சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்களர் - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு அழகேசுவரியம்மை உடனுறை அருள்மிகு களர்முளையீசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=GJEnNyvhwho   Add audio link Add Audio

நீரு ளார்கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே.

1

தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
வேளி னேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.

2

பாட வல்லநன் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர்வாழ் பொழில்சூழ் செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி நிரைக ழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே.

3

அம்பி னேர்தடங் கண்ணி னாருடன் ஆட வர்பயில் மாட மாளிகை
செம்பொ னார் பொழில் சூழ்ந்தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா விணையடி போற்றி நின்றவர்க்
கன்பு செய்தவனே அடைந்தார்க் கருளாயே.

4

கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கெண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்கு பைங்கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண வாள னேபிணை கொண்டொர் கைத்தலத்
தங்கை யிற்படையாய் அடைந்தார்க் கருளாயே.

5
Go to top

கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீலம் மேவிய கண்ட னேநிமிர் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆல நீழலுளாய் அடைந்தார்க் கருளாயே.

6

தம்ப லம்மறி யாத வர்மதில் தாங்கு மால்வரை யாலழ லெழத்
திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்து கந்துபேர்
அம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே.

7

குன்ற டுத்தநன் மாளி கைக்கொடி மாட நீடுயர் கோபு ரங்கண் மேல்
சென்ற டுத்துயர்வான் மதிதோயுந் திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே.

8

பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணி லாமதியம் பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ண லாயவெம்மான் அடைந்தார்க் கருளாயே.

9

பாக்கி யம்பல செய்த பத்தர்கள் பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே யடைந்தார்க் கருளாயே.

10
Go to top

இந்து வந்தெழு மாட வீதியெ ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்து நேர்மொழியார் அவர்சேருந் திருக்களருள்
அந்தி யன்னதொர் மேனி யானை அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன் சொல்லிவை பத்தும்பாடத் தவமாமே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்களர்
2.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீருள் ஆர் கயல் வாவி
Tune - சீகாமரம்   (திருக்களர் களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org