோலங் காணக்
காமுறு மனத்தான் போலக் 
கதிரவ னுதயஞ் செய்தான்.
148

காலைசெய் வினைகள் முற்றிக்
கணிதநூற் புலவர் சொன்ன
வேலைவந் தணையு முன்னர்
விதிமணக் கோலங் கொள்வான்
நூலசைந் திலங்கு மார்பின்
நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையுந் தாரும் பொங்க
மஞ்சனச் சாலை புக்கான்.
149

வாசநெய் யூட்டி மிக்க
மலர்விரை யடுத்த தூநீர்ப்
பாசனத் தமைந்த பாங்கர்ப்
பருமணிப் பைம்பொன் திண்கால்
ஆசனத் தணிநீ ராட்டி
அரிசனஞ் சாத்தி யன்பால்
ஈசனுக் கினியான் மேனி
எழில்பெற விளக்கி னார்கள்.
150
Go to top

அகில்விரைத் தூப மேய்ந்த
அணிகொள்பட் டாடை சாத்தி
முகில்நுழை மதியம் போலக்
கைவலான் முன்கை சூழ்ந்த
துகில்கொடு குஞ்சி ஈரம்
புலர்த்தித்தன் தூய செங்கை
உகிர்நுதி முறையில் போக்கி
ஒளிர்நறுஞ் சிகழி ஆர்த்தான்.
151

தூநறும் பசுங்கர்ப் பூரச்
சுண்ணத்தால் வண்ணப் போதில்
ஆனதண் பனிநீர் கூட்டி
யமைத்தசந் தனச்சே றாட்டி
மான்மதச் சாந்து தோய்ந்த
மங்கலக் கலவை சாத்திப்
பான்மறை முந்நூல் மின்னப்
பவித்திரஞ் சிறந்த கையான்.
152

தூமலர்ப் பிணையல் மாலை
துணரிணர்க் கண்ணி கோதை
தாமமென் றினைய வேறு
தகுதியால் அமையச் சாத்தி
மாமணி யணிந்த தூய
வளரொளி இருள்கால் சீக்கும்
நாமநீள் கலன்கள் சாத்தி
நன்மணக் கோலங் கொண்டான்.
153

மன்னவர் திருவுந் தங்கள்
வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள
நம்பியா ரூரர் நாதன்
தன்னடி மனத்துள் கொண்டு
தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னணி மணியார் யோகப்
புரவிமேற் கொண்டு போந்தார்.
154

இயம்பல துவைப்ப எங்கும் 
ஏத்தொலி எடுப்ப மாதர்
நயந்துபல் லாண்டு போற்ற
நான்மறை ஒலியின் ஓங்க
வியந்துபார் விரும்ப வந்து
விரவினர்க் கின்பஞ் செய்தே
உயர்ந்தவா கனயா னங்கள்
மிசைக்கொண்டார் உழைய ரானார்.
155
Go to top

மங்கல கீத நாத
மறையவர் குழாங்க ளோடு
தொங்கலும் விரையுஞ் சூழ்ந்த
மைந்தருந் துவன்றிச் சூதும்
பங்கய முகையுஞ் சாய்த்துப் 
பணைத்தெழுந் தணியின் மிக்க
குங்கும முலையி னாரும்
பரந்தெழு கொள்கைத் தாகி.
156

அருங்கடி எழுந்த போழ்தின்
ஆர்த்தவெள் வளைக ளாலும்
இருங்குழை மகரத் தாலும்
இலங்கொளி மணிக ளாலும்
நெருங்கிய பீலிச் சோலை
நீலநீர்த் தரங்கத் தாலுங்
கருங்கடல் கிளர்ந்த தென்னக்
காட்சியிற் பொலிந்த தன்றே.
157

நெருங்குதூ ரியங்கள் ஏங்க
நிரைத்தசா மரைகள் ஓங்கப்
பெருங்குடை மிடைந்து செல்லப்
பிணங்குபூங் கொடிக ளாட
அருங்கடி மணம்வந் தெய்த
அன்றுதொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர் புத்தூர்
மணம்வந்த புத்தூ ராமால்.
158

நிறைகுடந் தூபம் தீபம்
நெருங்குபா லிகைக ளேந்தி
நறைமல ரறுகு சுண்ணம்
நறும்பொரி பலவும் வீசி
உறைமலி கலவைச் சாந்தின்
உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல்
மணமெதிர் கொள்ள வந்தார்.
159

கண்களெண் ணிலாத வேண்டுங் 
காளையைக் காண என்பார்
பெண்களி லுயர நோற்றாள்
சடங்கவி பேதை என்பார்
மண்களி கூர வந்த
மணங்கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம்
பாடுவார் ஆடு வார்கள்.
160
Go to top

ஆண்டகை யருளின் நோக்கின்
வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
தாண்டிய பரியும் நம்பால்
தகுதியில் நடந்த தென்பார்
பூண்டயங் கிவனே காணும்
 புண்ணிய மூர்த்தி யென்பார்
ஈண்டிய மடவார் கூட்டம்  
இன்னன இசைப்பச் சென்றார்.
161

வருமணக் கோலத் தெங்கள்
வள்ளலார் தெள்ளும் வாசத்
திருமணப் பந்தர் முன்பு  
சென்றுவெண் சங்க மெங்கும்
பெருமழைக் குலத்தி னார்ப்பப்
பரிமிசை இழிந்து பேணும்
ஒருமணத் திறத்தி னங்கு  
நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.
162

ஆலுமறை சூழ்கயிலை யின்கணருள் செய்த
சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்
மேலுற வெழுந்துமிகு கீழுற அகழ்ந்து
மாலும்அய னுக்குமரி யாரொருவர் வந்தார்.
163

கண்ணிடை கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ்
புண்ணிய நுதற்புனித நீறுபொலி வெய்தத்
தண்மதி முதிர்ந்துகதிர் சாய்வதென மீதே
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க.
164

காதிலணி கண்டிகை வடிந்தகுழை தாழச்
சோதிமணி மார்பினசை நூலினொடு தோளின்
மீதுபுனை யுத்தரிய வெண்டுகில் நுடங்க
ஆதப மறைக்குடை அணிக்கரம் விளங்க.
165
Go to top

பண்டிசரி கோவண உடைப்பழமை கூரக்
கொண்டதொர் சழங்கலுடை யார்ந்தழகு கொள்ள
வெண்டுகி லுடன்குசை முடிந்துவிடு வேணுத்
தண்டொருகை கொண்டுகழல் தள்ளுநடைகொள்ள.
166

மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வைதிகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென ஐயமுற வெய்தி.
167

வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பியெதிர் பன்னுசபை முன்னின்று
இந்தமொழி கேண்மினெதிர் யாவர்களும் என்றான்
முந்தைமறை யாயிர மொழிந்த திருவாயான்.
168

என்றுரைசெ யந்தணனை எண்ணில்மறை யோரும்
மன்றல்வினை மங்கல மடங்கலனை யானும்
நன்றுமது நல்வரவு நங்கள்தவ மென்றே
நின்றதிவண் நீர்மொழிமின் நீர்மொழிவ தென்றார்.
169

பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்றஇசை வால்யான்
முன்னுடைய தோர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீமுயல்தி என்றான்.
170
Go to top

நெற்றிவிழி யான்மொழிய நின்றநிக ரில்லான்
உற்றதொர் வழக்கெனிடை நீயுடைய துண்டேல்
மற்றது முடித்தலதி யான்வதுவை செய்யேன்
முற்றவிது சொல்லுகென வெல்லைமுடி வில்லான்.
171

ஆவதிது கேண்மின்மறை யோர்என்அடி யான்இந்
நாவல்நக ரூரனிது நான்மொழிவ தென்றான்
தேவரையும் மாலயன் முதற்றிருவின் மிக்கோர்
யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான்.
172

என்றான் இறையோன் அதுகேட்டவ ரெம்ம ருங்கும்
நின்றார் இருந்தார் இவனென்னினைந் தான்கொ லென்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திருநாவ லூரான்
நன்றால் மறையோன் மொழியென் றெதிர்நோக்கி நக்கான்.
173

நக்கான் முகநோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத்தரி யத்துகில் தாங்கி மேற்சென்று
அக்கா லமுன்தந்தை தன்தந்தையா ளோலை யீதால்
இக்கா ரியத்தை நீயின்று சிரித்ததென் ஏடவென்ன.
174

மாசிலா மரபில் வந்த
வள்ளல்வே தியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை
நெகிழ்ச்சியாற் சிரிப்பு நீங்கி
ஆசிலந் தணர்கள் வேறோர்
அந்தணர்க் கடிமை யாதல்
பேசஇன் றுன்னைக் கேட்டோம்
பித்தனோ மறையோன் என்றார்.
175
Go to top

பித்தனு மாகப் பின்னும்
பேயனு மாக நீயின்று
எத்தனை தீங்கு சொன்னாய்
யாதுமற் றவற்றால் நாணேன்
அத்தனைக் கென்னை யொன்றும்
அறிந்திலை யாகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம்
பணிசெய வேண்டு மென்றார்.
176

கண்டதோர் வடிவா லுள்ளங்
காதல்செய் துருகா நிற்குங்
கொண்டதோர் பித்த வார்த்தை 
கோபமு முடனே யாக்கும்
உண்டொராள் ஓலை யென்னும்
அதனுண்மை யறிவே னென்று
தொண்டனா ரோலை காட்டு
கென்றனர் துணைவ னாரை.
177

ஓலைகாட் டென்று நம்பி
யுரைக்கநீ யோலை காணற்
பாலையோ அவைமுன் காட்டப்
பணிசெயற் பாலை யென்ற
வேலையில் நாவ லூரர்
வெகுண்டுமேல் விரைந்து சென்று
மாலயன் தொடரா தானை
வலிந்துபின் தொடர லுற்றார்.
178

ஆவணம் பறிக்கச் சென்ற
அளவினில் அந்த ணாளன்
காவணத் திடையே யோடக்
கடிதுபின் தொடர்ந்து நம்பி
பூவணத் தவரை உற்றார்
அவரலால் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையி னாரை
யார்தொடர்ந் தெட்ட வல்லார்.
179

மறைகளா யினமுன் போற்றி
மலர்ப்பதம் பற்றி நின்ற
இறைவனைத் தொடர்ந்து பற்றி 
யெழுதுமா ளோலை வாங்கி
அறைகழ லண்ணல் ஆளாய்
அந்தணர் செய்த லென்ன
முறையெனக் கீறி யிட்டார்
முறையிட்டான் முடிவி லாதான்.
180
Go to top

அருமறை முறையிட் டின்னும்
அறிவதற் கரியான் பற்றி
ஒருமுறை முறையோ என்ன
உழைநின்றார் விலக்கி இந்தப்
பெருமுறை உலகில் இல்லா
நெறிகொண்டு பிணங்கு கின்ற
திருமறை முனிவ ரேநீர்
எங்குளீர் செப்பு மென்றார்.
181

என்றலும் நின்ற ஐயர்
இங்குளேன் இருப்புஞ் சேயது
அன்றிந்த வெண்ணெய் நல்லூர்
அதுநிற்க அறத்தா றின்றி
வன்றிறல் செய்தென் கையில்
ஆவணம் வலிய வாங்கி
நின்றிவன் கிழித்துத் தானே
நிரப்பினா னடிமை யென்றான்.
182

குழைமறை காதி னானைக்
கோதிலா ரூரர் நோக்கிப்
பழையமன் றாடி போலு
மிவனென்று பண்பின் மிக்க
விழைவுறு மனமும் பொங்க
வெண்ணெய்நல் லூரா யேலுன்
பிழைநெறி வழக்கை யாங்கே
பேசநீ போதா யென்றார்.
183

வேதிய னதனைக் கேட்டு
வெண்ணெய்நல் லூரி லேநீ
போதினும் நன்று மற்றப்
புனிதநான் மறையோர் முன்னர்
ஆதியின் மூல வோலை
காட்டிநீ யடிமை யாதல்
சாதிப்ப னென்று முன்னே
தண்டுமுன் தாங்கிச் சென்றான்.
184

செல்லுநான் மறையோன் தன்பின் 
திரிமுகக் காந்தஞ் சேர்ந்த
வல்லிரும் பணையு மாபோல்
வள்ளலுங் கடிது சென்றான்
எல்லையில் சுற்றத் தாரு
மிதுவென்னா மென்று செல்ல
நல்லவந் தணர்கள் வாழும்
வெண்ணெய்நல் லூரை நண்ணி.
185
Go to top

வேதபா ரகரின் மிக்கார்
விளங்குபே ரவைமுன் சென்று
நாதனாம் மறையோன் சொல்லும்
நாவலூர் ஆரூ ரன்றான்
காதலென் அடியான் என்னக்
காட்டிய வோலை கீறி
மூதறி வீர்முன் போந்தா
னிதுமற்றென் முறைப்பா டென்றான்.
186

இசைவினா லெழுது மோலை 
காட்டினா னாகி லின்று
விசையினால் வலிய வாங்கிக்
கிழிப்பது வெற்றி யாமோ
தசையெலா மொடுங்க மூத்தான்
வழக்கினைச் சாரச் சொன்னான்
அசைவில்ஆ ரூரர் எண்ணம்
என்னென்றார் அவையின் மிக்கார்.
187

அனைத்துநூல் உணர்ந்தீர் ஆதி
சைவனென் றறிவீர் என்னைத்
தனக்குவே றடிமை யென்றிவ்
வந்தணன் சாதித் தானேல்
மனத்தினா லுணர்தற் கெட்டா
மாயையென் சொல்லு கேன்யான்
எனக்கிது தெளிய வொண்ணா
தென்றனன் எண்ணம் மிக்கான்.
188

அவ்வுரை யவையின் முன்பு 
நம்பியா ரூரர் சொல்லச்
செவ்விய மறையோர் நின்ற
திருமறை முனியை நோக்கி
இவ்வுல கின்கண் நீயின்
றிவரையுன் னடிமை யென்ற
வெவ்வுரை யெம்முன் பேற்ற
வேண்டுமென் றுரைத்து மீண்டும்.
189

ஆட்சியில் ஆவ ணத்தில்
அன்றிமற் றயலார் தங்கள்
காட்சியில் மூன்றி லொன்று
காட்டுவா யென்ன முன்னே
மூட்சியிற் கிழித்த வோலை 
படியோலை மூல வோலை
மாட்சியிற் காட்ட வைத்தேன்
என்றனன் மாயை வல்லான்.
190
Go to top

வல்லையேற் காட்டிங் கென்ன
மறையவன் வலிசெய் யாமற்
சொல்லநீர் வல்லீ ராகில்
காட்டுவே னென்று சொல்லச்
செல்வநான் மறையோர் நாங்கள்
தீங்குற வொட்டோ மென்றார்
அல்லல்தீர்த் தாள நின்றார்
ஆவணங் கொண்டு சென்றார்.
191

இருள்மறை மிடற்றோன் கையி
லோலைகண் டவையோ ரேவ
அருள்பெறு கரணத் தானும்
ஆவணந் தொழுது வாங்கிச்
சுருள்பெறு மடியை நீக்கி 
விரித்ததன் தொன்மை நோக்கித்
தெருள்பெறு சபையோர் கேட்ப
வாசகஞ் செப்பு கின்றான்.
192

அருமறை நாவல் ஆதி 
சைவனா ரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப்
பித்தனுக் கியானும் என்பால்
வருமுறை மரபு ளோரும்
வழித்தொண்டு செய்தற் கோலை
இருமையா லெழுதி நேர்ந்தேன்
இதற்கிவை யென்னெ ழுத்து.
193

வாசகங் கேட்ட பின்னர்
மற்றுமே லெழுத்திட் டார்கள்
ஆசிலா வெழுத்தை நோக்கி
யவையொக்கு மென்ற பின்னர்
மாசிலா மறையோர் ஐயா 
மற்றுங்கள் பேர னார்தந்
தேசுடை எழுத்தே யாகில்
தெளியப்பார்த் தறிமின் என்றார்.
194

அந்தணர் கூற வின்னு
மாளோலை யிவனே காண்பான்
தந்தைதன் தந்தை தான்வே
றெழுதுகைச் சாத்துண் டாகில்
இந்தவா வணத்தி னோடு
மெழுத்துநீ ரொப்பு நோக்கி
வந்தது மொழிமின் என்றான்
வலியஆட் கொள்ளும் வள்ளல்.
195
Go to top

திரண்டமா மறையோர் தாமுந்
திருநாவ லூரர் கோமுன்
மருண்டது தெளிய மற்ற
மறையவ னெழுத்தால் ஓலை
அரண்டரு காப்பில் வேறொன்
றழைத்துடன் ஒப்பு நோக்கி
இரண்டுமொத் திருந்த தென்னே
யினிச்செயல் இல்லை யென்றார்.
196

நான்மறை முனிவ னார்க்கு
நம்பியா ரூரர் தோற்றீர்
பான்மையி னேவல் செய்தல்
கடனென்று பண்பின் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி
விதிமுறை யிதுவே யாகில்
யானிதற் கிசையே னென்ன
இசையுமோ வென்று நின்றார்.
197

திருமிகு மறையோர் நின்ற
செழுமறை முனியை நோக்கி
அருமுனி நீமுன் காட்டும்
ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியே யாகப்
பேசிய துமக்கிவ் வூரில்
வருமுறை மனையு நீடு
வாழ்க்கையுங் காட்டு கென்றார்.
198

பொருவரும் வழக்கால் வென்ற
புண்ணிய முனிவ ரென்னை
ஒருவரும் அறியீ ராகில்
போதுமென் றுரைத்துச் சூழ்ந்த
பெருமறை யவர்கு ழாமும் 
நம்பியும் பின்பு செல்லத்
திருவருட் டுறையே புக்கார்
கண்டிலர் திகைத்து நின்றார்.
199

எம்பிரான் கோயில் நண்ண
இலங்குநூன் மார்பர் எங்கள்
நம்பர்தங் கோயில் புக்க
தென்காலோ வென்று நம்பி
தம்பெரு விருப்பி னோடு
தனித்தொடர்ந் தழைப்ப மாதோ
டும்பரின் விடைமேல் தோன்றி
அவர்தமக் குணர்த்த லுற்றார்.
200
Go to top

முன்புநீ நமக்குத் தொண்டன்
முன்னிய வேட்கை கூரப்
பின்புநம் ஏவ லாலே
பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத்
தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர்
நாம்தடுத் தாண்டோம் என்றார்.
201

என்றெழு மோசை கேளா
ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
கன்றுபோல் கதறி நம்பி
கரசர ணாதி யங்கந்
துன்றிய புளக மாகத்
தொழுதகை தலைமே லாக
மன்றுளீர் செயலோ வந்து
வலியஆட் கொண்ட தென்றார்.
202

எண்ணிய வோசை யைந்தும்
விசும்பிடை நிறைய வெங்கும்
விண்ணவர் பொழிபூ மாரி
மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க
மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி
யாண்டவ ரருளிச் செய்வார்.
203

மற்றுநீ வன்மை பேசி
வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற்
பெருகிய சிறப்பின் மிக்க
அர்சனை பாட்டே யாகும்
ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்
தூமறை பாடும் வாயார்.
204

தேடிய அயனு மாலுந்
தெளிவுறா தைந்தெ ழுத்தும்
பாடிய பொருளா யுள்ளான்
பாடுவாய் நம்மை யென்ன
நாடிய மனத்த ராகி நம்பியா
ரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை
யஞ்சலி கூப்பி நின்று.
205
Go to top

வேதிய னாகி யென்னை
வழக்கினால் வெல்ல வந்த
ஊதிய மறியா தேனுக்
குணர்வுதந் துய்யக் கொண்ட
கோதிலா அமுதே இன்றுன்
குணப்பெருங் கடலை நாயேன்
யாதினை யறிந்தென் சொல்லிப்
பாடுகேன் எனமொழிந்தார்.
206

அன்பனை யருளின் நோக்கி
அங்கணர் அருளிச் செய்வார்
முன்பெனைப் பித்த னென்றே
மொழிந்தனை யாத லாலே
என்பெயர் பித்த னென்றே
பாடுவா யென்றார் நின்ற
வன்பெருந் தொண்டர் ஆண்ட
வள்ளலைப் பாட லுற்றார்.
207

கொத்தார்மலர்க் குழலாளொரு
கூறாயடி யவர்பான்
மெய்த்தாயினு மினியானையவ்
வியனாவலர் பெருமான்
பித்தாபிறை சூடீயெனப்
பெரிதாந்திருப் பதிகம்
இத்தாரணி முதலாமுல
கெல்லாமுய வெடுத்தார்.
208

முறையால்வரு மருதத்துடன்
மொழியிந்தள முதலிற்
குறையாநிலை மும்மைப்படி
கூடுங்கிழ மையினால்
நிறைபாணியி லிசைகோள்புணர்
நீடும்புகல் வகையால்
இறையான்மகி ழிசைபாடின
னெல்லாநிக ரில்லான்.
209

சொல்லார்தமி ழிசைபாடிய
தொண்டன்தனை இன்னும்
பல்லாறுல கினில்நம்புகழ்
பாடென்றுறு பரிவின்
நல்லார்வெண்ணெய் நல்லூரருட்
டுறைமேவிய நம்பன்
எல்லாவுல குய்யப்புரம்
எய்தானருள் செய்தான்.
210
Go to top

அயலோர்தவ முயல்வார்பிற
ரன்றேமணம் அழியும்
செயலால்நிகழ் புத்தூர்வரு
சிவவேதியன் மகளும்
உயர்நாவலர் தனிநாதனை 
யொழியாதுணர் வழியிற்
பெயராதுயர் சிவலோகமும்
எளிதாம்வகை பெற்றாள்.
211

நாவலர்கோன் ஆரூரன்
தனைவெண்ணெய் நல்லூரின்
மேவுமருட் டுறையமர்ந்த
வேதியராட் கொண்டதற்பின்
பூவலருந் தடம்பொய்கைத்
திருநாவ லூர்புகுந்து
தேவர்பிரான் தனைப்பணிந்து
திருப்பதிகம் பாடினார்.
212

சிவனுறையுந் திருத்துறையூர்
சென்றணைந்து தீவினையால்
அவநெறியிற் செல்லாமே
தடுத்தாண்டாய் அடியேற்குத்
தவநெறிதந் தருளென்று 
தம்பிரான் முன்னின்று
பவநெறிக்கு விலக்காகுந்
திருப்பதிகம் பாடினார்.
213

புலனொன்றும் படிதவத்திற்
புரிந்தநெறி கொடுத்தருள
அலர்கொண்ட நறுஞ்சோலைத் 
திருத்துறையூர் அமர்ந்தருளும்
நிலவுந்தண் புனலுமொளிர்
நீள்சடையோன் திருப்பாத
மலர்கொண்டு போற்றிசைத்து
வந்தித்தார் வன்றொண்டர்.
214

திருத்துறையூர் தனைப்பணிந்து
சிவபெருமான் அமர்ந்தருளும்
பொருத்தமா மிடம்பலவும்
புக்கிறைஞ்சிப் பொற்புலியூர்
நிருத்தனார் திருக்கூத்துத்
தொழுவதற்கு நினைவுற்று
வருத்தமிகு காதலினால்
வழிக்கொள்வான் மனங்கொண்டார்.
215
Go to top

மலைவளர்சந் தகில்பீலி
மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதருதண் புனற்பெண்ணை
யாறுகடந் தேறியபின்
இலகுபசும் புரவிநெடுந்
தேர்இரவி மேல்கடலிற்
செலவணையும் பொழுதணையத்
திருவதிகைப் புறத்தணைந்தார்.
216

உடையவர சுலகேத்து 
முழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு
விரும்புபெரும் பதியைமிதித்
தடையுமதற் கஞ்சுவனென்
றந்நகரிற் புகுதாதே
மடைவளர்தண் புறம்பணையிற்
சித்தவட மடம்புகுந்தார்.
217

வரிவளர்பூஞ் சோலைசூழ்
மடத்தின்கண் வன்றொண்டர்
விரிதிரைநீர்க் கெடிலவட
வீரட்டா னத்திறைதாள்
புரிவுடைய மனத்தினராய்ப்
புடையெங்கு மிடைகின்ற
பரிசனமுந் துயில்கொள்ளப்
பள்ளியமர்ந் தருளினார்.
218

அதுகண்டு வீரட்டத்
தமர்ந்தருளும் அங்கணரும்
முதுவடிவின் மறையவராய்
முன்னொருவ ரறியாமே
பொதுமடத்தி னுட்புகுந்து
பூந்தாரான் திருமுடிமேற்
பதுமமலர்த் தாள்வைத்துப்
பள்ளிகொள்வார் போல்பயின்றார்.
219

அந்நிலைஆ ரூரனுணர்ந்
தருமறையோ யுன்னடியென்
சென்னியில்வைத் தனையென்னத்
திசையறியா வகைசெய்தது
என்னுடைய மூப்புக்காண்
என்றருள அதற்கிசைந்து
தன்முடியப் பால்வைத்தே
துயிலமர்ந்தான் தமிழ்நாதன்.
220
Go to top

அங்குமவன் திருமுடிமேல்
மீண்டுமவர் தாள்நீட்டச்
செங்கயல்பாய் தடம்புடைசூழ்
திருநாவ லூராளி
இங்கென்னைப் பலகாலும்
மிதித்தனைநீ யாரென்னக்
கங்கைசடைக் கரந்தபிரா
னறிந்திலையோ எனக்கரந்தான்.
221

செம்மாந்திங் கியானறியா
தென்செய்தே னெனத்தெளிந்து
தம்மானை யறியாத
சாதியா ருளரே யென்று
அம்மானைத் திருவதிகை
வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவி னுரியானைக்
கழல்பணிந்து பாடினார்.
222

பொன்றிரளும் மணித்திரளும்
பொருகரிவெண் கோடுகளும்
மின்றிரண்ட வெண்முத்தும்
விரைமலரும் நறுங்குறடும்
வன்றிரைக ளாற்கொணர்ந்து
திருவதிகை வழிபடலால்
தென்திசையில் கங்கையெனுந்
திருக்கெடிலம் திளைத்தாடி.
223

அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்தப்
பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன்
மங்கலவேள் வியிற்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.
224

பரம்பொருளைப் பணிந்துதாள்
பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
வரந்தருவான் தினைநகரை 
வணங்கினர்வண் டமிழ்பாடி
நரம்புடையாழ் ஒலிமுழவின் 
நாதவொலி வேதவொலி
அரம்பையர்தங் கீதவொலி
அறாத்தில்லை மருங்கணைந்தார்.
225
Go to top

தேம லங்கலணி மாமணி மார்பில்
செம்ம லங்கயல்கள் செங்கம லத்தண்
பூம லங்கவெதிர் பாய்வன மாடே
புள்ள லம்புதிரை வெள்வளை வாவித்
தாம லங்குகள் தடம்பணை சூழுந்
தன்ம ருங்குதொழு வார்கள்தம் மும்மை
மாம லங்களற வீடருள் தில்லை
மல்ல லம்பதியி னெல்லை வணங்கி.
226

நாக சூதவகு ளஞ்சர ளஞ்சூழ்
நாளி கேரமில வங்க நரந்தம்
பூக ஞாழல்குளிர் வாழை மதூகம்
பொதுளும் வஞ்சிபல வெங்கு நெருங்கி
மேக சாலமலி சோலைக ளாகி
மீது கோகில மிடைந்து மிழற்றப்
போக பூமியினு மிக்கு விளங்கும்
பூம்பு றம்பணை கடந்து புகுந்தார்.
227

வன்னி கொன்றைவழை சண்பகம் ஆரம்
மலர்ப்ப லாசொடு செருந்திமந் தாரங்
கன்னி காரங்குர வங்கமழ் புன்னை
கற்பு பாடலம் கூவிள மோங்கித்
துன்னு சாதிமரு மாலதி மௌவல்
துதைந்த நந்திகர வீர மிடைந்த
பன்ம லர்ப்புனித நந்தனவ னங்கள்
பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.
228

இடம ருங்குதனி நாயகி காண
ஏழ்பெ ரும்புவன முய்ய வெடுத்து
நடந வின்றருள் சிலம்பொலி போற்றும்
நான்ம றைப்பதியை நாளும் வணங்கக்
கடல்வ லங்கொள்வது போற்புடை சூழுங்
காட்சி மேவிமிகு சேட்செல வோங்குந்
தடம ருங்குவளர் மஞ்சிவர் இஞ்சித்
தண்கி டங்கையெதிர் கண்டும கிழ்ந்தார்.
229

மன்று ளாடுமது வின்னசை யாலே
மறைச்சு ரும்பறை புறத்தின்  மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங்
குண்ட கழ்க்கமல  வண்டலர் கைதைத்
துன்று  நீறுபுனை மேனிய வாகித் தூய  
நீறுபுனை தொண்டர்க ளென்னச்
சென்று சென்றுமுரல் கின்றன  கண்டு
சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார். ,
230
Go to top

அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியார்
அவர்க ளோநம்பி யாரூரர்  தாமோ
முன்பி றைஞ்சினர் யாவரென் றறியா
முறைமை யாலெதிர்  வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பி னிறைந்து
பெருகு  நாவனக ரார்பெரு மானும்
பொன்பி றங்குமணி மாளிகை நீடும்
பொருவி றந்ததிரு வீதி புகுந்தார்.
231

அங்கண் மாமறை முழங்கும் மருங்கே
ஆட ரம்பையர் அரங்கு  முழங்கும்
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும்
வாச மாலைகளின் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர்
போற்றி சைக்குமொலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்குசடை  கங்கை முழங்கும்
தேவ தேவர்புரி யுந்திரு வீதி.
232

போக நீடுநிதி மன்னவன் மன்னும்
புரங்க ளொப்பன வரம்பில வோங்கி
மாக முன்பருகு கின்றன போலும்
மாளி கைக்குல மிடைந்த  பதாகை
யோக சிந்தைமறை யோர்கள் வளர்க்கும்
ஓம தூமமுயர் வானி லடுப்ப
மேக பந்திகளின் மீதிடை எங்கும்
மின்னு  டங்குவன வென்ன விளங்கும்.
233

ஆடு தோகைபுடை நாசிகள் தோறும்
அரணி தந்தசுட ராகுதி  தோறும்
மாடு தாமமணி வாயில்கள் தோறும்
மங்க லக்கலசம் வேதிகை தோறுஞ்
சேடு கொண்டவொளி தேர்நிரை தோறுஞ்
செந்நெ லன்னமலை சாலைகள் தோறும்
நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும்
நிறைந்த தேவர்கணம் நீளிடை தோறும்.
234

எண்ணில் பேருல கனைத்தினு முள்ள
எல்லை யில்லழகு சொல்லிய வெல்லாம்
மண்ணில் இப்பதியில் வந்தன வென்ன
மங்க லம்பொலி வளத்தன வாகிப்
புண்ணி யப்புனித வன்பர்கள் முன்பு
புகழ்ந்து பாடல்புரி பொற்பின் விளங்கும்
அண்ண லாடுதிரு வம்பலஞ் சூழ்ந்த
அம்பொன் வீதியினை நம்பி வணங்கி.
235
Go to top

மால யன்சத மகன்பெருந் தேவர்
மற்று முள்ளவர்கள் முற்றும் நெருங்கிச்
சீல மாமுனிவர் சென்றுபின் துன்னித்
திருப்பி ரம்பினடி கொண்டு திளைத்துக்
காலம் நேர்படுதல் பார்த்தயல் நிற்பக்
காத லன்பர்கண நாதர் புகும்பொற்
கோல நீடுதிரு வாயி லிறைஞ்சிக்
குவித்த செங்கைதலை மேற்கொடு புக்கார்.
236

பெருமதில் சிறந்த செம்பொன்மா ளிகைமின்
பிறங்குபே ரம்பல மேரு
வருமுறை வலங்கொண் டிறைஞ்சிய பின்னர்
வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
அருமறை முதலில் நடுவினில் கடையில்
அன்பர்தஞ் சிந்தையில் அலர்ந்த
திருவள ரொளிசூழ் திருச்சிற்றம் பலமுன்
திருவணுக் கன்திரு வாயில்.
237

வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப
மன்றுளே மாலயன் தேட
ஐயர்தாம் வெளியே யாடுகின் றாரை
அஞ்சலி மலர்த்திமுன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
கரணமோ கலந்தவன் புந்தச்
செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
திருக்களிற் றுப்படி மருங்கு.
238

ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
வெல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
239

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடங் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்
கைம்மல ருச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.
240
Go to top

தடுத்துமுன் ஆண்ட தொண்டனார் முன்பு
தனிப்பெருந் தாண்டவம் புரிய
எடுத்தசே வடியா ரருளினால் தரளம்
எறிபுனல் மறிதிரைப் பொன்னி
மடுத்தநீள் வண்ணப் பண்ணையா ரூரில்
வருகநம் பாலென வானில்
அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதம்
கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.
241

ஆடுகின் றவர்பே ரருளினால் நிகழ்ந்த
அப்பணி சென்னிமேற் கொண்டு
சூடுதங் கரங்கள் அஞ்சலி கொண்டு
தொழுந்தொறும் புறவிடை கொண்டு
மாடுபே ரொளியின் வளருமம் பலத்தை
வலங்கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய வுயர்ந்தபொன் வரைபோல்
நிலையெழு கோபுரங் கடந்து.
242

நின்றுகோ புரத்தை நிலமுறப் பணிந்து
நெடுந்திரு வீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினூ டேகி
மன்னிய திருப்பதி யதனில்
தென்றிரு வாயில் கடந்துமுன் போந்து
சேட்படுந் திருவெல்லை யிறைஞ்சிக்
கொன்றைவார் சடையா னருளையே நினைவார்
கொள்ளிடத் திருநதி கடந்தார்.
243

புறந்தருவார் போற்றிசைப்பப்
புரிமுந்நூல் அணிமார்பர்
அறம்பயந்தாள் திருமுலைப்பால்
அமுதுண்டு வளர்ந்தவர்தாம்
பிறந்தருளும் பெரும்பேறு 
பெற்றதென முற்றுலகிற்
சிறந்தபுகழ்க் கழுமலமாந் 
திருப்பதியைச் சென்றணைந்தார்.
244

பிள்ளையார் திருவவதா 
ரஞ்செய்த பெரும்புகலி
உள்ளுநான் மிதியேனென் 
றூரெல்லைப் புறம்வணங்கி
வள்ளலார் வலமாக
வரும்பொழுதின் மங்கையிடங்
கொள்ளுமால் விடையானும்
எதிர்காட்சி கொடுத்தருள.
245
Go to top

மண்டியபே ரன்பினால்
வன்றொண்டர் நின்றிறைஞ்சித்
தெண்டிரைவே லையின்மிதந்த
திருத்தோணி புரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில்
வீற்றிருந்த படியென்று
பண்டருமின் னிசைபயின்ற 
திருப்பதிகம் பாடினார்.
246

இருக்கோல மிடும்பெருமான் 
எதிர்நின்றும் எழுந்தருள
வெருக்கோளுற் றதுநீங்க
ஆரூர்மேற் செலவிரும்பிப்
பெருக்கோதஞ் சூழ்புறவப்
பெரும்பதியை வணங்கிப்போய்த்
திருக்கோலக் காவணங்கிச்
செந்தமிழ்மா லைகள்பாடி.
247

தேனார்க்கு மலர்ச்சோலைத்
திருப்புன்கூர் நம்பர்பால்
ஆனாப்பே ரன்புமிக
அடிபணிந்து தமிழ்பாடி
மானார்க்குங் கரதலத்தார்
மகிழ்ந்தஇடம் பலவணங்கிக்
கானார்க்கு மலர்த்தடஞ்சூழ்
காவிரியின் கரையணைந்தார்.
248

வம்புலா மலரலைய 
மணிகொழித்து வந்திழியும்
பைம்பொன்வார் கரைப்பொன்னிப் 
பயில்தீர்த்தம் படிந்தாடித்
தம்பிரான் மயிலாடு
துறைவணங்கித் தாவில்சீர்
அம்பர்மா காளத்தின்
அமர்ந்தபிரான் அடிபணிந்தார்.
249

மின்னார்செஞ் சடையண்ணல்
விரும்புதிருப் புகலூரை
முன்னாகப் பணிந்தேத்தி
முதல்வன்தன் அருள்நினைந்து
பொன்னாரும் உத்தரியம் பு
ரிமுந்நூ லணிமார்பர்
தென்னாவ லூராளி
திருவாரூர் சென்றணைந்தார்.
250
Go to top

தேராரும் நெடுவீதித்
திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின்நம்
ஆரூரன் நாமழைக்க
வாராநின் றானவனை
மகிழ்ந்தெதிர்கொள் வீரென்று
நீராருஞ் சடைமுடிமேல் 
நிலவணிந்தார் அருள்செய்தார்.
251

தம்பிரா னருள்செய்யத்
திருத்தொண்ட ரதுசாற்றி
எம்பிரா னார்அருள்தான்
இருந்தபரி சிதுவானால்
நம்பிரா னாராவார்
அவரன்றே யெனுநலத்தால்
உம்பர்நா டிழிந்ததென
எதிர்கொள்ள வுடனெழுந்தார்.
252

மாளிகைகள் மண்டபங்கள்
மருங்குபெருங் கொடிநெருங்கத்
தாளின்நெடும் தோரணமுந் 
தழைக்கமுகுங் குழைத்தொடையும்
நீளிலைய கதலிகளும்
நிறைந்தபசும் பொற்றசும்பும்
ஒளிநெடு மணிவிளக்கு
முயர்வாயில் தொறும்நிரைத்தார்.
253

சோதிமணி வேதிகைகள்
தூநறுஞ்சாந் தணிநீவிக்
கோதில்பொரி பொற்சுண்ணங்
குளிர்தரள மணிபரப்பித்
தாதவிழ்பூந் தொடைமாலைத்
தண்பந்தர் களுஞ்சமைத்து
வீதிகள்நுண் துகள்அடங்க
விரைப்பனிநீர் மிகத்தெளித்தார்.
254

மங்கல கீதம்பாட
மழைநிகர்தூ ரியமுழங்கச்
செங்கயற்கண் முற்றிழையார் 
தெற்றிதொறும் நடம்பயில
நங்கள்பிரான் திருவாரூர்
நகர்வாழ்வார் நம்பியைமுன்
பொங்கெயில்நீள் திருவாயில்
புறமுறவந் தெதிர்கொண்டார்.
255
Go to top

வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன்
வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
சிந்தை களிப்புற வீதி யூடு
செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
எந்தை யிருப்பதும் ஆரூ ரவர்
எம்மையு மாள்வரோ கேளீர் என்னும்
சந்த விசைப்பதி கங்கள்  பாடித்
தம்பெரு மான்திரு வாயில் சார்ந்தார்.
256

வானுற நீள்திரு வாயில் நோக்கி
மண்ணுற ஐந்துறுப் பால் வணங்கித்
தேனுறை கற்பக வாச மாலைத்
தேவா சிரியன் தொழுதி றைஞ்சி
ஊனு முயிரும் உருக்கு மன்பால்
உச்சி குவித்த செங்கைக ளோடும்
தூநறுங் கொன்றை யான்மூலட் டானம்
சூழ்திரு மாளிகை வாயில் புக்கார்.
257

புற்றிடங் கொண்ட புராதனனைப்
பூங்கோயின் மேய பிரானை யார்க்கும்
பற்றிட மாய பரம்பொருளைப்
பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள்
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த
அண்ணலை மண்மிசை வீழ்ந்தி றைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன்உடம்பால்
நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.
258

அன்பு பெருக உருகியுள்ளம்
அலையஅட் டாங்கபஞ் சாங்க மாக
முன்பு முறைமையி னால்வணங்கி
முடிவிலாக் காதல் முதிர வோங்கி
நன்புல னாகிய ஐந்தும்ஒன்றி
நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்பவெள் ளத்திடை மூழ்கிநின்றே
இன்னிசை வண்டமிழ் மாலை பாட.
259

வாழிய மாமறைப் புற்றிடங்கொள்
மன்னவ னாரரு ளாலோர் வாக்குத்
தோழமை யாக வுனக்குநம்மைத் த
ந்தனம்  நாமுன்பு தொண்டு கொண்ட
வேள்வியி லன்றுநீ கொண்டகோலம்
என்றும் புனைந்துநின் வேட்கை தீர
வாழிமண் மேல்விளை யாடுவாயென்
றாரூரர் கேட்க எழுந்த தன்றே.
260
Go to top

கேட்க விரும்பிவன் றொண்டரென்றும்
கேடிலா தானை யிறைஞ்சி நின்றே
ஆட்கொள வந்த மறையவனே
ஆரூ ரமர்ந்த அருமணி யே
வாட்கயல் கொண்டகண் மங்கைபங்கா
மற்றுன் பெரிய கருணை யன்றே
நாட்கம லப்பதந் தந்ததின்று
நாயினே னைப்பொரு ளாக என்றார்.
261

என்று பலமுறை யால்வணங்கி
எய்திய உள்ளக் களிப்பி னோடும்
வென்றி யடல்விடை போல்நடந்து
வீதி விடங்கப் பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்துவாழ்ந்து
திருமா ளிகைவலஞ் செய்து போந்தார்
அன்று முதலடி யார்களெல்லாம்
தம்பிரான் தோழ ரென்றே யறைந்தார்.
262

மைவளர் கண்ட ரருளினாலே
வண்டமிழ் நாவலர் தம்பெ ருமான்
சைவ விடங்கின் அணிபுனைந்து
சாந்தமும் மாலையுந் தாரு மாகி
மெய்வளர் கோலமெல் லாம்பொலிய
மிக்க விழுத்தவ வேந்த ரென்னத்
தெய்வ மணிப்புற்று ளாரைப் பாடித்
திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார்.
263

இதற்குமுன் எல்லை யில்லாத்
திருநகர் இதனுள் வந்து
முதற்பெருங் கயிலை யாதி
முதல்வர்தம் பங்கி னாட்குப்
பொதுக்கடிந் துரிமை செய்யும் 
பூங்குழற் சேடி மாரிற்
கதிர்த்தபூ ணேந்து கொங்கைக்
கமலினி அவத ரித்தாள்.
264

கதிர்மணி பிறந்த தென்ன
உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்தில் தோன்றிப்
பரவையா ரென்னு நாமம்
விதியுளி விளக்கத் தாலே
மேதகு சான்றோ ரான்ற
மதியணி புனிதன் நன்னாள்
மங்கல அணியால் சாத்தி.
265
Go to top

பரவினர் காப்புப் போற்றிப்
பயில்பெருஞ் சுற்றந் திங்கள்
விரவிய பருவந் தோறும்
விழாவணி யெடுப்ப மிக்கோர்
வரமலர் மங்கை யிங்கு
வந்தன ளென்று சிந்தை
தரவரு மகிழ்ச்சி பொங்கத்
தளர்நடைப் பருவஞ் சேர்ந்தார்.
266

மானிளம் பிணையோ தெய்வ
வளரிள முகையோ வாசத்
தேனிளம் பதமோ வேலைத்
திரையிளம் பவள வல்லிக்
கானிளங் கொடியோ திங்கட்
கதிரிளங் கொழுந்தோ காமன்
தானிளம் பருவங் கற்குந்
தனியிளந் தனுவோ வென்ன.
267

நாடுமின் பொற்பு வாய்ப்பு
நாளுநாள் வளர்ந்து பொங்க
ஆடுமென் கழங்கும் பந்தும்
அம்மனை ஊச லின்ன
பாடுமின் னிசையுந் தங்கள்
பனிமலை வல்லி பாதங்
கூடுமன் புருகப் பாடுங்
கொள்கையோர் குறிப்புத் தோன்ற.
268

பிள்ளைமைப் பருவ மீதாம்
பேதைமைப் பருவ நீங்கி
அள்ளுதற் கமைந்த பொற்பால்
அநங்கன்மெய்த் தனங்க ளீட்டங்
கொள்ளமிக் குயர்வ போன்ற
கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
உள்ளமெய்த் தன்மை முன்னை
உண்மையுந் தோன்ற வுய்ப்பார்.
269

பாங்கியர் மருங்கு சூழப்
படரொளி மறுகு சூழத்
தேங்கமழ் குழலின் வாசந்
திசையெலாஞ் சென்று சூழ
ஓங்குபூங் கோயி லுள்ளார்
ஒருவரை யன்பி னோடும்
பூங்கழல் வணங்க வென்றும்
போதுவார் ஒருநாட் போந்தார்.
270
Go to top

அணிசிலம் படிகள் பார்வென்
றடிப்படுத் தனமென் றார்ப்ப
மணிகிளர் காஞ்சி யல்குல்
வரியர வுலகை வென்ற
துணிவுகொண் டார்ப்ப மஞ்சு
சுரிகுழற் கழிய விண்ணும்
பணியுமென் றினவண் டார்ப்பப்
பரவையார் போதும் போதில்.
271

புற்றிடம் விரும்பி னாரைப்
போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிச னங்கள்
சூழஆ ளுடைய நம்பி
நற்பெரும் பான்மை கூட்ட
நகைபொதிந் திலங்கு செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண்
விளங்கிழை யவரைக் கண்டார்.
272

கற்பகத்தின் பூம்கொம்போ
காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர்
மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ
அறியேனென் றதிசயித்தார்.
273

ஓவியநான் முகனெழுத
வொண்ணாமை யுள்ளத்தால்
மேவியதன் வருத்தமுற
விதித்ததொரு மணிவிளக்கோ
மூவுலகின் பயனாகி
முன்னின்ற தெனநினைந்து
நாவலர்கா வலர்நின்றார்
நடுநின்றார் படைமதனார்.
274

தண்டரள மணித்தோடும்  
தகைத்தோடும் கடைபிறழும்
கெண்டைநெடுங் கண்வியப்பக்
கிளரொளிப்பூ ணுரவோனை
அண்டர்பிரான் திருவருளால் 
அயலறியா மனம்விரும்பப்
பண்டைவிதி கடைகூட்டப்
பரவையா ருங்கண்டார்.
275
Go to top

கண்கொள்ளாக் கவின்பொழிந்த
திருமேனி கதிர்விரிப்ப
விண்கொள்ளாப் பேரொளியா
னெதிர்நோக்கு மெல்லியலுக்கு
எண்கொள்ளாக் காதலின்முன்
பெய்தாத தொருவேட்கை
மண்கொள்ளா நாண்மடம்அச்
சம்பயிர்ப்பை வலிந்தெழலும்.
276

முன்னேவந் தெதிர்தோன்றும்
முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ
தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடையண்ணல்
மெய்யருள்பெற் றுடையவனோ
என்னேயென் மனந்திரித்த
இவன்யாரோ வெனநினைந்தார்.
277

அண்ணலவன் தன்மருங்கே
அளவிறந்த காதலினால்
உண்ணிறையுங் குணநான்கும்
ஒருபுடைசாய்ந் தனவெனினும்
வண்ணமலர்க் கருங்கூந்தல்
மடக்கொடியை வலிதாக்கிக்
கண்ணுதலைத் தொழுமன்பே
கைக்கொண்டு செலவுய்ப்ப.
278

பாங்கோடிச் சிலைவளைத்துப்
படையனங்கன் விடுபாணம்
தாங்கோலி யெம்மருங்கும்
தடைசெய்ய மடவரலும்
தேங்கோதை மலர்க்குழல்மேல்
சிறைவண்டு கலந்தார்ப்பப்
பூங்கோயி லமர்ந்தபிரான்
பொற்கோயில் போய்ப்புகுந்தாள்.
279

வன்றொண்ட ரதுகண்டுஎன்
மனங்கொண்ட மயிலியலின்
இன்றொண்டைச் செங்கனிவாய்
இளங்கொடிதான் யாரென்ன
அன்றங்கு முன்நின்றார்
அவர்நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்குஞ்
சேர்வரியார் எனச்செப்ப.
280
Go to top

பேர்பரவை பெண்மையினில்
பெரும்பரவை விரும்பல்குல்
ஆர்பரவை யணிதிகழும்
மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை யாயினாள்
திருவுருவின் மென்சாயல்
ஏர்பரவை யிடைப்பட்ட
என்னாசை யெழுபரவை.
281

என்றினைய பலவுநினைந்
தெம்பெருமான் அருள்வகையான்
முன்றொடர்ந்து வருங்காதல் 
முறைமையினால் தொடக்குண்டு
நன்றெனையாட் கொண்டவர்பால்
நண்ணுவனென் றுள்மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும்போய்த்
தேவர்பிரான் கோயில்புக.
282

பரவையார் வலங்கொண்டு
பணிந்தேத்தி முன்னரே
புரவலனார் கோயிலினின்
றொருமருங்கு புறப்பட்டார்
விரவுபெருங் காதலினால்
மெல்லியலார் தமைவேண்டி
அரவின்ஆ ரம்புனைந்தார்
அடிபணிந்தார் ஆரூரர்.
283

அவ்வாறு பணிந்தேத்தி
யணியாரூர் மணிப்புற்றின்
மைவாழுந் திருமிடற்று
வானவர்பால் நின்றும்போந்து
எவ்வாறு சென்றாள்என்
இன்னுயிராம் அன்னமெனச்
செவ்வாய்வெண் நகைக்கொடியைத்
தேடுவா ராயினார்.
284

பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும்
ஆசை மேலுமொ ராசை யளிப்பதோர்
தேசின் மன்னியென் சிந்தை மயக்கிய
ஈச னாரரு ளெந்நெறிச் சென்றதே.
285
Go to top

உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்பு மாறறி யேனை நடுக்குற
வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கியின்று
எம்பி ரானரு ளெந்நெறிச் சென்றதே.
286

பந்தம் வீடு தரும்பர மன்கழல்
சிந்தை யார்வுற உன்னுமென் சிந்தையை
வந்து மால்செய்து மானென வேவிழித்து
எந்தை யார்அருள் எந்நெறிச் சென்றதே.
287

என்று சாலவு மாற்றல ரென்னுயிர்
நின்ற தெங்கென நித்திலப் பூண்முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவா சிரியனைச் சேர்ந்தபின்.
288

காவி நேர்வருங் கண்ணியை நண்ணுவான்
யாவ ரோடு முரையியம் பாதிருந்து
ஆவி நல்குவர் ஆரூரை யாண்டவர்
பூவின் மங்கையைத் தந்தெனும் போழ்தினில்.
289

நாட்டு நல்லிசை நாவலூ ரன்சிந்தை
வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
காட்டு வன்கட லைக்கடைந் தென்பபோற்
பூட்டு மேழ்பரித் தேரோன் கடல்புக.
290
Go to top

எய்து மென்பெடை யோடிரை தேர்ந்துண்டு
பொய்கை யிற்பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கைகண் மேற்செல வந்தது
பையுள் மாலை தமியோர் பனிப்புற.
291

பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன்
அஞ்செ ழுத்து முணரா அறிவிலோர்
நெஞ்சு மென்ன இருண்டது நீண்டவான்.
292

மறுவில் சிந்தைவன் றொண்டர் வருந்தினால்
இறும ருங்குலார்க் கியார்பிழைப் பாரென்று
நறும லர்க்கங்குல் நங்கைமுன் கொண்டபுன்
முறுவ லென்ன முகிழ்த்தது வெண்ணிலா.
293

அரந்தை செய்வார்க் கழுங்கித்தம் ஆருயிர்
வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல்
பரந்த வெம்பகற் கொல்கிப் பனிமதிக்
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.
294

தோற்று மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே
சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய்
ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல்வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா.
295
Go to top

வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவ லூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர்பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையு மாயினார் .
296

தந்தி ருக்கண் எரிதழ லிற்பட்டு
வெந்த காமன் வெளியே உருச்செய்து
வந்தென் முன்னின்று வாளி தொடுப்பதே
எந்தை யார்அருள் இவ்வண்ண மோவென்பார்.
297

ஆர்த்தி கண்டும்என் மேல்நின்று அழற்கதிர்
தூர்ப்ப தேயெனைத் தொண்டுகொண் டாண்டவர்
நீர்த்த ரங்கநெடுங் கங்கை நீள்முடிச்
சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி.
298

அடுத்து மேன்மேல் அலைத்தெழு மாழியே
தடுத்து முன்னெனை யாண்டவர் தாமுணக்
கடுத்த நஞ்சுண் தரங்கக் கரங்களால்
எடுத்து நீட்டுநீ யென்னைஇன் றென்செயாய்.
299

பிறந்த தெங்கள் பிரான்மல யத்திடைச்
சிறந்த ணைந்தது தெய்வநீர் நாட்டினில்
புறம்ப ணைத்தடம் பொங்கழல் வீசிட
மறம்ப யின்றதெங் கோதமிழ் மாருதம்.
300
Go to top

இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதல னாகிய வள்ளல்பால்
தன்ன ரும்பெறல் நெஞ்சு தயங்கப்போம்
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்.
301

கனங்கொண்ட மணிகண்டர் கழல்வணங்கிக்
கணவனைமுன் பெறுவாள் போல
இனங்கொண்ட சேடியர்கள் புடைசூழ
எய்து பெருங் காதலோடும்
தனங்கொண்டு தளர்மருங்குற் பரவையும்வன்
றொண்டர்பால் தனித்துச் சென்ற
மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு
தன்மணிமா ளிகையைச் சார்ந்தாள்.
302

சீறடிமேல் நூபுரங்கள் அறிந்தனபோல்
சிறிதளவே யொலிப்ப முன்னர்
வேறொருவ ருடன் பேசாள் மெல்லவடி
யொதுங்கிமா ளிகையின் மேலால்
ஏறிமர கதத்தூணத் திலங்குமணி
வேதிகையில் நலங்கொள் பொற்கால்
மாறின்மலர்ச் சேக்கைமிசை மணிநிலா
முன்றின்மருங் கிருந்தாள் வந்து.
303

அவ்வளவில் அருகிருந்த சேடிதனை
முகநோக்கி ஆரூர் ஆண்ட
மைவிரவு கண்டரைநாம் வணங்கப்போம்
மறுகெதிர்வந் தவரா ரென்ன
இவ்வுலகி லந்தணரா யிருவர்தே
டொருவர்தா மெதிர்நின் றாண்ட
சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான்
தோழனார் நம்பி யென்றாள்.
304

என்றவுரை கேட்டலுமே எம்பிரான்
தமரேயோ வென்னா முன்னம்
வன்றொண்டர் பால்வைத்த மனக்காதல்
அளவின்றி வளர்ந்து பொங்க
நின்றநிறை நாண்முதலாங் குணங்களுடன்
நீங்கவுயி ரொன்றுந் தாங்கி
மின்றயங்கு நுண்ணிடையாள் வெவ்வுயிர்த்து
மெல்லணைமேல் வீழ்ந்த போது.
305
Go to top

ஆரநறுஞ் சேறாட்டி அரும்பனிநீர்
நறுந்திவலை யருகு வீசி
ஈரவிளந் தளிர்க்குளிரி படுத்துமட
வார்செய்த விவையு மெல்லாம்
பேரழலில் நெய்சொரிந்தால் ஒத்தனமற்
றதன்மீது சமிதை யென்ன
மாரனுந்தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
மலர்வாளி சொரிந்தான் வந்து.
,
306

கந்தங் கமழ்மென் குழலீர் இதுவென்
கலைவாண் மதியங் கனல்வா னெனையிச்
சந்தின் தழலைப் பனிநீ ரளவித்
தடவுங் கொடியீர் தவிரீர் தவிரீர்
வந்திங் குலவுந் நிலவும் விரையார்
மலயா னிலமும் எரியாய் வருமால்
அந்தண் புனலும் அரவும் விரவுஞ்
சடையா னருள்பெற் றுடையார் அருளார்.
307

புலரும் படியன் றிரவென் னளவும்
பொறையும் நிறையும் இறையும் தரியா
உலரும் தனமும் மனமும் வினையேன்
ஒருவேன் அளவோ பெருவாழ் வுரையீர்
பலரும் புரியுந் துயர்தா னிதுவோ
படைமன் மதனார் புடைநின் றகலார்
அலரும் நிலவு மலரு முடியார்
அருள்பெற் றுடையா ரவரோ வறியார். ,
308

என்றின் னனவே பலவும் புகலும்
இருளா ரளகச் சுருளோ தியையும்
வன்றொண் டரையும் படிமேல் வரமுன்பு
அருள்வா னருளும் வகையார் நினைவார்
சென்றும் பர்களும் பணியுஞ் செல்வத்
திருவா ரூர்வாழ் பெருமா னடிகள்
அன்றங் கவர்மன் றலைநீர் செயுமென்று
அடியா ரறியும் படியா லருளி.
,
309

காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற்
கரையில் லிருளுங் கங்குற் கழிபோம்
யாமத் திருளும் புலரக் கதிரோன்
எழுகா லையில்வந் தடியார் கூடிச்
சேமத் துணையா மவர்பே ரருளைத்
தொழுதே திருநா வலர்கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை
தகுநீர் மையினால் நிகழச் செய்தார்.
310
Go to top

தென்னாவ லூர்மன்னன்
தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குற்
பரவையெனு மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல்
புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக
பரம்பரையின் விரும்பினார்.
311

தன்னையா ளுடையபிரான்
சரணார விந்தமலர்
சென்னியிலுஞ் சிந்தையிலும்
மலர்வித்துத் திருப்பதிகம்
பன்னுதமிழ்த் தொடைமாலை
பலசாத்திப் பரவையெனும்
மின்னிடையா ளுடன்கூடி
விளையாடிச் செல்கின்றார்.
312

மாதுடன் கூட வைகி
மாளிகை மருங்கு சோலைப்
போதலர் வாவி மாடு 
செய்குன்றின் புடையோர் தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச்
செழுந்தவி சிழிந்து தங்கள்
நாதர்பூங் கோயில் நண்ணிக்
கும்பிடும் விருப்பால் நம்பி.
313

அந்தரத் தமரர் போற்றும்
அணிகிள ராடை சாத்திச்
சந்தனத் தளறு தோய்ந்த
குங்குமக் கலவை சாத்திச்
சுந்தரச் சுழியஞ் சாத்திச்
சுடர்மணிக் கலன்கள் சாத்தி
இந்திரத் திருவின் மேலாம்
எழில்பெற விளங்கித் தோன்ற.
314

கையினிற் புனைபொற் கோலும் 
காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளு நூலும்
நெற்றியின் விளங்கு நீறும்
ஐயனுக் கழகி தாமென்
றாயிழை மகளிர் போற்றச்
சைவமெய்த் திருவின் கோலந்
தழைப்பவீ தியினைச் சார்ந்தார்.
315
Go to top

நாவலூர் வந்த சைவ
நற்றவக் களிறே யென்றும்
மேவலர் புரங்கள் செற்ற
விடையவர்க் கன்ப வென்றுந்
தாவில்சீர்ப் பெருமை யாரூர்
மறையவர் தலைவ வென்றும்
மேவினர் இரண்டுபாலும்
வேறுவே றாயம் போற்ற.
316

கைக்கடா குரங்கு கோழி
சிவல்கவு தாரி பற்றிப்
பக்கமுன் போது வார்கள்
பயில்மொழி பயிற்றிச் செல்ல
மிக்கபூம் பிடகை கொள்வோர்
விரையடைப் பையோர் சூழ
மைக்கருங் கண்ணி னார்கள்
மறுகநீண் மறுகில் வந்தார்.
317

பொலங்கலப் புரவி பண்ணிப்
போதுவார் பின்பு போத
இலங்கொளி வலயப் பொற்றோள்
இடையிடை மிடைந்து தொங்கல்
நலங்கிளர் நீழற் சூழ
நான்மறை முனிவ ரோடும்
அலங்கலம் தோளி னான்வந்
தணைந்தனன் அண்ணல் கோயில்.
318

கண்ணுதல் கோயில் தேவா
சிரியனாங் காவ ணத்துள்
விண்ணவ ரொழிய மண்மேன்
மிக்கசீ ரடியார் கூடி
எண்ணிலார் இருந்த போதில்
இவர்க்கியா னடியான்ஆகப்
பண்ணுநா ளெந்நா ளென்று
பரமர்தாள் பரவிச் சென்றார்.
319

அடியவர்க் கடிய னாவேன்
என்னும்ஆ தரவு கூரக்
கொடிநெடுங் கொற்ற வாயில்
பணிந்துகை குவித்துப் புக்கார்
கடிகொள்பூங் கொன்றை வேய்ந்தா
ரவர்க்கெதிர் காணக் காட்டும்
படியெதிர் தோன்றி நிற்கப்
பாதங்கள் பணிந்து பூண்டு.
320
Go to top

மன்பெ ருந்திரு மாமறை வண்டுசூழ்ந்
தன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை
நன்பெ ரும்பர மானந்த நன்மது
என்த ரத்து மளித்தெதிர் நின்றன.,
321

நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன
வேதி யாதவர் தம்மைவே திப்பன
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய
ஆதி மாலயன் காணா வளவின.
322

வேத வாரண மேற்கொண் டிருந்தன
பேதை யேன்செய் பிழைபொறுத் தாண்டன
ஏத மானவை தீர்க்க இசைந்தன
பூத நாதநின் புண்டரீ கப்பதம்.
323

இன்னவா றேத்து நம்பிக்
கேறுசே வகனார் தாமும்
அந்நிலை யவர்தாம் வேண்டும்
அதனையே அருள வேண்டி
மன்னுசீ ரடியார் தங்கள்
வழித்தொண்டை உணர நல்கிப்
பின்னையும் அவர்கள் தங்கள்
பெருமையை அருளிச் செய்வார்.
324

பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊனமே லொன்று மில்லார்
அருமையாம் நிலையி னின்றார்
அன்பினா லின்ப மார்வார்
இருமையுங் கடந்து நின்றார்
இவரைநீ யடைவா யென்று.
325
Go to top

நாதனா ரருளிச் செய்ய
நம்பியா ரூரர் நானிங்கு
ஏதந்தீர் நெறியைப் பெற்றேன்
என்றெதிர் வணங்கிப் போற்ற
நீதியா லவர்கள் தம்மைப்
பணிந்துநீ நிறைசொன் மாலை
கோதிலா வாய்மை யாலே
பாடென வண்ணல் கூற.
326

தன்னையா ளுடைய நாதன்
தானருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற
திருமுனைப் பாடி நாடர்
இன்னவா றின்ன பண்பென்
றேத்துகேன் அதற்கி யானார்
பன்னுபா மாலை பாடும்
பரிசெனக் கருள்செய் யென்ன.
327

தொல்லைமால் வரைபயந்த
தூயாள்தன் திருப்பாகர்
அல்லல்தீர்ந் துலகுய்ய
மறையளித்த திருவாக்கால்
தில்லைவா ழந்தணர்தம்
அடியார்க்கும் அடியேனென்று
எல்லையில்வண் புகழாரை
யெடுத்திசைப்பா மொழியென்றார்.
328

மன்னுசீர் வயலாரூர்
மன்னவரை வன்றொண்டர்
சென்னியுற அடிவணங்கித்
திருவருள்மேல் கொள்பொழுதின்
முன்னமால் அயனறியா
முதல்வர்தா மெழுந்தருள
அந்நிலைகண் டடியவர்பாற்
சார்வதனுக் கணைகின்றார்.
329

தூரத்தே திருக்கூட்டம்
பலமுறையால் தொழுதன்பு
சேரத்தாழ்ந் தெழுந்தருகு
சென்றெய்தி நின்றழியா
வீரத்தா ரெல்லார்க்குந்
தனித்தனிவே றடியேன் என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத்
தொகைப்பதிக மருள்செய்தார்.
330
Go to top

தம்பெருமான் கொடுத்தமொழி
முதலாகத் தமிழ்மாலைச்
செம்பொருளால் திருத்தொண்டத்
தொகையான திருப்பதிகம்
உம்பர்பிரான் தானருளும்
உணர்வுபெற உலகேத்த
எம்பெருமான் வன்றொண்டர்
பாடியவ ரெதிர்பணிந்தார்.
331

உம்பர்நா யகர்அடியார்
பேருவகை தாமெய்த
நம்பியா ரூரர்திருக்
கூட்டத்தின் நடுவணைந்தார்
தம்பிரான் தோழரவர்
தாமொழிந்த தமிழ்முறையே
எம்பிரான் தமர்கள்திருத்
தொண்டேத்தல் உறுகின்றேன். ]"
332

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000