சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

11.021   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை


+ Show Meaning   Add audio link Add Audio

அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.

1

மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.

2

கருப்புச் சிலை அநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.

3

இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லார்எருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர்சென்றிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்
குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.

4

இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.

5
Go to top

தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்
தாம்அரைக் கோவணத் தோடிரந் துண்ணினுஞ் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுஉல காளத் தருவர்கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.

6

சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியர்ஆ வாரோ பிறர்.

7

பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றியேதிரி யும்புரமூன்
றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.

8

வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக் கெய்தா திடம்.

9

இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டுஎங்கும் மூடும்எங் கண்ணுதலே.

10
Go to top

கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலம்இல்லை தண்அலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.

11

மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே

12

கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.

13

புறமறையப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்
நிறமறையத்திரு நீறு துதைந்தது நீள் கடல்நஞ்
சுறமறை யக்கொண்ட கண்டமும் சால உறைப்புடைத்தால்
அறமறையச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.

14

அடியோமைத் தாங்கியோ ஆடை யுடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ பொடியாடும்
நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்ஊரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.

15
Go to top

உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்அன் றாயினிப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்
வரைந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.

16

மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோடயனும் மாலும் துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.

17

நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண் ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.

18

கொண்ட பலிநுமக்கும் கொய்தார்க் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.

19

வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செல்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்ட இன்மலரே.

20
Go to top

மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.

21

தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன் இவை நான்வல்ல ஞானங்களே.

22

நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிநிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூற்றல்
எம்பெருமான் என்னா இயல்பு.

23

இயல் இசை நாடக மாய் எழு வேலைக ளாய்வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வண் தில்லைமல்கு
கயலியல் கண்ணியங் காரன்பர் சித்தத் தடங்குவரே.

24

அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை நுடங்கிடையீர்
ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே
ஆரூரன் செல்லுமா றங்கு.

25
Go to top

அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.

26

நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ அட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்ற பேயின் கொடிறு.

27

கொடிறு முரித்தனன் கூறாளன் நல்லன் குருகினஞ்சென்
றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம்
மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.

28

விதிகரந்த வெவ்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேர் கொன்றைக் குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்கழல்வாய் தொக்கு.

29

தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவு
நக்கு வருங்கண்ணி குடிவந் தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்அரும் போதரைக் காண வெள்குவனே.

30
Go to top

வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.

31

கூறு பெறுங்கன்னி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத்
தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.

32

நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ நறுந்தேன்
படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக்
கொடுமுடியாய் என்றன் கொடி.

33

கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறுமஞ்சி நஞ்சம் இருந்தநின் கண்டத்தையே.

34

கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்
சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.

35
Go to top

பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர்கோன் அயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.

36

மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றாத்தான் தேசு.

37

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000