சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

11.008   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா

திருக்கயிலாயம்
+ Show Meaning   Add audio link Add Audio

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்

1

பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்

2

ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் சூழொளிநூல்

3

ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகாது அணுகியான் ஆதி

4

அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுந் தானே பரனாய

5
Go to top

தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் ஓவாதே

6

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்

7

தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத

8

சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப ஆராய்ந்து

9

செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி
எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப அங்கொருநாள்

10
Go to top

பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த சேமங்கொள்

11

ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர்

12

நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் நொந்தா

13

வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் பயன்கொள்

14

குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
தலமலிய ஆகந் தழீஇக் கலைமலிந்த

15
Go to top

கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து விற்பகரும்

16

சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் தோளா

17

மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்
கணிவயிரக் கண்டிகை பொன்னாண் பணிபெரிய

18

ஆரம் அவைபூண் டணிதிக ழும்சன்ன
வீரந் திருமார்பில் வில்இலக ஏருடைய

19

எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும்
கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் கொண்டு

20
Go to top

கடிசூத் திரம்புனைந்து கங்கணம்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்கு அடிநிலைமேல்

21

நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப அந்தமில்சீர்

22

எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாம் உணர்த்த ஒண்ணிறத்த

23

பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்

24

அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண்

25
Go to top

நிருதி முதலோர் நிகழ்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் தெருவெலாம்

26

வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையேடுப்ப மேவியசீர்

27

ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் தூய

28

உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் கருத்தமைந்த

29

கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புடைஇரட்டத் தங்கிய

30
Go to top

பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க மெய்ந்நாக

31

மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மோகத் துருமு முரசறையப் போகம்சேர்

32

தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான்

33

விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார்

34

கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் செருக்குடைய

35
Go to top

சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர ஆனாத

36

அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் மன்னிய

37

மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் ஏல்வுடைய

38

சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த ஐங்கணையான்

39

காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய நாமஞ்சேர்

40
Go to top

வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல்

41

மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் தங்கிய

42

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் எச்சார்வும்

43

சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்ல வடமொந்தை நல்லிலயத்

44

தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் கொட்டும்

45
Go to top

குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாம் தடாரி படகம் இடவிய

46

மத்தளம் துந்துபி வாய்ந்த முரு டிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப ஒத்துடனே

47

மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் தங்கிய

48

ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் ஈறார்ந்த

49

காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி மேலை

50
Go to top

இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி எமைஆளும்

51

தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி தூயசீர்ச்

52

சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி அங்கொருநாள்

53

ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூய

54

மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி நிலைபோற்றி

55
Go to top

போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக ஏற்றுக்

56

கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் கடிகமழும்

57

பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் சேமேலே

58

வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே தூமாண்பில்

59

வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ
டூனமில் சூலம் உடையவாய் ஈனமிலா

60
Go to top

வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய ஒள்ளிய

61

மாட நடுவில் மலர்ஆர் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் கேடில்

62

சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா நலந்திகழும்

63

கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் சூழொளிய

64

கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர
அங்கம் பொருதசைந்த ஆயிழையார் செங்கேழ்நற்

65
Go to top

பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி
நற்பெருங் கோலம் மிகப்புனைந்து பொற்புடைய

66

பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் சோதிசேர்

67

சூளிகையும் சூட்டும் சுளிகையும் கட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக மாளிகையின்

68

மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் நூலேறு

69

தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடும்என்பார் காமவேள்

70
Go to top

ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் பூமன்னும்

71

பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் முன்னம்

72

ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித்
தெருவம் புகுவார் திகைப்பார் அருகிருந்த

73

கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் அண்ணல்மேற்

74

கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒண்ணிறத்த

75
Go to top

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள் தீதில்

76

இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள் நலஞ்சேர்
உடையாலும் உள்உருக்க கில்லாள் நடையாலும்

77

கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் செவ்வன்நேர்

78

நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வாயின்
வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள் பூக்குழலும்

79

பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் நாடோறும்

80
Go to top

ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினாளாஞ் சேயிழையாள் நன்றாகத்

81

தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்துடுத்துக் கோலஞ்சேர்

82

பந்தரில் பாவைகொண் டாடுமிப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ அந்தமில்சீர்

83

ஈசன் எரியாடி என்ன அவனைஓர்
காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் தாய்சொன்ன

84

இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் பொற்புடைய

85
Go to top

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் சீரொளிய

86

தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு
காமருவு கெண்டைஓர் செந்தொண்டை தூமருவு

87

முத்தம் முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் ஒத்தமைந்த

88

கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் ஒண்கேழ்நல்

89

அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் வந்து

90
Go to top

திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் மடல்பட்ட

91

மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் சாலவும்

92

வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி எஞ்சா

93

மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணிஆர் வளைதோள்மேல் மின்ன மணியார்ந்த

94

தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வரவெழுதிக் காமன்

95
Go to top

கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும்
ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் விருப்பூரும்

96

தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் தானமர

97

நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும்
நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் நன்றாகக்

98

கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் மொய்கொண்ட

99

மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் தங்கிய

100
Go to top

அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகம்கமலம் பொங்கெழிலார்

101

இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேய்எழிலார்
பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு மட்டுவிரி

102

கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் வாய்ந்தசீர்

103

வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் குண்டலங்கள்

104

காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து மாதராள்

105
Go to top

பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் நற்கோட்டு

106

வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு தெள்ளியநீர்

107

தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் சூழொளியான்

108

தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்கும் தன்ன தெழில்நோக்கும் பேரருளான்

109

தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து நாண்நோக்காது

110
Go to top

உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் ஒள்ளிய

111

தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் ஏய்ந்தசீர்

112

ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் பாசிலைய

113

வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் எஞ்சாப்

114

புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென் தோளும் மருவினிய

115
Go to top

கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள் ஒண்கேழல்

116

வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் ஊழித்

117

திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் பெருகொளிய

118

முத்தாரம் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப்பெருகி வித்தகத்தால்

119

கள்ளும் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டு
உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் தெள்ளொளிய

120
Go to top

காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் தோளெங்கும்

121

தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் கொண்ணுதலாள்

122

தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னும்ஓர் காமரம் யாழமைத்து மன்னும்

123

விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு அடல்வல்ல

124

வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் கோல

125
Go to top

மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணிஏறு தோளானைக் கண்டாங் கணியார்ந்த

126

கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி நாட்டார்கள்

127

எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று மெல்லவே

128

செல்ல லுறும்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய்
சொல்லலுறும் சொல்லி உடைசெறிக்கும் நல்லாகம்

129

காண லுறும்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது பூணாகம்

130
Go to top

புல்லலுறும் அண்ணல்கை வாரான் என் றிவ்வகையே
அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் மெல்லியலாள்

131

தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் பின்னொருத்தி

132

செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் ஒண்கேழ்நல்

133

திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் பொங்கொளிசேர்

134

மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்ஆவார் இல்லாத் தகைமையாள் எந்நாளும்

135
Go to top

இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் சொல்லாலே

136

அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர்

137

இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள் அடியிணைமேல்

138

பாடகம் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் கேடில்சீர்ப்

139

பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் பொன்னனாள்

140
Go to top

இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் முன்னமே

141

பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் கூடிய

142

இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையையுங் கைவிட்டுப் பொன்னனையீர்

143

இன்றன்றே காண்ப தெழில்நலங் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்கென்று சென்றவன்தன்

144

ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் ஒண்கேழ்நல்

145
Go to top

கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தம் திமிரும் முலையார்க்கும் பூந்துகிலைச்

146

சூழும் அவிழ்க்கும் தொழும்அழும் சோர்துயருற்
றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் சூழொளிய

147

அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலம்தோற்றாள் அங்கொருத்தி

148

ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் ஓரா

149

மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்சீர் புலரியே ஒப்பாள் அருளாலே

150
Go to top

வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ
டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் வெப்பந்தீர்ந்

151

தந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள் அந்தமில்

152

சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் சீராரும்

153

கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் வண்ணஞ்சேர்

154

மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் மாந்தர்

155
Go to top

அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
பறையறைவ போலும் சிலம்பு முறைமையால்

156

சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓரா தகலல் உறாதென்று சீராலே

157

அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே

158

பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி வாய்ந்தசீர்

159

நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து மைப்பகரும்

160
Go to top

காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி யாவரையும்

161

ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினா ளாகிப்

162

பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய வாகிக் கலைகரந்

163

துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து
கள்ஆவி நாறும் கருங்குழலாள் தெள்ளொளிய

164

செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் பொங்கெழிலார்

165
Go to top

பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் விற்பகரும்

166

தோளான் நிலைபேறு தோற்றம் கேடாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் கேளாய

167

நாணார் நடக்க நலத்தார்க் கிடையில்லை
ஏணார் ஒழிக எழிலொழிக பேணும்

168

குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமின்நீர் என்று சொலற்கரிய

169

தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது போவானேல்

170
Go to top

கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் ஒண்டாங்கு

171

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் மண்ணின்மேல்

172

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே வுளவென்று பண்டையோர்

173

கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் கட்டரவம்

174

அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் எஞ்சாத

175
Go to top

பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி
வைத்தன போல வளர்ந்தே நீதி ஒத்துச்

176

சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்
கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி இணங்கொத்த

177

கொங்கையாள் கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் அங்கையால்

178

காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் வாய்ந்துடனே

179

ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்தச் செழும்பவளம் காய்ந்திலங்கு

180
Go to top

முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் ஒத்து

181

வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் பெருகிய

182

தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் ஒண்ணிறத்த

183

குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் வண்டலம்ப

184

யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் மாசில்சீர்ப்

185
Go to top

பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் மாதார்ந்த

186

பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து ஒண்கேழ்நல்

187

கண்அவனை அல்லாது காணா செவியவன
தெண்ணருஞ்சீர் அல்ல திசைகேளா அண்ணல்

188

கழலடி யல்லது கைதொழா அஃதால்
அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் றெழிலுடைய

189

வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் விண்பால்

190
Go to top

அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் எரிஇரவில்

191

ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு கேடில்சீர்

192

வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் அண்ணலே

193

வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவுஎன்று நொந்தாள்போல்

194

கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் கொட்டிமைசேர்

195
Go to top

பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே விண்ணோங்கி

196

மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.

பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.

197

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கயிலாயம்
1.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி கொள் உருவர், புலியின்
Tune - தக்கேசி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
3.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாள வரி கோள புலி
Tune - சாதாரி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
4.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   கனகம் மா வயிரம் உந்தும்
Tune - திருநேரிசை   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
Tune - குறிஞ்சி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொறை உடைய பூமி, நீர்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
7.100   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தான் எனை முன் படைத்தான்;
Tune - பஞ்சமம்   (திருக்கயிலாயம் )
11.008   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா   திருக்கயிலாய ஞான உலா
Tune -   (திருக்கயிலாயம் )
11.009   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
Tune -   (திருக்கயிலாயம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000