குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ, பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன், அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும், விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே.
|
1
|
குரா மலரின் மணம் கமழ்வதும் இயற்கையிலேயே மணமுடையதுமான மென்மையான கூந்தலையுடைய உமையம்மை அஞ்ச தன்னோடு பொருதற்கு வந்த சினவேழத்தைக் கொன்று அதன் தோலைத் தன் திருமேனியில் போர்த்தவனும் அரவு கங்கை பிறை வெண்தலை ஆகியவற்றை அணிந்த சடையை உடையவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர்வளம் மிக்க வியலூராகும். | |
ஏறு ஆர்தரும் ஒருவன், பல உருவன், நிலை ஆனான், ஆறு ஆர்தரு சடையன், அனல் உருவன், புரிவு உடையான், மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன், மடவாள் வீறு ஆர்தர நின்றான், இடம் விரி நீர் வியலூரே.
|
2
|
எருதின்மேல் வருபவனும் பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டவனும் என்றும் நிலையானவனும் கங்கையாற்றைச் சடையில் நிறுத்தியவனும் அனல் போன்ற சிவந்த மேனியனும் அன்புடையவனும் பகைவராய் வந்த அசுரர்தம் முப்புரங்கள் எரியுமாறு வில்லை வளைத்தவனும் உமையம்மை பெருமிதம் கொள்ளப் பல்வகைச் சிறப்புக்களோடு நிற்பவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர் வளம் மிக்க வியலூராகும். | |
செம் மென் சடை அவை தாழ்வு உற, மடவார் மனை தோறும், பெய்ம்மின், பலி! என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட, உறை மேல் விம்மும் பொழில் கெழுவும், வயல் விரி நீர் வியலூரே.
|
3
|
சிவந்த மென்மையான சடை தாழத் தாருகாவன முனிவர்களின் மனைவியர் வாழ்ந்த இல்லங்கள்தோறும் சென்று உணவிடுங்கள் என்று இசை பாடியவனாய சிவபிரானது இடம் உம் என்ற ஒலிக்குறிப்போடு அருவிகள் குடகுமலை முகடுகளிலிருந்து காவிரியாய் வர அந்நீர் வளத்தால் புகழோடு செழித்து வளரும் பொழில்களையும் பொருந்திய வயல்களையும் உடைய நீர்வளம் மிக்க வியலூராகும். | |
அடைவு ஆகிய அடியார் தொழ, அலரோன் தலை அதனில் மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் கடை ஆர்தர அகில், ஆர் கழை முத்தம் நிரை சிந்தி, மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே.
|
4
|
அடியவர்கள் தத்தம் அடைவின்படி தொழப் பிரமகபாலத்தில் மகளிர் இட்ட உணவை உண்பவனாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் பள்ளர்கள் வயல்களில் நிறையவும் நிறைந்த மூங்கில்கள் முத்துக்களை வரிசையாகச் சொரியவும் ஆற்றில் வரும் அகில் மரங்களைக் கொண்டதும் நெருங்கிய மரங்களைக் கொண்ட பொழில் சூழ்ந்ததுமாகிய நீர்வளம் மிக்க வியலூராகும். | |
எண் ஆர்தரு பயன் ஆய், அயன் அவனாய், மிகு கலை ஆய், பண் ஆர்தரு மறை ஆய், உயர் பொருள் ஆய், இறையவனாய், கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம் விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.
|
5
|
தியானத்தின் பயனாய் இருப்பவனும் நான்முகனாய் உலகைப் படைப்போனும் எண்ணற்ற கலைகளாய்த் திகழ்வோனும் சந்த இசையோடு கூடிய வேதங்களாய் விளங்குவோனும் உலகில் மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும் எல்லோர்க்கும் தலைவனானவனும் கண்ணிறைந்த பேரழகுடையோனும் ஆகிய கடவுளது இடம் விண்ணவராகிய தேவர்களும் மண்ணவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர்வளம் நிரம்பிய வியலூர் ஆகும். | |
| Go to top |
வசை வில்கொடு வரு வேடுவன் அவனாய், நிலை அறிவான், திசை உற்றவர் காண, செரு மலைவான் நிலையவனை அசையப் பொருது, அசையா வணம் அவனுக்கு உயர் படைகள் விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே.
|
6
|
வளைந்த வில்லை ஏந்தி வேட்டுவ வடிவம் கொண்டு வந்து தன்னை நோக்கித் தவம் இயற்றும் விசயனின் ஆற்றலை அறிதற்பொருட்டு எண்திசையிலுள்ளோரும் காண ஒரு காலில் நின்று தவம் செய்த அவன் வருந்தும்படி அவனோடு செருமலைந்து அவனது ஆற்றலைப் பாராட்டி அவன் அழியாதவாறு அவனுக்குப் பாசுபதம் முதலிய படைக்கலங்களை அருளியவனாகிய சிவபிரானது இடம் நீர்வளம் மிக்க வியலூராகும். | |
மான், ஆர் அரவு, உடையான்; இரவு, உடையான், பகல் நட்டம்; ஊன் ஆர்தரும் உயிரான்; உயர்வு இசையான்; விளை பொருள்கள் தான் ஆகிய தலைவன்; என நினைவார் அவர் இடம் ஆம் மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.
|
7
|
தலைமையான அரவை அணிந்தவனும் தலையோட்டில் இரத்தல் தொழில் புரிகின்றவனும் பகலில் நட்டம் ஆடுபவனும் ஊனிடை உயிராய் விளங்குபவனும் உயரிய வீரம் உடையவனும் அனைத்து விளை பொருள்களாய் நிற்கும் தலைவன் என நினைத்தற்குரியவனுமாகிய சிவபிரானது இடம் புண்ணியப் பயனால் மேல் உலகை நாடிய விண்ணவர்களால் தொழப் பெறும் நீர் வளம் சான்ற வியலூராகும். | |
பொருவார் எனக்கு எதிர் ஆர்! எனப் பொருப்பை எடுத்தான் தன் கரு மால் வரை கரம், தோள், உரம், கதிர் நீள் முடி, நெரிந்து, சிரம் ஆயின கதற, செறி கழல் சேர் திருவடியின் விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே.
|
8
|
எனக்கெதிராகச் சண்டையிடுவார் யார் என்ற செருக்கால் கயிலை மலையை எடுத்த இராவணனின் வலிய பெரிய மலைபோலும் கைகள் தோள்கள் மார்பு ஆகியனவும் ஒளி பொருந்திய நீண்ட மகுடங்களுடன் கூடிய தலைகளும் நெரிதலால் அவன் கதறுமாறு செறிந்த கழல்களுடன் கூடிய திருவடியின் விரலால் அடர்த்த சிவபிரானது இடம் நீர்வளம் மிக்க வியலூராகும். | |
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன், மாலும், ஒரு வகையால் அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல், உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் விளம்பட்டு அருள் செய்தான், இடம் விரி நீர் வியலூரே.
|
9
|
வளமையோடு அலர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் தமக்குள் முடி அடி காண்பவர் பெரியவர் என்ற ஒரு வகையான உடன்பாட்டால் அன்னமும் பன்றியுமாய் வருந்தி முயன்றும் அறிய வொண்ணாதவாறு அழலுருவாகி நின்ற அண்ணலும் அவ்விருவர்தம் முனைப்பு அடங்கி வேண்டத் தழல் வடிவான தூணின் நடுவே ஓருருவமாய் வெளிப்பட்டு அருள் செய்தவனுமாகிய சிவபிரானது இடம் நீர்வளம் மிக்க வியலூராகும். | |
தடுக்கால் உடல் மறைப்பார் அவர், தவர் சீவரம் மூடிப் பிடக்கே உரை செய்வாரொடு, பேணார் நமர் பெரியோர்; கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே.
|
10
|
ஓலைப் பாயால் உடலை மறைப்பவராகிய சமண முனிவர்களுடனும் பொன்னிற ஆடையால் உடலை மூடிப்பிடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்த மதத்தலைவர்கள் உடனும் நம் பெரியோர் நட்புக் கொள்ளார். கடலில் தோன்றிய நஞ்சைத் தான் உண்டு அமுதை அமரர்க்களித்தருளிய விடைக் கொடியை உடைய சிவபிரானது இடம் நீர்வளமிக்க வியலூராகும். அதனைச் சென்று வழிபடுமின். | |
| Go to top |
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை, தளம் கொண்டது ஒரு புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன் துளங்கு இல் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர், என்றும் விளங்கும் புகழ் அதனோடு, உயர் விண்ணும் உடையாரே.
|
11
|
விளங்கும் பிறையைச் சடைமேலுடைய விகிர்தனாய சிவபிரானது வியலூரை இடமகன்ற ஊராகிய புகலியில் தோன்றிய தக்க தமிழ் ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய துளக்கமில்லாத இத்தமிழ் மாலையைப் பாடிப்பரவித்தொழும் அடியவர் எக்காலத்தும் விளங்கும் புகழோடு உயரிய விண்ணுலகையும் தமதாக உடையவராவர். | |